Tuesday, 21 December 2021

ஐரோப்பியப் பயணம் [பகுதி-10C] Italy –>Rome->Pisa->Milan->Abu Dhabi->Chennai

April 18&19, 2016

மீண்டும் ரோம் ...Tiber நதி பாலத்தைக் கடந்தால் ரோம் தானே?

ரோம் நகர Panoramic Tour எனப்படும் ஊர் சுற்றி பார்க்கும் வாய்ப்பை இழந்த சோகத்துடன் கிளம்பி உணவு விடுதிக்கு சென்றோம். இத்தாலி என்றாலே pizza, pasta தான். அங்கே எங்களுக்காக பாஸ்தா செய்ய சொல்லி இருந்தார் எங்கள் வழிகாட்டி. பாஸ்தா சுவையாக இருந்தது.
[பின்னாளில் பேரன்களுக்காக பாஸ்தா சமைப்பது எப்படி என்று கற்றுக் கொண்டேன். முதலில் தக்காளியை வதக்கி sauce செய்து கொண்டு noodles போல பாஸ்தாவை வெந்நீரில் சமைத்து வடித்து எடுத்துக் கொண்டு தக்காளி சாஸுடன் சேர்த்து கலக்கி சீஸ் சேர்க்க வேண்டும்] இத்தாலியில் பெட்டிக் கடை முதல் எங்கெங்கும் பாஸ்தா பொட்டலங்களை விற்பனை செய்து கொண்டு இருந்தார்கள். வாங்கி வந்து இந்தியாவில் உள்ள உறவினர்களுக்கு தர வேண்டும் என்று ஏனோ எனக்குத் தோன்றவே இல்லை.
Pasta 10 விதங்களில் கிடைக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு விதம். நமக்கு தெரிந்த மிகப் பிரபலமான பாஸ்தா வகை Spaghetti. பாஸ்தாவில் அசைவம் சைவம் என பாகுபாடு உண்டு என எனக்கு அப்போது தெரியாது. மதிய உணவிற்குப் பிறகு நாங்கள் Colosseum எனப்படும் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான பல நூற்றாண்டுகளுக்கு முன்னே கான்க்ரீட்டால் கட்டப்பட்ட Amphitheater ஐ காணச் சென்றோம்.
(Amphitheatre என்பது விளையாட்டுக்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் திறந்த வெளி மைதானம். தற்கால Stadium போல என வைத்துக் கொள்ளலாம்).
இந்த மைதானம் நகரின் மையத்தில் உள்ளது. அங்கே செல்லும் வழியெங்கும் சாலைகள் பழைய கால கோட்டை கொத்தள மதில் சுவர்களை இடித்து அமைக்கப் பட்டுள்ளன. இந்த மைதானம் ஓவல் வடிவில் சுண்ணாம்புக் கற்கள், எரிமலைக் கற்கள் மற்றும் கான்க்ரீட் கொண்டு வடிவமைக்கப் பட்ட மிகப் பெரிய மைதானம் ஆகும். இன்றளவும் இது தான் அந்த சிறப்பைப் பெறுகிறது.
முற்காலத்தில் Gladiatorகள் எனப்படும் வாள் வீரர்களை சிங்கங்களுடன் / அல்லது சகவீரர்களுடன் மோத விட்டு போட்டிகள் நடத்தி வேடிக்கை பார்ப்பார்களாம் கொடுங்கோல் ரோமப் பேரரசர்கள் பிற்காலத்தில் கடைகள், பிரார்த்தனைக் கூடம், தங்கும் விடுதிகள், கோட்டை, Quarry எனப் பல விதமாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதன் ஒரு பகுதி சுவற்றில் பல விதமான செடி வகைகளும் இன்றளவும் உள்ளன. பல அழிவுகளைக் கடந்தும் அவைகளில் பெரும்பாலான செடிகள் இன்றளவும் உள்ளன என அறிகிறோம்.
இந்த மைதானத்தில் 50-80 ஆயிரம் பேர் ஒரே சமயத்தில் அமர்ந்து வேடிக்கை பார்க்கலாம். உலகின் புதிய ஏழு அதிசயங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. சிறந்த சுற்றுலாத் தலமாகவும் இது உள்ளது. இந்த பகுதிக்கு மிக அருகில் இருக்கும் Vesuvius எரிமலை வெடித்து சிதறியதால் இந்த மைதானம் இடிபாடுகளை அடைந்ததாக அறிகிறோம். இது புகழ் பெற்ற சுற்றுலாத் தலம் என்பதால் கூட்டமாக இருந்தது. கொலோசியம் அருகிலும் cobblestone தளங்களே உள்ளன. வரிசையில் நிற்கையில் எங்கெங்கும் மக்கள் உபயோகித்து போட்ட cigarette butts கிடந்தன. அந்த பகுதி சுத்தம் செய்யப் பட்டு எவ்வளவு நாளாகி இருந்ததோ?
நான் அந்த நாட்டின் மேலாண்மையைக் குறை கூறிக் கொண்டு இருந்தேன் ஆனால் சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளின் அறிக்கை ஒன்றில் கொரோனா வந்த பிறகு எங்கள் நாடுகள் தூய்மையாக உள்ளன. சுற்றுலா பயணிகளால் தான் குப்பை சேர்கிறது. யாரும் வராமல் இருப்பதால் நகரங்கள் தூய்மையாக உள்ளன என கூறி இருந்தார்கள். எங்கள் வழிகாட்டி அனுமதி சீட்டை கையில் தந்து விட்டு நீங்களே உள்ளே சென்று பாருங்கள் என்று கூறி சென்று விட்டார். தரைத் தளத்தில் உயரமான தூண்கள், ஆங்காங்கே மன்னர்களின் இடுப்பளவு சிலைகள், கல்வெட்டுக்கள், நினைவுக் கற்கள் போன்றவைகள் காணப்படுகின்றன. படிக்கட்டுகளில் ஏறி உயரமான பகுதிக்கு சென்றால் அந்த மைதானத்தின் வடிவமைப்பு துல்லியமாக தெரிகிறது. மேல் தளத்தில் நடந்து முழுவதும் சுற்றி பார்க்கலாம். கீழேயும் இறங்கி சென்று பார்க்கலாம். [Gladiator, Pompeii போன்ற திரைப்படங்களில் இந்த மைதானம் எப்படி உபயோகப் பட்டது என விவரமாக கூறி இருக்கிறார்கள். சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள்]
கீழ்த்தளத்தில் சிறு அறைகளில் சிங்கங்களையும் அடிமைகளையும் அடைத்து வைத்திருந்திருக்கிறார்கள். கொடுங்கோல் மன்னராட்சிகளில் இது போல பல நிகழ்வுகள். நாங்கள் ஆங்காங்கே நின்று வேடிக்கை பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். புகைப்படம் எடுக்கையில் அருகில் கேட்ட வசனம்: ஏங்க ...இது பழைய காலத்து ராஜாக்களின் அரண்மனைங்களா? எனக்கு தெரியாது வா நாம் புகைப்படம் எடுத்துக்கலாம். [எங்கள் வழிகாட்டி எதுவும் விளக்கம் கூறாமல் அனுப்பி வைத்ததன் விளைவு மேற்கண்ட வசனங்கள்]
எனக்கு தெரிந்த வகையில் விளக்கி விட்டு நகர்ந்தேன். நாங்கள் சென்ற போது சீரமைப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. முன்பு எப்படி இருந்ததோ அதே போன்ற நிறத்தில் வண்ணம் அடித்து வைத்திருக்கிறார்கள். இன்று நம்மிடம் இருக்கும் தொழில் நுட்பத்திற்கு (Technology) இடிபாடுகளை முழுக்கவே சரி செய்து விட முடியும் அப்படி செய்தால் அது உலக அதிசயமாக இருக்காதே? கட்டிடக் கலை வளர்ச்சி பெறாத காலத்திலேயே ரோமானிய பேரரசர்கள் கான்க்ரீடைக் கொண்டு அமைத்திருக்கும் இந்த மைதானம் நிச்சயம் உலக அதிசயம் தான். [Jeans திரைப் படத்தில் "பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக் கூட்டம் அதிசயம்" என ஆரம்பிக்கும் பாடலின் காட்சிகளில் உலகின் ஏழு அதிசயங்களையும் காட்சிப் படுத்தி இருக்கிறார்கள்]
கொலோசியத்தின் வெளிப்பகுதியில் / அருகில் பல இடிபாடுகள் உள்ளன. ரோமாபுரி கட்டிடக் கலைக்கு சிறப்புப் பெற்றது என்பதை நாம் அறிவோம். பண்டைய நாட்களின் சிறப்பியல்புகளை அந்த இடிபாடுகளில் காண முடிகிறது. அந்த பகுதியில் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு பேருந்தில் ஏறி அமர்ந்தோம். பேருந்து கிளம்பவே இல்லை.
கொலோசியம் அருகில் பேருந்தில் ஏறியதும் முதலில் நான் கண்டது தெருவோர ஓவியர் ஒருவரை. நடைபாதையில் அமர்ந்து Spray paint களால் கொலோசியம் நிலவொளியில், பகலில் எப்படி இருக்கும் என ஓவியமாக வரைந்து விற்பனை செய்து கொண்டிருந்தார். மேலும் பல இயற்கைக்கு காட்சிகளையும் சில நிமிடங்களில் அற்புதமாக வரைந்தார். நேரமாகிக் கொண்டே இருந்தது. பேருந்து கிளம்பவில்லை. மீண்டும் பிரச்சினை. என்னவென்று எட்டி பார்த்து விசாரித்ததில் எங்களுடன் வந்த அன்பர் ஒருவர் பாஸ்போர்டைத் தொலைத்து விட்டார் என அறிந்தோம். யார் பாஸ்போர்ட்டை தொலைத்தாலும் அவர்களை அதே இடத்திலேயே விட்டு விட்டு மற்றவர்களுடன் பயணம் தொடரும். தொலைத்தவர் தற்காலிக பாஸ்போர்ட் பெற்று மற்றவர்களுடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என அமைப்பாளர்கள் ஆரம்பத்திலேயே கூறி இருந்தார்கள் என இந்தப் பயணக் கட்டுரையின் முதல் பாகத்திலேயே குறிப்பிட்டிருந்தேன். அதன்படி அமைப்பாளர்களில் ஒருவரை தொலைத்தவருக்கு உதவியாய் உடன் அனுப்பி, மறுநாள் மாலை மிலன் நகர விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்து கொள்ளுங்கள் என்று கூறப் பட்டது. பின்னர் அங்கிருந்து கிளம்பி Trevi என்னும் பகுதியில் அமைந்த 26.3 மீட்டர் உயரமும் 49.15 மீட்டர் அகலமும் உடைய உலக பிரசித்தி பெற்ற நீரூற்றை காண சென்றோம்.
குடிநீரை ரோம் நகருக்குள் எடுத்து வரும் நீர்வழி(aqueduct) ஒன்று இந்த நீரூற்றுக்கு 10 கிலோமீட்டர் தொலைவிலிருந்து நீரை கொண்டு வருகிறது. இதன் பின்னணியில் Palazzo Poli அமைந்துள்ளது. மிக நுண்ணிய வேலைப்பாடுகள் அமைந்த சிற்பங்கள் இதனருகில் அமைக்கப் பட்டுள்ளன. பகலில் Aqua marine நிற பின்னணியில் காட்சியளிக்கும் இந்த பகுதி இரவில் LED விளக்குகளின் உதவியால் ஒளிர்கிறது. உலகின் மிகப்பெரிய நீரூற்றுகளில் இதுவும் ஒன்று என்பதால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும் அதிகம். இந்த நீரூற்றின் முன்பு திரும்பி நின்று கொண்டு சில்லறை காசுகளை அதனுள் எறிந்தால் மீண்டும் நாம் ரோம் நகருக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கை. மக்கள் இது போல நீரூற்றுக்குள் தினமும் சராசரியாக 3000 யூரோக்களை வீசுவதாக கூறப் படுகிறது. இந்த சில்லரைக் காசுகளை திருடும் முயற்சிகளும் நடைபெறுவதால் கட்டுக் காவலும் உண்டு. இந்த பணமானது ஏழை மக்களுக்கு உதவப் பயன்படுகிறது. ரோம் நகரை நாங்கள் சுற்றி பார்க்கவே இல்லையே மீண்டும் அங்கே செல்லும் விருப்பம் எனக்கு இருப்பதால் நானும் சில்லரைக் காசை நீரூற்றில் போட விரும்பினேன். என் கணவர் மீண்டும் இங்கே உனக்கு என்ன வேலை, காசு போட வேண்டாம் என்று தடுத்து விட்டார்.
நீரூற்று இருக்கும் பகுதி குறுகலானது என்பதால் சுற்றுலா பயணிகளின் வரவால் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. அருகில் சென்று சிற்பங்களை கண்டு ரசிக்க முடியவில்லை. சில அடி தொலைவிலிருந்தே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். அங்கிருந்து கிளம்பி இரவு உணவை முடித்துக் கொண்டு Pomezia என்னும் பகுதியில் அமைந்த தங்கும் விடுதிக்கு சென்றோம். மறுநாள் பைசா நகரின் சாய்ந்த கோபுரத்தைக் கண்டு விட்டு மிலன் நகரின் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் மறுநாளுக்கு தேவையான பொருட்களை மட்டும் Roll on பெட்டியில் வைத்து கொள்ளுமாறு கூறப்பட்டது. அதனால் இரவே பெட்டியை ஒழுங்கு செய்து வைத்து விட்டு உறங்கினோம். PISA [ April 19,2016] ஐரோப்பிய பயணத்தின் கடைசி நாள். காலை உணவிற்கு பிறகு உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான பைசா நகரின் சாய்ந்த கோபுரத்தை காணப் பயணப் பட்டோம். Arno நதி பாயும் இந்த ஊரானது Tuscany பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஊரில் உள்ள University of Pisa பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகம்.
8.87 ஏக்கராவில் அமைந்து, சுற்றிலும் மதில் சுவர் அமைக்கப் பட்டு, புல்வெளி மற்றும் நடைபாதையுடன் கூடிய Piazza dei Miracoli (Square of miracles) என அழைக்கப்படும் பகுதியில் Pisa Cathedral,Pisa Baptistry ,The Campanile மற்றும் Camposanto monumentale என நான்கு பகுதிகள் உள்ளன. முதலில் Pisa Baptistry உள்ளது அதற்கு பின்னால் Cathedral, அதன் பக்கவாட்டில் The Campanile, சற்று இடைவெளி விட்டு Camposanto monumentale யும் உள்ளன. Baptistry என்பது கிருஸ்துவ மதத்தினரால் பின்பற்றப்படும் ஞான ஸ்நானம் என்னும் சடங்கினை செய்யும் இடம். 107.25 மீட்டர் விட்டம் கொண்ட இது ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய Baptistry ஆகக் கருதப் படுகிறது.
Cathedral உள்ளே செல்ல கிருஸ்துவ மதம் சாராதவர்களுக்கு அனுமதி இல்லை. [இந்த தேவாலயத்தின் உள்கட்டமைப்பு எப்படி உள்ளது என்பதைக் காண Google அய்யனாரின் உதவியை நாடவும்]. எங்களுடன் வந்த சில பெண்மணிகள் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லி உள்ளே சென்று பார்த்து வந்தார்கள். பொய் சொல்லி உள்ளே சென்றாலும் அவர்களின் வழிபாட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு தெரியாது மேலும் பொய் சொல்ல மனம் வரவில்லை. அங்கிருந்த செக்யூரிட்டியைக் கேட்டோம் அவர் முடியாது என்றதும் அமைதியாக திரும்பி சென்று அமர்ந்து கொண்டோம்.

இந்த தேவாலயத்தின் மணிக் கூண்டு தான் The Campanile எனப்படும் Standing Bell Tower. உலகப் புகழ் பெற்ற பைசா நகரின் சாய்ந்த கோபுரம் என நாம் அறிந்த கோபுரம் தான் இது.

நான் முன்பே குறிப்பிட்டிருந்தபடி ஐரோப்பிய தேவாலயங்களில் மணிக் கூண்டு தனியாக அமைக்கப் படுகிறது நம் நாட்டைப் போல தேவாலயத்தின் Altar எனப்படும் ஊசி முனை கோபுரத்திலோ அல்லது தேவாலய கட்டிடத்தின் முன் பகுதியிலோ அமைக்கப் படுவதில்லை. ஏழு தளங்களும் 296 படிக்கட்டுகளும் உடைய இந்த கோபுரம் 1173 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப் பட்டது. ஆரம்பம் முதலே கோபுரம் சாயத் தொடங்கி விட்டது. 50 ஆண்டுகள் கட்டுமானம் நிறுத்தி வைக்கப் பட்டு மீண்டும் தொடங்கப் பட்டது. மீண்டும் நிறுத்தம் மீண்டும் தொடக்கம் என கி.பி 1372 ஆம் ஆண்டு முடிக்கப் பட்டது.
55.86 மீட்டர் உயரமுள்ள இந்த கோபுரம் 12 ஆம் நூற்றாண்டில் கட்ட ஆரம்பிக்கப்பட்ட போதே அஸ்திவார மண்ணின் மிருதுத் தன்மையால் சாயத் தொடங்கி விட்டது. 14ஆம் நூற்றாண்டில் கட்டி முடிக்கப் பட்ட போது நிலைமை இன்னும் மோசமாகி விட்டது . 1990 ஆம் ஆண்டு இந்த கோபுரம் 5.5 டிகிரி இருந்தது.1993-2001 முடிய கட்டிடக் காலை வல்லுநர்களால் சற்றே நிமிர்த்தி வைக்கப் பட்டு தற்சமயம் 3.97 டிகிரி சாய்கோணத்தில் உள்ளது. 90 டிகிரி நேர்கோணத்தில் நிமிர்த்தி வைத்தால் சாய்ந்த கோபுரம் என்ற சிறப்பு காணாமல் போய் விடும் என்பதால் சாய்வாகவே அந்த கோபுரம் பராமரிக்கப் படுகிறது. சரி...கோபுரத்தின் மேலே ஏறலாமா? மக்கள் அதிகம் பார்வையிடும் இடம் என்பதால் இந்த கோபுரத்தின் மேலே செல்ல அனுமதி சீட்டு வேண்டும். நாங்கள் செல்வதற்கு சில நாட்கள் முன்பு வரை அந்த தேவாலயத்தின் உள்ளே செல்ல அனுமதி இல்லாமல் இருந்தது. அனுமதி சீட்டு கையில் இருந்தாலும் உள்ளே செல்ல முடியுமா என்ற சந்தேகத்துடனேயே தான் அழைத்துச் சென்றார் வழிகாட்டி. [பிரஸ்ஸல்ஸ் குண்டு வெடிப்பு நினைவுக்கு வருகிறதா?]
நாங்கள் சென்ற நாட்களில் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப் பட்டு இருந்ததால் உள்ளே செல்ல முடிந்தது. அடிவாரத்தில் வரிசையில் நின்று 10 பேர் கொண்ட குழுவாக அனுமத்திக்கப் பட்டு உள்ளே சென்றோம். கோபுரத்தை பற்றிய விவரங்கள், அதன் blueprint, யார் கட்டினார்கள் போன்ற விவரங்கள் அனைத்தும் தரைத் தளத்தில் உள்ளன. அங்கிருந்து பார்த்தால் கோபுரத்தின் மையப்பகுதி தெரிந்தது. இந்த கோபுரம் முழுவதும் வெள்ளை சலவைக் கற்களால் (white marble) கட்டப்பட்டுள்ளது. படிக்கட்டுக்கள் உட்பட சலவை கற்கள் தான். கோபுரம் கட்டி முடிக்கப் பட்டதும் அதன் மேல் தளத்தில் ஏழு (7) மணிகள் நிறுவப் பட்டன. குறுகலான படிக்கட்டுகளில் மேலேறி தேவாலய ஊழியர் ஒருவர் காலை மாலை இருவேளையும் அந்த மணிகளை அசைத்து ஓசை எழுப்புவாராம். சலவைக் கல்லால் ஆன படிக்கட்டுகள் (296). என்பதால் மக்கள் நடந்து நடந்து நடுப் பகுதி எப்படி அம்மிக் கல்லில் அரைத்து அரைத்து நடுப்பகுதி குழியாக இருக்குமோ அது போல பள்ளமாக இருந்தது.
பக்கவாட்டில் பிடித்துக் கொண்டு ஏற இரும்பு கம்பி பதிக்கப் பட்டு இருந்தாலும் ஒவ்வொரு படிக்கட்டில் காலை வைக்கும் போதும் வழுக்க்க்க்கியது. செருப்பு இல்லாமல் நடக்கவே முடியாது. மிக நிதானமாக மேலேறி ஒவ்வொரு தளத்தின் ஜன்னல் வழியாகவும் அந்த ஊரை வேடிக்கை பார்த்து விட்டு அடுத்த தளத்திற்கு ஏறினோம். [சிறிய ஊர் தான். பழமையான கட்டிடங்கள் தென் பட்டன] இறங்கவும் இதே படிக்கட்டுக்கள் தான் என்பதால் வழுக்கலுக்கு இடையில் கீழிறங்குபவர்களுக்கும் வழி விட வேண்டிய கட்டாயம். ஏழாவது தளத்திற்கு செல்லும் படிக்கட்டுக்கள் கூடுதல் steep ஆக இருந்தன. ஒரு வழியாக ஏழாவது தளத்தை அடைந்தோம். அங்கே ஆறு மணிகள் ஒரு அளவிலும் ஒன்று மட்டும் பெரியதாகவும் இருந்தன. இந்த மணிகளின் நாதமானது ஆங்கில இசையின் ஏழு ஸ்வரங்களின் ஓசையின் அடிப்படையில் அமைய பெற்றுள்ளன. தற்போது இந்த மணிகள் ஒலிக்கப் படுவதில்லை. அதன் நாக்குகளை கயிறால் கட்டி வைத்துள்ளார்கள். அந்த மணிகளின் அருகே நின்று தொட்ட்ட்டுப் பார்த்து, அமர்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். கீழிறங்கி வந்து கோபுரத்தின் அடிவாரத்தில் அமர்ந்திருந்தோம். குழு குழுவாக மற்றவர்கள் சென்று வரும் வரை காத்திருக்க வேண்டும் இல்லையா? இங்கும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் தான்.
இதற்கிடையில் வழிகாட்டி என் கையில் அவரது கொடியை தந்து நம் குழுவினரை உன் அருகில் சேர்த்து வைத்துக் கொள் எனக்கு வேறு வேலை இருக்கிறது என்று கூறி சென்று விட்டார். (அருகிலேயே இந்திய உணவகம் இருக்கிறது எங்களுக்கு உணவு தயாராக உள்ளதா என பார்க்க சென்றிருப்பார் என நினைக்கிறேன்) நான் கொடியுடன் இருப்பதைக் கண்ட சக வழிகாட்டிகள் (நம் நாட்டை சேர்ந்தவர்கள்) என்னையும் வழிகாட்டி என்று நினைத்து பேச ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு விளக்கம் சொல்லி அனுப்பி விட்டு அந்த கோபுரத்தின் வெளிப்புற வேலைப்பாடுகளை கவனித்தேன். மூன்று கட்டங்களாக நிறுத்தி நிறுத்தி கட்டப்பட்டதால் சலவைக்கு கல்லின் நிறம் மாறி இருந்தது. ஒவ்வொரு அரசரின் எண்ணங்களும் வெவ்வேறு மாதிரி இருந்துள்ளது. ஒவ்வொரு தளத்தின் வேலைப்பாடுகளும் ஒவ்வொரு விதமாக இருந்தன. பல இடங்களில் பூ வேலைப்பாடுகள் போன்றவைகள் நிறைவு செய்யப்படவில்லை.
எங்கள் குழுவிலிருந்த வயதில் மூத்தவர்கள் மற்றும் மேலே ஏற பயப்படுபவர்களை அக்கா / அண்ணா தைரியமாக போய் விட்டு வாருங்கள், இவ்வளவு தொலைவு வந்து விட்டு மேலேறி பார்க்காமல் போகலாமா என்று ஊக்குவித்து அனுப்பினேன். திரும்பி வந்த பிறகு நீ ஊக்குவிக்காமல் இருந்தால் நாங்கள் இந்த அனுபவத்தை இழந்திருப்போம் என்று கூறினார்கள். இதற்குள் வழிகாட்டி வந்துவிடவே கொடியை அவரிடம் தந்து விட்டு விரும்பியவர்களுக்கு கோபுரத்தின் முன்பு நிற்க வைத்து புகைப்படங்கள் எடுத்து தந்தேன்.
பலரும் Selfie எடுத்துக் கொள்ள விரும்பினார்கள் ஆனால் எப்படி எடுப்பது என்று தெரியவில்லை. என் அருகில் வந்து நிற்க வைத்து நான் கேமராவில் வராமல் அவர்கள் மட்டும் இருக்குமாறு selfie எடுத்து தந்தேன். அதை பார்த்து மேலும் சிலரும் வந்து அது போல selfie எடுத்துக் கொண்டார்கள். மேற்சொன்னவைகள் முடிய ஏறக்குறைய மூன்று மணி நேரங்கள் ஆனது. பைசா நகரின் சாய்ந்த கோபுரத்தை சுற்றி வந்து பாடாத குறை. திருப்தியாக பார்த்து அனுபவித்தேன். இந்த Square ன் நான்காவது கட்டிடம் ஒரு Cemetery. அங்கே நமக்கு வேலையில்லை. சுற்றிலும் காம்பௌண்ட் சுவர் உள்ள இந்த பகுதியின் உள்ளேயே அங்கே வேலை செய்பவர்களுக்கான வீடுகள் உள்ளன. இவை தவிர இரண்டு அருங்காட்சியகங்களும் உள்ளன.
இடையில் ஆங்காங்கே புல்வெளிக்கு இடையே நடைபாதை. சற்று நடந்து பின் பக்க வாசல் வழியாக சென்றால் அருகிலேயே உணவு விடுதி. அங்கே உண்டு முடித்து விட்டு மீண்டும் உள்ளே புகுந்து வாசல் வழியாக வெளியேறி பேருந்தை அடைந்தோம்.
பின் பக்கமாக நடக்கையில் திரும்பி பைசா கோபுரத்தை அருகில் இருந்த மின் கம்பத்துடன் ஒப்பிட்டு ஒரு புகைப்படம் எடுத்தேன். கோபுரம் எவ்வளவு சாய்ந்து இருக்கிறது என அதை பார்த்தால் புரிந்து கொள்ளலாம். சிறிய ஊராக இருந்தாலும் கலிலியோ போன்ற மேதைகள் வாழ்ந்த ஊர் இது. இந்த baptistry யில் உள்ள விளக்கை பார்த்து தான் கடிகாரத்தின் பெண்டுலம் பற்றிய விவரத்தை கலிலியோ கண்டு பிடித்தார் என்று கூறுகிறார்கள். ஐரோப்பிய பயணத்தின் இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டோம். Milan நகரின் Malpensa International Airportஐ நோக்கி கிளம்பினோம். வழியில் அமைப்பாளர்களில் ஒருவர் ஓட்டுநர் மற்றும் வழிகாட்டிக்கு Tips தர விரும்புபவர்கள் தரலாம் என வசூல் செய்தார் வழியில் ஒரு நிறுத்தத்தில் பயணி ஒருவரின் சிற்றுரையுடன் அவர்களிடம் தரப்பட்டது. பைசாவிலிருந்து மிலன் நகருக்கு மூன்று மணி நேர பயணம். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே விமான நிலையத்தை அடைந்து விட்டோம். மிலன் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது அங்கே எங்கள் ஓட்டுநர் ஒரு sudden break போட்டார். 15 நாள் பயணத்தில் அது தான் முதன் முறை. மைக்கில் 10 முறை மன்னிப்பு கேட்டார்.
எங்களை இறக்கி விட்டு விட்டு பிரியா விடை பெற்றுக் கொண்டு மீண்டும் தன்னந் தனியாக பேருந்தை ஒட்டிக் கொண்டு ஹாலந்து நாட்டின் The Hague நகரை நோக்கி சென்றார். ஐரோப்பாவில் அது நாள் வரை வாங்கிய பொருட்களுக்கான tax refund ஐ விமான நிலையத்தில் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறி இருந்தார்கள். நாங்கள் ஸ்வரோவ்ஸ்கி நகைகள் வாங்கிய receiptஐ எவ்வளவு தேடியும் Check-in நேரம் வரும் வரை கிடைக்கவில்லை . பாஸ்போர்ட்டை தொலைத்த அன்பர் தற்காலிக அனுமதி சீட்டுடன் எங்களுடன் வந்து சேர்ந்து கொண்டார். மீண்டும் அபுதாபியை நோக்கிய பயணம் ஏப்ரல் 19, 2016 ஆம் நாள் ஆரம்பம். அங்கே எங்கள் குழுவிற்கு எட்டு மணி நேர Layover. Muscat வழியாக சென்றவர்கள் எங்களுக்கு பல மணி நேரங்களுக்கு முன்பாகவே சென்னை சென்று சேர்ந்து விட்டார்கள்.
எட்டு மணி நேரத்தில் பசி தான் பிரதானம். சாப்பிட ஒழுங்கான உணவு இல்லை. யார் யாரிடம் என்னென்ன snacks மீதி இருந்ததோ அதை பகிர்ந்து உண்டோம். பசியில் தூக்கமும் வரவில்லை. தூங்க சரியான இடமும் இல்லை. விமான நிலைய நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்களின் தொழுகை நேரங்களில் விமானங்கள் புறப்படுவதில்லை. யாரும் நடமாடுவதில்லை. அமைதியாக அமர்ந்திருக்க வேண்டும். பெண்களுக்கென தனி பிரார்த்தனைக் கூடங்கள் உண்டு. பிரார்த்தனைக்கு செல்லும் பெண்கள் ரெஸ்ட்ரூம்களில் hand shower உபயோகித்து கை கால் கழுவி கொள்கிறார்கள். வயதான பெண்மணிகள் washbasin குழாயில் காதுகள், மூக்கு, வாய், கண்களையும், கழுவிக் கொள்கிறார்கள். பின் கழுத்தில் சிறு பள்ளம் போன்ற ஒரு இடம் இருக்கும். அந்த இடத்தையும் சுத்தம் செய்து கொள்கிறார்கள். [இது போல ஒவ்வொரு தொழுகைக்கு முன்பும் ஐந்து முறை கழுவ வேண்டும் என்று சமீபத்தில் எங்கள் இல்லத்திற்கு வந்திருந்த ஒரு இஸ்லாமிய நண்பர் கூறினார். கழுத்திற்கு பின்னல் உள்ள பள்ளத்தை சுத்தம் செய்வதால் மூளையின் ஒரு பகுதியான Medulla Oblongata தூண்டப் படுவதாகவும் அவர் கூறினார். சைவ மதத்தவர்கள் அந்த பகுதியில் திருநீறும் வைணவ மதத்தவர்கள் திருமண்ணும் வைத்துக் கொள்வதை நாம் கண்டிருக்கிறோம். ஆனால் காரணம் என்னவென்று அந்த அன்பர் கூறிய பிறகே தெரிந்தது] ரெஸ்ட்ரூம்களின் International Standard படி தரையில் ஈரம் இருக்க கூடாது என்பதால் இரு பெண் ஊழியர்கள் ஒவ்வொருவர் உபயோகித்த பிறகும் mop உபயோகித்து துடைத்துக் கொண்டே இருந்தார்கள். பெண்களுக்கான தொழுகை இடம் எங்கிருக்கிறது என்று வழி கட்டினார்கள். தொழுகை இடத்தின் வாசலில் செருப்புக்களை விட்டு விட்டு உள்ளே செல்ல வேண்டும்.
காவலர்களில் ஆண்கள் வெள்ளை மேலங்கியும் பெண்கள் கருப்பு மேலங்கியும் அணிந்து வித்தியாசமாக இருந்தார்கள். கடைகளில் chocolates குறைந்த விலையில் விற்கப் படுகின்றன. ஐரோப்பாவில் அதிக விலையில் விற்கப்படும் chocolates இங்கே சகாய விலையில் கிடைத்தன. எங்கு சென்றாலும் விமான நிலையத்தில் நானும் என் கணவரும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம். விமான நிலையத்தை சுற்றி பார்த்து புகைப்படங்கள் எடுத்து கொண்டோம்.
குறிப்பிட்ட நேரத்தில் விமானம் சென்னையை நோக்கிக் கிளம்பியது. கிளம்பிய சிறிது நேரத்தில் Jain Vegetarian உணவு வழங்கப் பட்டது. அதே வேகவைத்த barley கொத்துமல்லி இலை தூவலுடன், ஒரு bun, fruit salad. புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்பது போல வேக வைத்த பார்லியை நாங்கள் உண்ணவில்லை (உண்ண முடியவில்லை) சென்னை வரும் வரை ஐரோப்பிய பயணத்தை ஆசை போட ஆரம்பித்தேன். பழமையும் புதுமையும் இணைந்த ஐரோப்பிய கண்டத்தில் பயணித்தது வித்தியாசமான அனுபவம். ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு அனுபவத்தை தந்தது என்றால் மிகையாகாது. ஆம்ஸ்டெர்டாம் நகரின் வாய்க்கால்களில் சென்ற படகுப் பயணம் ஒரு விதம் என்றால் வெனிஸ் நகர கொண்டோலா படகு பயணம் மற்றொரு விதம். ஸீன் நதி இரவு படகுப் பயணம் Dreamy. ரைன் நதி படகுப் பயணம் ஆர்ப்பரிப்பு.வடக்கு கடல் கப்பல் பயணம் புதுமை என விதம் விதமான அனுபவங்கள்.
உலக அதிசயங்களை காண நேர்ந்தது அருமையான அனுபவம். தேவாலயங்களும் அருங்காட்சியகங்களும் சிற்பங்களும் ஓவியங்களும் அற்புதமான வேலைப்பாடுகளைக் கொண்ட கட்டிடங்களும் மனத்தைக் கொள்ளை கொண்டன. நாம் புத்தகங்களில் திரைப்படங்களில் படித்து பார்த்து அறிந்த செய்திகளுக்கும் நேரில் கண்டவைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. பாரிஸில் சாமானியர்கள் கூட High-end fashionable ஆக இருப்பார்கள், வாடிகன் நகரில் பாதிரிமார்களும் கன்யாஸ்த்ரீகளும் தான் இருப்பார்கள் போன்ற myth கள் நேரில் கண்ட போது பொய்யாய் போயின. இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி என்பார்கள். 2016ல் நான் கண்ட ஐரோப்பா இன்று இல்லை. Brexit செயல்பாட்டுக்கு வந்து விட்டது. Notre dame எரிந்து விட்டது. பாரிசில் எங்கெங்கும் இலவச குடிநீர் கிடைக்கிறது. Corona என்னும் கொடிய கிருமியின் தாக்கத்தால் உலகமே முடங்கி விட்டது. இப்படி பலப்பல மாற்றங்கள். ஏப்ரல் 20, 2016 இரவு 10 மணிக்கு சென்னையில் தரையிறங்கினோம். இன்றளவும் நினைவில் நிற்கும் மனதுக்கு இனிய ஐரோப்பிய பயண நினைவுகளுடன் இல்லத்தை நோக்கி சென்றோம். முடிவுரை 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாங்கள் 80 பேர் கொண்ட குழுவாக சென்ற ஐரோப்பிய சுற்றுலா பற்றிய பதிவினை சுருக்கமாக அப்போதே முக நூல் மற்றும் என் வலைப்பதிவில் மிக சுருக்கமாகப் பதிவு செய்திருந்தாலும், 2020 ஆண்டில் நண்பர்களின் ஊக்குவிப்பால் என் வெளிநாட்டுப் பயண அனுபவங்களை விரிவாகப் பதிவு செய்து வெளியிட ஆரம்பித்தேன். ஐரோப்பிய பயணம் குறித்த பதிவுகளை ஒவ்வொரு நாடாக / நாளாக பிரித்து தக்க புகைப்படங்களுடன் விவரங்களுடன் பதிவிட்டுள்ளேன். Courtesy: 1. Boarding, Lodging & Transport - Kumaran Travels, Chennai 2. Information - Mr Anuj (Tour Guide), Google & Wikipedia 3. Photos - Self, Mr P.S. Muralidharan, Mr .Ekambaram & Mr .Vinayak 4. Photobook Printing - Mr. Vivek Muralidharan 5. References…………………Google & Wikipedia
Special thanks to my trip financier, my husband Mr. P.S.Muralidharan

காலக் கண்ணாடியை பிரதிபலிக்கும் சிறு துரும்பாக இருக்க என்னைத் தூண்டிய இறைவனுக்குப் பல கோடி நன்றிகள்.

பயணங்கள் மு டி வ தி ல் லை...

Saturday, 11 December 2021

ஐரோப்பியப் பயணம் [பகுதி-10B] [Italy –>Florence->Rome->Vatican

April 17, 2016

மறுநாள் காலை உணவுக்கு பின் Florence வழியாக ரோம் நகரை நோக்கிப் பயணம் ஆரம்பம்.

தினமும் காலை உணவு முடிந்து பேருந்தில் ஏறும் சமயம் உடன் பயணிக்கும் சகோதரிகளை நலம் விசாரிப்பது என் வழக்கம்.

அவர்களும் என்னிடம் விசாரிப்பார்கள். ஒரு சகோதரி நலம் விசாரித்த பொழுது ஏற்கனவே 12 நாட்கள் பயணம் செய்து முடித்து விட்டதில் மிகுந்த களைப்பாக இருக்கிறது என்று கூறினேன். அப்படி சொல்லாதே மஞ்சுளா ...தினமும் காலையில் சுறுசுறுப்பா நீ தயாராகி வருவதை பார்த்து தான் நாங்கள் எங்களை உற்சாகப் படுத்தி கொள்கிறோம் என்றார்கள்.

அன்றைய தினம் பேருந்தில் இரண்டு மணி நேரங்கள் நன்றாக உறங்கி விட்டேன் என எங்கள் பின் இருக்கைகளில் அமர்ந்திருந்த சகோதரர்கள் கிண்டல் செய்ததிலிருந்து தெரிந்து கொண்டேன். போகும் வழியில் இத்தாலியின் மற்றொரு முக்கிய நகரமான Florence (Firenze) நகரைக் கடந்து தான் செல்ல வேண்டும்.

ஐரோப்பிய நகரங்கள் அனைத்துமே கட்டடக் கலைக்கும் அருங்காட்சியகங்களுக்கும் தேவாலயங்களுக்கும் புகழ் பெற்றவை என்பதை நாம் அறிவோம். குறிப்பாக இத்தாலிய நகரங்கள் ரோம பேரரசின் பகுதியாக விளங்கியவை என்பதால் வரலாற்று சிறப்புடன் கூடியவையும் கூட. ஜூலியஸ் சீசரால் 59 BC ல் தோற்றுவிக்கப்பட்ட பிளாரன்ஸ் நகரமானது (Firenze) இத்தாலியின் Tuscany பகுதியில் அமைந்துள்ள ஊராகும். இது ஒரு சமயம் இத்தாலிய சாம்ராஜ்யத்தின் தலைநகராக விளங்கியதாக வரலாறு கூறுகிறது. இந்த நகரம் “மறுமலர்ச்சி (Renaissance) நகரம்” என அழைக்கப் படுகிறது.
கலை, கலாச்சாரம், வியாபாரம், பொருளாதாரம் எனப் பல துறைகளிலும் மறுமலர்ச்சியை தோற்றுவித்த நகரம் இது. இதன் சிறப்பு மிக்க கட்டிடக் கலையால் உலகிலேயே மிக அழகான நகரம் என Forbes நிறுவனத்தால் அறிவிக்கப் பட்டுள்ளது. இத்தாலியின் Fashion Capital இந்த நகரம்.

இத்தனை சிறப்புக்களை பெற்ற இந்த நகரினை பறவைப் பார்வையில் மட்டுமே காண அனுமதிக்கப்பட்டோம். மதிய உணவிற்கு சற்று முன்னால் ஒரு உயரமான குன்றின் மேலே அமைந்த “மைக்கலேஞ்சலோ பாயிண்ட்” என்னும் ஒரு இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டோம். இது தான் மைக்கலேஞ்சலோ பாயிண்ட்(Michelangelo point) இறங்கி பார்த்து விட்டு வாருங்கள் என்று கூறி விட்டு வழிக்காட்டி எங்களை விட்டு தொலைவில் நின்று கொண்டு பேருந்து ஓட்டுனருடன், இந்தியாவிலிருந்து வந்திருக்கும் மற்ற சுற்றுலாப் பயணிகளிடம் வம்பளந்து கொண்டிருந்தார்.
யார் அந்த மைக்கலேஞ்சலோ என்று சொல்லவில்லை அந்த ஊரின் சிறப்புகளும் எங்களுக்கு சொல்லப் படவில்லை. முன்பே கூகிளைப் பார்த்து அறிந்து வைத்திருந்தேன் என்பதால் என் வரையில் பிரச்சினை இல்லை. கேட்டவர்களுக்கும் விவரம் கூற முடிந்தது.

முதலில் மைக்கலேஞ்சலோ என்பவர் யார் என தெரிந்து கொள்ளலாமா? 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இவர் இத்தாலியின் பிரசித்தி பெற்ற ஓவியர், கவிஞர், சிற்பி மற்றும் கட்டிடக் கலை நிபுணர் ஆவார். புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தை வரைந்த லியானார்டோ டா வின்சி இவருக்கு வயதில் சற்றே மூத்தவர். சம காலத்தவர். [Contemporary] பிளாரன்ஸ் நகரின் கதீட்ரலில் வைப்பதற்காக டேவிட்டின் சிலையை செய்யுமாறு மைக்கலேஞ்சலோ பணிக்கப் பட்டார். இந்த திட்டம் 40 வருடங்கள் ஆகியும் முடியாமல் இருந்த நிலையில் இவரிடம் வழங்கப் பட்டது. இந்த டேவிட் யார் என்பதும் நமக்கு தெரியும், இருந்தாலும் சற்றே நினைவு கூர்வோம்.

பைபிளில் வரும் ஒரு கதையில் டேவிட் மற்றும் கோலியாத் இருவரும் போரிடுகிறார்கள். கோலியாத் பல ஆயுதங்களுடனும் டேவிட் ஐந்து கற்கள் மற்றும் உண்டி வில்லுடனும் கடவுளின் கிருபையால் கோலியாத்தை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெறுகிறார். [சுப்பாத்தா டீச்சரின் வர்ணனையில் ஏழாம் வகுப்பு தமிழ் பாடத்தில் வீரமாமுனிவர் எழுதிய தேம்பாவணியின் ஒரு பகுதியாக இந்தக் கதையை படித்துள்ளேன்] மைக்கலேஞ்சலோ செதுக்கிய சிற்பம் இன்றளவும் பிளாரென்ஸ் கதீட்ரலில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. ஒரு முக்கோணமாக மூலையில் உயரமான இடத்தில் வைக்கும் வகையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையின் படி அமைக்கப் பட்ட சிலை இது.
டேவிட்டின் தலை பெரியதாகவும் கால் பகுதிக்கு வரும் போது குறுகலாகவும் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் தலையை மேலே தூக்கி அண்ணாந்து பார்க்கையில் மொத்த சிலையும் ஒரே அளவில் தான் தெரியும் என்பது இதன் சிறப்பு.
இதில் வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், டேவிட் போருக்கு செல்லும் முன் வீரத்துடன் கை நரம்புகள் புடைக்க நிற்பது போல மைக்கலேஞ்சலோ கற்பனை செய்து வடிவமைத்திருக்கிறார். டேவிட்டை எப்படி வேண்டுமானாலும் கற்பனை செய்து சிலை வடித்திருக்கலாம் ஆனால் இது போல அற்புதமாக வித்தியாசமாக யோசித்தார் என உலகம் இன்றளவும் வியக்கிறது. இந்த சிலையானது பிரதியெடுக்கப் பட்டு குன்றின் மேல் வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் தான் நாங்கள் நின்று கொண்டிருந்தோம். குன்றின் நாற்புறமும் தடுப்பு சுவர் அமைக்கப் பட்டு பாதுகாப்பாக உள்ளது. அதனருகே நின்று கொண்டு கீழே தெரிந்த ஊரினை, நதியினை நாங்கள் கொண்டு சென்ற பைனாகுலர் மூலம் கண்டு களித்தோம். நகரின் கடைசி வரை காண முடிந்தது. அதற்கு முன்னால் சென்ற ஊர்களில் பைனாகுலரை எடுத்து செல்ல சோம்பல் பட்டுப் பல அரிய காட்சிகளை காணும் வாய்ப்பை இழந்து விட்டேன்.
டேவிட் நிர்வாணமாக நிற்பது போன்ற சிலை என்பதால் நம் மக்கள் அந்த சிலையுடன் அதிகம் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. மேலும் அதன் சிறப்பு எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்பதும் சந்தேகமே. சுற்றுலாப் பயணிகளைக் கவர அந்த ஸ்கொயரில் ஒரு Ferrari காரை நிறுத்தி வைத்திருந்தார்கள். International Driving License வைத்திருந்தால் குறிப்பிட்ட கட்டணத்தை கட்டி விட்டு நாம் சிறிது தொலைவு ஒட்டி வரலாம்.
அங்கும் Souvenir கடைகள் இருந்தன. Fridge magnets வாங்கினோம்.

ஒரு மணி நேரத்தை அங்கே கழித்த பிறகு குன்றின் மீதிருந்து கீழிறங்கி ஊரின் மையத்தில் அமைந்திருந்த உணவகத்திற்கு சென்று உணவருந்தினோம். இத்தாலிய உணவு விடுதிகளில் குடிநீருக்கு கூட wine குடிக்கப் பயன்படும் கோப்பை போன்ற கோப்பைகளையே தான் தந்தார்கள். குடிநீரும் கண்ணாடி பாட்டிலில் தான் தந்தார்கள். அதையடுத்து ஊரின் கடைசியில் Arno என்னும் பெயருடைய நதிக்கு அருகில் இறக்கி விடப்பட்டோம். அங்கே சிறு நீர்வீழ்ச்சி இருக்கிறது என்றார் வழிகாட்டி. ஆற்றின் போக்கிலேயே ஒரு அடி உயரமான ஒரு சுவர் போன்ற அமைப்பிலிருந்து நீர் பாய்கிறது அதை நீர்வீழ்ச்சி என கூறினார் வழிகாட்டி :)
அங்கே இறங்கி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். இந்தப் பகுதியில் குறைந்த விலையில் பெண்களுக்கான கைப்பைகளை தெருவில் விற்பனை செய்கிறார்கள். பாரிஸ் நகரைப் போல இத்தாலிய நகரங்களிலும் தெருவோர வியாபாரம் செய்யும் ஆப்பிரிக்க மக்கள் நிறைய தென் பட்டார்கள்.
அது நாள் வரை ஷாப்பிங் செய்யாதவர்கள் கூட கோணி கோணியாய் கைப்பைகள் வாங்கினார்கள். பேருந்தில் பெட்டிகள் வைக்கும் இடம் நிரம்பி, காலுக்கருகில் பக்கவாட்டில் என mofussil பேருந்துகளில் செல்வது போல கோணிகளை அடுக்க…ஓட்டுநர் please stop shopping என மைக்கில் அலற அலற ... எங்கள் பயணம் தொடர்ந்தது. ROME [April 18,2016] ரோமா என இத்தாலிய மொழி உச்சரிப்பில் அழைக்கப்படும் ரோம் நகரானது இந்த ஊரை ஆண்ட முதல் மன்னனது பெயரான Romulus என்னும் பெயரைப் பின்பற்றி அழைக்கப் படுகிறது. [Romulus & Remus என்னும் இரட்டையர்களால் ஆளப்பட்டது] "ஏழு குன்றுகளின் நகரம்" என்னும் சிறப்புப் பெற்ற இந்த நகரம் 28 நூற்றாண்டு கால வரலாற்றினைத் தன்னுள்ளே கொண்டுள்ளது. இத்தாலிய சாம்ராஜ்யத்தின் தலைநகராக விளங்கிய இந்த நகரில் Tiber நதி பாய்கிறது. இந்த நகரம் நிர்வாக வசதிக்காக 15 Municipi க்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது.
https://en.wikipedia.org/wiki/Rome
நான் கண்ட ரோம் நகரைப் பற்றி கூறவே விரும்புகிறேன்.

பிளாரென்ஸ் நகரிலிருந்து ரோமாவிற்கு செல்லும் வழியெங்கும் சாலையோரங்களில் பனி உறைந்து காணப்பட்டது. பனி உருகியதால் ஏற்படும் ஆறுகளும், ஏரிகளும், சிற்றோடைகளும் தென்பட்டன.
வெனிஸ் மற்றும் பிளாரென்ஸ் நகரங்களில் நாங்கள் சென்ற தினங்களில் வெயிலாக இருந்தது. ஆனால் வழியெங்கும் உறைபனி.

ரோமில் மீண்டும் சென்னை நகரைப் போல வெய்யில். லேசாக வியர்த்தது.
இத்தாலிதான் ஐரோப்பாவில் அதிக மழைப் பொழிவுள்ள இடம் என்று கூறப்பட்டாலும் அங்கிருந்த நதிகளில் நீர்ப் பெருக்கு அதிகமாக இருக்கவில்லை .
இத்தாலி நாட்டின் பொருளாதாரம் அதன் automobile, இயந்திரங்கள், மருந்துகள், கப்பல்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் டிசைனர் ஆடைகள் போன்றவற்றின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, சுற்றுலாவை நம்பி இருந்தாலும் இத்தாலிய Wineகள் உலகப் பிரசித்தி பெற்றவை. வழியெங்கும் திராட்சை தோட்டங்கள் தென்பட்டன. ஐரோப்பாவின் மற்ற பகுதிகளை போல இங்கும் புல்வெளிகளே அதிகம் உள்ளன என்றாலும் வித்தியாசமான குடை போன்ற மரங்களும் சிவப்பு வண்ண மலர்களும் அதிகம் காணப்பட்டன.
வழியெங்கும் தனித்தனி farm houseகளில் மரத்தால் பொருட்களை (Lumbering) செய்து கொண்டிருந்தார்கள் மேலும் உலோக தாதுக்களும் ஆங்காங்கே (mineral ore) குவித்து வைக்கப் பட்டிருந்தன. [வெள்ளை நிறத்தில் இருந்தது எந்த தனிமத்தின் தாது என எனக்கு தெரியவில்லை]

இத்தாலி நாடு பழமையும் புதுமையும் கலந்து காணப்படுகின்றது. புற நகர்ப் பகுதிகளில் கட்டிடங்களின் சுவர்களில் ஆங்காங்கே அருமையான அழகான Graffiti கள் தென் பட்டன. ரோம் நகருக்குள் நுழையும் முன்பிருந்தே ஆங்காங்கே குப்பை தொட்டிகள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன. நகருக்குள்ளும் மக்கள் ஆங்காங்கே குப்பைகளை வீசிக் கொண்டு இருந்தார்கள். அடுக்கு மாடிக் கட்டிடங்களில் துணிகளை துவைத்து நம் நாட்டைப் போல உலர்த்தி இருந்தார்கள். [பாரிஸில் உணவகத்துக்கு அருகில் இருந்த அடுக்கு மாடிக் கட்டிட பால்கனியில் யாரோ உலர்த்தியிருந்த புடவை காற்றுக்கு பறந்து கொண்டிருந்தது]
மக்கள் ஜீன்ஸ் அணிந்து நாகரிக தோற்றத்தில் தெருவோரங்களில் குப்பைகளை, சிகரெட் துண்டுகளை வீசிக் கொண்டு இருந்தார்கள்.
நிலையற்ற அரசாங்கங்களும் மாபியாக்களும் இத்தாலியின் இன்றைய நிலைக்கு காரணம் என்று பேசிக் கொண்டார்கள். ரோம் நகரின் உள்ளே சென்று சேர்ந்த போது மாலையாகி விட்டது. அங்கே city tour எனப்படும் பேருந்தில் அமர்ந்தவாறே வேடிக்கை பார்த்த வண்ணம் ஊரை சுற்றி பயணித்து இந்திய விடுதியில் உணவு உண்டு விட்டு ரோம் நகரின் ஒரு பகுதியான Pomezia வில் உள்ள Hotel Antonella வை அடைந்தோம். ரோம் நகரின் முக்கிய சாலைகளில் உள்ள கட்டிடங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்டவையே. அவைகளை நன்கு பராமரித்து அரசாங்க அலுவலகங்களாக, அருங்காட்சியகங்களாகப் பயன்படுத்துகிறார்கள். கட்டிடக் கலையும் சிற்பக் கலையும் மிகச் சிறந்து விளங்கிய நாடு ரோமாபுரி என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு கட்டிடத்திலும் அற்புதமான சிற்பங்கள் செதுக்கப் பட்டுள்ளன. ஆங்காங்கே ரோமன் எண்களாலும் எழுத்துக்களாலும் அவைகளைப் பற்றிய விவரங்கள் குறிக்கப்பட்டுள்ளன.
கோட்டை கொத்தளங்கள் நிறைந்த ஊராகவும் இந்த நகரம் விளங்கியுள்ளது என்பதற்கு சான்றாக ஆங்காங்கே கோட்டை சுவர்களை சற்றே இடித்து சாலைகளை அமைத்துள்ளார்கள். வாகனங்கள் அதனுள்ளே நுழைந்து தான் செல்ல வேண்டும்.

விடுதியில் ஒரே இரவு தான் தங்கினோம் என்பதால் அங்கே குறிப்பிடும் படி எந்த நிகழ்வும் இல்லை.

மறுநாள் காலை உணவுக்குப் பின் நாங்கள் முதலில் சென்றது கத்தோலிக்கர்களின் முக்கிய தலமான வாடிகன் நகரம்.

VATICAN

வாடிகன் ரோம் நகருக்குள் 121 ஏக்கர் பரப்பளவில் அமைந்த ஏறக்குறைய 1000 பேரை மக்கள் தொகையாகக் கொண்ட மிகச் சிறிய நாடு. 1929 ஆம் ஆண்டு இத்தாலியிலிருந்து தனியாகப் பிரிந்தது. இந்த குட்டி நாட்டை ஆள்பவர் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராகக் கருதப்படும் போப் ஆவார். இந்த நாடு மற்ற நாடுகளை போல எல்லா உரிமைகளையும் பெற்றது. நாடு என்று சொல்வதை விட நகரம் என்று அழைக்கலாமா?
இந்த நகரில் தான் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புகழ்பெற்ற திருத்தலமான St Peters Basilica, Sistine Chapel மற்றும் Vatican museums உள்ளன. [கிறிஸ்தவர்கள் இந்த பூமியின் ஒவ்வொரு நிலப்பகுதியையும் பல மாவட்டங்களாகப் பிரித்து அதற்கு ஒரு தலை நகரை நியமித்துள்ளார்கள். ஒவ்வொரு மாவட்டத்தின் தலை நகரிலும் அமைந்த பெரிய தேவாலயத்திற்கு Basilica என்று பெயர். Chapel என்பது சிறிய Private பிரார்த்தனைக் கூடம்]
இந்த தேவாலயத்தின் பின் பகுதியில் உள்ள The Apostolic Palaceல் தான் போப் வசிக்கிறார் என்பதால் அவர் மற்றும் அங்கு பணியாற்றும் அனைவருக்குமான பிரார்த்தனை கூடமாக Sistine Chapel உள்ளது.

Basilica, Chapel மற்றும் Museums, Pope’s residence (The Apostolic Palace) ஆகிய அனைத்தும் இணைந்தே உள்ளன. நகரின் மொத்த பரப்பளவே 121 ஏக்கர் தானே? ரோமையும் வாடிகனையும் பிரிப்பது Tiber நதி தான். பாலத்தைக் கடந்தால் வாடிகன் தான். தூய்மையான குடிநீரை கொண்ட இந்த நதியின் நீரானது பாசி படிந்த நீரின் பச்சை வண்ணத்தில் இருந்தது. பாலத்தின் இரு புறமும் மிகுந்த காலை நயத்துடன் கூடிய சிற்பங்களை செதுக்கி வைத்துள்ளார்கள். வாடிகன் நகரம் மிக சிறியது என்பதால் உள்ளே நுழைந்ததுமே பாசிலிக்காவின் Tomb தெரிந்தது.
வாடிகன் நகரின் பல அலுவலகங்கள் இத்தாலிய பகுதியிலும் அமைந்துள்ளன. பிற நாடுகளின் Embassyகள் போல சிறப்பு சலுகைகள் Political [immunity] இவர்களுக்கும் உண்டு.
Vatican museum வாசலில் இறக்கி விடப்பட்டோம். நாங்கள் சென்ற தினத்தில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் 15 நிமிடங்கள் தெருவில் வரிசையில் காத்திருந்தே உள்ளே செல்ல முடிந்தது.
உள்ளே நுழைந்ததும் நீல நிற விளக்குகளுடன் இருந்த பெரிய காத்திருப்பு அறையில். எங்கள் பயண அமைப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு headphone ஐ கொடுத்து கூடவே அதை இணைக்கும் வயர்லெஸ் பெட்டி ஒன்றையும், அனுமதி சீட்டையும் தந்தார்கள். [பழைய காலத்து கையடக்க transistor போல கழுத்தில் மாட்டிக் கொள்ளும் வண்ணம் இருந்தது]
முக்கியமான செய்தியாக அந்த headphoneஐ யாரும் எக்காரணம் கொண்டும் காதை விட்டு எடுக்க வேண்டாம், கூட்டத்தில் தொலைந்து போக வாய்ப்புக்கள் அதிகம். மேலும் அமைப்பாளர்கள் தொடர்பு கொள்ள அது ஒன்று தான் வழி என தமிழில் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறப்பட்டது.
அருங்காட்சியகம் உள்ளே நுழைந்து, Sistine chapel வழியாக St Peters Basilicaவைப் பார்த்து விட்டு வெளியில் வந்தால் St Peter’s Square வரும். Basilica வாசலில் வரிசையாக வைக்கப் பட்டுள்ள தொட்டிகளில் headphoneஐ போட வேண்டும் என்று கூறப்பட்டது. வாடிகன் அருங்காட்சியகத்தில் எங்களுடன் இத்தாலிய வழிகாட்டியும் இணைந்து கொண்டார். இத்தாலிய சிற்பங்களில் நாம் காண்பது போல பெரிய மண்டை,சுருண்ட கூந்தல், கூர்மையான நாசி என ஆறடி உயரத்தில் போர் வீரனைப் போன்ற தோற்றத்தில் ஆங்கிலத்தில் சுவாரசியமாக சிரிக்க சிரிக்க பேசி விளக்கினார். சரி. அருங்காட்சியகத்துக்குள்ளே நுழைவோம். இந்த பகுதியில் வரிசைகள் எதுவும் இல்லை. குறுகலான பகுதி வழியாக உள்ளே செல்ல வேண்டும். இந்த complex இன் நிர்மாணப் பணிகள் போப்பாண்டவரால் மைக்கலேஞ்சலோவிடம் ஒப்படைக்கப் பட்டது. போப் ஜூலியஸ் II என்பவரால் பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட வாடிகன் அருங்காட்சியகங்களில் உள்ள 70 ஆயிரம் கலைப்பொருட்களில் 20 ஆயிரம் கலைப்பொருட்கள் மட்டுமே காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
மறுமலர்ச்சி கால (Renaissance) ஓவியங்கள், ரோமானிய சிற்பங்கள், Frescoes ஆகியவைகள் இங்கே உள்ளன.[Frescoes: a piece of thick textile fabric with pictures or designs formed by weaving colored weft threads or by embroidering on canvas, used as a wall hanging or soft furnishing]
உலகிலேயே அதிக மக்களால் கண்டு களிக்கப்படும் அருங்காட்சியகம் இது தான். எங்கள் வழிகாட்டி அது நாள் வரை கூறி வந்தது போல கூறியது போல அற்புதமான அருங்காட்சியகம் இது. கூரையிலும் பக்கவாட்டு சுவர்களிலும் மைக்கலேஞ்சலோ மற்றும் ரபேல் போன்றோரின் ஓவியங்கள் காணப்படுகின்றன.
மைக்கலேஞ்சலோவை நமக்கு ஏற்கனவே தெரியும் இல்லையா? ஓவியர், சிற்பி, கவிஞர், கட்டிடக் கலைஞர்.
வழியெங்கும் இவரது ஓவியங்களும் சிற்பங்களும் தான். New Testamentலிருந்து கதைகளையும் சம்பவங்களையும் தேர்ந்தெடுத்து ஓவியங்களாக பக்கவாட்டு சுவர்களிலும் கூரையிலும் வரைந்துள்ளார். அனைத்தும் தத்ரூபமாக உள்ளன. வராண்டா போன்ற பகுதியின் இறுதி ஓவியமாக Last Supper ஐ வரைந்துள்ளார். [இதன் அசல் ஓவியம் லியானார்டோ டா வின்சி யால் வரையப் பட்டது] இந்த ஓவியம் வராண்டாவில் உட்புறமிருந்து பார்க்கையில் அவர்கள் நம்மை நேருக்கு நேர் பார்த்தபடி உண்பது போல உள்ளது. வராண்டாவில் கதவை தாண்டி நின்று பார்த்தால் அந்தக் கோணத்தில் நம்மைப் பார்ப்பது போல வரைய பட்டுள்ளது. [அற்புதமான படைப்பு]
https://m.museivaticani.va/content/museivaticani-mobile/en/collezioni/musei/stanze-di-raffaello/tour-virtuale.html

தங்கத்தை உபயோகித்து highlight செய்திருப்பது தான் இவரது ஓவியங்களின் சிறப்பு அம்சம். இந்தப் பகுதியைக் கடந்தால் பெரிய பெரிய கூடங்களுடன் (Halls) எங்கெங்கும் உயிரோட்டமான ஓவியங்களே காட்சிப் படுத்தப் பட்டுள்ளன.
அருங்காட்சியகத்தை கண்டு களித்து விட்டு வெளியில் வந்தால் அங்கே திறந்த வெளி.

இந்த பகுதியில் Sistine Chapel உள்ளே செல்வதற்கு முன்பாக அதன் சிறப்புக்களை பற்றி இத்தாலிய வழிகாட்டி விளக்கி கூறினார். அது பிரார்த்தனைக்கு கூடம் என்பதால் உள்ளே பேசி விளக்க முடியாது. திறந்த வெளியில் நிற்க வைத்து அங்கே வைக்கப் பட்டிருந்த ஓவியங்களின் பிரதிகள் அடங்கிய போர்டுகளை காண்பித்து விளக்கினார்.

எங்களுடன் வந்திருந்த ஒரு வயதான தம்பதிகளை பார்த்து உங்களுக்கு திருமணமாகி எத்தனை வருடங்கள் ஆகின்றன எனக் கேட்டார். கணவர் 40 எனக் கூற, நீங்கள் உங்கள் நாட்டு மதர் தெரசாவை விட சிறந்தவர் அடுத்த சிலை உங்களுக்கு தான் என்றார். [எங்களுக்கு அச்சமயம் 32. நீங்கள் இன்னும் எட்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்று என் கணவரைப் பார்த்து கிண்டல் செய்தார்]
St Peter 's Square ல் தான் எல்லா Saint களின் சிலைகளும் உள்ளன எனக் கூறிய போது விளையாட்டாக மேற்கண்ட சம்பவம் நடந்தது. The Apostolic Palace என்பது போப்பாண்டவர் வசிக்கும் பகுதி. கத்தோலிக்க மதம் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் வாடிகன் தேசத்தின் நிர்வாகப் பொறுப்பு போப்பாண்டவரை சார்ந்தது என்பதால் அவரும் அவரது உதவியாளர்களும் தங்கும் பகுதியாக இந்த அரண்மனை உள்ளது. அவர்களின் பிரார்த்தனைக்கான இடம் தான் இந்த Sistine Chapel. என முன்பே குறிப்பிட்டேன். [சிறிய அளவிலான தேவாலயம்] இந்த சேப்பல் 1473 - 1481 ஆம் ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப் பட்டது. இங்கேயும் கூரையிலும் பக்கவாட்டு சுவர்களிலும் பின் சுவரிலும் Frescoes மற்றும் ஈரமான சுண்ணாம்பு சுவற்றில் வரையப்படும் Mural கள் உள்ளன.

பல Frescoes பிரபல ஓவியர் Rafael என்பவராலும் மற்றவைகள் மைக்கலேஞ்சலோவாலும் வரையப்பட்டுள்ளன. மொத்த கூடமும் 3:2 என பிரிக்கப் பட்டு 6 ஜன்னல்கள் பொருத்தப்பட்டு அவற்றை சுற்றிலும் ஓவியங்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளன. பைபிளின் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகியவற்றின் (Old & New Testament) அடிப்படை சம்பவங்களை மையமாகக் கொண்டு ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. பிரார்த்தனைக் கூடம் அளவில் சிறியது. அங்கே ஒரு மேடை. சிலை எதுவும் இல்லை. அந்த பகுதி சுவற்றில் “Last Judgement” என்னும் புகழ்பெற்ற ஓவியம் வரையப் பட்டுள்ளது. அந்த ஓவியத்தில் ஏசுவால் ரட்சிக்கப் பட்ட புண்ணிய ஆத்மாக்கள் மேலே எழும்பி சொர்க்கத்திற்கு சென்று ஏற்கனவே அங்குள்ளவர்களோடு சேர்வது போலவும், பாவிகள் மேலிருந்து கீழ் நோக்கி மீண்டும் பூமியில் வந்து விழுவது போலவும் வரைய பட்டுள்ளது.
https://en.wikipedia.org/wiki/The_Last_Judgment_(Michelangelo)

St Peter 's Basilica மற்றும் St Peter 's Square ஆகியவற்றின் சிறப்பு அம்சங்கள் என்ன என அங்கேயே கூறினார். நாம் அந்த இடங்களைக் காணும் போது அது பற்றி தெரிந்து கொள்ளலாமா?

சரி சேப்பலுக்குள் செல்வோம் வாருங்கள்.

சிறிய கூடம். அறையிருட்டு. ஆனால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டமோ கூட்டம். இந்த பகுதியில் அமைதியாக இருக்க வேண்டும் என்பதால் வழிகாட்டி கூறியவைகள் எங்கெங்கே இருக்கின்றன என வேடிக்கை பார்த்து விட்டு திரும்பும் சமயம் எனக்கு மிக அருகில் சுவரில் பளபளவென எதுவோ மின்னுவது போல தோன்றியது. கூர்ந்து கவனித்ததில் அது சுவரில் curtain போல தொங்க விடப்பட்டுள்ள purple வண்ண பின்னணியில் அமைய பெற்ற மிகப் பெரிய fresco என்பது புரிந்தது. பளபளப்பு தங்கப் பூச்சின் காரணமாக ஏற்பட்டுள்ளது. மைக்கலேஞ்சலோ தங்கத்தை உருக்கி ஓவியங்களில் உபயோகப் படுத்தினார் என்று முன்பே குறிப்பிட்டேன் இல்லையா?
மிகமிகமிக அருகில் அந்த வேலைப்பாட்டைக் காண நேர்ந்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. தொட்டுப் பார்த்து வியந்து விட்டு வெளியில் வந்தேன்.
Last Judgement ஓவியம் ஒரு அற்புதப் படைப்பு. அரசியல் காரணங்களால் ஊரை விட்டு சென்ற மைக்கலேஞ்சலோ மீண்டும் 1935-1941 முடிய இந்த ஓவியத்தை வரைந்து முடித்தாராம்.

ஒவ்வொரு ஓவியமும் உயிரோட்டமாக இருந்தது. வெளியில் செல்லவே மனம் வரவில்லை.

கூரையிலும் ஓவியங்கள் தான். அரை வட்ட வடிவத்தை கூரையிலிருந்து கவிழ்த்து வைத்தது போன்ற கட்டிட அமைப்பில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன (இத்தாலிய கட்டிடக் கலையின் ஒரு முக்கிய அம்சமான இந்த அரை வட்ட கூரை வாடிகன் அருங்காட்சியகத்திலும் பயன் படுத்தப்பட்டுள்ளது)

இந்த சேப்பலில் தான் அடுத்த போப்பாண்டவரை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு நடைபெறும். இதன் கூரையில் ஒரு புகை போக்கி அமைக்கப் படும். புதிய போப்பாண்டவர் தேர்ந்தெடுக்கப் பட்டு விட்டார் என்பதை அறிவிக்க வோட்டு போட்ட காகிதங்களை (Ballot papers) ஐ எரிப்பார்கள். இந்த காகிதங்களை எரித்தால் வெள்ளை நிறப் புகை வரும். தேர்ந்தெடுப்பு நடைபெறவில்லை யாருக்கும் majority ஓட்டு கிடைக்கவில்லை (2/3) என்றால் வோட்டு போட்ட காகிதங்களுடன் பச்சை புல் மற்றும் சில ரசாயனங்களை போட்டு எரித்து கருப்பு புகையை வெளியிடுவார்கள். உலகமே புகை எந்த நிறத்தில் வரும் என எதிர்பார்ப்புடன் காத்திருக்கும்.
என் பள்ளி நாட்களில் ஒரு முறை வானொலியில் என்ன நிற புகை வெளியிடப்பட்டது எனக் கூறுவார்கள் என்பது பற்றிய செய்திக்காக காத்திருந்தது நினைவில் இருக்கிறது.

போப்பாண்டவர் வசிக்கும் பகுதிக்கும், அவருக்கும் பாதுகாவல் அளிப்பது Swiss Army Guards எனப்படும் ஸ்விட்சர்லாந்து நாட்டு சிறப்புக் காவலர்கள் தான். [இவர்களை பற்றி ஸ்விட்சர்லாந்து பயணப் பகுதியில் கூறியுள்ளேன்]
அடுத்தது நாங்கள் கண்டது St Peter’s Basilica. மறுமலர்ச்சி கட்டிடக்கலையின் அடிப்படையில் அமைந்த இந்த தேவாலயம் (Renaissance architecture: Symmetry, Proportion, Geometry) 1626 ஆண்டு கட்டி முடிக்கப் பட்டது. இது படுக்க வைக்கப்பட்ட சிலுவை போன்ற அமைப்பில் வடிவமைக்கப் பட்டுள்ளது. (cruciform)
ஏசுநாதரின் சீடரான செயின்ட் பீட்டர் அவர்களை சிறப்பிக்கும் வண்ணம் அமையப் பெற்றது இந்த தேவாலயம். இங்கே அவரது சமாதியும் உள்ளது. இந்த சமாதியானது தேவாலயத்தின் முக்கிய கோபுரத்தின்(Tomb) நேர் கீழே உள்ளதாக அறிகிறோம். மைக்கலேஞ்சலோவால் வடிவமைக்கப் பட்ட கோபுரம் இது. அவரது காலத்தில் வரையப் பட்ட blueprint அவர் இறந்த பிறகு கண்டுபிடிக்கப் பட்டு அதன் அடிப்படையில் கட்டி முடிக்கப் பட்டதாக வரலாறு கூறுகிறது.
தேவாலயத்தின் முக்கிய கூடத்தின் ஒரு பகுதி வழிபாடு நடத்தும் இடமாக உள்ளது. நாங்கள் சென்ற போது ஒரு பாதிரியார் சொற்பொழிவு (Sermon) செய்து கொண்டிருந்தார். மற்றொரு பகுதியில் இதற்கு முன்பு போப்பாக இருந்தவர்களின் சமாதிகள் உள்ளன.

தேவாலயத்தில் நடுநாயகமாக புனித பீட்டர் அவர்கள் உபயோகித்த நாற்காலி, மைக்கலேஞ்சலோவின் புகழ்பெற்ற Madonna சிற்பம் (ஏசுநாதரை அவரது தாயார் மடியில் கிடத்திக் கொண்டிருப்பது போன்ற சிற்பம்) மற்றும் பல சிற்பங்களையும் கண்டோம். புனித பீட்டர் அவர்கள் உபயோகித்த நாற்காலி உபயோகிக்க முடியாத நிலையில் இருந்தாலும் பாப் அலெக்சாண்டர் III என்பவர் வெண்கல பீடம் ஒன்றை அமைத்து அதன் நான்கு புறமும் நான்கு சிலைகள் தங்கி நிற்பது போன்ற வடிவில் ஒரு சிம்மாசனத்தை வடிவமைத்து அதில் நாற்காலியை பொருத்தி இருக்கிறார்.
இந்த தேவாலயம் கத்தோலிக்கர்களின் புனிதத் தலமாகவும் பொது மக்கள் கூடி வழிபாடு செய்து கொண்டாடும் இடமாகவும் புகழ் பெற்றது. [கத்தோலிக்கர்களின் மூன்று முக்கிய தேவாலயங்கள் St Paul’s Cathedral – London, Cathedral Notre dame – Paris & St. Peter’s Basilica – Vatican]
20 -80 ஆயிரம் மக்கள் கூடும் வண்ணம் அமைய பெற்ற இந்த தேவாலயத்தின் முன் பகுதி தான் பிரசித்தி பெற்ற St. Peter's Square. போப்பாண்டவர் கிறிஸ்துமஸ், புது வருடம் போன்ற நாட்களில் இங்கு வந்து மக்களுக்கு நற்செய்திகளும் வாழ்த்துக்களும் கூறுவார். (தொலைக்காட்சியில் கண்டிருப்பீர்கள்) அனைவரும் அமர்ந்து போப்பாண்டவரின் செய்திகளைக் கேட்கும் வண்ணம் நாற்காலிகள் உள்ளன.
https://en.wikipedia.org/wiki/St._Peter%27s_Basilica

இந்த பகுதியில் இரண்டு நீரூற்றுக்கள் மற்றும் 40 மீட்டர் உயரமுள்ள obeliskம் உள்ளன. (ஒரு பீடத்தில் செவ்வக வடிவ தூண் அதன் மேற்புறத்தில் பிரமிட் வடிவம் என இருக்கும் Obelisk ஐ முக்கியமான நிகழ்வுகள் நடைபெற்ற இடத்தில் நினைவு சின்னமாக நட்டு வைப்பார்கள். பாரிஸ் நகரிலும் இது போல ஒரு Obelisk பதினாறாம் லூயி மன்னனும் அவரது மனைவி மேரி அன்டாய்னட்டும் கில்லட்டினுக்கு பலியான இடத்தில் நடப்பட்டுள்ளது என பாரிஸ் பயணப் பகுதியில் குறிப்பிட்டது நினைவிருக்கலாம்)

எகிப்திலிருந்து ரோமானிய பேரரசன் Caligula எடுத்து வந்த இந்த தூணானது புனித பீட்டர் அவர்கள் சிலுவையில் அறையப் பட்ட இடத்திற்கருகில் நிறுவப்பட்டு, தற்போது வாடிகன் தேவாலயத்தில் உள்ளது.

இந்தப் பகுதியில் இருந்து பார்த்தால் Tiber நதி தெரியும். (என் கண்ணுக்கு தெரியவில்லை, நிறையக் கட்டிடங்கள் இடையில் உள்ளன.)
இந்த தேவாலயத்தின் வெளிப்பகுதியில் இரண்டு பக்கமும் வால் போல தூண்களுடன் கூடிய மண்டபம் அமைந்துள்ளது. அந்த மண்டபத்தின் மேலே வெளிப்பகுதியில் புனித பீட்டர் மற்றும் ஏசுநாதரின் மற்ற சீடர்களின் சிலைகள் நிறுவப் பட்டுள்ளன.

இந்த பகுதியில் தான் நம் அன்னை தெரசாவின் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. Sainthood அடைந்தவர்களது சிலைகள் இந்த பகுதியில் தான் நிறுவப்படுகின்றன. (சமீபத்தில் ஒரு சாமானிய மனிதர் Saint ஆக போப்பாண்டவரால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் என்று செய்தியில் கண்டேன்.) தேவாலயத்தின் வாயில் மிக மிக உயரமான கதவுடன் காணப்படுகிறது. இந்த இடத்தில் வழிகாட்டி கூறியபடி earphoneஐ கழற்றி அதற்கான தொட்டியில் போட்டு விட்டு, ஆயிரக்கணக்கான நாற்காலிகள் இருந்தாலும் தரையில் அமர்ந்து கொண்டோம்.
இத்தாலியில் நாங்கள் சென்ற இடங்களிலெல்லாம் நம் டிசம்பர் மாத வெயில் போல காய்ந்தது.
வியர்க்கவில்லை என்றாலும் வெயில் காரணமாக சற்றே அசதியாகவும் இருந்தது. தரையில் அமர்ந்த வண்ணம் வேடிக்கை பார்த்துக் கொண்டும் ஓய்வெடுத்துக் கொண்டும் இருந்தோம். ஒவ்வொருவராக வெளியில் வந்து சேர ஏறக்குறைய 30 நிமிடங்கள் ஆயின. வழிகாட்டி கிளம்பலாம் என்று கூறவேயில்லை. மேலும் 30 நிமிடங்கள் கழிந்தன. ஏன் தாமதம் என்று கேட்டபோது எங்களுடன் வந்த அன்பர் ஒருவர் இன்னும் வந்து சேரவில்லை என்கிறார்கள்.
வழிகாட்டி earphoneஐ காதை விட்டு எடுக்காதீர்கள் நீங்கள் தொலைந்து போனாலும் அதன் மூலம் கண்டு பிடிக்கலாம் என்று பல முறை கூறியும் அந்த அன்பர் கண்டு கொள்ளாமல் அருங்காட்சியகத்திற்குள் நுழைந்ததுமே கண்ணில் பட்ட முதல் தொட்டியிலேயே போட்டு விட்டு தன்னிச்சையாக சுற்றி பார்த்து கொண்டிருந்து விட்டு எல்லாருக்கும் முன்பாக வெளியில் வந்து விட்டார்.
எங்களைக் காணவில்லை என்று தெருக்களில் நடந்து எங்கள் பேருந்தை தேடி, அமைப்பாளர்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்து, தன்னுடன் வந்த சகோதரரை தேடி ...என மொத்தத்தில் வாடிகனை சுற்றிக் கொண்டு இருந்திருக்கிறார். (இவையெல்லாம் பின்னர் அவர் கூறியது)
எவ்வளவு நேரம் காத்திருப்பது என்று பேருந்தில் ஏறி வாடிகன் தேவாலயத்தை இரண்டு முறை சுற்றி முடித்த சமயத்தில் அந்த அன்பர் தான் எங்கு நிற்கிறேன் என்று தொலைபேசினார். அவரை கண்டு பிடிக்க மீண்டும் ஒரு ஒரு முறை பாசிலிகாவை சுற்றி வந்து, கண்டு பிடித்து அழைத்து சென்றதில் ரோம் நகரை சுற்றி பார்க்க ஒதுக்கிய நேரம் முடிந்து விட்டது.

ரோம் நகரம் புராதனமான நகரம். மாபெரும் வீரர்களும் கலைஞர்களும் வாழ்ந்த அங்கே செல்லப் போகிறோம் அவர்கள் வாழ்ந்த இடங்களை நேரில் காண போகிறோம் அவர்கள் நிறுவிய நினைவு சின்னங்களை கண்டு களிக்க போகிறோம் என்ற என் பேராவலில் கூடை கூடையாக மண் விழுந்தது. அழுகையே வந்து விட்டது எனக்கு. (எல்லாரும் அந்த அன்பரை கோவித்துக் கொண்டார்கள். தவறிய வாய்ப்பு தவறியது தானே?) வெளியூர்களுக்கு / வெளி நாடுகளுக்கு செல்கையில் கவனமாக வழிகாட்டி சொல்வதை கேட்டு பொறுப்புடன் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் உடன் செல்பவர்களுக்கும் தொல்லை, இழப்பு.
என்னை போன்ற மத்திய தர குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு ஒரு முறை வெளி நாட்டுப் பயணம் வாய்ப்பதே அரிது. இனி என்று நான் ரோம் நகரம் செல்வேன்? :( Temples of Saturn & Concord, Circus Maximus, The Arch of Augustus மற்றும் பல நினைவுச் சின்னங்களை என்று பார்ப்பேன்?? இன்றளவும் வருத்தமே.
வாடிகன் நகரம் சிறிய நகரம். போப்பாண்டவரை சேர்ந்தவர்கள் மட்டுமே அங்கு வசிக்கிறார்கள் என நாம் கேள்வி பட்டத்தை வைத்துக் கொண்டு என் கணவர் “இந்த ஊரில் பாதிரியார்களும் கன்னியா ஸ்திரீகளும் தான் தெருக்களில் நடமாடிக் கொண்டிருப்பார்கள் என நினைத்திருந்தேன். ஒருவரைக் கூட காணவில்லையே” என வியந்தார்.

வாடிகன் நகரில் அனைத்து தரப்பு மக்களும் வசிக்கிறார்கள். இங்கு வசிப்பவர்களுக்கு கல்வி உட்பட அனைத்தும் இலவசமாக அழைக்கப் படுகிறது என வழிகாட்டி கூறினார். இந்தியா என்றாலே யானையும் பாம்பாட்டிகளும் என மேலை நாட்டவர்கள் திரைப்படங்களை பார்த்து நினைப்பது போலத் தான் இதுவும்.
மீண்டும் ரோம் நகரத்துக்குள் நுழைந்தோம்.

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...