Sunday, 16 August 2020

உள் நாட்டு விமானப் பயண அனுபவங்கள்...[சென்னை முதல் இமயம் முடிய]

ஜனவரி 1, 2006  

[புதுடில்லி - ஹைதராபாத்சென்னை]

குர்காவ்னில் பேஷன் டிசைனர் ஆக வேலை பார்த்துக் கொண்டிருந்த மகளைக் காண கணவர் மகனுடன் சென்ற பயணம் அது .போகும்போது ரயில் வரும் போது விமானம். (Spice jet)   முதல் விமானப் பயணம் கூட.

மாலை 6.30 மணிக்கு விமானம் கிளம்பும் நேரம் 

அங்கு கடும் பனி மூட்டம்.விமானி  50 மீட்டருக்கும் குறைவான visibility தான் இருக்கிறது, இறங்கி வீட்டுக்கு செல்லுங்கள் என்று சொல்லி விட்டார்.

இறங்கி டெர்மினல் உள்ளே செல்வதற்குள் குளிரில் விறைத்து போனோம். சென்னைக்கு தானே செல்லப்போகிறோம் என்று ஒரே ஒரு ஸ்வெட்டர் தவிர மீதியை மகளிடமே கொடுத்து விட்டோம்.

அதற்கிடையில் என் கணவர் டிக்கெட்டுகளை 3 ஆம் தேதிக்கு மாற்றி வாங்கி வந்தார். [ குளிரில் நடுங்கி கொண்டு எதிரில் யார் வருகிறார்கள் என்றே தெரியாத நிலையில் நான் டிக்கெட்டை மாற்றிக்  கொண்டு வந்தேனே அது பற்றி எழுதவே இல்லை என்று கோவித்துக் கொள்ளக் கூடாது இல்லையா என் கணவர்?]

அந்த பகுதியில் அந்த நேரத்தில் பயணித்துக் கொண்டிருந்த என் மகளின் வகுப்பு தோழர் எங்களை அழைத்துச் சென்றார்.  வெடவெடப்பு அடங்க 2 மணி நேரங்கள் ஆனது.

3 ஆம் தேதி விமானப் பயணத்தைப் பற்றி சொல்லவே இல்லையே .... ஹைராபாத் வரை சுகமான நிம்மதியான  பயணம். அங்கிருந்து கிளம்பும் சமயம் பாதுகாப்பு விதிகள் பற்றி விளக்கும் போது உங்கள் இருக்கையில் இருக்கும் cushion ஐயே floatation ஆக பயன்படுத்தலாம் என்கிறார்கள்.

வங்காள விரிகுடா கடல் மேலே பறக்கும் போது பிரச்சினை வந்தால் cushion கட்டிகொண்டு கடலில் குதியுங்கள் என்பதே அதன் பொருள் . கேட்டதும் ஒரே படபடப்பு எனக்கு. எங்கே எப்படி அந்த cushion எடுக்க வேண்டும்  என்று என் மகனைக் கேட்டால் யாருக்கு தெரியும் என்று பதில் வந்தது. பயந்து கொண்டே சென்னை வந்து சேர்ந்தோம்.

 

பிப்ரவரி, 2008

[பூனேசென்னை]

அலுவல் நிமித்தம் பூனேவிற்கு சில நாட்களுக்கு செல்ல வேண்டி இருந்தது. (தனியாக). திரும்பி வரும் நாளில் சகோதரிக்கு   பூனே அலுவலகத்தில் [நாங்களிருவரும் ஒரே அலுவலகத்தில் இருந்தோம்]  வேலை இருந்ததால் வழக்கமாக வரும் டாக்ஸி ஓட்டுநர் வந்து உன்னை அழைத்து செல்வார் என்று சொல்லி விட்டு சென்று விட்டார். மதியம் 1.30  விமானம் கிளம்பும் நேரம். 12 மணி . ஓட்டுநர்  வரவேயில்லை . வழக்கமான  ஓட்டுநர் வராமல் அவரது மகனை  (20 + வயதுகள்) அனுப்பி இருந்தார். மகன் நான் receptionல் பெட்டியுடன் காத்திருந்ததை கவனிக்காமல், reception பகுதியில் கேட்காமல் .மாடியில் நான் தங்கி இருந்த அறைக்கு சென்று தேடி விட்டு காணவில்லை என்று receptionல் சொல்ல ...அவர்கள்  என்னை அடையாளம் காட்ட ...

12.15 pm

காரில் ஏறி புறப்பட்டோம்.  அவருக்கு  ஏர்போர்ட் போக வழியே தெரியவில்லை . 10 அடிக்கு ஒரு முறை நிறுத்தி "ஏரோடோ" எப்படி செல்வது என்று மராத்தியில் கேட்டார். மேடு, பள்ளம், சாக்கடைகள்,  குடிசைகள் என அமைந்திருந்த குறுகலான பகுதிக்குள்ளெல்லாம் புகுந்து பூனே நகரை  சுற்றி காண்பித்தார். நான் ஆங்கிலத்தில் அலற அவர் மராத்தியில் பேச.... உதவிக்கு சகோதரியை தொலைபேசியில் கூப்பிட்டேன். அதுவும் வேலைக்கே ஆகவில்லை . மீண்டும் ஏரோடோ  ஏரோடோ மட்டுமே ..வாக்கியமாக கூட கேட்கவில்லை. அவரின் நடவடிக்கைகளை கண்டு எனக்கு விமானத்தை பிடிக்க முடியுமா என்ற கவலையை மீறி சிரிப்பை அடக்க முடியவில்லை. 

12.45 pm

ஒரு வழியாக ஆங்கிலத்திற்கு மாறி "airport" என்று கேட்க ஆரம்பித்தார். இந்த சமயத்தில்  அகலமான சாலைப்பகுதிக்கு வந்திருந்தார். சாலைகளில் பலகைகளில் ஆங்காங்கே ஏர்போர்ட் போகும் வழி  என்று எழுதி அம்புக் குறி  இருக்கே அதை பார்த்து ஓட்டுங்கள் என்று நான் சொல்ல... அவருக்கு புரிந்தால் தானே ? மீண்டும் airport  விசாரணை... பொறுமை மீறி go straight என்று நான் வழி காட்ட ஆரம்பித்தேன்.

1.15. pm

விமான நிலையத்திற்கு மிக அருகில் ஒரு திருப்பம் . இடது புறத்தில் மிலிட்டரி பகுதி வலது புறத்தில் விமான நிலையம் . நம்மவருக்கு   இடதா வலதா என்று பலத்த சந்தேகம். நன்கு யோசித்து இடது புறம் திரும்ப ஆரம்பிக்க நான் right right என்று அலற....

 

1.20 pm 

விமான நிலையம் .

 

 பூனே விமான நிலையம் மிக சிறியது. Terminal என்பது சிறிய hall தான். கதவை தாண்டியவுடன் 100 மீட்டர் நடந்தால் விமானம் நின்று கொண்டிருக்கும்.   

கடைசியாக, தாமதமாக, ஓட்டமாக ஓடி வேறு சென்றதால் கடுமையான security check. வெளியில் விடவே இல்லை. விட்டதும் ஓட்டமாக விமானத்தை நோக்கி ஓடி படிக்கட்டுகளில் ஏறினேன்.

Mofussil பஸ் நிலையங்களில் கண்டக்டர் பின் கதவிலிருந்து எட்டி பார்த்து பயணிகள் ஏறியதும்  ரை... ரை ....என்று கூவுவதற்காக காத்திருப்பது போல air hostess எட்டி பார்த்துக் கொண்டிருந்தார். நான் ஏறி விமானத்தின் கதவுக்கு அருகில் கடைசி இருக்கையில் (அது ஒன்று தான் காலி ) சரியாக கூட அமரவில்லை ... ரை...  ரை...  இல்லாமலே விமானம் கிளம்பி விட்டது .

 

டிசம்பர் 2015 / ஜனவரி 2016

[சென்னை - மும்பை -மஹாபலேஷ்வர்]

ஜனவரி 1 ஆம் தேதி  காலை மும்பையில் விமானம் ஏறினோம் . 1.50 மணி நேர பயணம் . மார்கழி மாதம் . சென்னையில் கடும் பனிமூட்டம் . திருப்பதி அருகே இருந்தபோது காலை 9 மணி ஆகியும் சென்னையில் விமானம் தரையிறங்க அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது.

விமானம் திருப்பதி விமான நிலையத்தின் மேலே சுற்றி சுற்றி சுற்றி (3 முறை) ஒரு மணி நேரம் பறந்து கொண்டே இருந்தது.

எப்போது தரையிறங்குவோம், விமானத்தில் எரிபொருள் தீர்ந்து விடாதா இப்படி பல யோசனைகள்.

இருக்கைக்கு முன்பாக இருந்த டிவியில்  ஒரு திரைப்படம் பார்த்து முடித்த சமயம்  சென்னையில் தரையிறங்கினோம் .

 

நவம்பர், 2017

[சிம்லா, குலு, மணாலி]

டெல்லி வரை விமானம் அங்கிருந்து innova காரில் மற்ற இடங்களுக்கு பயணம்.

திரும்பி வரும் சமயம் டில்லியில் smog. மாலை 5.30 மணி விமானத்திற்கு 1.30 க்கே விமான நிலையத்தில் கொண்டு வந்து இறக்கி விட்டு சென்று விட்டார் இன்னோவா ஓட்டுநர்.

விமானத்தில் ஏறியதும் விமானத்தின் உட்புறம் வித்தியாசமாக காட்சியளித்தது . சிகாகோ O 'Hare விமான நிலையத்திலிருந்து சென்னை வரும் விமானம் அது.புத்தம் புதிய விமானம் . ஜன்னலின் வடிவமைப்பு, இருக்கைகள், உள்ளமைப்பு எல்லாமே வித்தியாசம். இருக்கையில் அமர்ந்ததும் அங்கே இருந்த விமானம் பற்றிய குறிப்புகள் இருந்த அட்டையை பார்த்தேன். மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.  காரணம் நான் பயணம் செய்ய மிகவும் விரும்பிய Boeing 787-8 மாடல் விமானம் அது. ஜன்னலில் ஒரு பட்டனை அழுத்தினால் எவ்வளவு tint வேண்டுமோ அந்தளவுக்கு மாறும்.

[Boeing நிறுவனத்தின் விமானங்கள் Boeing 737, Boeing 747, Boeing 777.... என ஒவ்வொரு model க்கும் ஒவ்வொரு  எண்ணைக் கொண்டிருக்கும் . ஏர்பஸ்  நிறுவனத்தின் விமானங்கள் A 318, A 320 , A 321 , A 380 என்பது போல இருக்கும்.

Boeing 787 என்பது latest model விமானம். "Dreamliner" என்பது அதன் செல்லப் பெயர். ஆரம்பத்தில் இந்த model விமானத்தில் மின்சாரக் கோளாறுகள் ஏற்பட்டமையால் சில காலம் பறக்காமல் நிறுத்தி வைக்கப் பட்டு, அந்த பிரச்சினை சரி செய்யப்பட்ட  பிறகு மீண்டும் வானில் பறக்க விடப்பட்டது.

Boeing 747 மற்றும் A380 ஆகியவை double decker வகைகள் .

Boeing விமானங்களின் மூக்கு பகுதி சற்றே அகலமாகவும் Airbus கூர்மையாகவும் இருக்கும்.

Boeing 747க்கு நான்கு என்ஜின்கள், Boeing 777க்கு இரண்டு என்ஜின்கள். இந்த வகை விமானத்தில் விபத்துக்கள் மிகக் குறைவு. 

விமானங்கள் , விமான விபத்துக்கள் பற்றிய தகவல்கள் படிப்பது , பார்ப்பது என் மகனிடமிருந்து கற்றுக் கொண்ட பொழுது போக்கு. விமானப் பயணத்திற்கு சில நாட்கள் முன்பு இந்த பொழுது போக்கை தற்காலிகமாக நிறுத்தி விடுவோம்.


டிசம்பர் 25-27, 2017

[சென்னை – கோவை]

விமான பயண நேரம் 50 நிமிடங்களே.  ஆயினும்  காலை 10.30 க்கு வீட்டை விட்டு கிளம்பிஆட்டோ, , மெட்ரோ ரயில் , விமானம், வாடகைக்கார்,பேருந்து எனஎ அன்பே சிவம் படத்தில் வரும் கமலஹாசன் மாதவன் போல இரவு 7 மணிக்கு சத்தியமங்கலம் போய் சேர்ந்தோம். 

[அச்சமயத்தில் கோயம்பேடு - ஆலந்தூர் , ஆலந்தூர் - விமான நிலையம் என இரண்டு ரயில்களில் பயணிக்க வேண்டும். ஆலந்தூரில் இறங்கி இரண்டு தளங்கள் மேலேறி ...விமான நிலையம் வந்தடைந்தோம்.

விமான நிலையத்தில் escalator, travelator , lift , connecting bridge எதுவுமே இல்லை. படிக்கட்டுகளில் பெட்டியை சுமந்து கொண்டு இறங்கி உள்நாட்டு விமான நிலையம் சென்றோம்.]

அடுத்த நாளே மீண்டும் கோவை - சென்னை வந்து சேர்ந்தோம்.

 

மார்ச்/ ஏப்ரல், 2018

[சென்னை - டில்லி- ஸ்ரீநகர்]

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரான ஸ்ரீநகர் / பஹல்காம் / குல்மார்க் பயணம். Air India விமானப் பயணம் .

போகும்போது ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அவ்வளவாக சோதனைகள் இல்லை

அங்கே நாங்கள் தங்கியிருந்த 4 நாட்களில் ஒருநாள் குல்மார்க், மீதி நாட்கள் ஸ்ரீநகர் என்றே சுற்றி பார்க்க முடிந்தது. பகல்காமில் துப்பாக்கி சூடு, குல்மார்க் ஸ்ரீநகரில் ஊரடங்கு உத்தரவு 3 நாட்களுக்கு. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் கிடையாது என்பதால் ஊரை சுற்றி பார்த்தோம்.

ஊருக்குள் எங்கெங்கும் CRPF வீரர்கள், காஷ்மீர் மாநில காவலர்கள் துப்பாக்கி இந்திய வண்ணம் நின்று கொண்டு இருந்தார்கள்.(100 அடிக்கு ஒருவர் )

திரும்பும் நாளில் 3 மணி நேரங்களுக்கு முன்பாக விமான நிலையத்தில் இருக்க வேண்டும் என்பதால் 4 மணி நேரங்கள் முன்பே கிளம்பி விட்டோம். 2 கிலோமீட்டர்களுக்கு முன்பிருந்தே scanning/security check ஆரம்பம் . விமானத்தில்  ஏறும் முன்பு வரை 6 முறை நம் உடைமைகளையும் நம்மையும் சோதனை செய்தார்கள். உடைமைகளை விமானத்தில் ஏற்றுவதற்கு முன்பு அவரவரின் பெட்டி எது என்று அடையாளம் காட்டிய பின்பே விமானத்திற்குள் பெட்டிகளை அனுமதிக்கிறார்கள். [Boarding pass கூட வாங்கி சோதித்து பார்த்தார்கள்]

விமான நிலைய காத்திருப்பு பகுதியிலிருந்தே பனிமலைகள் தரிசனம் கண்கொள்ளாக் காட்சி. உள்ளே நடந்த கெடுபிடியால் எதுவும் ரசிக்கவில்லை.

விமானம் மேலேறியதும் தெரிந்த பனிமலைகள் இயற்கையின் அற்புதம். எங்கே ஆரம்பம் எங்கே முடிவு என்று தெரியாத மலைத்தொடர்கள்.]

உள்நாட்டு பயணங்கள் ஒரு வகை என்றால் வெளி நாட்டு பயணங்கள் வேறு வகை.

ஒவ்வொன்றும் ஒருவிதம்...

 

பின் குறிப்பு : மேற்கூறிய அனைத்து பயணங்கள் பற்றிய பதிவுகளும் என் facebook timeline மற்றும் manjooz .blogspot .com ல் உள்ளன .

 

 







Tuesday, 2 June 2020


அவளா நீ??
வலைத்தளங்களும் கூகுள் மேப்பும் அதிகம் பயன்படுத்தப்படாத 2010ல், மகள் வாழும் சான்பிரான்ஸிஸ்கோ நகரம் எங்கே இருக்கிறது என்று அட்லாஸ் பார்த்து தெரிந்து கொண்டு, என் முதல் அமெரிக்கப் பயணம் அமைந்தது.22 நாட்களே இருந்த அந்தப் பயணத்தில் சான்பிரான்ஸிஸ்கோ சென்ற மறுநாளே நயாகரா நீர்வீழ்ச்சியை காண மீண்டும் கிழக்கு கடற்கரை நோக்கி விமானத்தில் அட்லாண்டா வழியாக நியூயார்க் மாநிலத்தை சேர்ந்த Buffalo நகருக்கு சென்றோம்.
குடும்ப நண்பர் ஒருவரும் Buffaloவில் எங்களுடன் இணைந்து கொள்ள Niagara Falls City யை நோக்கி சுமார் 40 நிமிடங்கள் பேருந்தில் 27 km பயணம். Jetlagல் மப்பும் மந்தாரமுமான பயணம்.பேருந்தில் சென்ற போது பல மைல்களுக்கு அப்பாலிருந்தே மேகமூட்டம் தெரிகிறது. அந்த பகுதியில் செடி கொடிகளோ மரங்களோ தென்படவில்லை. Niagara Falls City சிறிய, எல்லா வித கடைகளும் உள்ள, Floating population அதிகம் உள்ள ஊர்.
[Horse shoe (கனடா), American மற்றும் Bridal veil (வடஅமெரிக்கா) என மூன்று பிரிவாக நீர் விழுகிறது. குதிரை லாட வடிவில் இருப்பதால் Horse shoe falls, மணப்பெண்ணின் தலையிலிருந்து நீ......ளமாக தொங்கும் சல்லாத்துணி போல இருப்பதால் Bridal veil என்ற காரணப் பெயர்கள். American falls உயரம் குறைவானது. (https://en.wikipedia.org/wiki/Niagara_Falls)]
வாருங்கள்..நீர்வீழ்ச்சியை காண செல்வோம்.
Niagara Falls State Park என்பது அரசாங்கம் நீர்வீழ்ச்சியை சுற்றி அமைத்துள்ள பாதுகாக்கப்பட்ட பகுதி. அதற்கு நேரெதிரில் நாங்கள் தங்கியதால் பயண நேரம் மிச்சம்.
ஆகஸ்ட் மாதம் அங்கே வெயிற்காலம் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம். குறிப்பாக இந்தியர்கள், மற்றும் கிழக்காசியர்களே அதிகம் தென்பட்டனர்.
[Lake Erie மற்றும் Lake Ontarioவை[Great Lakes என அழைக்கப் படும் உலகின் மிகப் பெரிய நன்னீர் ஏரிகள்] இணைக்கும் நீர்ப் பாதையே (drainage) நயாகரா நதி. Lake Erie யிலிருந்து நயாகரா நதி பிரிந்து அமைதியாக ஓடி வந்து 51 மீட்டர்(167 அடி ) உயர பள்ளத்தாக்கில் செங்குத்தாக பெரும் சப்தத்துடன் விழுகிறது. மீண்டும் அமைதியாக ஓடி Lake Ontario வில் கலக்கிறது.]
பூங்காவின் உள்ளே சிறிது தொலைவு நடந்தால் நீர்வீழ்ச்சி தென்பட தொடங்குகிறது. அருகில் நெருங்க நெருங்க அதன் பிரம்மாண்டம் மெய் சிலிர்க்க வைத்தது.
நயாகரா நீர்வீழ்ச்சி அதன் அழகுக்கு மட்டுமல்லாமல் மின்சார உற்பத்திக்கும் பெயர் பெற்றது.
பூங்காவிலிருந்து பார்க்கையில் கனடா பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள் சுழலும் ரெஸ்டாரண்டுகள் observation tower, அங்கு உலாவும் மக்கள் எனப் பலவும் தெரிகிறது. வலப்புறம் தலையை திருப்பினால் ரெயின்போ பாலம், அமெரிக்க பகுதியின் Horse Shoe Falls, observation tower, அமெரிக்க பகுதி நீர்வீழ்ச்சிகள், கீழே குனிந்தால் படகுகள் எனப் பல காட்சிகளையும் காணமுடிகிறது.
[இரண்டு ஏரிகளும், நயாகரா நதியும் பாதி வடஅமெரிக்கப் பகுதியிலும் மீதி கனடா நாட்டுப் பகுதியிலும் அமைந்துள்ளன. Ontario நகரத்திலிருந்து 121 km தொலைவில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. நதிக்கு இருபுறமும் உள்ள ஊர்களின் பெயரும் Niagara Falls City தான்.]
காலை எழுந்ததும் electric cooker ல் சாதம் வடித்து பொடி தொக்கு தயிர் வகையறாக்களுடன் சாப்பிட்டு விட்டு கிளம்புவோம். மதியம் பூங்காவில் உள்ள விடுதியில் உண்போம். அங்கு தான் நம் நாட்டு மக்களுடனான சந்திப்பு பேச்சு வார்த்தைகள் எல்லாம். இரவில் கையில் கொண்டு சென்ற சப்பாத்திகள் உதவின. [1.5 வயது கேசவ் காய் இல்லாமல் சாப்பிட மாட்டார் அந்நாளில். எல்லா காய்க்கும் கக்கக்காய், கம்மக்காய் ,கொம்மக்காய் என்று ‘க’ வரிசையில் பெயர் வைத்து கூறுவார். கக்கக்காய் இருந்தால் தான் சாப்பிடுவேன் என்பார். [சாப்பாட்டுக்கே வழியில்லை காய்க்கு எங்கே செல்வேன் கொடுப்பதை சாப்பிடு _ அவரின் தாயார்]
நீர்வீழ்ச்சி கொட்டும் இடத்திற்கு மிக அருகில் செல்ல அமெரிக்க பகுதியில் செயல்படும் Maid of the Mist Cruises என்னும் பெயரில் செயல்படும் மின்சார படகில் சென்றோம்.(கனடா பகுதியில் Hornblower Cruises) அவர்களே வழுக்காத செருப்பு மற்றும் raincoat( நீல நிறம்) ஒவ்வொருவருக்கும் தருவார்கள்.(Disposable) மிக அருகில் சென்ற போது கீழே விழும் நீர்த்துளிகள் தெறித்து மழையில் நனைவது போன்ற நிலை. ஒரு புறம் நீர்வீழ்ச்சியின் பிரம்மாண்டம் கண்டு பயம் மறுபுறம் மகிழ்ச்சி எனக் கலவையான உணர்வுகள்.
நதிக்கு மறுகரை கனடா என்று சொன்னேன் நினைவிருக்கிறதா? ஹெலிகாப்டர் நிலையத்தை தாண்டியவுடன் கனடா நாட்டுக்கு செல்ல check post. கனடா நாட்டு விசா உள்ளவர்கள் காரில் சென்று கனடா பகுதியிலிருந்து நீர்வீழ்ச்சியை கண்டு மகிழலாம். பாதசாரிகளுக்கு தனியாக Rainbow bridge என்னும் பாலம் உள்ளது. [நாமும் செல்லலாம் என்று கூறினேன். விசாவுக்கு application போட்டு விட்டு பாலத்திற்கு அருகில் உட்கார்ந்திரு ஒரு மாதத்தில் கிடைத்து விடும் போய் பார்த்து விட்டு வீடு வந்து சேர் நாங்கள் கிளம்புகிறோம் என்றார் மகள்]
மறுநாள் காலை நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு நேரெதிரில் ஹெலிகாப்டர் நிலையம்(?!). 4 தூண்கள் அதன் மேல் சதுரமான தளம் அவ்வளவே. கீழே பயணச்சீட்டு கொடுக்கும் இடம். அவரே உதவியாளர். ஹெலிகாப்டர் பைலட் வெளியில் வந்து நம்மை அழைத்து செல்வார். நான் என் கணவர் மற்றும் நண்பர் சென்றோம். என் கணவரின் seat belt clip வேலையே செய்யவில்லை அவர் அலற அலற ஹெலிகாப்டர் [குட்டி கேசவின் மழலையில் TITATO] கிளம்பியது. பெல்டை ஒரு கையிலும் உயிரை மற்ற கையிலுமாக பிடித்துக் கொண்டு பயணித்தார் என்றே சொல்லலாம். [விமானப் பயணம் என்றாலே பயப்படுபவர் என் கணவர்.] நான் வீடியோ மற்றும் புகைப்படங்கள் நிறைய எடுத்தேன். வானில் இரண்டு முறை நீர்வீழ்ச்சியை சுற்றி வட்டமடித்து கனடா பகுதியிலும் பயணித்து விட்டு வந்தோம்.வானிலிருந்து பார்க்கையில் Horse shoe நீர்வீழ்ச்சியின் மேல் வானவில் தோன்றி spectacular என்ற வார்த்தையை உண்மையாக்கியது. மறக்க முடியாத அனுபவம்.
முன்பொரு முறை Lake Superior, Lake Michigan பற்றி எழுதிய போது அவைகள் கடலளவு பெரியவை என்பதால் கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது என்று கூறினேன். அது போல வெல்லண்டு கால்வாய் (The Welland Canal) Lake Ontario மற்றும் Lake Erie ஆகியவைகளை இணைக்கிறது. அந்த இடத்தில் கப்பல்கள் நயாகரா நீர்வீழ்ச்சியை கடந்து செல்வதற்காக 8 கதவுகள் அமைக்கப்பட்டு, கப்பல் வரும் சமயத்தில் திறந்து விடப்படுகின்றன. (Courtesy: Wikipedia)
நயாகரா நீர்வீழ்ச்சியை கயிறு கட்டி கடந்து செல்லுதல் படகில் செல்லுதல் நடந்து செல்லுதல் போன்ற வீர விளையாட்டுக்கள், வீர மரணங்கள், பனிக்காலத்தில் உறைதல் எனப் பல தகவல்கள் கொண்ட டாக்குமெண்டரி ஒன்றையும் கண்டோம். Maple மரங்களை முதலில் அங்கு தான் பார்த்தேன். [காய்ந்த இலை ஒன்றை சென்னைக்கு எடுத்து வந்து பத்திரமாக வைத்திருந்தேன்.]
Bridal veil மற்றும் American நீர்வீழ்ச்சிகளை காண Goat Island என்னும் பகுதிக்கு சென்று அனுமதி சீட்டு,வழுக்காத செருப்பு raincoat (மஞ்சள் நிறம்) வாங்கி கொண்டு ஒரு குகையின் உள்ளே நடந்து பின் (The Cave of the Winds) elevator வழியாக மேலேறினால் நீர்வீழ்ச்சியின் மிக அருகில் அடிவாரத்தில் நாம் இருப்போம். அருவி நம்மை கண்டிப்பாக குளிப்பாட்டி விடும். அற்புதமான அனுபவம்.
Prospect Point Observation Tower மேலே ஏறி நின்று நயாகரா நீர்வீழ்ச்சியை(Horse shoe falls) மற்றொரு கோணத்தில் காணலாம். Prospect Point பூங்காவிலிருந்தும் பாதசாரிகள் நீர்வீழ்ச்சியை கண்டு களிக்க முடியும்.
அடுத்த நாள் காலை நயாகரா பூங்காவை அங்குள்ள குட்டி ரயிலில் ஏறி சுற்றி பார்த்தோம். நதிக்கரையில் அமர்ந்திருந்தோம். அமைதியாக ஓடி வரும் அந்த நதி சில அடிகளை கடந்ததும் பெருத்த ஓசையுடன் ஆர்ப்பரித்து கொட்டுவது இயற்கையின் விந்தை.
Horse shoe falls இரவில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும். கனடா பகுதியிலிருந்து வாணவேடிக்கை நிகழ்ச்சியும் உண்டு. பாதசாரிகள் செல்ல ஒரு பாலம் உண்டு என்று சொன்னேன் இல்லையா அதில் பாதி தூரம் விடுவார்கள். இரவில் குளிரில் நடுங்கி கொண்டே பாலத்தில் அமர்ந்து வாண வேடிக்கைகளை கண்டு களித்தோம். நதியின் நீர் புல்லின் பச்சை நிறம் போல் வித்தியாசமாக இருக்கிறது. அதில் உள்ள உப்புக்களும் உடைந்த பாறைகளின் துகள்களும் தான் அந்த வித்தியாசமான நிறத்திற்கு காரணம் என்று சொல்லப் படுகிறது .
(https://www.youtube.com/watch?v=2hGON9d3_Gk)
நிதானமாக 3 பகல்கள் 2 இரவுகள் சுற்றி சுற்றி நீர்வீழ்ச்சியை ரசித்தது இன்றளவும் மறக்க முடியாத அனுபவம். பின்னாளில் ஐரோப்பா ஆஸ்திரேலியா ஆசியா என பல கண்டங்களுக்கு பயணம் செய்ய நேர்ந்தாலும் முதல் வெளிநாட்டுப் பயணம் முக்கியம் இல்லையா? வரலாறு முக்கியம் அமைச்சரே… பின் குறிப்பு :
இந்த நீர்வீழ்ச்சியின் அழகை "ஜோடி" என்ற திரைப்படத்தில் ஒரு பாடலில் காட்டியிருக்கிறார்கள் .( கனடா பக்கத்திலிருந்து)

Wednesday, 6 May 2020

என்ன சத்தம் இந்த நேரம்....

பறவைகளின் இன்னிசை , எங்கோ தூரத்தில் செல்லும் ஒற்றை வாகனத்தின் ஓசை , யார் வீட்டு தொலைக்காட்சி பெட்டியிலிருந்தோ வரும் பக்தி பாடல் ஓசை , மின்விசிறியின் ஓசை இவ்வளவுதான் lockdown தினங்களின்
அதிகாலை ஓசைகள் . (பூ பூக்கும் ஓசை அதை[யும்] கேட்கத்தான் ஆசை ....)
எழுத்தாளர் சுஜாதா அவர்கள் "வாரம் ஒரு பாசுரம் " புத்தகத்தில் 7 ஆம் நூற்றாண்டின் சப்தங்களுடன் தற்போதைய சப்தங்களை ஒப்பிட்டு சொல்லி இருப்பது நினைவிற்கு வருகிறது .

காகங்கள், ஒற்றை குயில், தாழப் பறக்கும் விமானத்ததின் ஓசை, பக்கத்துக்கு காலனியில் காய்கறி விற்பவரின் குரல் ...என இன்றைய ஓசைகள் பற்றி சொல்லிவிட்டு அந்நாளில் கதிரவன் கிழக்கே சிகரத்தை அடைந்து விட்டான் இருள் நீங்கியது பூக்கள் எல்லாம் தேன் சொரிந்தன ... அரங்கனே எழுந்தருள்வாய் என "கதிரவன் குணதிசை சிகரம் வந்தடைந்தான் " என்ற தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாடலுக்கு விளக்கம் எழுதி விட்டு கடைசியில் இன்றைய தினங்களின் நாராசத்தில் அரங்கன் தூங்கவே மாட்டான் என்று முடித்திருக்கிறார்.(அரங்கன் தற்சமயம் 21 நாட்கள் பகலில் பக்தர்களுக்கு அருள் பாலித்து விட்டு இரவில் நன்றாக உறங்குவார் என நம்பலாம்.)

பல வருடங்களாக மேலை நாடுகளில் நடப்பில் இருக்கும் work from home கலாச்சாரம் இங்கும் நுழைந்து விட்டது. அலுவலக வேலை தொடங்கி நாலாயிர திவ்விய பிரபந்த வகுப்புகள் வரை அனைவரும் zoo(m)மிக் கொண்டு இருக்கிறார்கள்.
வீடியோ கால் மற்றும் தொலைபேசி மூலம் உறவும் நட்பும் பலப்படுவதென்னவோ உண்மை . (ஏன்டா போன் பேசும்போது சிரிச்சாப்ல பேச கூடாதா _ தாயார் , அம்மா இது அலுவலக மீட்டிங் கால் அம்மா _மகன் )
சம்ஸ்கிருத வகுப்பு சமயத்தில் ஏன் வீட்டு பாடங்களை எழுதவில்லை சகோதரி என்று என் மாணவிகளை கேட்டால் எங்களுக்கு பிள்ளை/பேரன்களுக்கு மாலையில் என்ன நொறுக்கு தீனி செய்து தருவது என்று யோசிக்கவே நேரம் சரியாக இருக்கிறது என்கிறார்கள். பாடத்தை நிறுத்தி விட்டு அவற்றிற்கான குறிப்புகளைக் கொடுத்தேன் . (வாழ்க்கைக் கல்வி?!)
என்றோ எகனாமிக்ஸ் வகுப்பில் படித்த scarce means, more demand to be managed with limited resources என்பதை பயன்படுத்தி கைவசம் இருக்கும் மளிகை காய்கறிகளை வைத்து சுவையாகவும்(?!) சத்தாகவும் சமைப்பது சவாலாக உள்ளது.

இந்த lockdown மக்களை முழுநேர creators ஆக்கி விட்டதென்னவோ உண்மை . விதம் விதமான மீம்ஸ்கள் (மீமீஸ் என்று சொல்லு பாட்டி _என் குட்டி பேரன்), கட்டுரைகள் , பக்தி செய்திகள் , சமையல் குறிப்புகள் தனிமையான இந்த நாட்களின் வெறுமையை அருமையாக விரட்டுகின்றன.

மனதில் பதிந்த சில பதிவுகள்.
மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்களுக்கான பாராட்டுக் கைதட்டலில் எதற்காக வீட்டிற்குள் நாள் முழுவதும் அடைந்து இருந்தோம் என்பதையே மறந்து மக்கள் கூட்டமாய் கூடி கைதட்டியது கண்டு பொருமி ஒரு இளைஞர் f ... வார்த்தையை விதம் விதமாக உபயோகித்து தன்னுடைய ஆற்றாமையை கூறி இருந்தார் .

130 கோடி மக்களும் ஒரே 'C' வார்த்தையை நினைத்துக் கொண்டே, சொல்லிக் கொண்டே இருக்கிறோம். அதனால் negative vibration ஏற்படுகிறது. 'C' வார்த்தையை நினைப்பதை சொல்வதை தவிர்ப்போம் என்கிறார் ஒரு பதிவின் ஆசிரியர்.

Zoom மற்ற video apps ஐ விட எப்படி சிறப்பாக செயல்படுகிறது, வீட்டையே ஒரு பிகினிக் தலமாக எப்படி மாற்றுவது, பிள்ளைகளுடன் பொழுதை பயனுள்ளதாக கழிப்பது எப்படி (3D animal videoவும் இதில் உண்டு), புத்தகப் பிரியர்களுக்கான பல்வேறு links எனப் பல பதிவுகள்.
சம்ஸ்க்ருத பாரதியில் மிக அருமையான பயனுள்ள Blogspot மற்றும் விவரங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். (அம்மா நாங்கள் இங்கே அமெரிக்காவில் பயன்படுத்திக் கொள்ளலாமா என்று உன் ஆசிரியரை கேட்டு சொல் _மகள்)

emoji களின் உதவியுடன் ஊர்களின் பெயரை கண்டுபிடியுங்கள், கிரிக்கெட் வீரர்களின் பெயரை கண்டுபிடியுங்கள் என்பது போன்ற quizகள் . (எங்கள் தாயார் எந்த துறை பற்றிய quizஆக இருந்தாலும் கண்டு பிடிக்கிறார்.)
உறவு நட்புக்களை காண சென்று திரும்பி வீடு செல்ல/வர முடியாதவர்களே! பிள்ளைகள் உறவினர்கள் என மொத்தமாக வீட்டிற்குள் (சிக்கி கொண்டு ?!) இருப்பவர்களே! மறந்தே போன scrabble , monopoly , பல்லாங்குழி போன்ற விளையாட்டுக்களை முயற்சி செய்யலாம். சிறுவர்களுக்கு கதைகள் சொல்லலாம் . DD தொலைக்காட்சியில் ராமாயணம், மஹாபாரதம், சக்திமான் ஆகிய தொடர்கள் காண்பிக்கிறார்கள். எளிய உடல் பயிற்சிகளை செய்யுங்கள். மகிழ்ச்சியுடன் பயனுள்ள வகையில் பொழுதை செலவிடுங்கள். இந்த நாட்கள் மீண்டும் கிடைக்காது.

எல்லா வேலைகளையும் நானே செய்கிறேன் என்ற புலம்பல் அதிகமாக கேட்கிறது . பிள்ளைகளை சிறு உதவிகள் செய்ய பழக்குங்கள் தாய்மார்களே . அவர்கள் உங்கள் பிள்ளைகள் தானே ? பொருட்களை அதனதன் இடத்தில் வைத்தல் , சாப்பிட்ட தட்டுகளை கழுவுதல் என ஆரம்பித்தது வயதிற்கேற்ற வேலைகளை செய்ய கற்றுக் கொடுங்கள் .
"கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்" என்று சொல்லி இருக்கிறார் நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை. வீட்டு வேலைகளும் கைத்தொழில்தான் . எப்போதும் என் நினைவுக்கு வரும் ஒரு திரைப்பட பாடல் "எல்லாரும் மாவாட்ட கத்துக்கிடணும் அது எப்போதும் தப்பில்லே ஒத்துக்கிடணும் எல்லார்க்கும் எல்லாமும் தெரிஞ்சிருந்தா இல்லாத நேரத்தில் கைகொடுக்கும்" (புதுப்புது அர்த்தங்கள்) .

சிங்கார சென்னையில் பலவருடங்களுக்கு முன் அனுபவித்த கடற்காற்று , ஒற்றை பறவை பறக்கும் ஓசை , எங்கோ ஒலிக்கும் தொலைபேசியின் அழைப்பு , நடுநிசியானாலும் தூங்காமல் லூட்டி அடிக்கும் குழந்தைகளின் சிரிப்பு சத்தம் என பலவற்றையும் மீண்டும் வீட்டிலிருந்தபடியே அனுபவிக்க இது ஒரு சந்தர்ப்பம் .

"சத்தம் இல்லாத தனிமை வேண்டும்" என்று கவிஞர் வைரமுத்து எழுதினர். தற்சமயம் அவரது ஆசை நிறைவேறி விட்டது, காரணம் எதுவாக இருப்பினும்.

கடைசியாக இன்று காலை படித்த ஒரு பதிவினை பகிர விரும்புகிறேன் . இத்தாலியில் 95 வயதான பெரியவர் ஒருவர் மருத்துவமனையிலிருந்து நோய் சரியாகி வீடு செல்லும் முன் உங்களுக்கு ஒரு நாள் செயற்கையாக சுவாசம் (ventilator) கொடுத்தோம். நீங்கள் அதற்கு $5000 பணம் கட்ட வேண்டும் என்று கூறினார்களாம். அந்தப் பெரியவர் அழுதாராம் . பணம் இல்லை போலும் என்று மற்றவர்கள் நினைக்க அவர் கூறியது இது தான் " நான் 95 வயது முடிய இந்த பூமியின் காற்றை எந்த கட்டணமும் இல்லாமல் சுவாசித்தேன் ஆனால் ஒரு நாள் செயற்கை சுவாசம் பெற்றதற்கு பணம் தர வேண்டி உள்ளது. இயற்கைக்கு நான் இது நாள் வரை நன்றி செலுத்தவில்லையே என்று அழுதேன்"

சுலபமாக பெரும் பொருட்களை நாம் மதிப்பதில்லை, இனியேனும் இயற்கையை மதிப்போம் . நலம் பெறுவோம்.

வாழ்க்கை வளமுடன் வாழ்வதற்கே. கவலை வேண்டாம் .

கூடிய விரைவில் நாமும் செல்லலாம் போத்தீஸ், Forum, Phoenix மால்களுக்கு ...
Courtesy : தொண்டரடிப்பொடி ஆழ்வார் , எழுத்தாளர் சுஜாதா , கவிஞர் வைரமுத்து , நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை மற்றும் Social Bloggers

பூங்(கா)கவனம்

பூங்காவில் நடைப்பயிற்சி செய்து கொண்டே நம்மை சுற்றி நடப்பவைகளை காண்பது ஒரு விதம். ஓரிடத்தில் அமர்ந்து கொண்டோ வீட்டில் இருந்தபடியே அருகில் அமைந்துள்ள பூங்காவை கவனிப்பது மற்றொரு விதம்.
இரண்டுமே சுவாரஸ்யமானவைகளே என் வரையில்.
வேகநடை, மிதவேக நடை,அன்னப்பட்சி நடை ,ஓட்ட நடை,உடற்பயிற்சி நடை,கைபேசியபடி நடை, அரட்டை நடை,காதலர்கள் நடை,பள்ளிப்பிள்ளைகளின் குதிநடை,குதிகால் நடை , செருப்பு , ஷூக்கள், காலணிகளே அணியாமல் நடை, பந்தயம் நடந்து கொண்டிருப்பது போன்ற நடை, இரவு உடையின் மேல் ஒரு துண்டு அணிந்து நடை என மக்கள் நடையாய் நடப்பதை சொல்லவா?

நடிகநடிகைகள், நடிகராக விரும்புபவர்கள் என பலரும் உடற்பயிற்சியும் நடைப்பயிற்சி சண்டை பயிற்சியை பற்றி சொல்லவா ?
தினமும் மாலை 4 மணிக்கு தவறாமல் நடைப்பயிற்சி செய்யும் ஒல்லி பெண் 6 மாதங்கள் நான் அமெரிக்க சென்று திரும்பிய பிறகு 10 கிலோ எடை கூடித் தெரிந்த அவரது எடைக்கு இன்றளவும் ஏறுமுகம் தான் என்பதை சொல்லவா?
தினமும் மாலையில் மல்லிகை பூ சூடி அன்னம் போலே நடந்து சென்றே சற்றே இளைத்து காணப்படுகிறாரே அவரைப் பற்றி சொல்லவா?
வெள்ளை T - shirt வெள்ளை அரைக்கால் சராய் வெள்ளை ஷூக்கள் அணிந்து ஒரே ஒரு நாள் மட்டும் நடைப்பயிற்சி செய்த , இன்றளவும் காணகிடைக்காத நண்பரைப் பற்றி சொல்லவா?

காலை 9 மணியளவில் கைபேசியில் பேசியபடி நடைப்பயிற்சி செய்து கொண்டே, அக்கம் பக்கத்து வீட்டு பெண்மணிகளை பார்த்து , பாப்பா நீ சினிமாவில் நடிக்கிறாயா மாமி உங்களுக்கு மடிசார் நன்றாக இருக்கிறது என விமர்சித்து செல்வாரே பிரபல திரைப்பட இயக்குனர் , அவரை தற்சமயம் ஏன் காணக் கிடைப்பதில்லை?

எங்கிருந்தோ நடந்தே வந்து இந்த பூங்காவில் அமர்ந்து கதை பேசும் வயதில் மூத்த பெண்டிர் பலரும் என் நட்புக்களே என்பதை சொல்லவா வேண்டும்?
மேடம் உங்களை எங்கேயோ பார்த்த நினைவு , வாய்ப்பாட்டு கற்றுக் கொண்டீர்களா? என் orchestra வில் பாடுகிறீர்களா எனக் கேட்டு விசிட்டிங் கார்டு தந்த அன்பரைப் பற்றி சொல்லவா? (பல வருடங்களுக்கு முன்பு நான் வயலின் கற்றுக் கொண்டிருந்தபோது பார்த்த நினைவு போல )
மற்றொரு முறை நான் படித்த கம்பியூட்டர் சென்டரின் மேலாளர் பூங்காவில் நண்பர்களுக்கு கைரேகை ஜோசியம் பார்த்துக் கொண்டே , மேடம் நல்லா இருக்கீங்களா என குசலம் விசாரித்ததை சொல்லவா?

25 வருடங்கள் கழித்து சந்திக்க நேர்ந்த தோழியின் தாய் உன்னுடன் சில நிமிடங்கள் பேசி செல்வது மனதுக்கு இதமாக இருக்கிறது என்றதை சொல்லவா?
தோழியுடன் இன்று எந்த பூங்காவில் நடைபயிற்சி செய்யலாம் என்று யோசித்து , வாட்ஸ்ஆப்பில் முடிவு செய்து , நடை பயின்றதை சொல்லவா?
தினம் ஒரு நிகழ்வு தினமொரு சந்திப்பு ...
இங்கே இப்படியென்றால் அமெரிக்காவில் மற்றொரு விதம். பரப்பளவு அதிகம் உள்ள பூங்காக்கள்.
காலை 6 -8 நாய்களுடன் நடைப்பயிற்சி செய்யும் மக்கள் , நாய் மலம் கழித்துவிட்டால் அதை அவர்களே சுத்தம் செய்து குப்பை தொட்டியில் போட்டு செல்வதை காண நேர்ந்ததை சொல்லவா?( அதற்கென ஒரு டப்பாவில் பிளாஸ்டிக் பைகள் இருக்கும். )
ஒரு சுற்று நடந்து முடிக்க 15 நிமிடங்கள் ஆகும் பூங்காவில் 3,4 பேர்களே நடந்து கொண்டோ ஓடிக்கொண்டோ இருப்பார்களே அதை சொல்லவா? இவர்கள் கையில் , தோள்பட்டையில் Fitbit , கைபேசி app என எதையாவது அணிந்தே செல்வதை சொல்லவா ?
பூங்காவின் உள்ளேயே சைக்கிள் ஓட்டி செல்வதை சொல்லவா?
வெயிற்காலத்தில் 12 மணி வெய்யிலில் sunny day என மிக்க மகிழ்ச்சியுடன் கால் பந்து விளையாட்டை கூட்டம் கூட்டமாக எல்லா வயதினரும் விளையாடி நம்மை ஆயாசப்படுத்துவார்களே அதை சொல்லவா?

கிழக்காசிய மக்கள் அதிகம் வசிக்கும் கலிபோர்னியா மாநிலத்தில் காலை 10 மணியளவில் வயதானவர்களின் மிக மெதுவான நடன அசைவுகளுடன் கூடிய உடற்பயிற்சி , தம்மை தாமே குறிப்பிட்ட இடங்களில் அடித்துக் கொள்ளும் பயிற்சி ,(குறிப்பிட்ட இடத்தில் அடித்துக் கொண்டால் குறிப்பிட்ட வியாதி போகும் என்பது ஒரு வித வைத்திய முறை), வாள் பயிற்சி, சிலம்பு பயிற்சி என வித்தியாசமான உடற்பயிற்சிகளை சொல்லவா?
குளிர்காலங்களில் சூரியன் எப்போது வருவார் என்று காத்திருந்து வயதானவர்கள் தெருவில் நடைப்பயிற்சிக்கு வருவார்கள்.அப்படியே பூங்காக்களும் .
இந்திய மக்கள் பூங்காக்களில் கூடி , பேசி, தங்கள் குறை நிறைகளை விவாதித்து , முடிந்தால் சிறிது நடைப்பயிற்சியும் செய்வார்களே அதை சொல்லவா? (இந்த பார்க் இருக்கோ நான் பாயை பிராண்டாமல் இருக்கேன்_ ஒரு முதிய பெண்மணி )
தென்னிந்தியர்கள் , வடஇந்தியர்கள் தனித்தனி குழுக்களாக பேசிக்கொண்டும் ,தமிழர்கள் ஹிந்தி தெரியாத காரணத்தால் தமிழர்களுடன் மட்டுமே பேசிக்கொண்டும் இருப்பார்களே அதை சொல்லவா?

வீட்டு தோட்டத்திலிருந்து எலுமிச்சை, ஆரஞ்சு இன்ன பிற பழங்கள் காய்கறிகளை பங்கிட்டு கொள்ளுதல் , யார் வீட்டில் அடுத்த வாரம் லலிதா சஹஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ரநாமம் , நவராத்திரி அழைப்புக்கள் , potluck டின்னர் , ராஜா புது வீடு வாங்கி இருக்கிறார் தெரியுமா போன்ற தகவல் (வம்பு) பரிமாற்றங்களும் நடைபெறுமே அது பற்றி சொல்லவா?
நான் சென்ற அதே மாதங்களில் வந்திருந்த என் சகோதரியுடன் தினமும் படித்த புத்தகங்கள், பார்த்த நாடகங்கள், சென்ற இடங்கள் என பேசிக்கொண்டே பூங்காவில் நடந்ததை சொல்லவா? (அக்கா sun வந்துடுச்சு , கிளம்பலாமா ?)

விஸ்கான்சின் மாநிலத்தில், பூங்காக்களில் ஆப்பிள் மரங்கள் காய்த்து ,பழுத்து கீழே விழுந்து கவனிப்பாரற்று கிடக்கும் . தெருக்களில் நடைப்பயிற்சி செய்யும் போது ஆரஞ்சு, சிவப்பு மற்றும் அடர்வண்ண வண்ண உடை அணிந்து சென்றால் நாய்கள் குறைப்பதை கண்டு பயந்து , (இங்கே நாய் கடித்தால் 1 மில்லியன் டாலருக்கு வழக்கு போடலாம் அப்பா _ எங்கள் மகன்). google map ஐ உபயோகித்து மாற்றுப் பாதையில் உருப்படியாய் வீடு வந்து சேர்ந்தோமே அதை பற்றி சொல்லவா?
மணிக்கணக்காக நடைபாதையிலோ பூங்காவிலோ ஒரு சொட்டு வியர்வை சிந்தாமல் அங்கே நடக்கலாம் என்பதை சொல்லவா?
ஐரோப்பாவின் சுவிட்சர்லாந்து போனபோதும் ஆஸ்திரேலியாவின் Melbourne போன போதும் பூங்காக்களும் நடைப்பயிற்சியும், Gold coast நகரின் கடற்கரையும் என்னை கவர்ந்திழுத்து நடக்க வைத்ததை சொல்லவா?

மீண்டும் இங்கே ......
சோகமான ஒரு நாளில் தோழி ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று வரை தொடரும் வழக்கம் இது மலையளவு சோகமும் நொடிப்பொழுதில் மறைந்து போகும் .

சமீப நாட்களில் பூங்காவில் பின்னோக்கி நடந்து, அடிபிரதட்சிண நடைப் பயிற்சி செய்து கொண்டிருக்கிறார் ஒருவர்.

எங்கேயோ பார்த்த ஞாபகம்


உலகின் பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்ட பல தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களை Netflix/Amazon Primeல் கண்டிருந்தாலும் உலகெங்கும் மிகப் பிரசித்தமாக பலராலும் பார்க்கப்படும் K-drama எனப்படும் கொரிய தயாரிப்புகளைப் பார்ப்பதில் எனக்கு தயக்கமே . காரணம் அவர்களின் வித்தியாசப்படுத்தி அறிய முடியாத முகச் சாயல். (கவுண்டமணி மீம்ஸ் ஒன்றில் வந்தது போல ஏண்டா டேய்...ஒருத்தனே மாறுவேடம் போட்டுக்கிட்டு எல்லா கதாபாத்திரத்திலும் நடிக்கிறீங்களா ?)
மிக நீண்ட கால யோசனைக்கு பிறகு , சமீப நாட்களில் தென் கொரிய தொடர்களை காண ஆரம்பித்துள்ளேன். ஒரு தொடரை பார்க்க ஆரம்பித்ததும் பல எபிசோடுகளுக்கு பிறகு ஆள் அடையாளம் பிடிபட தொடங்கியதும் சுவாரஸ்யம் கூடியது.
10 வயதில் சந்தித்த கதாநாயகனும் கதநாயகியும் 25+ களில் சந்திக்கிறார்கள்.
கதாநாயகிக்கு (செஃப்) முதல் எபிசோடிலேயே கதாநாயகனை அடையாளம் தெரிகிறது. கதாநாயகனுக்கு (மருத்துவர்) 12 ஆவது எபிசோடில் தான் தெரிகிறது.
வெண்ணையால் செய்தது போன்ற முகத்துடன் அன்பே உருவான துறுதுறு கதாநாயகி. இறுக்கமான முகத்துடன் கதாநாயகன்.
முகத்தில் சிரிப்பு/உணர்ச்சிகள் எதுவும் இல்லாத பெற்றோரை இழந்த பணக்கார கதாநாயகன் ,
தாயால் கைவிடப்பட்டு மன நலம் பாதிக்கபட்டு பின் சரியாகி, பின்பு ஒரு விபத்தில் சுவை மணம் உணரும் ஆற்றல் இழந்தாலும் அருமையாக சமைக்கும் கதாநாயகி, தறுதலை தம்பி, தமிழ் சீரியல் மாமியார் போல ஒரு மாமியார்(என் மகனை விட நீ புத்திசாலி என்று தானே உன் அப்பாவின் கடன்களை அடைத்து உன்னை என் மருமகளாக்கினேன்), நியூரோ சர்ஜன்களான சித்தப்பா பெரியப்பா மகன்களின் (அடித்து புரண்டு) சண்டை, இறக்கும் தருவாயில் உள்ள நோயாளிகள் எனப் பல விதமாக கதாபாத்திரங்கள்.
அலுக்க சலிக்க சென்டிமென்ட் காட்சிகள். ஆண்கள் பிழிய பிழிய கதறி அழுகிறார்கள். (Close-up காட்சிகள் ) ஆளை வைத்து அம்மாவே மகனை அடிக்கிறார். சண்டையிட்ட சகோதரர் வைத்தியம் செய்கிறார். கடைசி எபிசோடில் கதாநாயகி எங்கேயோ சென்று விடுகிறார். கதாநாயகன் அன்பே சிவம் பட ரீதியில் விமானத்தில் ஆரம்பித்து கடைசியில் ஓடி அவரை கண்டு பிடித்து ஒன்று சேர்கிறார்.
ஏழைகள் எனப்படுவோர் கூட விதம் விதமான உயர்ரக ஆடை அணிந்து வருகிறார்கள். கிம்சி (ஊறுகாய் போன்ற உணவு )தயாரிப்பதை விதம் விதமாக சொல்கிறார்கள் செய்தும் காட்டுகிறார்கள். அனைவரும் விலை உயர்ந்த கைபேசியை பயன்படுத்துகிறார்கள்.
அனைருக்குமே கார் ஓட்ட தெரிகிறது. அவர்களின் மொழியை இழுத்து இழுத்து கொஞ்சி கொஞ்சி பேசுகிறார்கள்.
கதாநாயகன்/நாயகி பெற்றோரை இழந்தவர் அல்லது பெற்றோர் மணவிலக்கு பெற்றவர்கள். இருவரும் முன்பே எங்கோ சந்தித்து இருக்கிறார்கள் .(நான் பார்த்த மூன்று தொடர்களிலும் நாயகன் நாயகி முன்பே அறிமுகமானவர்களே). தனியாக வசிக்கிறார்கள். குடும்ப சண்டைகள் , குழப்பங்கள் , குடும்பத்திற்குள்ளேயே வில்லத்தனங்கள் என நாம் அறிந்த விஷயங்கள்.
Incheon International Airport , Military base, மருத்துவமனை என வித்தியாசமான கதைக்களங்கள். (Settings)
விமான நிலையத்தில் என்னென்ன பிரச்சினை கள் வரும் எப்படி சமாளிக்கிறார்கள் என விரிவாக படம் பிடித்து காட்டி இருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு அந்த விமான நிலையத்தில் சில மணி நேரங்கள் காத்திருந்து அமெரிக்கா செல்லும் விமானத்தில் சென்றோம். தொடரை பார்க்கையில் நானும் அங்கிருப்பது போல் உணர்ந்தேன்.
நம் மொழிப்படங்களை பார்ப்பது போன்ற உணர்வு தான் இந்த K -ட்ராமாக்களின் வெற்றிக்கு காரணம் என நினைக்கிறேன் . மனதிற்கு நெருக்கமாக உள்ளது .
ஒரு சின்ன சந்தேகம். தற்போது காணும் தொடரில் Mr.Eun ஆக நடிப்பவர் மற்றொரு தொடரில் Dr.Jun ஆக நடித்தவரோ ?





Thursday, 13 June 2019

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் புறப்பாடு/வருகை பகுதிகளுக்கு பலவருடங்களாக சென்று வருகிறேன்.

சில தினங்களுக்கு முன்  அதிகாலையில் (இதெல்லாம் எங்களுக்கு சகஜமப்பா) மகிழுந்தில் 3 மணிக்கு விமான நிலையத்திற்குள் நுழைந்து விட்டோம் மகள் மற்றும் பேரன்களை வரவேற்க , விமானம் அதிகாலை 2.30 சரியான நேரத்தில் தரையிறங்கி விட்டது என்ற என் மகளின் தகவலுடன் .

வெளிச்சமாய் இருந்த  Arrival/வருகை பகுதியில் எங்களுடன் பேரன்களின் மற்றொரு தாத்தாவும் பாட்டியும்  சேர்ந்து கொள்ள....காத்திருப்பு ஆரம்பம். 

வெளியே வரும் கதவருகில் ஒரு காவலர். (சென்னை விமான நிலைய காவலர்கள் தமிழர்களாக ஏன் இருப்பதில்லை ? )

மெட்ரோ ரயில் 4.30 am - 11.00 pm வரை செயல்படும் என ஒரு விவரப்பலகை கூறுகிறது . 

"Free shuttle for transit passengers to city side"என்கிறது மற்றொரு விவரப்பலகை . 

6,7 விமானங்கள் ஒரே நேரத்தில் துபாய் தோஹா குவைத் அபுதாபி சிங்கப்பூர் என பல ஊர்களிலிருந்தும் வருகை என தகவல் பலகை காட்டியது .

கம்பித்தடுப்பின் ஒரு பக்கம் பலதரப்பட்ட மக்களும் தூக்க கலக்கத்துடன் ஒரு வித ஆர்வத்துடன் நின்றிருந்தார்கள் (நானும்).  நேரெதிரில்.... பிரபல ஹோட்டல்களில் வாகன ஓட்டிகள் கையில் ....Hotel , Mr ...., Ms ....... என பெயர்பலகைகளுடன் ..... வருகைப்பாதையின் முடிவில் டாக்ஸி ,OLA,ஆம்புலன்ஸ்,போலீஸ் வேன் ,  டாக்ஸி ஓட்டிகள்(டாக்சி வேணுமா sir /madam) நின்றிருந்தார்கள். இது தவிர அருகில் காத்திருப்பு மண்டபத்தில் இருக்கைகளில் அமர்ந்து, தூங்கி, நின்று  என ஒரு கூட்டம். குளிர்பானங்களுக்கான Automatic Vending Machine தற்போது கூடுதலாக அமைக்கப் பட்டுள்ளது.(நான் பார்த்த வரையில் ஒருவரும்  உபயோகிக்கவில்லை)

மெட்ராஸ் காப்பி சென்டரில் 3 மணிக்கே சுடச்சுட பருப்பு வடை வந்திறங்கியது . தலப்பாக்கட்டியில் யாரும் இல்லை .

(நேரமாகுது போய் காப்பி குடிச்சுட்டு வாம்மா _ யாரோ ஒரு கணவர் எனக்கு வேண்டாம் நீங்க நல்லா இல்லைன்னு சொல்லிட்டீங்களே ....அவரது மனைவி)

இடையிடையே மக்கள் தம் உறவினர்/நண்பர் வருகை கண்டு ஹாய் ஹூய் சப்தங்கள் .

2 மாதங்கள் கூட நிரம்பியிராத ஒரு குழந்தை மற்றும் 6 வயது மதிக்கத்தக்க பெண்ணுடன் ஒரு தகப்பன்....
தனியாய் 4,5 பெட்டிகளை தள்ளமுடியாமல் ட்ராலியில் தள்ளி செல்லும் முதிய பெண்மணிகள் , அந்த அதிகாலை நேரத்திலும் லிப்ஸ்டிக் அணிந்து தலைவாரி .. புத்துணர்ச்சியுடன் வரும்  யுவதிகள், ஸ்வெட்டர் அணிந்து வரும் மக்கள்,  சென்னை வெய்யிலின் தாக்கம் தாங்காமல் அழுது கொண்டே செல்லும் சிறுகுழந்தைகள் , பிறந்ததிலிருந்து  காணாத தன் குழந்தையை உள்ளிருந்தே வாங்கிக்கொண்ட இளம்தந்தை,   உடல்நலம் சரியில்லாமல் சக்கர நாற்காலியில் வந்து ஆம்புலன்ஸில் ஏறி சென்றவர் என பலரும் வந்து கொண்டே இருக்க .....  அனைவரின் கண்களிலும் தூக்கத்தின் சாயல்.

இடையிடையே பயணிகள் வெளியில் எடுத்து செல்லும் ட்ராலிகளை ஒரு சிறிய வண்டியின் உதவியுடன் பின்னாலிருந்து ஒருவர் உந்தித்தள்ள , முன்னால் ஒருவர் அவைகளை சரியாக வழிநடத்தி உள்ளே கொண்டு சென்றார்கள்.

 விமான பணிப்பெண்கள் மற்றும் விமான நிலைய பணியாளர்கள் தவிர்த்து வெகு சில பயணிகளே புதிதாக வலது பக்கமாக வெளியேறி செல்லும் பாதையை பயன்படுத்தினார்கள் . வலது கைப்பழக்கம் உள்ளவர்கள் இடது புறம் திரும்புவார்கள் என எங்கோ படித்த நினைவு (அ ) எப்போதும் வெளியேறும் இடப்பக்க பாதையையே கரடுமுரடாக இருந்தாலும் பழக்கம் காரணமாக செல்கிறார்கள். 

பெட்டிக்கு மேல் plastic சுற்றி அல்லது டிவி printer போன்றவைகளுடன் DOH, DXB போன்ற  எழுத்துக்கள் உள்ள bag tag மற்றும்  பாரம்பரிய உடைகளுடன் வந்தால் (அதிலும் பெண்களின் முகத்தை மூடி கண்கள் மட்டும் தெரியும் வகை, முகத்தை மறைக்காத வண்ணம், நீளமும் வெள்ளையும் கலந்து Haj Travels Pvt Ltd என எழுதப்பட்ட ஆடை என விதவிதமானவைகள்)  ..... ஐக்கிய அரபு நாடுகள். (மற்ற வகை உடை அணிந்தவர்களும் உண்டு .)

[DOH,DXB போன்றவை எந்த ஊரில் இருக்கும் விமான நிலையம் என்பதை குறிக்கும் குறியீடு.  LAX(Los Angeles ),MAA(Madras) என்பது போல. பலவருடங்களுக்கு முன்பு இரண்டெழுத்து குறியீடுகளும் இருந்தனவாம். உலகின் அனைத்து இடங்களுக்கு பொதுவானதாக 3 எழுத்து குறியீடு மாற்றி அமைக்க பட்டபோது  LA என்பது LAX, DB என்பது DXB ஆனது. கணிதத்தில் X குறியீடு போல]

3.15

"Here comes trouble" என்ற வாசகம் கொண்ட சட்டையை அணைந்த கு(சு)ட்டிப் பையன் குதித்து கொண்டே வெளியில் வந்தான். அவனது பெற்றோரின் பெட்டியில் SFO - MAA. ஆஹா ......சான்பிரான்சிஸ்கோ மக்கள் வர தொடங்கி விட்டார்கள் . வந்துட்டாங்கய்யா .....வந்துட்டாங்கய்யா .....

விதவிதமான வாசகங்கள் கொண்ட உடைகள் அணிந்த ஆண்கள்,  ஸ்வெட்டர் அணிந்த முதியவர்கள் , பள்ளி விடுமுறை சமயமாதலால் சிறுவர் சிறுமியர் , இடையிடையே outdated fashionல் தைக்கப்பட்ட [பலவருடங்களுக்கு முன்பு தைத்து இந்திய வருகைக்காக என reserve செய்து வைக்கப்பட்ட]  சுடிதார்கள் ரவிக்கைகளுடன்  குட்டையாய் வெட்டிவிடப்பட்ட கூந்தலை குட்டிக் கொண்டையாக்கி (அ) குதிரைவாலாக்கிய பெண்கள் ....என 24 மணி நேரங்கள் பயணம் செய்த களைப்புடன் வந்தார்கள்.

அம்மா ..என்னுடைய பெட்டிகளில் ஒன்று மட்டும் வரவில்லை,காத்திருக்கிறேன் _ மகளின் வாட்ஸாப் தகவல் 

மீண்டும் ...ஐக்கிய அரபு நாட்டு விமானங்களின் வருகை ... மீண்டும் மக்களின் வருகை 

4.00 

இன்னும் பெட்டி வரவில்லை _ மகளின் குறுஞ்செய்தி 

காத்திருப்பு மண்டபத்தில் அமர்ந்து காத்திருந்தோம் இப்போது ...இடையிடையே மகளிடமிருந்து தகவல் உண்டா என்று ...

இன்னும் வெளியில் வரலையே ... உள்நாட்டு விமான நிலையம் போய் அடுத்த விமானத்தை பிடிக்க வேண்டுமே ... நீங்கள் அடுத்த விமானத்தின் நேரத்தை பார்த்து சொல்லுங்க _ ஒரு இளைஞர் முதியவரிடம் சொல்ல முதியவர் வெள்ளெழுத்து கண்களால் தன் கைபேசியில் தேடுகிறார்.


4.15

பெட்டி வரவே இல்லை . புகார் கொடுத்து விட்டு வருகிறேன். International Roaming 2G யில் இருப்பதால் உங்களுடன் பேச இயலவில்லை  _ மகள். 

2 வயது கூட நிரம்பியிராத குட்டி பாப்பா அம்மாவின் கைபேசியை வாங்கி தனக்கு வேண்டிய appஐ கிளிக் செய்து பார்த்துக் கொண்டிருக்க ....நேரம் கடந்து கொண்டே இருந்தது. (குட்டிஸ்களுக்கு எப்படித் தான் எந்த நேரத்திலும் அவ்வளவு energy இருக்கிறதோ???)

 மேலை நாட்டவர்கள் எப்போதும் எங்கும் சட்டங்களை மதிப்பவர்கள் என்று தான் நினைத்திருந்தேன் கம்பியை தாண்டிக்  குதித்து காத்திருப்பு மண்டபத்தின் உள்ளே வந்தவரை பார்க்கும் வரை . 

5.00

சான்பிரான்சிஸ்கோவிலிருந்து கிளம்பும்போதே 1.45 மணி நேரம் தாமதமாய் புறப்பட்ட விமானம் துபாய் நகரை அதே தாமதத்துடன் வந்தடைந்து, அங்கிருந்து சென்னை கிளம்ப வேண்டிய விமானத்தை 30 நிமிடங்கள் தாமதிக்க வைத்து, சரியான நேரத்தில் சென்னையை வந்தடைந்து... வந்து சேராத ஒரு பெட்டி என் மகள் மற்றும் பேரன்களின் வருகையை 2.30 மணிநேரங்கள் தாமதப் படுத்தி .......

எங்களையும் சேர்த்து படுத்தி ......(சான்பிரான்ஸிஸ்கோவில் கிளப்பியது முதல் , துபாய் வந்து மாற்று விமானத்தில் ஏறி சென்னையில் தரை இறங்கும் வரை தூக்கம் இல்லை . விமானத்தில் WIFI வசதி இருப்பதால் சாப்பிடீர்களா தூங்கினீர்களா என குசலம் விசாரித்தல் ,அம்மா தற்சமயம் துபாயில் என்ன நேரம் இன்னும் 4.30 மணி நேரம் என்றால் எப்போது போய் சேரும் பார்த்து சொல்லு என்பது போன்ற வினா விடை நிகழ்ச்சிகள் , Track Flight Live பார்த்தல் , பார்த்ததை சம்மந்தி வீட்டிற்கு update செய்தல் , சரியான நேரத்திற்கு விமான நிலையம் கிளம்புதல் என பயணம் செய்பவர்களை விட அதிக மன அழுத்தம்) 

காத்துக் காத்து.. கண்கள் பூத்திருந்தோம் ......

பல வருடங்களுக்கு முன்பு .. வெளியில் வரும் கதவிற்கு மேலாக ஒரு திரையில் , விமான நிலையத்தின் குறிப்பிட்ட பகுதியை கடந்து வரும்போது , வருபவர்கள் தெரியும் வண்ணம் வைத்திருப்பார்கள். அங்க பாருங்க பாருங்க .... நீல நிற சட்டை போட்டிருக்கிறார், பச்சை நிற புடவை உடுத்தி இருக்கிறார் என உற்சாகமாக கூவிக் கொண்டிருப்பார்கள் உறவினர்கள். தற்போது அது இல்லை. Landed,Taxiing,Immigration என status update கள்தான்.

விடியத் தொடங்கிய அந்த நேரத்தில் ...  மகளும் பேரன்களும்  நொந்து நூலாகி  வந்து சேர்ந்தார்கள்.  

விடிவெள்ளியாய் ..... 

அச்சச்சோ... டூத் பிரஷ் களை எந்தப் பெட்டியில் வைத்தேன் என்று நினைவில்லையே அம்மா....

பின் குறிப்பு : உடன்வராத பெட்டி  வீட்டிற்கே இன்று வந்து சேர்ந்தது  .


Thursday, 6 June 2019

வண்ணக் (எண்ணக்) கோலங்கள் ...


கடந்த அமெரிக்க பயணத்தின் போது , வழக்கமாக Netflix ல் ஆங்கில தொடர்கள் மற்றும் திரைப்படங்களுடன்  வெவ்வேறு நாடுகளின் தொலைக்காட்சி தொடர்களை கண்டேன் . முக்கிய காரணங்கள் வெவ்வேறு விதமான நிலப்பரப்புகள், மக்களின் வாழ்க்கை முறைகள் கலாச்சாரம் பற்றி, மொழியை எவ்வாறு பேசுகிறார்கள் (ஆங்கிலத்தையே ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு மாதிரி பேசுகிறார்கள் ) என்பது பற்றி .... அறிந்து கொள்ளும் ஆர்வமே . (subtitles இருக்க பயமேன் ?)

ஆஸ்திரேலியா(Wanted), மலேசியா(Hati Perampuan),மெக்ஸிகோ(Unauthorized living) தென் அமெரிக்கா(Velvet), ஆப்பிரிக்கா(The lion king- movie)ரஷ்யா மற்றும் சில நாடுகளின்  தொடர்களையும் காண நேர்ந்தது. 

சற்றே மிகைப்படுத்தப் பட்ட காட்சிகள் இருந்தாலும் அடிப்படை செய்திகள் மாறாது இல்லையா? என் மனதை பாதித்த இரண்டு தொடர்களை பற்றிய சிறு தொகுப்பு இங்கே ....

துருக்கிய நாட்டு தொலைக்காட்சி தொடர் :  What happens to my family ?

ஒரு மத்தியதர குடும்பம்.  வீட்டின் முன்புறம் துருக்கிய உணவு வகைகளை உடனுக்குடன் தயாரித்து விற்கும் கடை வைத்திருக்கும் தகப்பன் மட்டும். தாய் இல்லை. 2 மகன்கள் 1 மகள் . அனைவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். விதவை அத்தையும் இவர்களுடன் வசிக்கிறார் . 

பிள்ளைகள் மூவரின் காதல் மற்றும் திருமணம் முடிய செல்லும் கதை . 

அத்தையின் கண்டிப்பான வளர்ப்பில் பிள்ளைகள். காலையில் சீக்கிரம் எழுந்து காலை உணவு சாப்பிட்ட பிறகு வெளியில் கிளம்புதல்(சாப்பிடாமல் வெறும் வயிற்றில் போகாதேப்பா)  வயதில் மூத்தோரிடம் பணிவுடன் நடந்து கொள்ளுதல் ,வீட்டை சுத்தமாக பராமரித்தல் (வெளியில் அணிந்து செல்லும் செருப்பை வீட்டிற்குள் அணிந்து நடமாடினால் அத்தை கொன்றுவிடுவார் _ பிள்ளைகள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் வசனம் )

அத்தை மூன்று நேரமும் சமைப்பார். துணிகளை துவைத்து வீட்டு தோட்டத்தில் கொடி  கட்டி காய வைப்பார். வீட்டிற்கு வெளியில் ஒரு பாத்திரத்தில் நீர் வைத்திருப்பார் . யாராவது வெளியில் சென்றால் அவர்கள் கிளம்பிய உடனே அந்த நீரை நல்ல சகுனத்திற்க்காக தெருவில் வீசி இறைப்பார். (நாங்கள் கொஞ்சம் முன்னே சென்ற பிறகு நீரை ஊற்ற கூடாதா அத்தை ?)

பிள்ளைகளுக்கு தெரிந்த இடங்களில் சொல்லி வைத்து தகுந்த வரன்களை பார்த்து மணமுடிக்கிறார்கள்.  காதலித்தால் குடும்பம் குலம் தகுதி பார்த்து சம்மதிக்கிறார்கள். மணமகனின் வீட்டார் பெண் வீட்டிற்கு பூக்கள் மற்றும் chocolates வாங்கி வந்து பெண் கேட்கிறார்கள். பெரியவர்களின் ஆசீர்வாதம் வாங்குதல் என்று இந்த நிகழ்வை குறிப்பிடுகிறார்கள். 

மருத்துவரான மூத்த மகன் ஒரு பணக்கார பெண்ணை மணக்கிறார். மத்தியதர மக்கள் வாழும் இடமென்பதால் எங்களை ஏன் திருமணத்திற்கு அழைக்கவில்லை என்று தந்தையாரின் கடையில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கிறார்கள். வம்பர்களும் உண்டு. 

அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே ஒரு சிறிய மண்டபத்தில் reception வைக்க ஏற்பாடு செய்ய , அனைவரும் திரண்டு வந்து உதவி செய்து மகிழ்ந்து, பணக்கார சம்மந்தியையும் மகிழ்விக்கிறார்கள். 

இப்படி பலப்பல ...... நம் பழக்க வழக்கங்களை அந்த நாட்டு மக்கள் கடைப்பிடிப்பது போல தோன்றியது .

அடுத்து ........

அமெரிக்க தொலைக்காட்சி தொடர் "Switched at birth

இந்த தொடர் குறிப்பாக பதின்பருவ பிள்ளைகளை (teenagers)பற்றியது. 

 தென் அமெரிக்க, வடஅமெரிக்க தம்பதிகளுக்கு  பிறக்கும் பெண் குழந்தைகள் மருத்துவமனையில் (ஏதோ காரணம் _ மறந்து போய்விட்டேன் )
மாறி விடுகின்றன . 

தென் அமெரிக்க தம்பதியின் குழந்தை வெள்ளை நிற தலைமுடி நீல கருவிழி என இருக்க ( அதன் மூன்றாவது வயதில் மூளைக்காய்ச்சலால் பாதிக்க பட்டு காது கேட்கும் திறன் போய் விடுகிறது) வட அமெரிக்க தம்பதியின் பெண் சற்றே குட்டையாக கருவிழிகளுடன் கருகருவென்ற தலைமுடியுடன் இருக்கிறார்.
 இது பின்கதை .

வட அமெரிக்க தம்பதியின்  மகள் உயிரியல் வகுப்பில்  எதேச்சையாக DNA test செய்து பார்க்க உண்மை வெளியாகிறது .

இதிலிருந்து தொடங்கி எப்படி மகள்களை கண்டுபிடித்து எல்லாரும் ஒரே வீட்டில் வசித்து, எப்படி எல்லாரும் இரு மகள்களையும் ஏற்று கொள்கிறார்கள் என்பது கதை.வட அமெரிக்க தம்பதிக்கு மூத்த மகனும் உண்டு. இந்த மூவரும் தினமும் கொண்டு வரும் பிரச்சினைகளை தீர்க்கவே பெற்றோர்களுக்கு நேரம் சரியாக இருக்கும் .

Boyfriend /girlfriend வைத்துக் கொள்வது (அங்கே இது social pressure )  குடிப்பழக்கம், போதைமருந்து, கர்ப்பத்தடை மாத்திரைகள் , வேண்டாத கர்ப்பம்  என விதம்விதமான பிரச்சினைகளை பெற்றோர்கள் சந்திக்கவேண்டி உள்ளது. தினமும் இதுபோன்ற எமோஷனல் பிரச்சினைகளுக்கிடையே எப்படி படிக்கிறார்கள்??

(அம்மா உங்க கிட்டே ஒரு விஷயம் சொல்லணும் _ மகன் 
என்ன ஆச்சு போதை மருந்து ஏதாவது வெச்சிருந்து போலீஸ் பிடிச்சுட்டாங்களா உன்னை இல்லேன்னா எந்த பெண்ணையாவது கர்ப்பமாக்கிட்டியா ? 
ஐயோ அம்மா ஸ்கூலில் excursion கூட்டி போகிறார்கள்_மகன்)

வட அமெரிக்க அம்மா தினமும் 3 வேளையும் சமைத்து பிள்ளைகளுக்கும் கணவருக்கும் பரிமாறுவார். மதிய உணவு கொடுத்தனுப்புவார்.

18 வயதானதும் பிள்ளைகள் தனியாக இருக்க வேண்டும் சம்பாதித்து தங்கள் செலவுகளை ஏற்கவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். (19 வயசாச்சு இன்னும் நாம் தான் அவனுக்கு telephone bill கட்டுகிறோம்)

ஒரு பெண்ணுக்கு காது கேளாது என்பதால் ASL (American Sign Language ) நிறைய இடம்பெறுகிறது இந்த தொடரில். (மொழி படம் நினைவுக்கு வருகிறதா ?) ஒவ்வொரு நாட்டுக்கும் இந்த sign language மாறுபடும். SL, அவர்களுக்கான பள்ளிகள் கல்லூரிகள் எப்படி போதிக்கிறார்கள் வேலை வாய்ப்புக்கள் என்னென்ன என நிறைய தகவல்கள்.  

[இந்த தொடரினை நான் பார்த்துக் கொண்டிருந்த சமயம் ஒரு நாள் என் சிறிய பேரன் (6 வயது kindergarten வகுப்பு) , சில சைகைகளை செய்து காண்பித்தார். மிகவும் ஆச்சரியமாக இருந்தது. உனக்கு எப்படி தெரியும் என்று கேட்ட போது பள்ளியில் அவனுடைய ஆசிரியை கற்றுத் தந்தார் என்று கூறினான். ஆசிரியையுடைய  சகோதரி காத்து கேளாதவர் என்பதால் ஆசிரியை சைகை மொழியை அறிந்துள்ளார். எங்களுக்கும் கற்றுத் தந்துள்ளார் என்று கூறினான். 

மற்றொரு அனுபவம். கரிபியன் தீவுகளில் நடக்கும் துப்பறியும் தொடர். ஒரு முறை கதையின் போக்கில் தொலைக்காட்சியில் weather report காட்டினார்கள் . கவனித்து பார்த்த போது 90, 93, 95 பாரன்ஹீட் என இருந்தது.

அப்போது தான் புரிந்தது ..மக்கள் ஏன் க்ரூஸ் கப்பல்களில் ஏறி கரிபியன் தீவுகளுக்கு கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள் என்று.  கடும் குளிர் நாடுகளில் சூரியனின் வெளிச்சம் இருக்கும் ஆனால்  வெப்பத்தை உணர முடியாது . (இங்கே வாங்கப்பா ..90 + எங்களுக்கு சகஜமப்பா _ mind voice) 

சமீபத்தில் என் குட்டி பேரனின் வருகையின் போது 102 டிகிரி என்று சொல்லி கொண்டு இருந்தேன் . பாட்டீ .. அப்போ ஐஸ் கிரீம் சாப்பிடலாமா என்று கேட்டான் . வேண்டாம் என்றேன். அவன் பதில் : பாட்டீ எங்கள் ஊரில் 80 டிகிரி போனாலே எங்கள் அம்மா வாங்கி தருவார் என்றான். குளிர் நாடுகளின் நடப்பு இது] ]

எல்லா நாட்டு மக்களுக்கும் பொதுவான பிரச்சினை , தம் பிள்ளைகளின் நலம், படிப்பு , பெரியவர்களிடம் மரியாதை, தகுந்த வரனை திருமணம் செய்தல் இப்படி பல.

பணக்கார வீடுகளில் வேறு விதமான வாழ்க்கை முறையை காட்டுகிறார்கள். நம் ஊர் தொடர்களை போல நள்ளிரவிலும் முழு makeup , நகைகள், கலையாத கூந்தல் அங்கும் உண்டு. 

எவ்வளவு கண்டங்களை சுற்றி வந்தாலும் ஒரு நாட்டைப் பற்றிய விவரங்களை அதன் கலாச்சாரத்தின் மூலம் தான் கண்டு கொள்ள முடியும் என்பது முற்றிலும் உண்மை. 

தொடரும் தொடர்கள் .....

பின் குறிப்பு : தொலைக்காட்சி தொடர்கள் பார்ப்பது என் முக்கிய வேலை இல்லை . 



















Sunday, 7 April 2019

அவனருளால் அவன் தாள் வணங்கி ....

கடந்த பங்குனி உத்திர திருநாளில் 3 1/2 நாட்களுக்கு  நண்பர்களின் குடும்பங்களுடன் ஆரம்பமானது எங்கள் ஆன்மீக சுற்றுலா .

சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்கு பேருந்து. அங்கிருந்து மற்ற இடங்களுக்கு கார். காலையில் 7 மணியளவில் கிளம்பி காலை உணவு முடித்து கொண்டு கோவில்களை காண ஆரம்பித்தால்  12 மணிக்கு இடைவேளை. (12-4 கோவில்களை மூடிவிடுவார்கள் என்பது நீங்கள் அறிந்ததே .) அந்த இடைவெளியில் மதிய உணவை முடித்துக் கொண்டு அடுத்த ஊருக்கு பயணம் செய்தோம் . மீண்டும் இரவு 9 - 9.30 முடிய .....

ஒவ்வொரு கோவிலைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம் ஆனால் என் அனுபவங்களை மட்டுமே இங்கே சொல்லப் போகிறேன். 

பாண்டிச்சேரியில்  நண்பரது இல்லத்திற்கு அருகில் இருந்த ஸ்ரீ பூர்ணா ஸ்ரீ புஷ்கலா சகித ஸ்ரீ அய்யனார் கோவிலில் ஆரம்பித்து வரிசையாக அன்றே 3 கோவில்கள். பங்குனி உத்திர நாளானதால் கடவுளருக்கு திருமணம் வீதி ஊர்வலம் என ஊரின் பல பகுதிகளிலும்  கலகலப்பு. (மணக்குள விநாயகர் ஆலய யானையின் கால்களில் கொலுசு அணிவித்திருந்தார்கள்).  

மறுநாள் காலை கிளம்பி பாண்டிச்சேரியின் அருகிலிருக்கும் சிங்கிரிக்குடி (நரசிம்மர் ஹிரண்யகசிபுவை வதம் செய்த இடம்), பூவரசன்குப்பம் (ஹிரண்யனுக்கு நரசிம்மர் காட்சி அளித்த இடம், தென் அஹோபிலம் என்று அழைக்கிறார்கள் இந்த ஊரை ) மற்றும் பரிக்கல் நரசிம்மன் கோவில்களுக்கு சென்று வணங்கினோம். 

மேற்கண்ட ஊர்கள் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பவை . ஒரே நாளில் மூன்று கோவில்களுக்கும் செல்வது சிறப்பு என்று கூறினார்கள். சென்றோம்.  

சிங்கிரிக்குடி கோவில் மிகப் பழமையானது. ஒரே அர்ச்சகர் தான் சிறிய ஊர் கோவில்களில் . அவர் வரும்வரை கோபுரங்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தோம். 

கோபுரத்தின் ஒரு பக்கம் சீதா கல்யாணம் ராமர் பட்டாபிஷேகம் இன்னபிற சுப நிகழ்வுகள் , மற்றொரு பக்கம் ஒவ்வொரு நிலைக்கும் (கொலுப்படியில் மேலே கடவுள், தேவர்கள் என ஆரம்பித்து கடைசியில் பூச்சி புழுக்கள் என வைப்பது போல ) கஜேந்திர மோட்சத்தில்   ஆரம்பித்து ஒவ்வொரு நிலைக்கும் மேலே மேலே போகப்போக மாக்களிலிருந்து மக்கள் கந்தர்வர்கள் தேவர்கள் என கடவுள் மோட்சம் கொடுக்கும் காட்சிகள் நிலைப்படுத்த பட்டுள்ளன. 

மிகப் பொறுமையாக நானும் என் உடன் வந்த தோழியும் ஒவ்வொரு கோவிலிலும் கோபுர பொம்மைகளின் theme என்னவென்று பொறுமையாக பார்த்து விட்டே வந்தோம் (நேரமாகுது வாங்கம்மா ....)

வழியில் நாயனார் சுந்தரர் பிறந்து வாழ்ந்த ஊரான திருநாவலூர் பக்தஜனேஸ்வரரையும் வரதராஜ பெருமாளையும் (ஒரே கோவிலில் தனித்தனி வாசல்கள் சந்நிதிகள்) வணங்கி விட்டு திருநள்ளாறு சென்றடைந்தோம்.

சைவமும் வைணவமும் தழைத்தோங்கி இருந்த காலத்தில் கட்டப்பட்டவை நாங்கள் சென்ற கோவில்கள் அனைத்துமே . சைவ கோவில் வைணவ கோவில் என்று தனித்துவமாக எதுவுமே இல்லை. வைணவ கோவிலின் வாசலிலேயே பிள்ளையார் தும்பிக்கையாழ்வார் என்ற பெயரில் அமர்ந்திருக்கிறார். சிவன் கோவிலில் மஹாலட்சுமிக்கென தனி சந்நிதி மற்றும் சிவன் சன்னதியின் நிலைப்படியிலேயே மஹாலக்ஷ்மி இருக்கும்படி அமைந்துள்ளது .  அநேக கோவில்களில் பெருமாளுக்கு தனி சந்நிதி .

திருநள்ளாறில் கால் வைத்த அந்தக்கணமே மனது அமைதி நிலைக்கு சென்று விட்டது . வேறெந்த நினைவும் மனதில் ஏற்படவில்லை. 
ஊரெங்கும் திருவிழா போல ஒரு வித தயார் நிலையில் ....சரஸ்வதி குளம் நளன் குளம் என நன்கு பராமரிக்கப்பட்ட நீர்நிலைகள். 

 சனீஸ்வரர் சன்னதி இருக்கும் இடத்தின் மேலே NASA வின் துணைக்கோள்கள் கூட செயலிழந்து போவதாக சொல்வார்கள். அந்த கோவிலில் உள்ளே மட்டுமின்றி அந்த ஊரில் இருந்த மொத்த நேரமும் சொல்லவொண்ணாத மன அமைதி. (என்னவோ சக்தி இருக்கு அங்கே) மரகத லிங்க அபிஷேகம் காணும் அரிய வாய்ப்பும் கிடைத்தது .வெள்ளியன்று இரவே தர்பாரண்யேஸ்வரரையும் சனீஸ்வரரையும் (கூட்டமில்லாத நேரம் ) பொறுமையாக வணங்கி விட்டு 5 கிலோமீட்டரில் உள்ள காரைக்காலுக்கு சென்று அங்குள்ள கோவில்களை தரிசித்தோம்.

மறுநாள் காலையில் சிக்கில் சிங்காரவேலரையும் நவநீதேஸ்வரரையும் (ஒரே கோவில்) தரிசித்து விட்டு ஆபரணதாரி என்ற ஊரில் அமைந்த கோலவண்ண வாமன பெருமாளை தரிசிக்க சென்றோம்.  108 திருப்பதிகளில் ஒன்றான திருக்கண்ணங்குடி என்னும் ஊரின் அபிமானஸ்தலம் இந்த ஊர். ஆவராணி எனும் இத்தலம் நாகப்பட்டினம் – திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் சிக்கலிலிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

ஸ்ரீரங்கம்  திருவனந்தபுரம் போல ஆதிசேஷன் மேல் படுத்திருக்கும் கோலம் . மிகப்பெரிய சிலை . சிலையை வடித்த பிறகு சுற்றி சன்னதி கட்டியிருப்பார்கள் என்று தோன்றுகிறது. 

[21 அடி நீளமாக, தென்திசை முடியை வைத்து வடதிசை பாதம் நீட்டி சயனித்திருக்கும் கோலம் காண உள்ளம் குழையும். திருமேனி முழுதும் புரளும் ஆபரணங்களை மிக நுணுக்கமாக காட்டியிருக்கும் அழகில் மனம் கரையும்.

ஏழுதலை ஆதிசேஷனும், அந்தக் கூர்மையான பார்வையும், மெல்ல தலை தாழ்த்தி எம்பெருமானைப் பணியும் விதம் பார்க்க ஆச்சரியம் பெருக்கும். ஒரு கரம் தலையைத் தாங்க, மற்றொரு திருக்கரம் முழங்கால் வரை நீண்டிருக்கும் ஒய்யாரம் உயிரை நெருடும். நீருண்ட மேகம் போன்ற மேனி. தைலக்காப்பில் மின்னுகிறார். சிரத்தின் மேல் மணிமகுடம். காதுகளில் அசைந்தாடும் குண்டலம். எப்போதும் புன்னகை உதிர்க்கும் பவளவாய். திருமார்பில் நலங்கிளர் எனும் ஹாரம், உத்தரியம், தண்டை என அணிந்து சாந்த ஸ்வரூபியாக உலகனைத்திற்கும் படியளக்கும் பெருமாளின் அந்த சயனத் திருக்கோல அழகு காணுதற் கரியது . [Courtesy :http://templeservices.in/temple/அழியா-புகழ்தரும்-ஆவராணி/  ] 

இந்த சுற்றுலாவின் "HIGHLIGHT" இவர்தான் . சிற்பத்தின் precision அற்புதம் .  படைத்த சிற்பி யாரோ தெரியவில்லை அற்புதமான கைவண்ணம் . பொதுவாக பகவான் மேலே பார்த்தவண்ணம் படுத்திருப்பார் இங்கே ஒருக்களித்து பக்தர்களைப் பார்த்தவண்ணம் .... அவரது வாய் நம்மை பார்த்து எதோ சொல்வது போல ....மிக துல்லியமாக அழகாக செதுக்கப்பட்டுள்ளது. 

நேரில் கண்டால் மட்டுமே அந்த அனுபவத்தை உணர முடியும் . 

திருக்கண்ணங்குடி 108 வைணவ திருப்பதிகளில் ஒன்று.( தாமோதர பெருமாள் கோவில்). பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் ஒன்று . கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி,திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை ஆகியவை பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அற்புதமான அழகான கோவில். (Courtesy : Wikipedia )

அடுத்து  திருவாரூர் தியாகேசர் கோவில். 11.30 மணியளவில் சென்றதால் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது . மிகப்பெரிய கோவில். கமலாம்பிகையை தரிசிக்க எண்ணி கருங்கல் பிராகாரத்தில் ஓட்டமாக ஓடி பாதங்கள் கொப்பளிக்க கண்ணில் நீர் வர.....தரிசித்தோம். இந்த கோவிலின் குளத்தின் பரப்பளவு கோவிலின் பரப்பளவிற்கு சமமாக உள்ளது என்று கூறினார்கள். பெரிய்ய்ய கோவில் பெரிய்ய்ய குளம் .

[ஈஸ்வரனை விட்டு அம்மா என் இவ்வளவு தள்ளி இருக்கிறார்? _  தோழி 1 
கோவித்துக் கொண்டு வந்து விட்டார்களோ என்னவோ? _ தோழி 2]

எங்கள் சிரமங்கள் வீணாகவில்லை. அன்னை தவக்கோலத்தில் இடதுகாலை வலப்பக்கமாக மடக்கி வைத்து அதன் மேல் வலது காலை வைத்து வித்தியாசமான தவக் கோலத்தில் காட்சி தருகிறார் . 
[ கோவித்து கொண்டு வரவில்லை தவம் செய்ய வந்திருக்கிறார் _ தோழி 2]

அம்மனை தரிசித்து விட்டு பிரகாரத்தில் நிற்கையில் ஷிலாசாஸனம் எனப்படும்  கல்வெட்டில் முத்துசாமி தீட்சிதர் கமலாம்பிகையை பற்றி இயற்றிய பாடல்களை கண்டோம் .  

முன்பொரு முறை சமஸ்க்ருத பயிற்சி வகுப்பில் ஒரு சகோதரி சொன்னது நினைவுக்கு வந்தது ..பூர்வ ஜென்ம ஞாபகம் போல ..

ஆம்... அந்த பாடல்கள் சமஸ்க்ருத மொழியில்(ன்) விபக்தி எனப்படும் வேற்றுமை உருபுகளை ஆரம்ப வார்த்தைகளாக வைத்து இயற்றப்பட்டவை . 
 கமலாம்பா , கமலாம்பாம் , கமலாம்ப்யா, கமலாம்ப்யை ..... ( 2 வருடங்களாக சமஸ்க்ருதம் படிப்பதற்கு ஒரு சின்ன பயன்பாடு.... மகிழ்ச்சி )

வெயிலோடு வெய்யிலாக மன்னார்குடி சென்று அங்கிருந்த கடைவீதியில் இரும்பு தோசைக்கல் etc வாங்கி 4.30 மணியளவில் ராஜகோபால ஸ்வாமியை தரிசித்தோம்.  

இரவில் மீண்டும் திருநள்ளாறு கோவில். சனிக்கிழமை கூட்டம் சற்றே குறைந்த இரவு 9 மணிக்கு சென்று தரிசித்தோம். சயன பூஜையை கண்டு களித்தோம். ஸ்படிக லிங்க அபிஷேகம் கண்டோம் . அமைதியான அனுபவம் .

பயணத்தின் கடைசி கட்டமாக திருவிடைக்கழி (சிவன் /முருகர்) கோவில் (எப்படி இந்த கோவிலை பற்றி  தெரியும்?_ தோழி ) திருக்கடையூர் கோவிலுக்கு ஏற்கனவே ஒரு முறை சென்றிருந்தாலும் மீண்டும் புதிதாகக் காணும் அனுபவம்   பழைய நினைவுகளுடன் கதம்பமாக .

நாகப்பட்டினம், காரைக்கால், மன்னார்குடி, சிதம்பரம் பகுதிகளில் ஆங்காங்கே நீர்நிலைகளில் நீர் தென்பட்டது. வழியெங்கும் பசுமை . ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறது.

1999 ல் சென்ற போது கோவிந்தராஜரை தரிசிக்க முடியவில்லை திரை சார்த்தி விட்டார்கள். இம்முறை அந்த குறை நீங்கியது. உச்சி கால ஸ்படிகலிங்க அபிஷேகம் கண்டு களித்து கோவிந்தராஜரை சுற்றி சுற்றி வந்து ....பிரகாரத்தில் அமர்ந்து  உண்டு .... (சிவகாமி அம்மை எங்கே இருக்கிறார் . ?
நானே இது வரை பார்த்ததில்லை பல முறை வந்தபோதும் நடராஜரையும் பெருமாளையும் வணங்கி விட்டு சென்று விடுவேன் _ பாண்டிச்சேரி தோழி ) 

அனைத்துக் கோவில்களிலும் பல பிரகாரங்கள் பல கோபுரங்கள். முழுவதும் காண பல நாட்கள் தேவைப்படும். ஆங்காங்கே கல்வெட்டுக்கள் . நுணுக்கமான சிற்பங்கள். தூண்களில் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள். காண கண் கோடி வேண்டும் . 

பல்லவர்களும் சோழர்களும் சிற்ப, கட்டிடக் காலையில் மிகத் திறமையானவர்கள்  என்பதில் மாற்று கருத்தே இருக்க முடியாது. 

எப்படி இவ்வளவு கோவில்களுக்கு உங்களால் செல்ல முடிந்தது ? _ நட்பு வட்டம் 

பெரியாழ்வாரின் வார்த்தைகளில் ......."அப்போதைக்கிப்போதே சொல்லி வைத்தேன்(தோம்)!"