Friday, 20 December 2024

அயோத்தி(யா) சென்றோம்...(பகுதி-1)

சென்னை மைலாப்பூரில் அமைந்துள்ள திரு வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் “கிஞ்சித்காரம்” ட்ரஸ்டின் கீழ் பல வருடங்களாக ஏற்பாடு செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் நடைபெறும் வைணவத் திருத்தலத் தீர்த்த யாத்திரையில் இம்முறை நானும் என் கணவரும் பங்கெடுக்க விரும்பினோம்.

மே 2024 முதலே விளம்பரப்படுத்தப்பட்ட இந்த தீர்த்த யாத்திரையானது 12 அக்டோபர் தொடங்கி ஏழு நாட்கள் பஞ்ச துவாரகைகளையும் பின்னர் அக்டோபர் 23-27 பிரயாக்ராஜ், நைமிசாரண்யம் மற்றும் அயோத்யாவையும் சுற்றிப் பார்க்கும்வண்ணம் இருந்தது. விரும்பியவர்கள் இரண்டுக்கும் செல்லலாம் அல்லது ஏதேனும் ஒரு இடத்திற்குச் செல்லலாம். பொதுவாக ஐந்தாயிரம் பேராவது செல்வார்கள் எனக் கேள்விப் பட்டிருந்ததால் எனக்கும் என் கணவருக்கும் யாத்திரை செல்வது பற்றிப் பலவித யோசனைகள். கடைசியாக உறவினர்கள் சிலர் நாங்கள் செல்லப் போகிறோம் முன்பதிவு செய்து விட்டோம் எனக் கூறவே நாங்களும் கிளம்ப முடிவு செய்து பாடலிபுத்ரா எக்ஸ்பிரஸ்ஸில் பிரயாக்ராஜ் (முன்னாள் பெயர் அலஹாபாத்) செல்ல முன்பதிவு செய்தோம்.திரும்பி வர லக்னோவிலிருந்து இரண்டாம் வகுப்பு AC யில் முன்பதிவு செய்திருந்தோம்.

யாத்திரை எப்படி ஏற்பாடு செய்யப் படுகிறது என்பதைப் பார்ப்போம்.

இந்த யாத்திரை எங்கு என்று தொடங்கும் எனக் கூறப்படுகிறதோ அந்த இடத்திற்கு அவரவர் வசதிக்கேற்ப ரயிலிலோ விமானத்திலோ சென்று சேர வேண்டும். (பிரயாக்ராஜ்/லக்னோ) சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் யாத்திரிகர்களை பேருந்துகளில் ஏற்றி நாம் தங்குமிடத்திற்கு அருகில் கொண்டு விடுவார்கள். தங்குமிடம், மூன்று வேளை உணவு, ஒரு ஊரிலிருந்து அடுத்த ஊருக்குப் பயணம் அவர்கள் பொறுப்பு. யாத்திரை முடியும் தினத்தன்று விமான நிலையத்திலோ ரயில் நிலையத்திலோ இறக்கி விடுவார்கள். வீடு வந்து சேர்வது நம் பொறுப்பு.

யாத்திரை தொடங்குவதற்கு ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பு திரு வேளுக்குடி சுவாமிகள் ஒரு கூட்டத்தை சென்னையில் ஏற்பாடு செய்து விவரங்களை அனைவருக்கும் கூறினார். பல வருடங்களாக அவர் இது போல தொடர்ந்து பல யாத்திரைகளை வழி நடத்தியவர் என்பதால் சரளமாகப் பல தகவல்களைக் கூறினார். துவாரகைக்கு 1800, அயோத்யாவிற்கு 1800 யாத்திரிகர்கள் வருகிறார்கள் எனவும் volunteers மற்றும் சமையல்கார்களுடன் சேர்த்து 2000 பேர் எனவும் கூறினார். (500 பேர் இரண்டு யாத்திரைகளுக்கும் வந்தார்கள்)

45 பேருந்துகளில் (40 persons each) என யாத்திரிகர்கள் பயணிக்க வேண்டும். ஒவ்வொரு பேருந்திற்கும் ஒரு volunteer, ஒரு பேருந்தில் பயணிப்பவர்களுக்கு ஒரே தங்குமிடம், ஒவ்வொரு பயணிக்கும் நீலநிற ஜோல்னா பை மற்றும் கழுத்தில் அணிந்து கொள்ள நம் பெயர், பேருந்து எண், வாலன்டியர் பெயர், தொலைபேசி எண் போன்ற தகவல்களுடன் ஒரு ID card தரப்படும். காணாமல் போனாலும் கண்டு பிடிக்க சுலபம் எனக் கூறப்பட்டது. யாத்திரைக்குப் பத்து நாட்களுக்கு முன்பாக எங்கள் வாலன்டியர் திருமதி அருணா எங்களை whatsapp மூலம் தொடர்பு கொண்டார்.

ரயில் பிரயாணத்திற்கான எங்கள் இருக்கைகள் பயணத்திற்கு சில நாட்கள் முன்பு வரை waiting listலேயே இருந்தபடியால் விமானத்தில் எங்கள் இருக்கைகளைப் பதிவு செய்து விவரங்களை வாலன்டியருக்கு அனுப்பி வைத்தோம். இடையில் சென்னையில் மழை, திருவள்ளூர் அருகில் ரயில் தடம் புரண்டு துவாரகா செல்லும் ரயில் பல மணி நேரங்கள் தாமதமாக சென்றது, புயல் எச்சரிக்கை எனப் பல குழப்பங்கள் ஏற்படவே திரும்பி வரும் பயணத்தையும் விமானத்திலேயே உறுதி செய்தோம். தெரிந்தவர்கள், உறவினர்கள் ஒன்றாகப் பயணிக்கவும் தங்கவும் விரும்பினால் முன் கூட்டியே யாத்திரை ஏற்பாட்டாளார்களுக்குத் தகவல் தெரிவித்தால் தகுந்த ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்பட்டதால் எங்கள் ஒன்பது பேரின் வருகைத் தகவல்களை முன்கூட்டியே அனுப்பி வைத்தோம்.

22/10/2024

எங்கள் communityல் வசிக்கும் எதிர் வீட்டுத் தம்பதியினர் துவாரகா பயணம் முடிந்து ரயிலில் வீடு வந்து சேர்ந்த மறுநாள் காலை எங்கள் பயணம் ஆரம்பம். (அவர்களின் அனுபவங்களை அளவாகக் கேட்டுக் கொண்டோம்) காலை சீக்கிரம் எழுந்து குளித்து கடவுளை வணங்கி விட்டு யாத்திரா தானம் வழங்கி விட்டு 11.30 மணி லக்னோ விமானத்தைப் பிடிக்க எங்கள் வீட்டிலிருந்து எட்டு மணிக்கே கிளம்பத் தயாரானோம். காலை உணவை உண்டு விட்டு டாக்சி வரக் காத்திருந்த நிமிடங்களில் என் கணவர் என்னிடம் வயிற்றுப் போக்கிற்கான (diarreah) மருந்தை எடுத்துக் கொடு என்றார். கிளம்பும் நேரம் என்ன சோதனை இது எனக் கடவுளை வேண்டியபடி மருந்தைக் கொடுத்தேன். பேருந்துப் பயணத்தில் வாந்தி வராமல் இருக்க கைப்பையோடு எடுத்து வைக்கும் கிராம்பை மறந்து விட்டேன். வழியில் கடைகள் அந்த நேரத்தில் திறக்கப் படவில்லை.

நாங்கள் பயணித்த அதே விமானத்தில் எங்கள் மருமகளின் பெற்றோர் மற்றும் அவர்களது தோழியும் பயணித்தனர். நாங்கள் சீக்கிரமாக விமான நிலையம் கிளம்ப வேண்டுமென்பதால் மருமகளின் தாயாரே எங்களுக்கான உணவினைத் தயாரித்துக் கொண்டு வந்திருந்தார். (Indigo விமானங்களில் தண்ணீர் கூட நாம் கேட்டால் தான் தருகிறார்கள்.) லக்னோ விமான நிலையத்தை மதியம் 2.15 மணியளவில் சென்றடைந்தோம். நாங்கள் வந்த விமானத்தில் 90%கும் அதிகமானவர்கள் எங்களுடன் யாத்திரைக்கு வந்தவர்களே. லக்னோ விமான நிலையத்திற்கு வெளியே அனைவரும் வந்து கூடியதும் அங்கிருந்த volunteers கையில் பயணிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வைத்துக் கொண்டு பெயர்களை அழைத்து ஒவ்வொரு பேருந்தாக வெளியேற்றிக் கொண்டு இருந்தார்கள்.

இந்த இடத்தில் பேருந்துகளுக்கு எண்கள் கிடையாது. விமானம் வர வர பயணிகள் பேருந்துகளில் ஏற்றி விடப்பட்டு பிரயாக்ராஜ் அனுப்பப் பட்டார்கள். எங்கள் பெயர்கள் பட்டியலில் இல்லை. (நிறைய நேரம் செலவழித்து நான் கணினியில் கற்ற, பெற்ற வித்தைகளையெல்லாம் கொட்டி Excel file ஒன்றை மிக நேர்த்தியாகத் தயாரித்து அனுப்பி இருந்தேன்)

எங்கள் வாலன்டியர் transport teamக்கு தகவல் அனுப்பி விட்டேன் என்றார். எங்களைப் போலப் பலரும் ரயில் -> விமானம் என மாறியதில் குழப்பம். எப்படியும் உங்கள் யாரையும் இங்கே விட்டு செல்ல மாட்டோம். காத்திருங்கள் என வாலன்டியர் கூறவே அங்கேயே காத்திருந்தோம்.அன்றைய தினம் காலிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் AIR INDIA விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார்கள்.

சென்னையிலிருந்து எங்களுடன் பயணம் செய்த சிலர் 3.50க்கு கிளம்பும் விமானத்தில் பிரயாக்ராஜ் செல்கிறோம் என்றார்கள். ஓ…பிரயாக்ராஜில் விமான நிலையம் இருக்கிறதா? லக்னோ, பிரயாக்ராஜ் ரயில் நிலையம் போன்ற இடங்களை pickup points எனக் கூறி இருந்ததால் மற்ற விவரங்களை நாங்கள் யோசிக்கவே இல்லை. அதே போல அயோத்தியிலும் சர்வதேச விமான நிலயம் உள்ளது. Onward and return இரண்டுமே தனித் தனியாகத் தான் ரிசர்வ் செய்தோம். வேறு மாதிரி யோசித்துப் பயண ஏற்பாட்டைச் செய்திருந்தால் பல விதங்களில் துன்பப்பட்டிருக்க மாட்டோம். பயணம் இன்னும் சுலபமாக இருந்திருக்கக் கூடும். எல்லாம் அவன் செயல்!

மூன்று மணி நேரக் காத்திருப்பிற்குப் பின் மாலை ஐந்து மணியளவில் வந்த பேருந்தில் பயணிகள் குறைவாக இருக்கவே எங்கள் 20 பேரையும் அந்தப் பேருந்தில் ஏற்றி அனுப்பினார்கள். AC பேருந்து. அப்பாடா…

லக்னோ விமான நிலையத்தை விட்டுக் கிளம்பி பிரயாக்ராஜ் நோக்கி எங்கள் பயணம் ஆரம்பம் ஆனது. வழியெங்கும் அகன்ற சாலைகளும் மேம்பாலங்களும் கட்டப்பட்டுக் கொண்டிருப்பதால் முக்கிய சாலைகள் single lane சாலைகளாகச் செயல் படுகின்றன. டெல்டா பிரதேசம் என்பதால் மிக மிக நைசான வண்டல் மண் எங்கெங்கும் தென்படுகின்றது. சாலை வேலைகளால் எங்கெங்கும் புழுதி. AC பேருந்து என்பதால் தப்பித்தோம். சாலை குண்டும் குழியுமாக… பேருந்து மிக மெதுவாகச் சென்றது. வழியில் இறங்கி டீ குடித்து விட்டு மேலும் பயணத்தைத் தொடர்ந்தோம். லக்னோவிலிருந்து பல கிலோமீட்டர்களுக்குச் சாலைகளின் இருபுறம் உள்ள தெரு விளக்குகள், பாலங்களில் காவி, வெள்ளை, பச்சை நிறங்களில் கூடுதலாக விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. (காங்கிரஸ் கொடி நிறம்??)

இரவு உண்ணலாம் என சேமித்து வைத்திருந்த எலுமிச்சை சாதம் ஊசிப் போயிருந்தது. இரவு 11.30 மணிக்குள் வந்தால் சாப்படு எடுத்து வைக்கப் படும் எனக் கூறப்பட்டாலும் அதற்குள் சென்று சேர முடியாது என்பதால் வழியில் கிடைத்ததை அனைவரும் உண்டு சமாளித்தோம். நாங்கள் கையில் இருந்த பிஸ்கட்டுகளை உண்டு விட்டுத் தூங்கத் தொடங்கினோம். நள்ளிரவு 12.30க்கு பிரயாக்ராஜை அடைந்தோம். Parade parking என்னும் பெயருடைய மைதானத்தில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. பேட்டரியில் இயங்கும் 50 ஆட்டோக்கள் வரிசையாக வந்து நின்றன. ஆட்டோ பிடித்து Fab Hotel Santhosh Palace என்னும் இடத்திற்குக் கிளம்பினோம்.. ஊரும் தெரியாது மொழியும் தெரியாது, ஆட்டோ ஓட்டுநர் எனக்கு வழி தெரியும் எனக் கூறி விட்டு சந்து பொந்துகளிலெல்லாம் அழைத்துச் சென்றார். என் கணவர் கூகிள் மேப் போட்டு வழி கூறினார். விடுதி முகப்பில் எங்கள் வாலன்டியர் எங்களுக்காகக் காத்திருந்து அறை எண்களைக் கூறினார். இங்கும் சாலைகள் படு மட்டமாக குண்டும் குழியுமாக உள்ளன. காற்று மாசுக்கு அளவே இல்லை.

AIR INDIA விமானத்தில் பெங்களூருவிலிருந்து மாலை ஐந்து மணிக்குக் கிளம்ப வேண்டிய மைத்துனர் மகனின் குடும்பம் ஒரு வழியாக எட்டு மணிக்குக் கிளம்பி லக்னோ வந்து விடிய விடியப் பயணித்து அதிகாலையில் நாங்கள் தங்கியிருந்த அதே விடுதிக்கு வந்து சேர்ந்தார்கள். என் கணவர் ஹோட்டல் பிரகாஷ் என மகனுக்குத் தகவல் அனுப்ப நாங்கள் வேறு இடத்தில் தங்கி இருக்கிறோம் என அவர் நினைக்க…அதிகாலையில் நான் ரிசப்ஷன் பகுதியில் இருக்கிறோம் இறங்கி வா எனக் கூற…அங்கே நடந்தது எங்கள் சந்திப்பு.

உறவினர் அனைவரும் ஒன்றாகப் பயணிக்க வேண்டி தகவல்கள் தந்தும் organisers யார் யார் யாத்திரைக்கு எந்த வரிசையில் பதிவு செய்திருக்கிறார்களோ அந்த வரிசையிலேயே பேருந்துகளை allot செய்திருந்தார்கள். எனவே 5,9,15 என வெவ்வேறு பேருந்துகளில் பயணித்து, பொது இடங்களில் சந்தித்துக் கொண்டோம்.

நிற்க.

யாத்திரை நாட்கள் எப்படி organize செய்யப் பட்டன என்பதை முதலில் விவரமாகக் கூறி விட்டால் மீண்டும் மீண்டும் எப்படி பயணித்தோம் எப்படி சாப்பிட்டோம் என்ன சாப்பிட்டோம் எனக் கூறத் தேவை இருக்காது. 45 பேருந்துகளை ஓரிடத்தில் நிறுத்த வேண்டும் என்பதால் ஊருக்கு வெளியே ஒரு பெரிய மைதானத்தில் பேருந்துகள் நிறுத்தப் பட்டன. நம் பேருந்துகள் அங்கு நின்றவுடன் எந்த நேரமாக இருந்தாலும் சாரி சாரியாக batteryயில் இயங்கும் ஆட்டோக்கள் வந்து நிற்கின்றன. ஒவ்வொரு பேருந்திற்கும் ஒரு எண் வழங்கப்பட்டு தனித் தனி WhatsApp group ஏற்படுத்தப்பட்டு, தங்குமிடம் மறுநாளுக்கான நிகழ்ச்சி நிரல், எங்கே உணவு வழங்கப்படும் என அனைத்துத் தகவல்களும் பறிமாறப்பட்டன. ஆட்டோவில் ஏறி அவரவர் தங்குமிடத்திற்குச் செல்ல வேண்டும். அனுப்பப்பட்ட நிகழ்ச்சி நிரலின்படி ஆட்டோ பிடித்து அவரவர் சிறு குழுக்களாக நதியில் நீராடி விட்டு காலை உணவிற்கு குறிப்பிட்ட இடத்தில் கூட வேண்டும்.

காலை காபி அனேகமாக நாம் தங்குமிடத்திலேயே தரப்பட்டது. ரவை உப்புமா, கோதுமை ரவை உப்புமா, பொங்கல் + சாம்பார் போன்றவை காலை/இரவு உணவுக்கும், சாம்பார் சாதம் ரசம் சாதம் வற்றல் குழம்பு சாதம், தக்காளி சாதம், பிரிஞ்சி சாதம் என ஏதாவது ஒரு சாதம் தயிர் சாதத்துடன் தரப்பட்டது.  பாகற்காய் பொரியல், பரங்கிக்காய் பொரியல், வாழைக்காய் பொரியல் சில நாட்களில், ராமர் பட்டாபிஷேக தினத்தன்று மோர்குழம்பு, சர்க்கரைப் பொங்கல், வடை. இப்படி வயிற்றுக்குக் கேடு செய்யாத வகையில் உணவுகள் வழங்கப்பட்டன. ஒரு போதும் வயிறு வாடவில்லை. இரவு உணவிற்கு நேரமாகும் என இருந்தால் மாலையில் காப்பியுடன் சுண்டலும் வழங்கப் பட்டது. இரவு உணவு வேளையில் பயணம் இருந்தால் அவரவர் பேருந்திலேயே உணவு ஏற்றப்பட்டு வழியில் தரப்பட்டது. தண்ணீர் பாட்டில்களை நாம் விலைக்கு வாங்கிக் கொள்ள வேண்டும். சாப்பிடும் இடங்களில் தண்ணீர் வழங்கப்பட்டது  ஆயினும் என்ன தண்ணீரோ? [ஜோல்னா பையில் எப்போதும் தட்டும் டம்ளரும் வைத்திருக்க வேண்டும்]

எப்போது விடுதியைக் காலி செய்து விட்டு பேருந்தில் பெட்டிகளை வைக்க வேண்டும் எனவும் முன்கூட்டியே தகவல் வரும். அதைப் பின்பற்றி விட்டு ஊரைச் சுற்றிப் பார்க்கலாம், சுவாமிகளின் பிரவசனம் ஒவ்வொரு ஊரிலும் நடைபெற்றது. ராமனின் பிறப்பிலிருந்து பட்டாபிஷேகம் அவர் வைகுண்டம் சென்றது முடிய அனைத்தும் கூறப்பட்டது. (நாங்கள் சென்ற இடத்திற்கு ஏற்ப கதை போகும். நந்தி கிராமம் – பரதன் ஆண்ட இடம், சிருங்கிவேரபுரம் – குகனும் ராமனும் சந்தித்த இடம்)

23/10/2024

மீண்டும் பிரயாக்ராஜ்…

முதல் நாளிரவே whatsappல் மறுநாள் காலை என்ன செய்ய வேண்டும் என நிகழ்ச்சி நிரல் வந்து விட்டது. காலை தங்குமிடத்திலேயே காப்பி, அடுத்து பெட்டிகளை எடுத்துக் கொண்டு பேருந்தில் ஏற்றி விட்டு, கையில் மாற்றுத் துணிகளை எடுத்துக் கொண்டு VIP ghat எனப்படும் இடத்திற்குச் சென்று திரிவேணி சங்கமம் சென்று நீராடி விட்டு வேணி மாதவரை தரிசித்து விட்டு Sardar patel sansthan சென்று brunchஐ முடித்துக் கொண்டு பெருந்தில் ஏறி சிருங்கிவேரபுரம் செல்ல வேண்டும். காலை 11 மணிக்குள் மேற்கண்ட நிகழ்வுகள் நடைபெற வேண்டும்.

விடுதி அறையைக் காலி செய்த பிறகு ரிசப்ஷனில் மைத்துனர் மகனைச் சந்தித்து விட்டு, பேருந்தில் பெட்டிகளை ஏற்றி விட்டு VIP ghat செல்ல ஆட்டோ பிடித்தோம். யாத்திரிகர்கள் அனைவருக்கும் பொதுவான நிகழ்ச்சி நிரல் என்பதால் ஆற்றின் கரைக்குச் சென்றால் நம் மக்களைச் சந்தித்து விடலாம் என்ற நம்பிக்கை. மருமகளின் பெற்றோர் ஏற்கனவே படகில் கிளம்பி விட்டதாகக் கூற மைத்துனர் மகன் வந்து சேரவே இல்லை. எங்கள் ஆட்டோ ஓட்டுனர் முன்னாலேயே ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு இது தான் VIP ghat எனக் கூறிச் சென்று விட்டார். (ஏமாற்றுகாரர்கள் எங்கும் உண்டு) தெரிந்த முகங்கள் யாருமே இல்லை.

என் கணவர் சாதாரணமாகவே எல்லாவற்றிற்கும் டென்ஷன் ஆவார். வழி கேட்டுக் கொண்டே யமுனை நதிக் கரையில் காலை நடைப் பயிற்சி போல இரண்டு கிலோமீட்டர்கள் நடந்தோம். தெரிந்த முகங்களே இல்லை. டென்ஷன் மேலும் டென்ஷன். இதற்கிடையில் மைத்துனர் மகனிடம் பேசி,வழிப்போக்கர் ஒருவரிடம் ஆங்கிலத்தில் பேசி, குட்டி ஆட்டோ பயணம் செய்து, படகுத் துறையின் அருகில் அவரைக் கண்டு பிடித்தோம். (All roads lead to Rome என்பது போல VIP ghatற்கு பல சாலைகள்) வழி, மொழி தெரியாமல் சிரமம். ஹிந்தி மொழி தெரியாமல் நம் நாட்டுக்குள்ளேயே பயணிக்க முடியவில்லை. (இதே கருத்தை எங்களுடன் வந்த பலரும் கூறியதைக் கேட்க முடிந்தது)

மைத்துனர் மகன் திரிவேணி சங்கமம் செல்ல ஒரு படகை வாடகைக்குப் பிடிக்க, அதில் உறவினர்களும் சில நண்பர்களும் ஏறிக் கிளம்பினோம். ஆதி நாட்களில் பிரயாக் என அழைக்கப்பட்டு, பின்னர் அலஹாபாத் ஆக மாறி மீண்டும் பிரயாக்ராஜ் எனப் பெயர் மாற்றம் பெற்றுள்ள இந்த ஊரின் சிறப்புக்களை திரிவேணி சங்கமம் சென்று சேர்வதற்குள் தெரிந்து கொள்வோமா?

அலகாபாத் என்ற பெயர் மொகலாயப் பேரரசனான அக்பரால் 1583 இல் இந்நகருக்குச் சூட்டப்பட்டது. இந்து மதத்தில் அலகாபாத் சிறப்பான இடத்தை பிடித்துள்ள ஊராகும். இந்நகரத்தில் இந்து சமய புனித ஆறுகளான யமுனை, கங்கை மற்றும் கண்ணுக்குப் புலப்படாத சரஸ்வதி ஆறு ஆகிய மூன்றும் கலக்குமிடமே திரிவேணி சங்கமம் என அழைக்கப் படுகிறது. இந்த மூன்று ஆறுகளும் மகாலட்சுமியின் பின்னலாகக் கருதப் படுகின்றன. இங்கே நீராடினால் சகல பாவங்களும் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை.

இந்தியாவின் மூன்று பிரதமர்கள் (ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, வி.பி. சிங்) இந்நகரில் பிறந்தவர்கள். உத்திரப் பிரதேச மாநிலத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றம் மற்றும் அலகாபாத் பல்கலைக் கழகம் ஆகியவை மிகப் பிரசித்தி பெற்றவை. ஜவகர்லால் நேருவின் வீடான ஆனந்த பவன் என்னும் கட்டிடம் தற்போது அருங்காட்சியகமாக உள்ளது.

திரிவேணி சங்கமத்தை ஒட்டி முகலாயப் பேரரசர் அக்பர் நிறுவிய அலகாபாத் கோட்டை உள்ளது. சங்கமத்திற்குச் செல்லப் படகு ஏறும் துறையை ஒட்டியே உள்ளது. இந்நகரத்தில் மூன்றாம் நூற்றாண்டில் பேரரசர் அசோகர் நிறுவிய அலகாபாத் தூண் உள்ளது.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகப் புகழ்பெற்ற கும்பமேளா திருவிழா நடைபெறும் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆறுகள் சேருமிடமான திரிவேணி சங்கமத்தில் கடைசியாக 2019-ஆம் ஆண்டு நடைபெற்றது.144 ஆண்டுகளுக்கு ஒரு முறை மஹாகும்பமேளா நடைபெறும்.

பிரயாக் என்பதற்கு வடமொழியில் முதன் முதலாக யாகம் செய்த இடம் எனப் பொருள் உண்டு. ப்ர+யாக் = முதன் முதலில் பிரம்மனால் யாகம் செய்யப் பட்டு தன் படைப்புத் தொழிலை ஆரம்பித்த ஊர் இது. மேலும் பிரயாக் என்பதற்கு confluence (of two equally forceful rivers) என்ற பொருளும் உண்டு. பாரத தேசத்தில் பல பிரயாகைகள் உண்டென்றாலும் அவற்றில் தலை சிறந்தது மூன்று நதிகள் சேரும் இந்தப் பிரயாக் தான் அனைத்திற்கும் ராஜா என்ற பொருளில் பிரயாக்ராஜ் எனப் பெயர்க் காரணம் கூறப்படுகிறது.மேலும் இங்குள்ள ஒரு ஆல மரத்தின் கீழ் தான் பிரளயகாலம் முடிந்ததும் இறைவன் ஆலிலையில் தோன்றி இவ்வுலகை மீண்டும் படைத்தார் எனவும் கூறப்படுகிறது. 

ஆலமா மரத்தின் இலை மேல்* ஒரு பாலகனாய்

ஞாலம் ஏழும் உண்டான்* அரங்கத்து அரவின் அணையான்,*

கோல மாமணி ஆரமும்* முத்துத் தாமமும் முடிவில்லது ஓரெழில்*

நீல மேனி ஐயோ. * நிறை கொண்டது என் நெஞ்சினையே.

—அமலனாதிபிரான் (திருப்பாணாழ்வார்)

நாங்கள் எட்டு பேர் சேர்ந்து தலைக்கு 200 ரூபாய்கள் எனப் பேசி சங்கமத்தை நோக்கிப் பயணித்தோம். வழியெங்கும் படகுகளைச் சுற்றிலும் பலவிதமான பறவைகள். அருகிலேயே தின்பண்டம் விற்கும் படகும் வர மக்கள் முறுக்கை உடைத்தது போல இருந்த ஒரு பண்டத்தை வாங்கி ஆற்றில் வீச சுற்றிலும் இருந்த பறவைகள்(வாத்துக்கள் குறிப்பாக) பெருத்த சத்தத்துடன் பறந்து வந்து அவற்றை உண்டன. யமுனை தான் பிரயாக்ராஜ் அருகில் உள்ளது என்பதால் சற்றே நீல நிறத்தில் உள்ள யமுனையில் படகு சென்றது.

சுவாமிகளின் சொற்களின்படி ஆண்களும் பெண்களும் குளிக்க தனித்தனி துறைகள் இருக்கும். சுற்றிலும் கம்பி வேலி போலப் பாதுகாப்புக்கு இருக்கும் என நான் நினைத்திருக்க, படகு செல்லச் செல்ல குளிக்கும் துறை எதுவும் தென்படவில்லை. திடீரென்று இரண்டு ஆறுகளும் சேரும் இடத்தில் படகு நிறுத்தப் பட்டது. சுற்றிலும் பல படகுகள் நின்றிருக்க அவற்றினிடையே இறங்கி மக்கள் நீரில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருந்தார்கள். சற்றே மண் நிறத்திலான கங்கையும், நீல நிற யமுனையும் பூமியின் அடியிலிருந்து பாய்வதாகக் கருதப்படும் சரஸ்வதியும் கூடும் பகுதியில் இரண்டிரண்டு படகுகளை அருகருகே நிற்க வைத்து அவை நகராமல் இருக்க மூங்கிலால் கட்டி வைத்திருக்கிறார்கள். இது போல ஒரு காட்சியை/சம்பவத்தை எதிர்பார்க்காததால் எனக்கு சற்றே வித்தியாசமாக ஏன் பயமாகக் கூட இருந்தது

நம் படகு அதற்கு அருகில் நிறுத்தப்பட்டு தம்பதிகள் முதலிலும், தனியாக வந்தவர்கள் பிறகும் இரண்டு படகுகளுக்கு இடையில் 4 x 4 அடி அகலமே உள்ள இடத்தில் இறங்கி (நெஞ்சளவு நீரில் குதித்து) மூங்கிலைப் பிடித்துக் கொண்டு நீரில் மூழ்கி எழுந்தோம். [பூஜை செய்பவர்களுக்கு தேங்காய் பால் பூ என அவர்களே விற்கிறார்கள். அதே தேங்காய் மீண்டும் மீண்டும் விற்பனைக்கு 😊] பேருந்தில் படிக்கட்டில் ஏறுவதற்கே சிரமப்படும் நான் நெஞ்சளவு உயரத்தில் உள்ள மற்றொரு மூங்கிலைப் பிடித்துக் கொண்டு எப்படி அவ்வளவு உயரத்தைக் கடந்து எங்கள் படகினை அடைந்தேன் என இப்போது நினைத்தாலும் வியப்பாக உள்ளது. அனைவரும் படகுக்கு வந்ததும் கரையை நோக்கிக் கிளம்பினோம். படகோட்டிகளின் உதவியுடனேயே நீராடவும் படகுக்குப் படகு தாண்டவும் முடிந்தது. வரும் வழியில் பறவைகளுக்கு முறுக்கு தந்தோம்.

கங்கைப் பகுதியில் தனியாகவும் யமுனைப் பகுதியில் தனியாகவும் சங்கமத்தில் தனியாகவும் ஒவ்வொரு நாள் தங்கி இருந்து குளிப்பது சிறப்பு என்றாலும் நேரமின்மை காரணமாக சங்கமத்தில் மட்டுமே குளிக்கிறோம். காலை 7.30 மணியளவில் சூரியன் உதிக்காத (காற்று மாசு காரணமாக hazy ஆக இருந்த நிலையில் ஆறுகளின் வண்ணங்களும் கண்ணுக்குத் தெரியவில்லை. மனம் அந்த இடத்தினைக் கண்ட பிரமிப்பிலிருந்து விடுபடாமல் பேரமைதியாக இருந்தது. எந்த எண்ணமும் மனதில் இல்லை. குளிக்கும் முன்பாகக் கடவுளை/நதிகளை வணங்க வேண்டும் என்ற எண்ணமே மனதில் தோன்றவில்லை. இடது கையால் முன்னால் இருந்த மூங்கிலைப் பிடித்துக் கொண்டு வலது கையால் மூக்கை அழுத்தியவண்ணம் நீரில் மூழ்கி எழுந்து கைகூப்பி தொழுது விட்டு மேலேறினேன். நீரை கொண்டு சென்ற பாட்டிலில் நிரப்பிக் கொண்டோம். [திருப்பதிக்கு வியாழக்கிழமை சென்றால் பாலாஜியின் கண்களை தரிசிக்க முடியும் என்பது தெரிந்தாலும் அருகில் சென்றதும் அனைத்தும் மறந்த நிலைக்கு செல்வது போன்ற அதே நிலைதான் இங்கும் எனக்கு ஏற்பட்டது)

சென்னையை விட்டுக் கிளம்பும் முன்பே நீர் நிலைகளில் குளித்து விட்டு உடை மாற்றவும், நனைத்த துணிகளை எப்படி உலர்த்துவது எனவும் தோழியிடம் பேசிய படி விடுதி அறையிலிருந்து கிளம்பும்போதே synthetic churidhar அணிந்து சென்று விடுவோம் நானும் உறவினரும். படகில் வரும்போதே அனேகமாக உலர்ந்திருக்கும். (உடுத்திய புடவைகள் எதையும் பயணத்தில் நனைக்கவில்லை. காய வைக்க இடமிருந்தாலும் நேரமில்லை. அடுத்தடுத்து பயணம்)

இம்முறை பெட்டிகள் ஏற்கனவே பேருந்துக்குச் சென்று விட்டதால் உடை மாற்ற இடமில்லாமல் ஈர உடையுடன் Daraganj என்னும் இடத்தில் திரிவேணி சங்கமத்திற்கு ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள வேணி மாதவ பெருமாள் கோவிலுக்கு ஆட்டோவில் சென்றோம். குறுகலான சாலையில் நடந்து சிறிது தொலைவு சென்றதும் கோவில் உள்ளது. பிரயாக்ராஜின் முக்கியமான இந்தக் கோவிலில் கூட்டத்துக்கு குறைவில்ல. குறிப்பாக எங்களுடன் வந்தவர்களின் கூட்டம் தான் அதிகம். புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தக் கோவில் மிகச் சிறப்பு வாய்ந்தது என்பதால் பக்தர்களின் வருகை அதிகம்.

திரேதா யுகத்தில் கஜகர்ணன் என்னும் அரக்கனைக் கொன்று இந்தத் திரிவேணி சங்கமத்தைக் காப்பாற்றி விட்டு மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி 12 மாதவனாக உருவம் எடுத்து பிரயாக்ராஜை சுற்றிலும் கோவில் கொண்டுள்ளார் மஹாவிஷ்ணு எனக் கூறுகிறார்கள். 12 கோவில்களையும் வலம் வந்தால் மிகவும் புண்ணியம் என்கிறார்கள். அதில் முக்கியமான கோவில் இந்த வேணி மாதவன் கோவில். சாளக்கிராம ரூபத்தில் மிக அழகாகக் காட்சியளிக்கிறார் மஹாவிஷ்ணு. சிறிய கோவில். மாடியிலும் சன்னிதி உள்ளது. கடவுளை தரிசித்து விட்டு அங்கேயே இருந்த ஒரு காலி அறையில் பெண்கள் நால்வரும் உடை மாற்றிக் கொண்டு மீண்டும் மாதவனைத் தரிசித்து விட்டு அங்கிருந்த சிறு கடையில் கிராம்பு 50 கிராம் வாங்கிக் கொண்டு உணவு உண்ணும் இடத்தை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தோம். கோவிலைச் சுற்றிலும் கடைகள். கடவுளுக்கு சாற்றிய ஆடைகளும் சில கடைகளில் விற்பனைக்கு உண்டு என விக்கி மாமா கூறுகிறார். ஊருக்குள் வேறு எந்த இடத்தையும் பார்க்கவில்லை.

சர்தார் படேல் சன்ஸ்தான் என்னும் இடத்தில் வழங்கப்பட்ட குழம்பு சாதம், பாகற்காய் பொரியல், தயிர்சாதம், ஊறுகாய் என சாப்பிட்டு முடித்து விட்டு மீண்டும் parade parking சென்று அங்கிருந்து சிருங்கிபேரபுரம் என்னும் சிற்றூரை நோக்கிப் பயணத்தைத் தொடங்கினோம்.

பிரயாக்ராஜிலிருந்து லக்னோ செல்லும் வழியில் 45 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிறிய ஊர் இது. சிருங்கி என்னும் முனிவர் பெயரால் இந்த ஊர் சிருங்கிபேரபுரம் என அழைக்கப் படுகிறது. பாரத தேசத்தின் இதிகாசமான ராமாயணத்தின்படி ராம, சீதா லக்குமணர்கள் சித்திரகூடம் செல்வதற்கு வேடர்களின் மன்னன் குகன் இந்த ஊரிலிருந்து படகில் கங்கையைக் கடந்து அழைத்துச் சென்றதாக வரலாறு. கங்கையைக் கடந்து பிரயாகை இருக்கும் இடத்தை அடைந்தனர். பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் அவரைச் சந்தித்து வழி கேட்டுக் கொண்டு சித்திரகூடத்தை அடைந்தனர்.

पौरैरनुगतो दूरमं पित्रा दशरतेन च (pourairanugatho dhooram pithraa dhasarathena cha)

शृङ्गवेरपुरे सूतमं गङ्गाकूले व्यसर्जयत् (srungaverapure sootam gangakoole vyasarjayat)

गुहमासाद्य धर्मात्मा निशाधाधिपतिम् प्रियम् (guhamasaadya dharmatma nishaadhaadhipatim priyam)

மேற்கண்ட ராமாயண ஸ்லோகத்தில் ராமன் காட்டிற்குக் கிளம்பியதும் தசரதனும் நாட்டு மக்களும் சிறிது தொலைவு அவன் பின்னாலேயே தொடர்ந்து சென்றனராம். குறிப்பிட்ட தூரத்தைக் கடந்ததும் இனிமேல் ராமனைத் தொடர்வது நடக்காது என உணர்ந்து ஊரை நோக்கித் திரும்புகிறார்கள். அது வரை தம்மை தேரில் ஓட்டி வந்த தேரோட்டியான சுமந்திரனைத் கங்கையின் கரையில் திருப்பி அனுப்பி விடுகிறார். ஸ்ருங்கிவேரபுரத்தில் வேடர்களின் மன்னனாகிய குகனைச் சந்தித்து அவன் உதவியுடன் கங்கையைக் கடந்து சித்திரக்கூடத்தை அடைகிறார்கள்.

பிரயாக்ராஜிலிருந்து செல்லும் வழியின் சிற்றூர்களின் காவல் தெய்வங்களாக ராமரும், ஆஞ்சனேயரும், சிவனும் கண்ணில் தென்பட்டனர்.(நம் ஊர் கருப்பசாமி போல) பல சிறு ஊர்களைக் கடந்து ஸ்ருங்கிபேரபுரத்தை அடைந்தோம். ஊருக்கு வெளியில் அனைத்துப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டு அனைவரும் நடந்து சென்று கங்கைக் கரையை அடைந்தோம். ராமர் கங்கையைக் கடந்த இடத்திற்கு அருகில் வேளுக்குடி சுவாமி தன்னுடைய பிரவசனத்தைத் தொடங்கி இருந்தார். இடப்புறம் ராமனும் குகனும் உள்ள கோவில், வலப்புறத்தில் சிறு குன்றின் மேல் ஒரு கோவில் (ருஷ்ய சிங்கர், சாந்தா தேவி) என இரண்டு கோவில்களையும் மக்கள் தரிசிக்க சென்றார்கள். கடுமையான வெயில் நேரம் என்பதால் படிக்கட்டில் அமர்ந்து பிரவசனத்தைக் கேட்க ஆரம்பித்தேன்.

வழியில் செய்யப்படும் சொற்பொழிவுகள் அனைவருக்கும் கேட்பதில்லை. ஸ்பீக்கர் வசதிகள் சரியாக இல்லாததால் அருகில் இருப்பவர்களுக்கே கேட்கும் நிலை. சில நிமிடங்களுக்குப் பிறகு எழுந்து சென்று வழியில் இருந்த மூன்றே மூன்று (950:3) ரெஸ்ட்ரூம்களில் வரிசையில் நின்று பயன்படுத்தி விட்டு நேராகப் பேருந்து இருக்குமிடத்திற்குச் சென்று விட்டேன். அருகில் இருந்த காவல் நிலையத்தில் அனுமதி பெற்று நம் மக்கள் ரெஸ்ட் ரூம் உபயோகப்படுத்தி விட்டு வந்தார்கள். சில நிமிடங்களில் பேருந்துகள் புறப்பட ஆரம்பித்தன. குறுகலான சாலையில் பயணித்து ஒரு குன்றின் மேல் ராமனும் குகனும் அணைத்திருப்பது போன்ற சிலையைக் கண்டு விட்டு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.

வழியில் Ram Shayya என்னும் இடத்தில் நின்றோம். (Shayya- படுக்கை) ராமர் காட்டுக்குச் செல்லும் போது ஓர் இரவு இந்த இடத்தில் தங்கிச் சென்றார் எனக் கூறப்படுகிறது. அக்ஷய வடம் எனப்படும் மரத்தின் கீழே ராமர் உறங்கியதாகக் கூறி இன்றளவும் அந்த மரம் பாதுகாக்கப் படுகிறது. அருகில் உள்ள சிறிய சன்னிதியில் ராமரின் கட்டில் மெத்தை போடப்பட்டு அவரது உருவச் சிலை பூஜிக்கப் படுகிறது.

மரத்தின் கீழே சுவாமியின் பிரவசனம் நடைபெற்றது. அதற்குச் செல்லும் முன்பாக அனைவருக்கும் காப்பியும் உப்புமாவும் தரப்பட்டது. வரிசையில் நின்று வாங்கி உண்பதை விட தட்டையும் டம்ளரையும் தண்ணீர் தேடி (அடி பம்ப், ட்ராக்டர் என கண்டிப்பாக கிடைக்கும்) வரிசையில் நின்று கழுவி விட்டு கோவிலுக்குச் செல்வதற்குள் பிரவசனம் முடியும் தறுவாய்க்கு வந்திருந்தது.

முன்பே பல முறை இது போல யாத்திரையில் பங்கு பெற்றவர்களுக்கு அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் எப்படி செய்தால் பிரவசனத்தை முன்வரிசையில் அமர்ந்து கேட்கலாம் எப்படி வயிறு வாடாமல் இருக்கலாம் என நன்றாகத் தெரிந்துள்ளது. பேருந்து நிற்குமிடத்திலிருந்து பேட்டரி ஆட்டோ பிடித்து உப்புமாவை உண்டு விட்டு முதல் வரிசைக்குச் சென்று விட்டார்கள். நாங்கள் நடந்தே சென்று வரிசையில் நின்று… கோவிலுக்கு சென்ற பிறகு தான் பிரவசனம் நடக்கிறது என்றே தெரிந்தது. கடைசி சில நிமிடங்களே கேட்க முடிந்தது என்றாலும் அனைவரும் ஒரே நேரத்தில் கிளம்பினால் செருப்புகள் தொலைய வாய்ப்புண்டே என்ற கவலையில் பிரவசனம் என் மண்டையில் ஏறவேயில்லை.

திரும்பி வரும்போது பேட்டரி ஆட்டோ பிடித்து பேருந்திற்கு வந்து சேர்ந்தோம். மாலை நான்கு மணியளவில் லக்னோவிலிருந்து 94 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நைமிசாரண்யத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தோம்.

மாலை 5.30 மணிக்கு விஷ்ணு சஹஸ்த்ரநாமம், (ஸஹஸ்த்ரம்= ஆயிரம்) சிறிய திருமடல், சிறு பஜன் பாடல்கள் ஆகியவற்றைத் தெரிந்தவர்கள் அனைவரும் கூறி இறைவனை வணங்கினோம். இரவு 8.30 மணியளவில் சுத்தமாகத் தென்பட்ட ஒரு petrol bunkல் இரவு உணவு வழங்கப்பட்டது. பிரயாக்ராஜ் லக்னோ சாலையின் அழகைப் பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளேன். அதே சாலையில் தான் இன்றும் பயணம். லக்னோ outerலிருந்து பாதை மாறி மேலும் கரடு முரடான பாதையில் பயணித்தோம். இரவு உணவு உள்ளே இறங்கியதுமே தூக்கம் வந்து விட்டது. நைமிசாரண்யத்தை அதிகாலை 1.30 மணிக்குச் சென்றடைந்தோம்.

அனுபவங்கள் தொடரும்…

 


No comments:

Post a Comment