Saturday, 28 November 2015

VEGAS with FAMILY :D

 எதிர்பாராத ஒரு நாளில் எதிர்பார்த்திருந்த பயணம் ,  பேருந்தில், மகனுடன், அமெரிக்காவில். 

Fresno விலிருந்து லாஸ் வேகாஸ் நகர் செல்லும் வழி கலிபோர்னியாவின்  பச்சை பசேலென்ற திராட்சைத் தோட்டங்களும் almond மரங்களும் பல நிறங்களில் மரம் செடிகளும் , ஊரை விட்டு தள்ளி தொழிற்சாலைகளும், Sierra niveda மலைத் தொடர் ஆரம்பித்ததும் ஆங்காங்கே பனிப் பொழிவும் , வழியெங்கும் காற்றாலைகளும்,  Niveda   பாலைவனம் தொடங்கியதும் கள்ளி செடிகளும் சற்று நேரத்தில் மணல் மட்டுமே என 7 ஆம் வகுப்பு புவியியல் பாடத்தில் படித்தது போலவே இருந்தது.




வேகாஸ் நகர எல்லை வந்ததுமே  கார்கள்  மற்றும் விமானங்களின் அதிக பட்ச பயன்பாடு கண்ணில்பட்டது. 

 வேகாஸ் நகர எல்லையில், லாஸ் வேகஸ் boulevardல் அமைந்திருந்த ஒரு ஹோட்டலில் இரண்டு இரவுகள் தங்கினோம். [King  Arthur castle theme]


லாஸ் வேகாஸ் boulevardல் அமைந்த ஹோட்டல்கள் அனைத்திலும் காசினோக்கள் உண்டு. ஒவ்வொரு ஹோட்டலும் ஒவ்வொரு theme ல் வடிவமைக்கப் பட்டு, ஒவ்வொன்றிலும் காசினோக்கள் தவிர வேறு பொழுது போக்கு அம்சங்களும் இருப்பது போல வடிவமைக்கப் பட்டுள்ளன.  
ஹோட்டல் உள்ளே நுழைந்தவுடன் தரைத் தளத்தில் காசினோ .[எல்லா ஹோட்டல்களும் இப்படித்தான் ] வண்ண விளக்குகளுடன் தோற்ற, ஜெயித்த சத்தங்களுடன், மேக மூட்டம் போன்ற புகை மண்டலமாக தீர்த்தம் பெருகி ஓட ஒரு வித கெட்ட வாடையுடன்..... Poker விளையாட தனி பகுதி அங்கேயே.

இரவு பகல் பாராமல் மக்கள் விளையாடிக் கொண்டே இருக்கிறார்கள். அங்கேயே star bucks ,  உணவுக் கடைகள் , அங்கங்கே ரெஸ்ட் ரூம்கள். [பொது இடங்களில் புகை பிடித்தல், மது அருந்துதல் , விதம் விதமான shows , gambling இங்கே மட்டும் சட்டப்படி செல்லும். ஆனால் smoking pipe or cigar is prohibited while standing in queue for reservation etc என்ன சட்டமோ??]



James Bond படம் பார்ப்பவரா நீங்கள் ? அப்படியானால் என் விளக்கம் உங்களுக்கு அவசியமில்லை .

17 ஆவது தளத்தில் எங்கள் அறை . ஜன்னல் வழியே தெரிந்த காட்சிகள் அருமையிலும் அருமை. நொடிக்கு ஒரு விமானம் தரையிறங்க ஒரு விமானம் மேலேற , இரவு நேரத்தில்  விளக்குகளின் ஜொலிப்பும் விமானங்களின் ஓட்டமும் ....அருமை. மற்றொரு கோணத்தில் எகிப்து theme ஹோட்டல். பிரமிட் , sphinx என search லைட் ஜொலிப்புடன் .


 அனைத்து ஹோட்டல்களும் பாலங்கள், எஸ்கலேட்டர்கள், மோனோ ரயில் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. சூதாடுபவர்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று ஆடலாம். உள்ளே நுழையும் போது அலுங்காமல் செல்லும் வண்ணம் வாக்கலேட்டர்கள் .காசினோவிற்குள் நுழையாமல் செல்ல முடியாத  வண்ணம் மோனோரயில் நிலையம். அங்கங்கே விதம் விதமான show க்களுக்கு discount விலையில் நிழைவு சீட்டு விற்பனை வேறு . [ஹோட்டல் முதலாளிகள் எல்லாரும் சேர்ந்து மோனோரயில் விட்டிருக்கிறார்களாம்.ரயில் நிலையம் இலவசமாக ஒவ்வொரு காசினோவிற்குள்ளும் அழைத்து செல்லும் ]

4 இந்தியக் குடும்பங்கள் (இரண்டு teenage boys )  எங்களுடன் பயணித்தார்கள். முதல் நாள் லோக்கல் tour சென்றோம். அந்தப் பகுதியின் அமைப்பு பிடிபட்டது எங்களுக்கு. இரண்டாம் நாள் நாங்களே  ஒவ்வொரு ஹோட்டல் ஆக சென்று வேடிக்கை பார்த்தோம். இரவில் மக்கள் கூட்டம் நடைபாதைகளில். சிக்னல்களில் 20 பேர் சேர்ந்தாற்போல் சாலையைக் கடந்தார்கள்.[நம்ம ஊர்களை இவங்க பார்த்ததில்லை அதனால தான் கூட்டம், traffic னெல்லாம் சொல்றாங்க சக பயணி ஒருவர்] 

வழியில் பல பிச்சைகாரர்கள். பாட்டு, தண்ணீர் canல்   drums , magic show என விதம் விதமாய்.Las Vegas Boulevard ல் நடந்து சென்று shopping செய்தோம். இந்திய உணவகத்தில் உண்டோம். 


என் மகனின் விருப்பப்படி Stratosphere என்ற ஹோட்டலுக்கு பேருந்தில் சென்றோம். 107 ஆவது மாடிக்கு 45 நொடிகள்  elevator பயணம் . அங்கிருந்து Las Vegas நகரின் அழகைக் கண்டோம்.அங்கே விதம் விதமான rides ,  ஜம்பிங் இருந்தது. 107 மாடி குதிக்கும் தைரியம் எங்களில் யாருக்கும் இல்லை. பேருந்தில் 8$ க்கு டிக்கட் வாங்கினால் 24 மணி நேரங்களுக்கு பயன்படுத்தலாம். [சூதாட விதம் விதமான  வசதிகள் ??!] 



இரவு ஹோட்டல் திரும்ப 11.30 ஆனது. 


செயற்கையாய் மனிதன் படைத்தவைகளும் ஒரு விதத்தில் அழகுதான். 


வேகாஸ் நகரை இப்படியும் explore பண்ணலாம் .....

வேற வழி??!! 

பின் குறிப்பு :

காசினோவில் தெரிந்த ஒரே ஒரு விளையாட்டை ஆடிப் பார்க்க விரும்பினோம். பல்வேறு காரணங்களால் விளையாடவில்லை. முக்கிய காரணம் புகை மண்டலம். [ Mask போட்டுக்கலாமே அப்டீன்னு ஒரு சகோதரி கேட்டார் நேரில் அனுபவித்தால் தான் அதன் magnitude தெரியும்   ]

Tuesday, 15 September 2015

நா(ன்) பாக்கறேன்

இந்தியாவிலிருந்து 24 மணி நேரம் பயணித்து ஒரு வழியாக சான் ஜோஸ் நகருக்கு வந்து சேர்ந்தோம் மகள் மற்றும் குட்டி பேரன்களுடன்.

உலகின் மறு கோடிக்கு பயணம் செய்ததில் சந்திக்க வேண்டிய முதல் சவால் jet lag எனப்படும் நேர வித்தியாசத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள். 12 1/2 மணி நேர வித்தியாசம்  என்பது மிக பெரிய சவால் எப்போதுமே. (இந்தியாவின் திங்கள் கிழமை பகல் அமெரிக்காவின் ஞாயிறு இரவு )

வந்த முதல் நாள் பகல் முழுவதும் தூங்காமல் இருக்க முயற்சித்து இரவு தூங்க ஆரம்பித்தேன் (தோம் ) நள்ளிரவு 12.30 பசியோ பசி . இந்தியாவின் மதிய உணவு வேளை . நா(ன்பார்க்கிறேன், தெளிவாக.. வான் ஊர்திகள் மற்றும் அடி வானம் தான் கண்ணுக்கு தெரிந்தது, என் ஜன்னல் வழியே.

அதிகாலை 3.30 மணியிலிருந்து என் நாட்கள் தொடங்குகின்றன ( இது அவங்க மாமியாருக்கு காபி குடுக்கற நேரம்  _ உடன் பிறப்புக்களின் கிண்டல்)

பகல் நேரம் பசி தாகம் தூக்கம் இல்லை. சுற்றிலும் மலையும் மரங்களும் அகலமான தெருக்களுமாய் கண்கொள்ளாக் காட்சிகள்நா(ன்இப்போதும்  பாக்கறேன். தெளிவாய் எதுவும் தெரியலே...

பகல் ஒரு மணி நேரம் மட்டுமே தூங்க சொல்வார் மகள். எழுந்ததும் குட்டி பேரன் நா(ன்) தூங்கணும் என்று அடுத்த 2 மணி நேரங்கள் ஒரே ஸ்ருதியில் நிறுத்தாமல் அழுவார் . (என்னால் அழ முடியவில்லை)

10 நாட்களாகியும் இன்னும் தெளியவில்லை பகல் இரவாக , இரவு பகலாக ....

நா(ன்) பாக்கறேன் .... இப்போதும் ...மப்பும் மந்தாரமுமாய்...


பின் குறிப்பு :குட்டி பேரனுக்கு எல்லாவற்றையும் தன்  கண்ணால் பார்த்து கையில் வெச்சுக்கணும் , அதிரசம், முறுக்கு வைக்கும் அடுக்கு தொடங்கி பாஸ்போர்ட் முடிய ( நா.. பாக்கறேன், நா..  கைல வெச்சுக்கறேன் )

Sunday, 2 August 2015

ஒரு மணி அடித்தால்.....

கிராமத்திலிருந்து நகரத்தில் உள்ள [எல் கே ஜி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை ஒரே வளாகத்தில் தங்குமிடத்துடன் கூடிய பள்ளியில் [20 ஏக்கர் என்று சமீபத்தில் படித்தேன்] பதினொன்றாம் வகுப்பில் பதிவு செய்ய வந்த அன்று, நான் கண்ட முதல் காட்சி பேராசிரியைகள் அனைவரும் வாசலில் அமர்ந்து ட்ரிப்பிள் மேஜர் எனப்படும் கல்வித் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்ததைத் தான். அந்தப் போராட்டம் பல மாதங்கள் நீடித்தது

ஒரு வழியாக பள்ளி மற்றும் விடுதியில் இடம் பிடித்ததும் நாங்கள் சந்திக்க நேர்ந்த முதல் சவால் "ஒன் பெல்" என செல்லமாக அழைக்கப் பட்ட நேரம். காலை 8 மணி, இரவு 8 மணி, அவசர கூட்டத்திற்கு நேரம் காலம் கிடையாது என்பதே இதன் பொது விதி.

நான் அங்கு சேர்ந்த முதல் நாளே அனிதா என்ற பெண் வார்டன் உத்தரவு இல்லாமல் வளாகத்துக்கு வெளியே சென்று விட்டார். இரவு 8 மணி கூட்டத்தில் அவரை காணவில்லை என்பது தெரிந்து அல்லோலகல்லோலம். மறு நாள் காலை பள்ளி நேரத்திற்கு வந்து சேர்ந்த அவருக்கு வார்டன்@தலைமை ஆசிரியை செல்வி ஹேமப்ரபா அவர்கள் நடத்திய மண்டகப் படியை இன்றும் மறக்க முடியவில்லை. 

ஒரே ஒரு முறை மணி அடித்ததும் பள்ளி விடுதி மாணவிகள் அனைவரும் அக்கா அவர்களின் அறைக்கு முன்பு கூட வேண்டும். ஒரு முறை அடிக்கப்பட்ட அந்த மணி அத்தனை மாணவிகளுக்கும் சிம்ம சொப்பனம். வளாகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் ஐந்தாவது நிமிடம் கூட வேண்டும். இல்லை என்றால் செம பரேடு. யாரும் இந்தக் கூட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது.

வருகைப் பதிவு முடிந்ததும் அறிவுரை, கதை, பாட்டு, அன்றைய தலைப்பு செய்திகள், நாட்டு நடப்பு என பல நல்ல விஷயங்களை கூறுவார். [எந்தப் பிரச்சினையும் இல்லாத நாட்களில் என்பதை இத்துடன் சேர்த்து படிக்கவும்]
ஒரு நாள் இரவு 10 மணி போல இருக்கும். என் அறைத் தோழிகள் சீக்கிரம் தூங்கும் பழக்கம் உள்ள என்னை எழுப்பினார்கள். காரணம் ஒன் பெல் அடிக்கப் பட்டிருந்தது.

சில அடிகள் நடந்து சென்றால் வார்டன் அறை முன் போய் விடலாம். அனேகரும் தூங்கி வழிந்த வண்ணம் போய் நின்றோம் 
தினமும் அக்கா அவர்கள் இரவில் மைதானத்தில் நடைப் பயிற்சி செய்வார். மாணவிகளும் மைதானத்தில் அமர்ந்து தூக்கம் வரும் வரை பேசிக் கொண்டு இருப்பார்கள். குறிப்பாக ஹாஸ்டல் கதவு பூட்டப்படும் வரை. அக்கா நடந்து வருவதை பார்த்த சுட்டிப் பெண் ஒருத்தி "ஏய்.. அது வருதுடி" என்று கத்தியது இவரது காதில் விழுந்து விட்டது தான் பிரச்சினை.

யார் அது மரியாதை இல்லாமல் பேசியது, எனக்கு தெரிந்தே ஆகணும் என்று கிட்டத் தட்ட நடு நிசி வரை நிற்க வைத்தே விசாரணை நடத்தினார். யாரும் ஒத்துக் கொள்ள முன்வரவில்லை. கல்லூரி மாணவியாகக் கூட இருந்திருக்கலாம்.

நாளை காலை மீண்டும் சந்திப்போம் என்று நள்ளிரவு தாண்டிய பிறகு அனுப்பி வைத்தார். மறு நாள் காலையும் இந்தப் பிரச்சினை தொடர்ந்தது.. ஏகப்பட்ட திட்டுக்களுடன் அறிவுரைகளுடன்…ஸ்ஸ்ஸ்ஸப்பா.....
இப்போ  மணி அடித்த சத்தம் கேட்டுதே...ஐயய்யோ.. ஒன் பெல்லா??

பின் குறிப்பு :
அக்காவின் கட்டுப்பாடுகள் துள்ளித் திரிந்த மாணவிகளுக்கு அந்தப் பருவத்தில் பிடிக்காமல் போனதில் ஆச்சரியமே இல்லை.அப்போது புரியாத பல விஷயங்கள் இப்போது புரிகிறது. 

Wednesday, 15 July 2015

ஸார்..........போஸ்ட்!!

கடந்த இரண்டு வாரங்களாக எங்களது கீழ்ப்பாக்கம் தபால் ஊழியர்கள் குடியிருப்பு எங்கள் அடுக்கு மாடி குடியிருப்பின் கீழ்த் தளத்தில் தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. பல வருடங்களுக்கு முன்பென்றால் இதற்காக மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பேன்.
ஒரு ஆறுதல், ஆரம்பித்த சில நாட்களில் எங்கள் மகன் அமெரிக்காவிலிருந்து அனுப்பிய பிறந்த நாள் வாழ்த்து அட்டை தபாலில் வந்து சேர்ந்தது, பிறந்த நாள் முடிந்து பல நாட்களுக்குப் பின். ஆயினும் இன்று வரை மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
ஈமெயில் எறும்பு மெயில் எல்லாம் இல்லாத காலத்தில் காலையும் மாலையும் தபால்காரரின் வருகைக்காய் காத்திருப்போம். 
மணி ஆர்டர் மூலம் சகோதரர்கள் பொங்கல் பண்டிகைக்கு அனுப்பிய ரூ10 கையில் கிடைத்ததும் சகோதரர்களை நேரில் பார்த்த மகிழ்ச்சி கிடைக்கும்.
என் தோழி ஆன்லி இந்தியாவின் எந்த மூலையில் இருந்தாலும் தவறாது கடிதம் , கிறிஸ்துமஸ், புது வருட வாழ்த்து அட்டைகள் அனுப்பி , இத்தனை வருடங்களும் என் தொடர்பு எல்லைக்குள்ளேயே இருக்கிறார்.
வெளிநாட்டிலிருந்து வரும் தபால்கள், வாழ்த்து அட்டைகள் வந்து சேர குறைந்தது ஒரு மாதம் ஆகும். ஆயினும் அதில் எழுதியவர் வெளிப்படுத்திய உணர்வுகள் அன்று நம்மிடம் சொன்னது போல இருக்கும். புது ஊர்களுக்கோ புது நாட்டுக்கோ சென்றால் அங்கிருந்து வாழ்த்து அட்டை மற்றும் அந்த ஊரைப் பற்றிய விவரங்கள், உணவுப் பழக்கங்கள், மக்கள் என்று சகல விவரமும் தாங்கி கடிதம் நட்பு வட்டத்திலிருந்தும் உறவுகளிடமிருந்தும் வரும். நாமே அங்கு சென்று வந்த அனுபவமாக அது இருந்தது. [அப்படி எனக்கு வந்து சேர்ந்த வாழ்த்து அட்டைகளை இன்றும் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.] 
அமெரிக்காவின் சால்ட் லேக் சிடி என்றழைக்கப்படும் நகரின் பெயர் "உடா", மிக அழகான பனி மலைகள் சூழ்ந்த ஊர், சிங்கப்பூரில் பறவைகள் பூங்கா நன்றாக இருக்கும், ஜப்பான் நாட்டின் கோபே நகரின் பூகம்ப நிகழ்வு மிகவும் மோசமாக இருந்தது, வியட்னாமின் கிம்சி என்ற உணவு நம் ஊர் ஊறுகாய் போல இருக்கும். அரபு நாடுகளில் பாலைவனத்தை சோலையாக்கி வைத்திருக்கிறார்கள். இப்படி பல தகவல்கள்.
என் பாட்டனார் (என் அம்மாவின் அப்பா) அனைவருடனும் கடிதத் தொடர்பில் இருந்தார். அவரது தினக்குறிப்புகள் வளவளவென்று இருக்காது. கடிதங்களும் அப்படியே. அவரது குறிப்புகள் இன்றும் பல நிகழ்வுகளுக்கு சான்றாக இருக்கிறது. 
என் தாயாருக்கு எழுதிய கடிதத்தில் எங்கள் தலை தீபாவளிக்கு எங்கள் ஊருக்கு செல்ல நீலகிரி எக்ஸ்பிரசில் பதிவு செய்து பின் மறுநாள் கோவை எக்ஸ்பிரசில் சென்றதாகவும். [இது பற்றி Run & Catch the train என்னும் தலைப்பில் பதிவு செய்திருக்கிறேன்]. எனது அண்ணனின் மூத்த மகள் 1984 அக்டோபர் திங்களில் தீபாவளிக்கு சில தினங்கள் முன்பாகப் பிறந்தார் என்பதும் அதில் உள்ளது. 
குழந்தை பிறந்து 3ஆவது நாள் தாய்க்கு பத்தியம் ஆரம்பித்து குழந்தைக்கு புது தொட்டில் கட்டி, பின்பே உறவுகளுக்கு குழந்தை பிறந்த தகவலுக்குக் கடிதம் போடுவார்கள். இந்த உடனடி வீடியோ காலத்தில் அந்த சுவாரசியம் இல்லை என்பதே உண்மை. 
[1.5 வருடங்களுக்கு முன்பு எங்கள் அத்தை ஒரு நாள் என்னை தொலைபேசியில் அழைத்து எனக்கு கொள்ளுப்பேரன் பிறந்திருக்கிறான் என்றார். பார்த்தேன் அத்தை என்றேன். எங்கே எப்படி யார் சொன்னது என்று ஆச்சரியமாக வினவினார். என் பதில்: அது தான் குழந்தை தலையை கண்டதுமே பேஸ் புக்ல போட்டுட்டங்களே.... என் அத்தையின் சிரிப்பு அடங்க வெகு நேரமானது]

9.9.99 - இது நான் முதன் முதலாக ஈமெயில் கணக்கு துவங்கிய நாள். (ஹாட் மெயில்). அன்றுடன் கடிதம் எழுதும் வழக்கம் முற்றுப் பெற்றது.
ஆரம்ப நாட்களில் ஈமெயில் மூலமாவது தகவல்கள் வந்தன. கடந்த சில வருடங்களாக எதுவும் இல்லை.
ஸ்கைப் மூலம் பேசுவதில், நேரில் சந்திக்கும் உற்சாகமும் ஆர்வமும் குறைந்து போனதென்னவோ உண்மை. பல வருடங்கள் முன்பு, நள்ளிரவில் விமான நிலையம் சென்று காத்திருந்து வெளி நாட்டிலிருந்து வரும் உறவினர்களை, நண்பர்களை வரவேற்று அழைத்து வருவோம். குடும்பமே கிளம்புவோம். காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாகக் கழியும். இந்த நிலை தற்சமயம் இல்லை.
2 வயது குட்டி பேரன் என்னையும் என் கணவரையும் எங்கள் பெயருடன் இது பாட்டி அது  தாத்தா என்று மிக சாதாரணமாக கூறினார், கூடவே இருப்பது போல. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 10 நிமிடங்கள் பார்ப்பதற்கே இந்த பலன்.
தொழில் நுட்பம் பல வகையில் முன்னேறி இருந்தாலும், ஒருவர் தம் கைப்பட எழுதி அனுப்பிய கடிதத்தில் இருந்த மன நெருக்கம் வேறு வகை தகவல் பரிமாற்ற முறைகளில் இல்லை.
கைகடுதாசி என்று குறிக்கப்பட்ட கடிதங்கள் நம்மை வந்து சேர்ந்த நாட்கள் மனதுக்கு நெருக்கமான நாட்களை இழக்க நேர்ந்தது காலத்தின் கட்டாயமே!

Whatsapp? Nothing!! 


Thursday, 25 June 2015

தொடர்பு எல்லைக்கு வெளியே ....

சில நாட்களுக்கு முன் ஒரு நீத்தார் நினைவு நாள் பிரார்த்தனையில் கலந்து கொள்ளச் சென்றிந்தேன். பிரார்த்தனை நானும் மற்றொரு மூத்த உறவினர் மட்டுமே வெளியாட்கள்.சாப்பிட இலை போட்டவுடன் திமு திமுவென்று பத்து பேர் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக வந்து சேர்ந்து கொண்டார்கள்.(அதே அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ளவர்கள்)

10 வயதான ஒரு பெண் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து வேறு இலையில் அமர, அவரது தாயார் அங்கே வந்தார். அருகில் அமர்ந்திருந்த 35 வயது மதிக்கத்தக்க பெண்மணி, ஏன் உங்கள் மகள் அங்கே சென்றாள் என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்ணின் தாயார், அவள் ஓல்டீஸ் கூட உட்கார மாட்டாளாம் என்றார். இதைக் கேட்டதும் அப்பெண்ணின் முகம் ஒரு கணம் சுருங்கியது. பின் சமாளித்து பேசினார். 

இந்த நிகழ்வு, அந்த குட்டி பெண்ணின் வீட்டு மூத்த உறவினர்கள் அவரது தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பது தெளிவாகப் புரிந்தது.

பல வருடங்கள் முன்பு, ஒரு உறவினரின் 4 வயது மகனிடம் உங்க தாத்தா பாட்டி நல்லா இருக்காங்களான்னு கேட்டேன். அதற்கு அவரது பதில் "அவங்களை நேத்து தான் தனிக் குடித்தனம் வெச்சுட்டு வந்தோம்" 
அந்த பதில் தந்த அதிர்ச்சி பல வருடங்களாகியும் இன்னும் தீரவில்லை. இது போன்ற சூழலில் வளரும் குழந்தை, முதுமையிலும் தனியாகத் தான் வசிக்க வேண்டும் போல என்று எண்ணத்துடன் வளராதா?

எங்கள் இல்லத்தின் மூத்த உறவினர் ஒரு முறை, "மருமகள் தன்னால் மாமியாரை எதிர்த்துப் பேச முடியவில்லை என்பதால், தன்னுடைய சிறு பிள்ளைகள் பாட்டியை எதிர்த்துப் பேசுவதை ஊக்குவிக்கிறாள், தப்பு என்று கண்டிப்பதில்லை. பிற்காலத்தில் தனக்கு எதிராகத் தன் பிள்ளைகள் இதே வழியில் பேசப் போவது அவளுக்குப் புரியவில்லை" என்றார். உண்மை. இன்று அப்படித் தான் நடக்கிறது அந்த மருமகளுக்கு. 

பல பெண்மணிகள் தன்னுடைய பெற்றோரை மட்டும் ஆதரித்து, கணவரது பெற்றோரை தொடர்பு எல்லைக்கு வெளியே நிறுத்தி விடுகிறார்கள். அதுவும் சரியன்று. அனைத்துத் தரப்பு மூத்த உறவினர்களையும் நாம் ஆதரித்து அன்பாக நடந்து கொள்வதைப் பார்த்தே, நம் பிள்ளைகளும் கற்றுக் கொள்வார்கள். 

தனிக்குடித்தன வாழ்க்கை அதிகரித்துள்ள இந்த காலத்தில், வயதான உறவினர்களை பிள்ளைகளுக்கு பரிச்சயப் படுத்தல் மிக அவசியம்.
முதுமை பற்றி அவசியம் சிறு பிள்ளைகளுக்குத் தெரிந்திருத்தல் வேண்டும். ஒரு நாள் நமக்கும் வயதாகும் தள்ளாமை வரும், இளமைத் தோற்றம் மாறும் என்ற புரிதல் மிக மிக அவசியம். பெற்றோர்கள் தான் இதை சொல்லித் தர முடியும்.

அதன் பயனாளிகள் நான் தான்..நாம் மட்டுமே தான். 

ஹலோ... தாத்தா, எப்படி இருக்கீங்க??

Wednesday, 3 June 2015

TEST OF ENGLISH AS A FOREIGN LANGUAGE

2014-2015

ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் வாங்க ஆசைப்பட்ட சில நாட்களில், அந்த என் ஆசை [பேராசை??] என் கணவரால் நிறைவேற்றப் பட்டது. 

புத்தகங்களை கையில் வாங்கியதும் ரத்தக் கொதிப்பு அதிகரித்ததென்னவோ உண்மை. எப்படி படிக்கப் போகிறோம் என்பது தான் பிரச்சினையே. [12 வகுப்பிற்குப் பிறகு ஆங்கில மொழிப் பாடங்கள் படித்ததில்லை]

மே மாதம் தேர்வுகள் ஆரம்பம். நல்ல வேளையாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் 5 தாள்கள். 

ஒரு வழியாக தேர்வு ஆரம்பம் ஆகியது. 

குரோம்பேட்டையில் ஒரு மாணவர் பள்ளி. கதவு மற்றும் ஜன்னல்கள், மின்விசிறி, தண்ணீர் என எந்த வசதியும்  இல்லாத, ஆனால் தூசியோ தூசி நிறைந்த வகுப்பறை. [மேசை நாற்காலிகளை இன்னும் சற்று அழுத்தி துடைத்திருந்தால் அலாவுதீன் பூதமே கிளம்பி வந்திருக்கும்.]

கேள்வித் தாள் கையில் கிடைத்ததும், பாடங்களைப் படிக்கும் போது நிறைய புது வார்த்தைகள் படிக்க நேர்ந்ததை அப்படியே பதிலாக மாற்றும் ஆர்வ(கோளாறில்)த்தில் எழுத ஆரம்பித்தால் Come, go, sit, stand போன்ற பழகிய, பழைய வார்த்தைகள் மட்டுமே நினைவுக்கு வந்தது.

அடுத்து பெயர்க் குழப்பம். The way of the world _By William Congreve என்று ஒரு கதை. அதில் வரும் கதாபாத்திரங்கள் Mirabell, Millamant, Fainall (இதில்  Mr , Mrs வேறு), Mrs Marwood ,Lady Wishfort, Mr. Waitwell என பலப்பல. யார் யாருக்கு என்ன உறவு என்ன கதை என்றே குழப்பமோ குழப்பம். விடை எழுதும் நேரம் Mr. Waitwell, Mr. Witchcraft ஆகி விட்டார். (Monk, Mentalist நாடகங்கள் பார்த்ததன் விளைவு). 

பாடங்களை ஒரு flowchart போல வரைந்து கையில் வைத்திருந்து படித்து சென்றேன். [Hey, I am actually waiting for you. Can you please explain this topic என்று சில சக மாணவிகளின் அன்புத் தொல்லை வேறு. நம்ம நிலைமையை வெளில சொல்லிக்கவா முடியும்??]

எல்லாக் கதைகளிலும் ஒரு niece இருப்பார். ஒரு கதையில் நான் அவரது இரண்டாவது பெயரை நினைவில் வைத்திருக்க, கடைசி நொடியில்  அவரது முதல் பெயர் Ms. Neville எனக் கண்ணில் பட்டது. இந்த பெயரில் தான் மாதிரி வினாத்தாள்களில் கேள்விகள் இருந்தன. நல்ல வேளை நடுப் பெயரை [middle name] யாரும் பயன்படுத்துவதில்லை என்பதால்   நான் தப்பித்தேன்

Sailor என்ற தலைப்பில் ஒரு பாடல். படித்ததும் நான் புரிந்து கொண்டது , கடலில் பயணிக்கும் ஒருவரின் உணர்வுகள் பற்றி சொல்கிறார்கள் போல என்பதாக. அதன் விளக்கம் படித்ததில் கிட்டத் தட்ட நம்ம "ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே" போன்ற அர்த்தமாம். [நானெல்லாம் என்னிக்கு ஆங்கிலத்தில் கவிதை எழுதுவது ??]

மற்றொரு பாடத்தில் He is a man of letters என்று ஒரு வரி. நல்ல எழுத்தாளர் என்பது பொருள். நான் நினைத்தது, சில பாடங்கள் பல கடிதங்களின் தொகுப்பாக இருக்கும் அது போல எண்ணி, கடித அமைப்பில் பாடம் இல்லையே என்று யோசித்து கொண்டிருந்த போது, அதன் உண்மையான பொருள் விளங்க, என் அறியாமையை எண்ணி சிரிப்புத் தான் வந்தது.

பல்கலைக் கழகத்திலிருந்து அனுப்பப் பட்ட இரண்டு புத்தகங்களில் “நடுவுல கொஞ்சம் பக்கத்தைக்” காணோம். அந்தப் பாடங்களில் இருந்து பல வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. “Google” அய்யனாரும் கைவிட்டு விட்டார். [என்னவென்று சொல்வேன்? ஒரு மருத்துவர் தம்மிடம் காது வலியுடன் வந்த ஒரு நோயாளியிடம் நான் இந்த கேள்வியை choice விட்டுட்டேன் வேற டாக்டர் கிட்டே போங்கன்னு சொன்னாற் போல் நானும் சொல்லிக் கொள்ள வேண்டியது தான்]

Annotations  கேள்விகளுக்கு விடை எழுதும் போது  கடுமையான சிக்கல். [இடம் சுட்டிப் பொருள் விளக்குதல்] பாடம், செய்யுள், நாடகம், கதைகள் என எல்லாப் பகுதிகளிலிருந்தும் கேட்கப்படும். 

அடுத்து யார் யாரிடம் சொன்னது, எந்தப் பாடம் , அதன் ஆசிரியர் யார் என்பதைக்  கண்டு பிடிப்பது.  ஒரு வழியாக எந்தப் பாடம் என்று கண்டு பிடித்த பிறகு, யார் ஆசிரியர்?? ஆசிரியர் பெயர் நினைவுக்கு வந்தால் பாடத்தின் பெயர் நினைவில்லை. இரண்டும் நினைவில் வந்தால், கதாபாத்திரங்கள் பெயர் நினைவில் இல்லை. ஐயகோ!! [Annotations  ஒழுங்கா படிச்சுட்டு போ, கேள்விகளுக்கு விடை எழுதறதை விட இது சுலபம் _ ஆங்கில இலக்கியம் படித்த அக்காவின் அறிவுரை. Shakespeare தங்கை இவர். நான் படும் பாடு அவருக்கு எங்கே புரிகிறது?]

பாடங்கள் அனைத்துமே அதன் ஆசிரியர்களால் செய்யுள் வடிவிலேயே எழுதப்பட்டு, படிக்க உதவியாக சாதாரண வாக்கியங்களில் தரப்பட்டுள்ளன என்பதை புரிந்து கொள்வதற்குள் மூன்று தேர்வுகள் முடிந்து விட்டன.

Chaucer என்பார்தான் ஆங்கிலத்தில் முதன் முதலில் இலக்கியங்கள் படைத்தவர். அவரின்  Canterbury tales என்னும் பாடம் மூன்று தேர்வுகளில் வெவ்வேறு விதமாகக் கேட்கப்பட்டது. [இது முன்பே தெரிந்திருந்தால் நன்றாகப் படித்திருக்கலாம் ... ஹ்ம்ம்ம்]

மிக அருமையான கவிதைகள். 16,17,18 ஆம் நூற்றாண்டுக் கவிஞர்கள் இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதியுள்ள கவிதைகள் extraordinary. இக்காலத்தில் நினைத்தே பார்க்க முடியாது. [கொல்லன் பட்டரை சத்தம், போர் முரசு சத்தம்,நதியில் அன்னப்பட்சி அசைந்தாடி மிதந்து வரும் சத்தம் எல்லாம் பாடலைப் படிக்கும் போதே கேட்கும் வகையில்]

அந்நிய மொழியை படித்தல் சுலபமாக இருக்கவில்லை. தேர்வுகள் முடிவுக்கு வந்தன.

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! 

மனசாட்சியின் குரல்: "ரொம்ப குதிக்காதே பரீட்சை முடிந்து விட்டதென்று, இரண்டாம் வருடப் பாடத்திட்டத்தில் Shakespeare என்றே ஒரு தாள் இருக்கே… அங்கே  இருக்கு உனக்கு ஆப்பு"


Saturday, 2 May 2015

வளையாடப் போய்ட்ட்ட்ட்ரம்மா......[எம் ஜி ஆர் வீடு - 2]

 எம் ஜி ஆர் வீட்டில் எங்களின் வாழ்க்கை முறை அலாதியானது. காலை 6 மணிக்கு காவேரி விநாயகரின் கோவில் மணியோசையுடன் தொடங்கி இரவு 9க்கு அதே மணியோசையுடன் முடியும் . சித்திரை தொடங்கி பங்குனி வரை தினமும் ஒரு வைபவம் தான். நவராத்திரி 9 நாட்களும் கொலுவும் கலை நிகழ்ச்சிகளுமாக அமர்க்களப்படும். 



சதுர அடி ரூ 975/- அன்றைய விலையில். இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் ஒரு அறை நிரந்தரமாக மாமியார் வசம். வழக்கம் போல மீதி இடத்தில் எங்களின் வாசம் ஏப்ரல் 23, 2000 அன்று தொடங்கியது. என் கணவரது அலுவலக நண்பர்கள் பலரும் அருகருகே வசிக்கிறார்கள். உற்றார் உறவினர் நண்பர்கள் என வந்து செல்வார்கள். 

குடியேறிய அன்று இரவு ஒரு திருடன் எங்கள் குடியிருப்பை தாண்டி பூங்காவில் குதித்து ஓட.. யாரோ பிடித்து போலீசில் ஒப்படைக்க.... விடிந்ததும் போர்க்கால அடிப்படையில் கதவு ஜன்னல்களுக்கு கிரில் கதவுகள் போட்டோம்.

பள்ளி முடிந்து வந்ததும் பிள்ளைகள் அனைவரும், காம்பௌண்டு சுவரை எட்டி குதித்து பூங்காவில் விளையாட சென்று விடுவார்கள் . என் மகள் 10 ஆம் வகுப்பு எனினும் அனைவரையும் ஒன்று சேர்ந்துக் கொண்டு விளையாடுவாள். வளையாடப் போய்ட்ட்ட்ட்ரம்மா.......இந்த மா ..முடிவதற்குள் ஆள் காணாமல் போயிருக்கும்.

தென்னாட்டை சேர்ந்தவர்கள் தீபாவளி கொண்டாடி முடிந்த பிறகு அன்று இரவு லட்சுமி பூஜையுடன் ஆரம்பித்து முதல் தள நண்பர் வீட்டில் (வட நாட்டவர்) கொண்டாடுவர். அவர்கள் வீட்டிற்கு செல்லும் போது புடவை அணிந்து செல்வோம். அவர்களே நம் நெற்றியில் குங்குமம் வைத்து விட்டு , அழகான குட்டிப் பானையில் பொரி சக்கரை மிட்டாய் மற்றும் வெற்றிலை பாக்கினை நம் முந்தானையில் வைப்பார்கள்.

பக்கத்து வீடு [G1] எங்களின் 30 வருட நண்பரது இல்லம். எங்கள் வீடுகளின் கதவுகள் விசேஷ நாட்களில் திறந்தே இருக்கும். இரண்டு வீட்டிற்குள்ளும் எல்லாரும் புழங்கி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்.[G1  பாட்டி, பின்னாடி கதவை திறந்தே வையுங்க அப்ப தான் நான் வந்து போக வசதியா இருக்கும் என்று பேரன் கேசவ் வரை அதே பழக்கம் தான்] 

யார் வீட்டுக் குழந்தைக்கு என்ன சாப்பாடு பிடிக்கும் என்பதும் தெரியும். இன்னிக்கு என்ன சாம்பார், ரவா தோசையா, புளி சாதமா என்று பிள்ளைகள் தாங்களாகவே தட்டை எடுத்துக் கொண்டு சமையலறைக்கு வருவார்கள். [என் மகனும் பக்கத்து வீட்டுப் பெண்ணும் தவறாமல் சங்கடஹர சதுர்த்திக்கு கோவிலுக்கு செல்வார்கள். பக்தி இல்லை..புளிசாதம்]



மதியம் பக்கத்து வீட்டினர் உறங்கும் வேளையில் கிரிக்கெட், டார்ட் எனப்படும் அம்பு விடுதல் போன்ற விளையாட்டுக்களை தீவிரமாக பொது சுவரில் என் மகன் பயிற்சி செய்வார் டேய்..வேணாம்டா என கதற கதற. தாத்தா செல்லம்.எந்த நேரமும் தாத்தா செய்தித் தாள் வாசிப்பதை காணலாம் வாசலில் அமர்ந்தவாறு.

மகளின் தோழி காயத்ரி, மகனது தோழன் திவாகர் தினமும் வருவார்கள். இல்லையென்றால் மகன் திவாகர் வீட்டில் இருப்பான். இது கல்லூரி முடியும் வரை தொடர்ந்தது. மிக அருகில் பள்ளி இருந்தது இருவருக்கும் மிக வசதியாக இருந்தது. கடைசி நிமிடம் வரை வீட்டை விட்டு ந...க..ர மாட்டார்கள். [அம்மா வழி அனுப்பவெல்லாம் வர வேண்டாம் பொதிகைல படத்தோட கிளைமாக்ஸ் என்னன்னு பாத்து வை, வந்து கேட்டுக்கறேன்_ மகள்] 

கலைவாணரின் பாட்டு ஒண்ணிலிருந்து 20 வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம் 21 லிருந்து 30 வரைக்கும் திண்டாட்டம் திண்டாட்டம் என்று விதம் விதமாய் பாட்டுப் பாடி கிண்டல் செய்வார்கள்.

ஒரு முறை ஹெபடைடிஸ் பீ எனப்படும் காமாலை நோய் வராமல் இருக்க இருவருக்கும் தடுப்பூசி ரூ 1800 கொடுத்து போட்டு வந்த அடுத்த நாளே இருவருக்கும் ஹெபடைடிஸ் பீ தாக்கியது. தனக்கு ஒரு கண் போனாலும் அடுத்தவருக்கு இரண்டு கண்ணும் போன கதை தான் இருவர் மன நிலையும். ஒரு வாரம் அவர்களை சமாளிக்க நான் பட்ட பாடு...  

ஒவ்வொரு வீட்டையும் அதன் எண்ணை வைத்துக் குறிப்பிடுவது வழக்கம். என் பிள்ளைகள் எனக்கு வைத்த செல்ல பெயர் G2 அம்மன். கைல வேப்பிலை தான் இல்லை அம்மா... (ரெண்டும் சரியான வாலுங்க) 

பாட்டு, கட்டுரை, பேச்சு, பகவத் கீதை, திருக்குறள் எனப் பல போட்டிகளில் பிள்ளைகள் பங்கு பெற்று பரிசுகள் பெற்றார்கள். போட்டி நடைபெறும் இடங்களுக்கு அழைத்து செல்வோம். 

குடியிருப்பில் பொது சேவையும் அவ்வப்போது இடம் பெறும். 2 ஆம் தள பாட்டியாரை கோவிலுக்கு கைபிடித்து அழைத்து செல்லுதல், தெரு முனை வரை பைக்கில் அழைத்து செல்லுதல், பேருந்து நிலையத்தில் கொண்டு விடுதல், அலுவலகம் அழைத்து செல்லுதல் என யாரும் யாருக்கும் உதவுவார்கள். [S3 பாட்டியாருக்கு பாலாஜி -என் மகன் அமெரிக்கா போனது கை உடைஞ்சது போல இருக்காம்]

பூகம்பம், சுனாமி, பெரு வெள்ளம், கடும் வறட்சி என எல்லா நிகழ்வுகளையும் சமாளித்திருக்கிறோம். 

ஆசிரியப் பணியின் போதும் சொந்தமாக சென்டர் நடத்திய போதும் விரிவானது நட்பு வட்டம். யார் என்ன பாடம் சொல்லி தருகிறார்களோ அவர்களிடன் அனுப்பி வைப்போம், எந்த வித போட்டி பொறாமையும் இல்லாமல்.அந்த நட்பு இன்றும் தொடர்கிறது.

தனிமை என்ற உணர்வே தோன்றாது. காலை, மாலை வேளைகளில் வாசலில் வந்து நின்றாலே போதும். நண்பர்கள், உறவினர்கள், பழைய மாணவர்கள், அவர்கள் பெற்றோர்கள், அண்டை அயலார் என 10 பேரையாவது காணலாம். பக்கத்தில் கடைகள், வங்கிகள், தபாலாபீஸ், பேருந்து நிலையம், உணவகங்கள், வடபழனி பஸ் நிலையம், தியேட்டர்கள், தற்சமயம் மால்கள் என வசதிக்கு குறைவில்லாதது எங்கள் எம் ஜி ஆர் வீடு. 

இன்று எம் ஜி ஆர் வீட்டுக் குழந்தைகள் அனைவரும் வளர்ந்து பள்ளி கல்லூரி வேலை திருமணம் குழந்தைகள் என இருக்கிறார்கள். நட்புடன். 

காலம் மாறிப் போச்சு....

பின் குறிப்பு : முதல் பதிவு எம் ஜி ஆர் வீட்டை சினிமாத் துறை எந்த அளவுக்கு இரண்டறக் கலந்திருக்கிறது இருக்கிறது என்பதாக மட்டும் இருந்தது. இந்தப் பதிவில் எங்களின் வாழ்க்கை முறை உள்ளது. ஆட்டோக்காரரிடன் கோவிலையோ பூங்காவையோ அடையாளம் சொல்வதை விட விஜய் வீட்டு தெரு என்றால் வேலை சுலபம். 


Saturday, 18 April 2015

எம்.ஜி.ஆர் வீடு


 சாலிகிராமத்தின் ஒரு பகுதியில் 1984 - 1999 வரை ஒரே வீட்டில் குடியிருந்த நாங்கள் சொந்த வீடு வாங்க எண்ணி அச்சமயம் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் தரைத் தளத்திலுள்ள வீட்டை வாங்கினோம். பின்புறம் காவேரி விநாயகர் ஆலயம் , வீட்டை ஒட்டி பூங்கா என்று அமைந்த இடம்.பேருந்து நிலையம், விமான நிலையம், ரயில் நிலையம் (17 ஈ உள்ளேயே சென்று நிற்கும்) என எங்கு செல்லவும் வசதியான பகுதி. [கோலிவுட்!!]


மங்களம்(M) கணேசன்(G) தம்பதிகளின் மகன்கள் பெயர் ராஜன்(R), ரமேஷ், ராமு மற்றும் ரவி . (எம் ஜி ஆர் எப்படி வந்தார் இங்கே என்று இப்போது புரிகிறதா?? இதில் திரு ராமு என்பவர் அப்போது புகழ்பெற்ற வெள்ளரிக்கா பாட்டுக்கு நடனம் ஆடிய ராம்ஜி.) சகோதரர்கள் 4 பேர், நாங்கள், எங்கள் உறவினர்கள் நண்பர்கள் என அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தில் அனேகரும் பரிச்சயமானவர்களே. 2000 ஏப்ரல் மாதம் 22,23 தேதிகளில் அனைவரும் கிருகப்பிரவேசம் செய்து குடியேறினோம். குழந்தைகளுக்கு பூங்காவும் பெரியவர்களுக்கு கோவிலும் என மகிழ்ச்சியாய் கழிந்தன நாட்கள்.


சுற்றிலும் சினிமாத் துறை சார்ந்தவர்கள் வசிக்கும் பகுதி. மிகப் பெரிய வித்தியாசம். 1/2 கிமீ தொலைவில் இருந்த புது வீடு ஒரு புதிய உலகம் போல தோன்றியது. பழைய வீட்டு பகுதியில் 3 தேங்காய் 10 ரூபாய் புது வீட்டுப் பகுதியில் ஒரு தேங்காய் 10 ரூபாய். காரணம் நடிகர் திரு விஜய் அவர்கள் எங்கள் தெருவில் குடியிருந்தது தான். கோவிலில் மூங்கில் தடுப்பு வைத்து கட்டி பக்தர்களை தரிசனத்துக்கு அனுப்புவது போல இவர்கள் வீட்டில் ஞாயிற்றுக் கிழமைகள் ஜே ஜே என்று கூட்டமாக இருக்கும். தென் மாவட்டங்களிலுருந்து பேருந்துகளில் ரசிகர்கள் திரு விஜயை சந்தித்து, பிரியாணி பொட்டலம் பெற்றுக் கொண்டு, புகைப்படம் எடுத்துச் செல்வார்கள். எங்கள் வீட்டு வாசல் வரை கூட்டமாக இருக்கும்.[ தற்சமயம் ரசிகர்களை சந்திக்கவென்றே புதிதாக வேறு பகுதியில் வீடு வாங்கி இருப்பதாகப் படித்தேன்].வருட ஆரம்பத்தில் பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு இலவசமாக புத்தகங்கள் நோட்டுக்கள் வழங்குவார். கூட்டமோ கூட்டம்.

அருகிலுள்ள கண்ணம்மாள் தெரு மிகப் பிரபலம். திரு விஜயகாந்த், திரு வடிவேலு, திருமதி தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் வசிக்கும் தெரு. தற்சமயம் சண்டை ,கல்லடிகளுக்கு பெயர் பெற்றிருக்கும் இத்தெரு, முன்பு திரு விஜயகாந்த் அவர்களின் இலவச மருத்துவமனைக்கு பெயர் பெற்றது.

இடது புறம் 2 வீடுகள் தள்ளி ஷூட்டிங் வீடு என்று அழைக்கப்பட்ட பங்களா. எப்போதும் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும்.
எதிர்வீட்டில் நடன இயக்குனர் திரு பாலாஜி, இரண்டு வீடு தள்ளி திரு செந்தில், சற்று தள்ளி திரு விஜய், திரு கவுண்டமணி , முன் தெருவில் ரம்பா, பின் தெருவில் திரு பாலுமஹேந்திரா, திரு நாசர் , திரு ரியாஸ்கான் என எங்கும் எப்போதும் நட்சத்திர அணிவகுப்புத்தான்... நடைப் பயிற்சியின் போது சர்வ சகஜமாக பல பிரபலங்களைக் காண முடிந்தது. [என்னது...ரம்பாவை கோவிலில் பார்த்தியா..இரு நான் கோவிலுக்கு போயிட்டு வரேன்..] ஜிம் போகும் வழியில் திரு மயில் சாமி, ஜிம் உள்ளே திரு இளவரசன், திருமதி ஷமிதா..

வீட்டை ஒட்டி பூங்கா.. அங்கு அவ்வப்போது ஷூட்டிங், சண்டை பயிற்சி, நடனப் பயிற்சி என நடைபெறும். திரு பாலு மஹேந்திரா அவர்களின் கதை நேரம் சீரியலில் பல காட்சிகள் எங்கள் வீட்டு வாயிலில் எடுக்கப்பட்டவை.

திரு பாலுமஹேந்திரா அவர்களின் "வீடு" படப்பிடிப்பை தினமும் கண்டிருக்கிறேன்.[பணிக்கு செல்லும் வழியில்] . அந்த வீடு உருவானதை, அஸ்திவாரத்திலிருந்து கண்டிருக்கிறேன்.

இன்னார் இன்னாருடன் அதிகாலை 4 மணிக்கு நடைபயிற்சி செய்தார் என பத்திரிக்கை கிசுகிசுவெல்லாம் முன்னாடியே எங்களுக்குத் தெரியும்.

என்னுடைய டியூஷன் செண்டரில் படித்த பிரபலங்களின் பிள்ளைகள் நிறைய. பிரபல கிளரினட் கலைஞர் திரு ஏ கே சி நடராஜன் அவர்களின் பேத்திகளுக்கு சங்கீத பால பாடம் கற்றுத் தர சொல்லி அவர்களது தகப்பனார் (ஆனந்தபுரத்து வீடு இசையமைப்பாளர்) என்னை கேட்டது தனிக் கதை.[சில சின்ன பாடல்கள் கற்றுத் தந்தேன்]. அவரே 20 வருடங்கள் பல வகை இசையும் பயின்றவர். அவரது மனைவி டப்பிங் ஆர்டிஸ்ட். 
சினிமாவிலோ டீவீ சீரியலிலோ ஒரு நடிகரையோ டைரக்டரையோ காண நேர்ந்தார், அட ... இவரா(ளா ) என கேட்பது சர்வ சாதாரணம் அங்கே..

இதெல்லாம் எங்களுக்கு ஜகஜமப்பா.....

பின் குறிப்பு : எங்கள் எம் ஜி ஆர் வீடு கூட பல படத்துல நடிச்சிருக்குங்க...[காலம் மாறிப் போச்சு]

Wednesday, 18 March 2015

இது தாண்டா போலீஸ்!

2001-2003 க்குள் ஏதோ ஒரு வருடத்தின் பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி. அன்று எங்கள் பக்கத்து வீட்டு தம்பதியினரின் திருமண நாள். [அதனால் தேதி மறக்கவில்லை]12 குடும்பங்கள் வாழும் அடுக்கு மாடிக் குடியிருப்பின் தரைத் தளத்தில் எங்கள் இல்லங்கள். . 

காலை 6.30 மணியளவில் எங்கள் குடியிருப்பின் வீட்டு வேலைகளில் உதவுபவர் தன்னுடன் ஒரு 16 வயது மதிக்கத் தக்க இளம் பெண்ணை அழைத்து வந்தார். யார் என்னவென்று விசாரித்தோம். தாம் பேருந்திலிருந்து இறங்கி வருகையில் அந்தப் பெண் தெருவோரம் ஒரு டீக்கடை பக்கத்தில் நின்று அழுது கொண்டிருந்ததாகவும் பல ஆண்கள் அவரை சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் அந்தப் பெண்ணை காப்பாற்றும் விதமாக அழைத்து வந்ததாகவும் கூறினார். அப்படி நினைத்திருந்தால் மிக அருகிலிருக்கும் காவல் நிலையத்துக்குத் தானே நீ போயிருக்க வேண்டும் எதற்கு எங்கள் குடியிருப்புக்கு அழைத்து வந்தாய் என்று கடிந்து கொண்டோம். காவல் நிலையத்தில் ஒப்படைத்தால் பிறகு நம்மால் அந்தப் பெண் என்ன ஆனார் என்பதை தெரிந்து கொள்ள முடியாது பாவம் பெண் பிள்ளை , அண்ணன்மார்களே அக்காமார்களே பார்த்து உதவுங்கள் என்று கூறிவிட்டு தம்முடைய வேலைகளைப் பார்க்க சென்று விட்டார். 

அந்தப் பெண்ணிற்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் பேச்சுக் கொடுத்து அவரைப் பற்றிய விவரங்களை அறிந்தோம். 12 ஆம் வகுப்பு காமர்ஸ் பிரிவில் படிப்பவர். காவல் துறையில் சேர்ந்து பணி புரியும் ஆர்வம் உடையவர். பெற்றோர் மறுத்ததால் வீட்டை விட்டு வந்து விட்டார். ஆள் இல்லை என்றால் அந்தப் பெண் மீண்டும் எங்காவது சென்று விட்டால்? மாற்றி மாற்றி காவல் இருந்தோம். உணவு கொடுத்தோம். [நான் காமர்ஸ் டீச்சர் என்பதால் என்னை அந்தப் பெண்ணுக்கு அக்கௌண்டன்சி கற்று தர சொல்லி சிபாரிசு வேறு. [Partnership accounts - Sacrificing ratios & Gaining ratios கற்றுத் தந்தேன். சூட்டிகையான பெண்]

மீண்டும் பேச்சுக் கொடுத்து அறிவுரை கூறி அவரது வீட்டின் தொடர்பு விவரங்களை அறிய மதியம் ஆகிவிட்டது. உடனே குடியிருப்பில் உள்ள மற்றொரு நண்பர் அப்பெண்ணின் இல்லம் இருக்கும் ஊரான (பவானி) குமாரபாளையத்தை தொடர்பு கொண்டு அவரது குடும்பத்தாரை நேரில் வந்து அழைத்து செல்லுமாறு ஏற்பாடு செய்தார். ஈரோடு அருகிலிருந்து அவர்கள் வந்து அழைத்து செல்ல நள்ளிரவாகி விட்டது. அவர்கள் இல்லத்தை தொடர்பு கொண்ட நண்பரே அவரது பெற்றோர் வரும் வரை தன்னுடைய வீட்டில் வைத்திருந்து ஒப்படைத்தார். 

வீட்டை விட்டு வெளியில் வருவது பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்பது படிக்காத எங்கள் வீட்டு உதவியாளருக்குத் தெரிந்த அளவு கூட படித்த அந்தப் பெண்ணுக்குப் புரியவில்லை.சேலையில் முள் கிழித்தாலும் முள்ளில் சேலை விழுந்தாலும் சேதம் சேலைக்குத் தான்.  தம்முடைய நோக்கம் நிறைவேற பெற்றோர்களிடன் எடுத்து சொல்லி ஜெயிக்க வேண்டுமே தவிர , வீட்டை விட்டு வரக் கூடாது. பாதுகாப்பான சூழ்நிலையில் இருந்தபடி தான் நம்முடைய லட்சியங்களை அடைய போராட வேண்டும்.வீட்டில் இருக்கும் நம்முடைய பெற்றோர் உடன் பிறந்தாரையே வெல்ல முடியாதவர்கள் உலகை எப்படி வெல்ல முடியும்?? நல்ல உள்ளங்கள் உதவியதால் பத்திரமாக வீடு போனார் இல்லை என்றால்??? பாலியல் வன் கொடுமைகள் எக்காலத்திலும் உண்டு. இக்காலத்தில் பெண்கள் வெளி உலகுக்கு தெரிவிக்க முன்வருகிறார்கள் என்பது பெரிய முன்னேற்றம். 

பெற்றோர்களே !பிள்ளைகள் சொல்வதையும் காது கொடுத்துக் கேளுங்கள். அவர்களின் ஆசைகள் கோரிக்கைகள் நியாயமாக இருப்பின் அவை நிறைவேற உதவுங்கள். உங்கள் கருத்துக்கள் ஆசைகளைப் பிள்ளைகள் மேல் திணிக்காதீர்கள். பிள்ளைகளை கடுமையாகக் கண்காணிக்காதீர்கள். இதுவே பல தவறுகளுக்கும் காரணமாகிறது. இளம் பிள்ளைகள் பெற்றோரின் அக்கறையைத் தவறாகப் புரிந்து கொண்டு , எதிர்பாலர் யாரேனும் நட்புடன் பழகினால் அதை காதல் என்ற பெயரில் நினைத்து வழி தவறுவதும் நடக்கிறது. பொறுப்புகளைப் புரிய வைத்து, சுதந்திரம் கொடுங்கள். அவர்கள் உங்கள் பிள்ளைகள். வழி நடத்தி செல்லுங்கள்.

பிள்ளைகளே,  பெற்றோர்கள் உங்கள் எதிரிகள் அல்லர் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.


Wednesday, 4 March 2015

Muffler Man !!

(1) 
Walks in the streets our cheerful man
For whom I'm a greatest fan
As  weather gets hotter
Can he fly as  feather
World still doubts with his muffler on !!

(2)
Here comes the man of power
Swears to wear a  muffler
Weather gets hot
Will he trade for hat
Still a question worth million dollar !!

Tuesday, 3 March 2015

MY LIMERICKS ....

(1) My Maiden

My maiden limerick here to the sweety
Nature’s bushes thickets around the lady
Water in the lake shines so blue
As the sun seems to bid adieu 
Awaits for her lens man to do his duty!!

(2)Up in the sky I live 

Rainbow  lightning   big  rain drops , 
Seen in the sky above the clouds
Cats and dogs  ‘twas  pouring down
Heard in water people drown
Nothing was known,  as I live in Flats!!

(3)Feeling Poetic

Read few Satires Sonnet   and Epic
Deep in mind I felt poetic
Tried  to write with perception
Nothing  came out in conception
Out and out the result was  pathetic!!

(4)காத்திருக்கிறார் நம் கண்மணி

மரமும் செடியும் சூழ அமர்ந்த என் தங்கையே
இடையில் கதிரவனும் ஆற்றுகிறான் தன் பங்கையே
பாறையும் குளமும் ஒட்டி உறவாட
அக்கம் பக்கம் யாரை உன் கண்கள் தேட
பொறுத்திரு அவர் உனை விட்டு செல்லார் மங்கையே..

P.S : 

For further reference about Limericks : 
http://en.wikipedia.org/wiki/Limerick_%28poetry%29

Wednesday, 25 February 2015

என்னம்மா... இப்பிடி பண்றீங்களேம்மா????

சிறு வயது முதலே வீட்டிற்கு யார் வந்தாலும் , முதலில் பார்ப்பவர்கள் வரவேற்று , அமர சொல்லி, தண்ணீர் தந்து உபசரித்து விட்டு பின்பே பேச ஆரம்பிக்க வேண்டும் என்பதே நமக்கு சொல்லித் தரப்பட்ட நல்ல பழக்கம். 

அதன் தொடர்பான என் சில பல அனுபவங்கள் இங்கே இதோ ::

இது ஒரு வகை :

(1)சமீபத்தில் ஒரு உறவினர் இல்லத்திற்கு சென்றிருந்தோம். அனைவரின் நலம் விசாரித்து முடித்து (அவர்களது மகளுக்கு திருப்புதல் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகக் கூறினார்கள்)  எங்களின் பேச்சு கிட்டத் தட்ட இரண்டு மணி நேரம் நீடித்து ஒரு வழியாக கிளம்பும் சமயம், உங்கள் மகள் தோழிகளுடன் படிக்க சென்றிருக்கிறார்களா என்று கேட்ட போது , இல்லை வீட்டில் தான் இருக்கிறாள் என்றார்கள். (முதல் அதிர்ச்சி) கேட்ட பின்பும் அவரது தாயார் தம்முடைய மகளை பூட்டிய அறைக்குள்ளிருந்து வெளியில் வரச் சொல்லவில்லை.

(2)மற்றொரு உறவினர் வீடு. பல மாதங்கள் முன்பு. அவரது மகன் (உயர்படிப்பு படித்து முடித்து அமெரிக்காவில் வேலை செய்பவர்) வந்திருப்பதாகக் கூறி பார்த்துப் பல வருடங்கள் ஆகி இருந்ததால், என்னை அறிமுகம் செய்து வைத்தார். அந்த மகனாரோ தம்முடைய கைபேசியை தடவுவதை நிறுத்தவும் இல்லை(டச் போன்) தலை நிமிர்ந்து பார்க்கவும் இல்லை. அவரது தாயாரும் மகனிடம் எதுவும் சொல்லவில்லை.


(3)ஒரு இளம்பெண், தம்முடைய (இது அமெரிக்க அனுபவம்) ஒரு வயது மகளுக்கு தன்னுடைய பெற்றோருடன் தினமும் பல மணி நேரங்கள் பேச வைப்பார். தம்முடைய கணவரது பெற்றோருடன் அவர்களுக்கு கணினியை இயக்கத்  தெரியாமல் இருந்தாலும், தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் மகளை பேச வைக்கலாம். ம்ஹூம்... அப்படி உறவினர்கள் இருப்பது போன்ற பேச்சையே எடுக்க மாட்டார் மகளிடம்.
(4)பல வருடங்கள் முன்பு உறவினரது 4 வயது குட்டிப் பையன் அத்தை நாங்க நேத்து எங்க ..... தாத்தாவையும் பாட்டியையும் தனிக்குடித்தனம் 
வைச்சிட்டு வந்தோம் என்றார். இவர்கள் அந்த குடும்பத் தலைவரது பெற்றோர். 

இது வேறு வகை :

(1)தோழியின் இல்லத்திற்கு சென்றிருந்தோம். அவரது மகள் சற்று முன்பு தான் தோழியின் இல்லம் சென்று திரும்பி இருப்பதாகக் கூறினார். 5 நிமிடங்கள் ஆனதும் தோழி தம்முடைய கணவரிடம் மகள் இன்னும் ஏன் வெளியில் வரவில்லை, அழைத்து வாருங்கள் என்று மகளை வரவழைத்து பேச வைத்தார். (அதிகம் இல்லை நலம் நலமறிய ஆவல் தான்)

(2) 4 வயது ஹர்ஷா (சகோதரர் மகன் ) வாங்கத்தே உக்காருங்கத்தே தண்ணி குடிக்கறீங்களா அத்தே கிளம்பிட்டீங்களா அத்தே அப்ப போயிட்டு வாங்க அத்தே என்று கற்ற வித்தை முழுவதையும் ஒரு சேர அவிழ்த்து விட்டார் ஒரு முறை (தற்சமயம் 9 வயது)
எங்களின் வளர்ந்த பிள்ளைகள் சொல்வது "சின்ன வயசுல கட்டாயப் படுத்தி வெளில வர சொல்வீங்க அப்ப கோவமா வரும், ஆனால் இப்ப தான் அது 
எத்தனை நல்ல பழக்கம்னு புரியுது"

வீட்டிற்கு வருபவர்களை சந்திக்கும் சில நிமிடங்களை  மூலதனமாகக் நினையுங்கள். எல்லா உறவுகளையும் , நட்புகளையும் அறிமுகப் படுத்துங்கள். சிறு பிள்ளைகள் பதின்ம வயதில் யாருடனும் பழக விரும்புவதில்லை. சொல்லி புரிய வையுங்கள். அந்த வயதில் நான் ஏற்படுத்தும் இந்தப் பழக்கம் அவர்களின் பிற்காலத்தில் பெரிதும் பயன்படும் என்பதில் ஐயமில்லை.  பிள்ளைகள் வர மாட்டார்கள் என்று பெரியவர்களே தங்கள் வசதிக்கு சொல்லிக் கொள்வதே அதிகம்..  
  
நியூக்ளியர் குடும்பங்கள் அதிகரித்து , வீட்டிற்கு ஒரிரு பிள்ளைகள் என்றாகி விட்ட இந்தக் கால கட்டத்தில் , பெற்றோரின் முக்கிய கடமை சொத்து சேர்ப்பது மட்டுமில்லை, பிள்ளைகளுக்கு உறவையும் நட்பையும் ஏற்படுத்தித் தருவது தான். 
   
இது அம்மாக்களுக்கு மட்டும் இல்லை ... அப்பாக்களுக்கும் தான்...


Thursday, 29 January 2015

அந்திக்கு முந்து....

ஐந்தாம் வகுப்பு அறிவியல் பாட வேளை....... வகுப்பு மற்றும் தலைமை ஆசிரியை திருமதி சிவகாமி அவர்கள் எங்களிடம் கேட்ட கேள்வி:  உயிரினங்கள் ஆக்சிஜனை உள் வாங்கி கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுகின்றன. வளி மண்டலத்தில் உள்ள ஆக்சிஜன் தீராமல் இருப்பது எப்படி?
வழக்கம் போல் எங்கள் பதில்..... பே..பேபே...... 
மறு நாள் வகுப்பில் எங்கள் வகுப்பு மாணவி மீனா (எ) வேணி அவரது தாயாரிடம் (நம்ம டீச்சர்தான் அவங்க அம்மா) கேட்டு வந்து வகுப்பில் சொன்ன பதில் : தாவரங்கள் கார்பன் டை ஆக்சைடை உட்கொண்டு ஆக்சிஜனை வெளியேற்றுகின்றன. இது ஒரு சுழற்சி போல பயன்படுத்தப் படுகிறது.

வணக்கம் ....... வெட்னெஸ்டே சமையலில் நாம் கற்கப் போவது தாவரங்களின் சமையல் முறை பற்றியது
இதற்குப் பெயர்  போடோசிந்தசிஸ் .....
தேவையான பொருட்கள் :  வேரிலிருந்து உறியப்படும் நீர், கர்பன் டை ஆக்சைடு மற்றும் பச்சையம் (கர்ட் ரைஸ் வித் பொடேடோ ஃபிங்கர் சிப்ஸ் மா....திரி) 
சூரிய ஒளியை வைத்து மேற்படி உணவினை தாவரங்கள் தயாரித்து இலைகளில் சேமித்து வைக்கும்.....
(முக்கியக் குறிப்பு :இரவு நேரத்தில் சூரிய ஒளி இல்லாததால் தாவரங்களின் சமையலறை மூடப்படும்.)

அதிகப்படியான நீரை நாம் எல்லாருமே இலைகளின் மேல் பார்த்திருப்போம். அது சூரிய ஒளியில் ஆவியாகி, மேகமாகி, பின் குளிர்ந்து மழையாக மாறி பூமிக்கு வந்து சேர்கிறது. மீண்டும் தாவரங்கள் அந்த தண்ணீரை உறிஞ்சி , உணவாக்கி, ஆவியாகி, மேகமாகி, மழையாகி, .....  இது முடிவில்லாத ஒரு வட்டம். (இதையே மழை சுழற்சி என்பார்கள்)

மழைக்குத் தேவை மரங்கள்..... மரங்களைக் காக்க நம்மால் ஆன சிறு செயல்கள் .... 
(1)சிறு பிள்ளைகளுக்கு காகிதங்களை வீணாக்கக் கூடாது என்பதை சொல்லித் தர வேண்டும். 
(2)மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகளை பிரித்து குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.(மறு சுழற்சி முறையில் காகிதங்கள் பயன்படுத்தப்படும்)

[என் மகன் பள்ளி சேர்ந்த புதிதில் அன்று எழுதிய காகிதம் மறு நாள் நோட்டில் இருக்காது. எங்கே என்று நான் கேட்டதற்கு அவரது பதில்....... அதான் எழுதியாச்சே....... நாளைக்கு பள்ளிக்கு செல்லும் போது புது நோட்டா எடுத்துட்டு போக வேண்டாமா? அதான் இன்னைக்கு எழுதின பக்கத்தை கிழிச்சுட்டேன்.]

ஆங்....... சொல்ல வந்ததை விட்டுட்டு எங்கேயோ போயிட்டேன்.......

மாலை வேளைகளில் நடைப் பயிற்சி செய்ய விரும்புபவர்கள் அந்தி சாயும் முன்பே நடைப் பயிற்சியை முடித்துக் கொள்ள வேண்டும் ........ (அந்தி - சூரியன் மறையும் நேரம்) இரவில் திறந்த வெளியில் தூங்குவதும் நல்லதல்ல...... குறிப்பாக மரங்கள் அடர்ந்த பகுதியில் மேற்கண்டவைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்....அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடை தாவரங்கள் இரவு நேரங்களில் வெளியேற்றும்....


பின் குறிப்பு : புரியாத புலவர்களுக்காக :
During the day, plants photosynthesise more than they respire so more carbon dioxide is used up than produced.  During photosynthesis energy from the sun changed into energy stored as sugar and oxygen is produced as water is broken down.  This is why we think of plants as producing oxygen and using carbon dioxide.  At night however, photosynthesis can’t happen (because it’s dark!) and plants make carbon dioxide as they consume oxygen during cellular respiration.