Tuesday, 27 September 2016

தீபாவளி போனஸ் வந்தாச்சா??

சில தினங்களுக்கு முன்பு எங்கள் இல்லத்திற்கு வந்திருந்த என் சகோதரரின் மகள், அத்தே.. எனக்கு சாந்து பொட்டு வேணும் வெச்சிருக்கீங்களா என்றார். பல நிறங்களில் சிறு குப்பிகளில் 12,16, 18 நிறங்களில் கிடைக்கும் வகை அவர் கேட்ட பொருள். அது தொடர்பான எங்கள் பேச்சுக்கள் என்னையும் ஒரு சுழலுக்குள் இழுத்துச் சென்று ஒரு பேன்சி பொருட்கள் விற்கும் கடைக்கு முன் கொண்டு நிறுத்தியது.

5-10 வயதிற்குட்பட்ட தீபாவளிப் பண்டிகை நாட்கள் . தீபாவளிக்கு முந்தைய அமாவாசை அன்று வீடு வீடாக மூட்டையில் துணிகளை எடுத்து வந்து விற்பவரிடம் , எனக்கும் என் இளைய சகோதரிகளுக்கும் புதுத் துணிகள் வாங்கி, எங்கள் தாயார் தானே தைத்து வைப்பார். அதற்கு மேட்சி மேட்சியாக வளையல் , தோடு, ரிப்பன், சாந்துப் பொட்டு எல்லாம் வாங்க வேண்டாமா? அப்படி அணியாமல் இருந்தால் எங்கள் தோழிகள் முன்னிலையில் தலைகுனிவு ஆகிடாதா??. அம்மாவை (நச்சரித்து) அழைத்துக் கொண்டு சத்தியமங்கலத்தில் உள்ள மிகச் சில பேன்சி ஸ்டோர்களில் ஏறி இறங்கி எப்படியும் எங்களுக்குத் தேவையான அலங்காரப் பொருட்களை வாங்கி விடுவோம்.
பண்டிகை தினத்திற்குப் பல நாட்கள் முன்பே பலகாரங்கள் செய்யும் முயற்சியில் பெண்கள் ஈடுபட்டிருக்க, ஆண்கள் பட்டாசு வாங்குதல், காய வைத்துப் பாதுகாத்தல்(மழை , ஈரம் மட்டுமில்லைங்க..இந்த வரிசையில் நாங்களும் உண்டு). கோவாப்பரேட்டிவ் சொசைட்டியில் அப்பா 500 ரூபாய்க்கு பட்டாசு வாங்குவார். தாத்தா, மாமாக்கள் தனி.. 
தீபாவளியன்று அதிகாலை 2-3 மணியளவில் மாமாக்கள் ஆட்டம் பாம் எனப்படும் (சத்தம் அதிகம் வரக்கூடியது) வெடிச் சத்தத்தைக் கேட்டு எழுந்து, எண்ணை குளியல் ,பட்டாசு வெடித்தல் (மத்தாப்பூ தான், பட்டாசுன்னு கொஞ்சம் கௌரவமா சொல்லியிருக்கேன்). ஒவ்வொரு தீபாவளியன்றும் தவறாமல் தாத்தாவின் சில நண்பர்கள் வந்து செல்வார்கள். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான் இரவு வரை. வேம்பு மாமாவும் அவர் பெண் ஜானகியும் காலை 6 மணிக்கே இட்டலி மற்றும் பல பலகாரங்களை சாப்பிட்டு விட்டு செல்வார்கள். (நாங்கள் 4 மணிக்கே பல காரம் இனிப்பு வகைகளை உண்டது தனிக்கதை.. கண்ணு பட்டுடும்ல முழுக்கதையும் சொல்ல மாட்டேன்பா)

அடுத்த கட்டத்தில், புளியம்பட்டி என்னும் சிற்றூரில் , வரிசையாக அமைந்த வீடுகள் , முன்னும் பின்னுமாய் பல இளம் பெண்கள். எங்கள் வீட்டில் 3, வலது இடது வீடுகளில் தலா 1 , அதற்கடுத்த வீட்டில் 3 என ... தீபாவளியன்று எப்படியும் 2,3 பெண்கள் வெளியே..மற்றவர்கள் உள்ளே..ஏறக்குறைய சமவயதினர்.
வெளியே இருக்கும் பெண்கள் ஓ..வென்று அழுது ஓய்ந்து ஒரு வீட்டில் ஒன்று கூடி விடுவார்கள் . தீபாவளி தினத்தன்று காலையில் பட்டாசு வெடித்து முடித்த கையோடு உள்ளே உள்ள பெண்கள் இட்டலிக்கு சட்னி, வடைக்கு மாவு, சாம்பாருக்கு மசால் என்று அம்மிக்கல், ஆட்டுகல் என மாற்றி மாற்றி ஆட்டியும், பட்டாசுக் குப்பைகளை பெருக்கியும் வீடு துடைத்தும் என அம்மாக்களுக்கு உதவிக் கொண்டிருக்க... (துணி துவைக்கும் படலம் அன்று இல்லை, ராக்கெட் வந்து விழுந்து துணி எரிந்து விபத்து நேரும், அந்த நாட்களில் இந்த வகை விபத்தெல்லாம்  ஜகஜமப்பா) வெளியே உள்ள பெண்களுக்கு பாவம் என்று இட்டலி பலகாரங்கள் என எல்லா அம்மாக்களும் உபசரிக்க, நன்றாக உண்டு விட்டு , பட்டாசு வெடித்துக் கொண்டு இருப்பார்கள். (உள்ளே பெண்கள் வெளியே பெண்களைப் பார்த்து பொரும.. அவர்கள் இவர்களைப் பார்த்துப் பொரும..)
தீபாவளி அதிகாலையில் (6 மணிக்கே)  நகரத்தார் வகுப்பைச் சேர்ந்த தோழி சீதா வீட்டிற்குப் படையெடுத்து , அவளது தாயார் சூடாக செய்து தரும் இட்டலி, வெள்ளைப் பணியாரம், கந்தரப்பம், அதிரசம் , சீப்பு சீடை, உக்காரை என ஒரு கட்டு கட்டுவோம். 

திருமணமாகி சென்னை வந்த சில வருடங்கள் (நினைவில் கொள்க.. அப்போது எனக்கு வயது 17) தீபாவளி காலையில் நண்பர்கள் வீடுகளுக்கெல்லாம் விஜயம், தொலைகாட்சி நிகழ்ச்சிகள் என முடிந்து வீடு வரும் போது மதியமாகி இருக்கும். அதற்கு பிறகு என்னத்த.... சமைக்கிறது என்று சாம்பார், ஒரு காய், ஒரு பாயசம் என முடியும் தீபாவளி விருந்து.
மகள் பிறந்த பிறகும் ஓரிரண்டு வருடங்கள் இதே கதை. பிறகு சுதாரித்துக் கொண்டு, காலை 10 மணியளவில் பூஜை முடித்து வடை பாயசம் என விருந்து சாப்பாடு. பிறகு தான் வீட்டை விட வேண்டும் என்று மாற்றிக் கொண்டோம்.
பிள்ளைகளின் நண்பர்கள் வீட்டிலிருந்து அதிகாலை 4 மணிக்கு எழுந்து செய்த வடை, பாயசம் ஆவி பறக்க 5.30 க்கு எங்கள் இல்லம் வந்து சேரும். 10 மணியளவில் நண்பர்கள் உறவினர்கள் இல்லங்களுக்கு சென்று வருவோம். [ ரத்னாம்மா வீட்டில் பாயசம் கண்டிப்பாக சாப்பிடுவோம். அவரது மகள் கேதார கௌரி விரதம் இருப்பார் அதிரசம் செய்வார். சில தினங்கள் முன்பு தான், அவர் ஒரு முறை கூட எங்களுக்கு அதிரசம்  தரவில்லை என்று தோன்றியது. ஏன் என்று சில தினங்கள் முன்பு அவரை தொலைபேசியில் அழைத்து சண்டையிட்டேன். அக்கா நாங்கள் மதியம் தான் விரதம் முடிப்போம் நீங்கள் காலை நேரம் இங்கே வருவீர்கள் , இந்த முறை தவறாமல் தரேன் என்றார்.]
சாலிக்கிராமம் அடுக்குமாடிக் குடியிருப்பில் பல குழந்தைகள் இருந்ததால் கொண்டாட்டம் தான்.[என் குழந்தைகளுக்கு எங்கும் எப்போதும் கொண்டாட்டம் தான்] நவராத்திரி நாட்களில் போனஸ் வரும் பிள்ளைகளுக்கும் அப்போது தான் விடுமுறை என்பதால் , தீபாவளிக்கு அந்த நாட்களிலேயே புதுத் துணிகள் வாங்கி விடுவோம்.  எங்கள் பிள்ளைகள் மிகவும் எதிர்பார்த்து செய்த ஒரு நிகழ்வு அது. 

கடந்த தீபாவளி அமெரிக்காவின் சான் ஹொசே நகரில். பார்க் லேன் என்னும் தெருவில் வாழும் இந்தியக் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ,சாப்பாடு, மத்தாப்பூ , குளிரோ குளிர் .
பேரன் படிக்கும் பள்ளியில் அனைவரும் இந்திய உடை அணிந்து வர, ஒரு ஆசிரியை அனைவருக்கும் தீபாவளிப் பண்டிகை பற்றி விளக்க அங்கும் கோலாகலம் தான்
தீபாவளி முடிந்த பின்னரும் பல வீடுகளில் விருந்துகள், கொண்டாட்டங்கள். [ டேய் .......பாட்டி வந்திருக்காங்க காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கு, ஏங்க ..அம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கலாம் இங்க வாங்க, பாப்பா விழுந்து கும்பிடு... ஆசீர்வாதத்தை அள்ளி வழங்கிட்டோம்ல]

வாட்ஸ் ஆப், ஸ்கைப்பில் வாழ்த்துச் சொல்லி, கூரியரில் பலகாரம் செய்து(வாங்கி) அனுப்பி,ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் புத்தாடையில் ஒன்றை அணிந்து, தொலைக் காட்சியைப் பார்த்தால்....ஸ்ஸ்ஸஸஸப்பாடா... தீபாவளி முடிந்தது. அடுத்தது ஆங்கிலப் புத்தாண்டு தினம் தான். 

தீபாவளிக்கென்றே புதுத் துணி வாங்கி, பண்டிகை கொண்டாடிய கடைசித் தலைமுறை நாம் தானோ??

Friday, 16 September 2016

எங்கெங்கு காணினும் சக்தியடா....

எனக்கு மகள் முறையிலான ஒரு இளம் பெண் கடந்த மாதத்தில் யூ டியூபில்( you tube) பல வருடங்களுக்கு முன்பு , ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வெற்றிநடை போட்ட ரமணி Vs ரமணி நாடகத்தைப் பார்க்கும்படி பரிந்துரைத்தார். (இரண்டாம் பாகம் என்னை மிகக் கவர்ந்தது :D, stress buster)

திரு ராம்ஜி மற்றும் திருமதி தேவதர்ஷினி முறையே கணவன் மனைவி பாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

பார்ட் 2இல் ஒரு எபிசோடில்,
கணவர் : ரமணீ.. உனக்கு தெலுங்கு தெரியும்னு சொல்லவே இல்லையே.. மனைவி: நீங்க கேக்கவே இல்லையே, கல்யாணம் ஆன புதுசுல உங்களுக்குப் புடிச்சதெல்லாம் மட்டும் எனக்குத் தெரியுமான்னு கேட்டீங்க ஆனா எனக்கு என்ன தெரியும்னு நீங்க கேக்கவே இல்லையே

இது பல வீடுகளிலும் நடக்கும் நிகழ்வு. மிக மிக இயல்பான வசனங்களின் மூலம் சொல்லப் பட்ட முக்கிய செய்தி.

கடந்த வாரத்தில் ஒரு நாள் என் தோழி ஒருவரை சந்தித்த போது , பேச்சுக் போக்கில் நான் ஒரு பிரபல பள்ளியில் வேலை பார்த்தேன் என்று சொன்னபோது அவர் தன் மகன்களை அந்தப் பள்ளியில் சேர்க்கச் சென்ற போது , அப்ளிகேஷனைப் படித்த நிறுவனர் ஆசிரியப் பணியில் சேர அழைத்ததாகக் கூறினார். இவர் முறையான ஆசிரியப் பணிக்கான பயிற்சி பெற்றவர் என்பது எனக்கு செய்தி.(ஓ!!) பல வெளிநாடுகளில் வசித்தவர். மேலும் என்னென்ன திறமைகளுக்கு சொந்தக்காரர் என்று தெரியவில்லை.

மற்றொரு இளம் பெண்மணி நான் PHP யில் பயிற்சி பெற்று, அங்கேயே வேலையும் செய்து வருகிறேன் தற்சமயம் என்றார். இவர் படித்த துறையே வேறு. [php ன்னா என்ன?] சாலிக்கிராமம் பகுதியில் வீட்டு வேலைகளில் உதவும் மூத்த பெண்மணி ஒருவர் என்னுடைய நடுவயதிற்கான பிரச்சினைக்கு சுலபமான தீர்வு கூறினார்.

படித்து விட்டு வீட்டில் இருக்கும் பெண்மணிகள் மற்றும் சீனியர் சிடிசன்களுக்கு கம்பியூட்டர் , இண்டர்நெட் , ஆங்கிலம் எனப் பயிற்சி அளித்துள்ளேன். (ஆண்களுக்கும்) இந்த அம்மாக்கள் அந்த நாளிலேயே பல கலைகள் கற்றவர்கள். லவடேல் (Lovedele,Ooty) கான்வெண்டில் படித்து மிக அருமையான பிரிட்டிஷ் ஆங்கிலம் பேசி , கற்றுத் தந்தவர்கள். சர்ச் பார்க் கான்வெண்ட், பிரசண்டேஷன் கான்வெண்ட்,பத்மா சேஷாத்ரி போன்ற பிரபல பள்ளிகளில் வேலை செய்து ஓய்வு பெற்றவர்கள். ஒரு மாணவி (83 வயது) ஹிந்தி மற்றும் ஆங்கில ஆசிரியையாகப் பணி புரிந்தவர். 81 வயது வரை தானே கார் ஓட்டினாராம். மற்றொரு மாணவி (65 வயது) தான் அந்தமான் தீவிலிருந்து சென்னை வந்தது, ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றியது , (5 அடி உயரம் உள்ளவர்களை அப்போது பணியில் அமர்த்த மாட்டார்கள், உயரம் ஒரு தடை இல்லை என்று போராடி சேர்ந்தாராம்), மத்திய சென்னை தொகுதியில் 19_ _ ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டது, பி ஹெச் டி (உருது) பட்டம் பெற்றது என தினம் ஒரு தகவல் தந்து திகைக்க வைப்பார். என்னை அசர வைத்த Profile.

வார இறுதியில் சந்தித்த என் தாயாரின் தோழி திருமதி ஸ்ரீதேவி அரசரத்தினம் அவர்கள் இலங்கையிலிருந்து கனடா நாட்டுக்குப் புலம் பெயர்ந்தவர். அங்கே இன்றளவும் வார இறுதி நாட்களில் தமிழ் கற்றுத் தருகிறார். (கனடா எம் பி ஆக இருந்த ராதிகா சிற்சபையீசன் இவரின் மாணவி)

ஒரு தோழி, முறையாக தையற்கலை பயின்றவர். ஆசிரியப் பணியில் இருந்தவர். மற்றொரு சகோதரி பத்திரிக்கைகளுக்கு துண்டு செய்திகள், குறிப்புகள் என எழுதுவார். காஞ்சிபுரத்தை சேர்ந்த சகோதரி நேற்று பச்சைப் பயறு மற்றும் ஆளி விதையில் லட்டு செய்து , எனக்கு படம் எடுத்து, செய்முறைக் குறிப்புடன் அனுப்பி இருந்தார். புதுப் புது உணவுப் பதார்த்தங்களை செய்து அசத்துவார்.

மேற்சொன்னவைகள் என்னிடம் அந்த அம்மாக்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களே. (என் கற்பனை இல்லை)

இந்த அம்மாக்கள் மட்டுமில்லை... இது போல பலப்பல அம்மாக்கள்...

சில வருடங்களுக்கு முன்பு, என் மகள் தன் மகனிடம் பாட்டியிடம் கூட்டல் கணக்கு கற்றுக் கொள் என்றாள். உடனே குட்டிப் பையன் பாட்டிகள் ஆசிரியைகள் ஆக முடியாது(grandmothers cannot be teachers) என்றார். அதற்கு என் மகள், என் அம்மா தான் எனக்கும் என் தம்பிக்கும் பாடங்களைக் கற்றுத் தந்தார். அதைத் தான் நான் உனக்கு இப்போது கற்றுத் தருகிறேன் என்றார். குட்டிப் பையனிடம் நான் கேட்ட கேள்வி , Can a grandmother be a manager atleast?? No, Grandmothers can NEVER be managers .[ I was working as a General Manager then]. யார் இவருக்கு இப்படி சிந்திக்கக் கற்றுத் தந்தது?? யாரும் இல்லை. பிள்ளைகளின் மன அமைப்பு பொதுவாக இப்படித் தான் இருக்கிறது.

அம்மாவிற்கு ஒன்றும் தெரியாது, என்னம்மா மொக்கை போட்றே, இவ்வளவு நேரம் இதைத் தான் யோசிச்சியா, உன் மண்டைல மூளை இருக்க வேண்டிய இடத்துல வேற என்னவோ இருக்கு..... இதெல்லாம் இளைஞர்கள், வாலிப வயதினர் தன் அன்னையைப் பார்த்துக் கூறி.. நான் கேட்டவைகள். [எனக்கும் இது போன்ற அனுபவங்கள் உண்டு]

குடும்ப நலனுக்காக, பிள்ளைகளுக்காக அம்மாக்கள் தங்கள் வட்டத்தை சுருக்கிக் கொள்கிறார்கள். Low profileலில் இருக்கிறார்கள். அநாவசிய ஈகோ, வாக்குவாதங்கள் என சிலபல விஷயங்களைத் தவிர்த்து குடும்ப ஒற்றுமைக்காக இந்த low profile வேடம்.

படிக்காத அம்மாக்களாயினும் அவர்கள் அனுபவங்கள் உங்களை விட அதிகம் இளைஞர்களே! யாருக்கு என்ன தெரியும் என்றே நமக்குத் தெரியாது.

அம்மாக்களே.. பிள்ளைகள் நம்மைத் தாழ்த்தி உனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லும் போது அதை ஏற்றுக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு என்ன தெரியும் என்பதை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அவ்வப்போது. தப்பில்லை.

அம்மா என்பது இங்கே ஒரு குறியீடு மட்டுமே. அனைத்துப் பெண்களுக்கும் இது பொருந்தும்.

அம்மான்னா சும்மா இல்லை மக்களே....

Wednesday, 10 August 2016

நானும் வரேன்... நானும் வரேன்..

ஆகஸ்டு திங்கள் 2015 . அமெரிக்காவின் சான் ஹொசே நகரம்.

"அம்மா.. இரண்டு மாதங்களுக்கு பிரதி வெள்ளிக் கிழமை சின்னப் பையனை காலையில் ஒரு மணி நேரம் உன்னால் பார்த்துக் கொள்ள முடியுமா?" மகளின் கேள்வி.

என்ன காரணம் என்று அறிந்து கொள்ள விரும்பினேன்.

அங்கே பள்ளி ஆரம்பிக்கும் நாளில் ஒவ்வொரு பெற்றோருக்கும் ஒரு மின்னஞ்சல் (ஈமெயில்) பள்ளியிலிருந்து அனுப்பப் படுகிறது. அதில் வகுப்பு ஆசிரியைக்கு பெற்றோர்களின் உதவி எந்தெந்த வேலைகளில், வேளைகளில் தேவைப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டு , பெற்றோர்களின் சம்மதம் கேட்கப் படுகிறது.

[ஆசிரியர்கள் மாணவர்களின் பென்சிலைக் கூட கூர்மைப் படுத்தி வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் ஆசிரியைக்கு நிறைய வேலைகள். எனவே அவர்களுக்கு பெற்றோர்கள் உதவ முன்வருகிறார்கள். கணினி பயிற்சி, மதிய உணவு வேளை மேற்பார்வை, விளையாட்டு நேர மேற்பார்வை , பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டங்கள் எனப் பல விதத்திலும் உதவலாம். மகள் கணினி பயிற்சி வகுப்புக்கு செல்வார்.]

அதிலிருந்து நமக்கு வசதியான நேரத்தை நாமே தேர்ந்தெடுத்து சம்மதம் அளிக்கலாம். ஒப்புக் கொண்ட நேரத்திற்குத் தவறாமல் பள்ளிக்குச் சென்று , அலுவலகத்தில் அனுமதி பெற்று , வகுப்பறைக்குள் சென்று ஆசிரியைக்கு உதவி செய்துவிட்டு வரவேண்டும். செல்ல முடியாத நாட்களில் மாற்று ஏற்பாடு செய்து விடுவார்கள் பள்ளியில்.முக்கியமான ஒரு விஷயம், உதவி செய்ய போகும் பெற்றோர் , தாமும் ஒரு ஆசிரியரைப் போலவே செயல்பட வேண்டும். வீண் பேச்சுக்களுக்கு இடமில்லை. பெற்றோர்களுக்குத் தம் பிள்ளைகள் வகுப்பறையில் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் , சரியாக சாப்பிடுகிறார்களா என்பது போன்ற கேள்விகளுக்கும் இது சரியான தீர்வு.

பெற்றோர்கள் குறிப்பாகத் தாய்மார்கள் ஒருவருக்கொருவர் இந்த வாலண்டியர் சர்வீஸ் நேரத்தில் உதவிக் கொள்வார்கள். குட்டிப் பாப்பா இருந்தால் பார்த்துக் கொள்வது, பெரிய பாப்பா இருந்தால் வகுப்பு முடிந்ததும் அழைத்து வருவது, கடைக்கு சென்றால் ஒரு கேலன் பால் வாங்கி வருவது, சின்னப் பாப்பாவை கூட்டி செல்ல வரும்போது 4 பச்சை மிளகாய் கொண்டு வந்து தருவது என.....

ஒவ்வொரு வாலண்டியர் சேவைக்குப் பின்னும் , மகளின் முகத்தில் ஒரு வித நிறைவைக் கண்டேன். (அம்மா... இன்னிக்கு என் பிரண்ட் .. என அம்மாவும் பையனும் அன்றைய வகுப்பு நிகழ்வுகளைப் பேசிக் கொள்வார்கள்).பள்ளிகளில் பெற்றோர்களின் பங்களிப்பை வெகுவாக விரும்பி அனுமதிக்கிறார்கள். மகிழ்ச்சிக்குரிய விஷயம். படித்த , வேலைக்குச் செல்ல முடியாத பெண்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு மற்றும் பல துறைகளைச் சேர்ந்தவர்களையும் சந்தித்து பயனுள்ள செய்திகளைப் பகிர முடிகிறது. (அலுவலகத்தில் பணி புரிபவர்களும் சேவை செய்ய வருவார்கள், அங்கே பணி நேர சலுகைகள் நிறைய)

நிற்க.

இந்தியா. சென்னை மாநகரம்.

சம்பவங்களின் பாதிப்பில் பல மாதங்களுக்கு முன்பு, நூலகரை சந்தித்து , என்னைப் பற்றிய தகவல்களை அச்சடித்துக் கொடுத்து, இங்கே வரும் பள்ளிப் பிள்ளைகள் யாருக்கேனும் படிப்பில் உதவி தேவைப் படுமா எனக் கேட்டு சொல்லுங்கள் நான் இங்கே வந்து கற்றுத் தருகிறேன் என்றேன். பதில் இல்லை.

அடுத்த கட்டமாக, அருகில் உள்ள பள்ளியில் என்னை அறிமுகப் படுத்தி வையுங்கள் என்னால் ஆன உதவிகளை செய்து தருகிறேன் என்றேன்.

நாட்கள் கடந்தன. ஒரு நாள் காலை நூலகர் தொலை பேசியில் அழைத்து தயாராக இருங்கள் அழைத்துப் போகிறேன் என்றார். சில நிமிடங்கள் கழித்து, அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தற்சமயம் ஆசிரியர்கள் சங்கத்தில் ஏதோ ஸ்டிரைக் பண்றாங்களாம் அதுக்கு போறாராம். 3 நாட்கள் ஆகுமாம் பள்ளி மீண்டும் இயல்புக்கு வர, அதன் பிறகு பார்ப்போம் என்றார்.

வாரங்கள் கடந்தன. நூலகரிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. நான் நேரில் சென்று என்ன நடக்கிறது என்று விசாரித்ததில் இதோ நூலகரின் வார்த்தைகளில் :

நூலகர்: தலைமை ஆசிரியர் இருக்காரா?

பியூன்: (ஏற்கனவே அறிமுகமானவர்) என்ன காரணத்திற்காக அவரை பார்க்க போறீங்க?

நூலகர்: என் தோழி ஒருவர்......

பியூன்: அய்யய்யோ..அந்த ஆளு (என்ன மரியாதை பாருங்க) கொஞ்சமும் மரியாதை தெரியாதவன், யார் வந்தாலும் உட்கார சொல்லி கூட பேசுவதில்லை , குவார்டர்ஸ் ல குடியிருகறவங்கன்னா படிச்சவங்களா இருப்பாங்க, இங்கே அழைச்சுட்டு வந்தா ரொம்பவே மரியாதை குறைவா நினைப்பாங்க , தயவு செய்து அவங்களை இங்கே கூட்டிட்டு வராதீங்க

இந்த நிகழ்வை என் தோழி ஒருவரிடம் சொன்னேன். அவரின் வார்த்தைகளில் " நான் ஏற்கனவே ஒரு பள்ளியில் இது போல சேவை செய்ய விரும்பிச் சேர்ந்தேன். சும்மா தானே செய்யறே, இந்த வேலை செய் அந்த வேலை செய்ன்னு படுத்தி எடுத்துட்டாங்க.. பணம் வாங்காமல் வேலை செய்ய முன்வந்தால் இந்த கதி தான் இங்கே, அதன் பிறகு நான் அந்தப் பக்கம் செல்லவில்லை"

நான் இனிமேல் இந்த ஆட்டத்துக்கு வரலைப்பா ...

Wednesday, 27 July 2016

கற்றது கையளவு!!

ஒரு திங்கட்கிழமை காலை 9. Monday Blueவுடன் Empty nest syndrome கலந்த உணர்வுடன் நான்.

பகல் நேரத்தில் வீட்டிற்குள் வந்து செல்லும் ஒரே ஜீவன் ( என் Helpmate cum  Soulmate என்று கூட சொல்லலாம்) வர 3 மணி நேரங்கள் இருக்கிறது என்று எண்ணியபடியே  தொலைக்காட்சிப் பெட்டியை காண எண்ணி TV5Monde என்னும் சானலை தேர்ந்தெடுத்தேன். இந்த தொலைக்காட்சி நிறுவனம் கனடா நாட்டு தொலைக்காட்சியுடன் இணைந்து பல நல்ல நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது.

கனடாவின் Montreal நகரைப் பற்றிய ஒரு டாக்குமெண்டரி படம் ஓட ஆரம்பித்திருந்தது. 1800 ஆம் ஆண்டிலிருந்து எப்படி பல்வேறு நாட்டு மக்கள் அங்கு குடியேறினார்கள் என்பது பற்றியது

முதலில் Native Americans குடியேறினார்கள். பிறகு பிரஞ்சுக் காலனியானது. முதலாம் உலகப் போர் சமயத்தில் ஜெர்மனியிலிருந்து யூதர்கள்  கப்பலில் அமெரிக்காவிற்குத் தப்பி வந்தவர்கள் குடியேறினார்கள். பிறகு, டிரான்ஸ் காண்டினெண்டல் ரயில் பாதை அமைக்கும் திட்டத்தினை கனடா அரசாங்கம் முடிவு செய்த போது, சீனாவின் ஒரு மாகாணத்தில் உள்ள மக்களை (1400 பேர் மட்டும்) வேலைக்கு சேர்த்துக் கொண்டார்கள்

ரயில் பாதை அமைக்கும் பணி முடிந்ததும் கனடா அரசு  சீனர்கள் நாட்டுக்குள் வர $50 கட்டணம் விதித்தது. அவர்கள் இல்லாமல் ரயில்பாதை ஏது என்று உணர்ந்து பின் அந்தக் கட்டணத்தை ரத்து செய்தார்களாம். 1400  சீனர்கள் மட்டும் தான் இருக்க அனுமதி என்பதால், அவர்களது குடும்பத்தினரைப் பிரிந்தே அவர்கள் இருக்க நேர்ந்ததாம். எங்கள் கொள்ளுத் தாத்தா தனிமையில் இறந்தார் என்று சில பேரன்கள் சொன்னார்கள். சில வருடங்களுக்குப் பிறகு அந்தக் கடுமையான சட்டம் தளர்த்தப்பட்டு, அவர்களின் குடும்பத்தினர் Montreal நகருக்கு வந்து சேர்ந்து கொண்டார்களாம்.அரசு மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

அடுத்த கட்டமாக இத்தாலியர்கள் குடியேறினார்களாம். மார்பிள் சிலைகள் செய்தல், உணவுக்கடைகள் இவர்களுடைய தொழில்.

காரணமே இல்லாமல் ஜப்பானியர்கள், சீனர்கள் மற்றும் இத்தாலியர்களை POW (Prisoners of war) ஆக ஒரு சிறிய கிராமத்தில் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டார்கள். இத்தாலியர்கள் தாங்களே உணவு தயாரித்துக் கொள்ள விரும்பியதால் அவர்களது இல்லத்திலிருந்து பாஸ்தா மற்றும் தக்காளியை பெற்றுக் கொள்ள அனுமதி கொடுத்தது அரசு. இன்று வரை என்ன காரணத்திற்காக அவர்கள் சிறைப் பிடிக்கப் பட்டார்கள் ஏன் விடுவிக்கப் பட்டார்கள் என்று சொல்லப்படவில்லை. அரசு இன்னும் இவர்களிடம் மன்னிப்பும் கேட்கவில்லையாம். அவர்களின் பழக்க வழக்கங்கள், கலைகள், விழாக்கள் பற்றியும் கூறினார்கள்.

தற்காலத்தில் இந்தியர்ளும் இலங்கைத் தமிழர்களும் கூட அங்கே புலம் பெயர்ந்து வசிக்கிறார்கள்.

இந்த நகரத்தின் நதி செயிண்ட் லாரண்ட். இந்த நதியை சுற்றியே பல்வேறு நாட்டு மக்களும் ஒற்றுமையாக இன்றளவும் வசித்து வருவதாகக் கூறி முடித்தார்கள். அருமையான தகவல்கள். இது பற்றி என் தோழிகளுடன் பகிர்ந்து கொண்டேன்.

அடுத்து??? முக நூலுக்குத் தாவினேன்.

முதல் அப்டேட் .. தோழியின் தோழி போட்டிருந்த பதிவு

Feeling Whattay!! புத்தகக் கண் காட்சியில் என் புத்தகம் 300 விற்றுப் போயிருப்பதாக அறிந்தேன்.

Whattay என்றால் என்ன அர்த்தம்?? திரு திரு.
கூகிள் ஐயனார் சொன்னது : எதிர்பாராத நிகழ்வால் ஏற்பட்ட மகிழ்ச்சி.

மேலும் சில நிமிடங்கள் முக நூலில் முகம் புதைத்துப் பொழுதைக் கழித்தேன்.

12.00 ..என் Helpmate வந்துவிட்டார்.  அவருக்கு கதவு திறந்து விட்டுட்டு வருகிறேன்...

அவர் வேலைகளை முடித்து விட்டு வருவதற்குள் இந்த Helpmate" என்ற வார்த்தை எப்படி வந்ததென்று பார்ப்போம்.

இதன் பின்னால் ஒரு குட்டி சரித்திரமே இருக்கிறது. 1611 ல் வெளியான பைபிள் பதிப்பில் ஏவாள் ஆதாமிற்கு "Helpmeet" என  இருந்தது. ஏவாள் ஆதாமின் வாழ்க்கைத் துணை என்பது பொருள். அது தவறுதலாகப் புரிந்து கொள்ளப் பட்டு Helpmate என மருவியது. Helpmate என்பதன் பொருள் "உதவி செய்பவர்" என்ற பொருளில் தற்காலத்தில் பயன்படுத்தப் படுகிறது. (ஆங்கில இலக்கியத்தில் வார்த்தைகள் எப்படி உருவாகின என்ற தலைப்பின் கீழ் வரும் "Popular Misunderstanding" என்னும் தலைப்பின் கீழ் அமைந்த உதாரணம் இது)

சரி Helpmate வேலை முடித்து விட்டார்.  படித்தவர். வாழ்க்கை அனுபவம் மிக்கவர். என்னை விட 3 வயது மூத்தவராயினும் மரியாதை நிமித்தம் அக்கா என்றே அழைப்பார். மற்றவர்களிடம் அம்மா என்றே குறிப்பிடுவார். Officerன் மனைவி என்பதால் கூடுதல் மரியாதை.

தினமும் தான் பத்திரிக்கையில் படித்த, தொலைக்காட்சியில் கேட்ட செய்திகளை என்னிடம் பகிர்ந்து கொள்வார். என் கருத்துக்களையும் கேட்டுத் தெரிந்து கொள்வார். ஆரோக்கியமான விவாதங்கள் , கருத்துப் பரிமாறல்கள் மட்டுமே எங்களிடையே. இன்று என்ன தலைப்பு எடுத்து விவாதிக்கிறார் என பார்ப்போமா?

"அக்கா..இன்னிக்கு (ஜூலை 11, 2016) பேப்பரில் ஒட்டி பிறந்த இரட்டைப் பெண்களைப் (Conjoined twins) பற்றிய செய்தி படித்தேன். முதுகில் ஒட்டி இருக்கு, ஆபரேஷன் பண்ணி பிரிக்கணும்னா நிறைய பணம் கேக்கறாங்க என் கிட்டே இல்லை அப்படீன்னு அந்தப் பொண்ணுங்களோட அப்பா சொல்லி இருக்கார். பாவம் அக்கா.

ஏன் அப்படி பிறக்கறாங்க? பிரிக்க முடியாதா? பிரிச்சா என்ன ஆகும்? (நடிகர் சூர்யா மாற்றான் என்ற படத்துல  இப்படி நடிச்சிருக்கார், கண்டிப்பா பாருங்க, உங்களுக்குப் புரியும்)

கரு எப்படி உருவாகுது? செயற்கை முறையில் கருத்தரிப்பது என்றால் என்ன? இரட்டையர், மூவர், நால்வர்லாம் எப்படி சாத்தியம்?"

 (இது நாள் வரை நான் இந்தத் தலைப்பின் கீழ் படித்ததை எல்லாம் சொல்லும் வாய்ப்பு , செத்தாண்டா சேகரு..)

இன்னும் ஒரு சந்தேகம். கருவில் இருக்கும் குழந்தைக்கு உணவு எப்படி கிடைக்குது? (மனிதனின் ஜீரண மண்டலத்தின் பணிகளில்  ஆரம்பித்து ... )

கருவிலிருக்கும் குழந்தைக்குத் தாயுடனான தொடர்பு  தொப்புள் கொடி மூலம்தான் என்பதை அறிந்ததும் அவர் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சி ..அப்பப்பா!! ....  ஒரு கர்ப்பப் பைக்குள்ளே இவ்ளோ விஷயம் இருக்கா என்று அதிசயத்துக் கொண்டே கிளம்பிச் சென்றார். இவ்ளோ படிச்சிருக்கீங்களா நீங்க என்ற பாராட்டையும் எனக்கு அளித்தார்.

நல்ல வேளை.. இதற்கு மேல் கேட்காமல் கிளம்பி சென்றார்மதியம் 1.30

2.00 மணி - மாமியார் காபி நேரம்.  5 மணிக்கு இரவு உணவு/இரண்டாம் உணவு நே.....ரம். இடைப்பட்ட 3 மணி நேரங்கள் எனக்கானது.

இடையில் தோழி ஒருவர் தொலைபேசிட, அவருக்கு  Counselling செய்தேன்.(அதிகமில்லை Gentlemen, அரை மணி நேரம் தான்)

தொலைக்காட்சியில் செய்திகள் பார்க்க ஆரம்பித்தேன்தெரசா மே அம்மையார் பிரிட்டனின் பிரதமராக புதன் கிழமை பதவி ஏற்பார் என்றது ஒரு சேனல்.(அச்சச்சோ.. அதுக்குள்ளே முடிவு பண்ணிட்டாங்களா , நான் நேத்து மட்டும் தான் செய்திகள் பார்க்கலை)

இன்று உலக மக்கள்தொகை நாள்(World Population Day) என்றது ஒரு சேனல்.

அடுத்ததாக குங்குமம் பத்திரிக்கையைக் கையில் எடுத்தேன். கூகிள் நிறுவனத்தின் அடுத்த Android version இன் பெயர் Nougat என்றது. [நெய்யப்பம் என தமிழரான திரு சுந்தர் பிச்சை பெயரிடுவார் என பரவலாக பேசப்பட்டது.  ]

இதையோட்டி சில சுவாரசியமான நிகழ்வுகள் உங்களுக்காக..(தெரிந்தவர்கள் அடுத்த பத்திக்குச் செல்லவும்) கூகிள் நிறுவனம் தன்னுடைய ஆண்டிராய்டு பதிப்பின் ஒவ்வொரு புதிய வெர்ஷனுக்கும்(Version) ஒரு இனிப்பு பண்டத்தின் பெயரை வைப்பது வழக்கம். ஆங்கில எழுத்து வரிசையில் இருக்கும். A,B,C... கடைசியாக உள்ளது M- மார்ஷ்மெல்லோ(Marshmellow).

திரு சுந்தர்பிச்சை அவர்களின் இந்திய வருகையின் போது, செப்டம்பர் மாதம் வெளியாக உள்ள அடுத்த வெர்ஷனின் பெயர் இந்திய இனிப்பாக இருக்க வாய்ப்புள்ளது என்றாராம். என்ன பெயர் என்று கேட்டதற்கு " அம்மா கிட்டே கேட்கணும்" என்றாராம்பின்னர் சுதாரித்து, மக்கள் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கப்படும் என்று சொல்லி சமாளித்தாராம். (வழக்கமாக கூகிள் நிறுவனம் தான் பெயரைத் தீர்மானிக்கும்

நெய்யப்பம் Nல ஆரம்பிப்பதால், அதற்கு அதிக வாக்குகள் கிடைத்தும் Nougat என தீர்மானித்துள்ளது கூகிள் நிறுவனம் . காரணம் நெய்யப்பம் எல்லா நாட்டவராலும் உச்சரிக்க முடியாது என்பதே.. (கூகிள் போங்காட்டம் ஆடிவிட்டதாகப் பொருமுகிறார்கள் மக்கள்)

(நண்பர் ஒருவர் ஆல்ஃபா பீடாவில் ஆரம்பித்து நுகட் முடிய கடகடவென்று ஒப்பித்து அசத்தினார், மற்றொருவர் எனக்கு இது புதுத் தகவல், you surprised me என்றார்)

நடுவில் சில மணி நேரங்கள் இரவு உணவு  வேலைகள்.

இரவு 8.30 . மீண்டும் ஜப்பான் தொலைக்காட்சி சானல். 

அன்றைய தினம்  யமடோ கொரியாமா (Yamato koriyama)  என்ற ஊரைப் பற்றிய டாக்குமெண்டரி படம். ஒசாகா நகரிலிருந்து 45 கிலோ மீட்டரில் உள்ளது. அங்கு தங்க மீன் வளர்ப்பு தான் தொழில். வயல்களில் வளர்த்து ஏலம் விடுகிறார்கள். (அப்பப்பா... எத்தனை வகை தங்க மீன்கள்)


விடுதிகள், பாலங்கள், தூண்கள், வீடுகளின் ஜன்னல் கதவுகள், ரெஸ்டாரண்ட்கள் எங்கும் தங்க மீனின் படங்கள். அவ்வளவு ஏன் தின்பண்டங்களில் கூட தங்க மீன் டிசைன்கள்.

சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக வந்து செல்வதைக் காட்டினார்கள். ஊருக்கு நடுவில் குட்டி வாய்க்கால். அதில் கூடத் தங்க மீன்கள்.

NHK Newsline Channelலில் ஜப்பானில் உள்ள ஊர் ஏதாவது ஒன்றை சுற்றிக் காட்டி அதன் சிறப்பியல்புகளை சொல்லுவது போல டாக்குமெண்டரி படங்கள் ஒளிபரப்பப் படுகின்றன. 5 நிமிடங்கள் - வகாஷி என்ற இனிப்பு பற்றி சொன்னார்கள்,  72 மணி நேரங்கள் ஒரு உணவகத்தை, ரயில் நிலையத்தை, கடை வீதியை என தேர்ந்தெடுத்து அங்கு வரும் மக்களை பேட்டி எடுத்து ஒளிபரப்புகிறார்கள்.

சோகமாக ஆரம்பித்த நாள், சுறுசுறுப்பாக , பலப் பல புது விஷயங்களைக் கற்ற நாளாக மாறியது.

மகிழ்ச்ச்ச்சி!!

பின் குறிப்பு : உங்களுக்காக சில links















Tuesday, 5 July 2016

செட் டாப் பாக்ஸ்

புதுத் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கிய போது ஓசியில் கிடைத்ததென்று ஏர்டெல் டிஷ் ஆண்டென்னாவைப் பொருத்தி விட்டு, ஏர்டெல் கம்பெனியுடன்  INVISIBLE யுத்தம் (ஆன்லைனில் தான்) நடத்திக் கொண்டு இருந்த ஒரு நாளில் எங்களின் கேபிள் ஆப்பரேட்டர் வந்தார். தற்சமயம் ஒரு வருடத்திற்கு சாட்டிலைட் சானல் அமைப்பினருடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாகவும், அதன்படி அனைத்து சேனல்களும் 250 - 300 ரூபாய்க்குள் காணும்படியான வசதி இருப்பதாகவும் கூறினார்.

மீண்டும் SCV !!

டிஸ்கவரி சேனல்கள் , வெளி நாட்டு சேனல்கள் , விளையாட்டு, செய்திகள்(தமிழ், ஆங்கிலம்), தமிழ் பொழுதுபோக்கு, சிறுவர்கள் (தமிழ், ஆங்கிலம்),ஆங்கில பொழுதுபோக்கு (திரைப்படங்கள், சீரியல்கள்) தவிர, தெலுங்கு, மலையாளம் கன்னடம் ஹிந்தி சேனல்கள் என எண்ணிலடங்கா சேனல்கள்.[ தூர்தர்ஷனில் நூபுர், ஜுனூனுகுப் பிறகு  ஹிந்தி பக்கமே செல்லவில்லை. மம்முட்டி மகன் நடிக்க வந்த பிறகு ஏசியாநெட் மம்முட்டி நடித்த படங்களைப் பார்ப்பதில்லை]

காலை எழுந்தவுடன் டீவீ... பின்பு காப்பி குடித்ததும் டீவீ... மாலை முழுதும் இங்கு டீவீ.... சங்கரா, திருப்பதி தேவஸ்தான சேனல்கள், பொதிகை, ஜெயா செய்திகள் .. ஹாலை ஒட்டிய மாமியாரின் அறையிலிருந்து பின்னணியில்...

தந்தி டீவீ - தினமும் இரவு 7.30 - 7.45 BBC செய்திகள். அனாவசியமான அழுத்தங்கள் (வணggaaம்) தராமல் வார்த்தைகளைத் தெளிவாக உச்சரித்து, உலக செய்திகளை ஒளிபரப்புகிறார்கள். காலை 8 மணியளவில் ஆரம்பித்து , செய்தித்தாட்களைப் பிரித்து ஒவ்வொரு செய்தியாகப் படித்து அக்குவேறு ஆணி வேறாக அலசுவார்கள், அலசிக் கொண்டே இருப்பார்கள். சிலர் நன்றாக அலசுவார்கள். சிலர் துணி கிழிந்து தொங்கும் வரை அலசித் தள்ளுவார்கள்.  சில சமயம் 4,5 பேர் சேர்ந்து விவாதம் என்ற பெயரில் என்ன சொல்கிறார்கள் என்பதே புரியாத வண்ணம் பேசுவார்கள். எந்த சூடான தலைப்பும் இல்லாத நாட்களில் “தமிழகத்தில் மூன்றாவது அணி உருவாகுமா?”
NDTV  விவாதங்களும் இவ்வண்ணமே. (தினமும் ஒரு தலைப்பு கிடைச்சுடுது, ஸ்ஸ்ஸப்ப்பா....)

புதிய தலைமுறை, கேப்டன் , சத்யம் போன்றவற்றிலும் அவ்வப்போது செய்திகள், நிகழ்வுகள் கவனம் ஈர்க்கும். இசை சேனல்கள் சில சமயம் ஓகே.

அம்மா, பெரியம்மா வந்தால் சரவணன் மீனாட்சி, சீதா, ராம், வேளுக்குடி கிருஷ்ணன் போன்றவர்கள் விஜய் டீவி மூலம் வந்து செல்வார்கள்.

பொதிகை , எங்கள் தந்தையாரின் வார்த்தைகளில் ... "யாரோ ரெண்டு பேர் நாற்காலியில் அமர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறார்கள் நாள் முழுவதும்". உலகில் என்ன நடந்தாலும் நமக்கென்ன என்பதே இதன் தாரக மந்திரம்(?!) மேடை அமைப்பு மாறாத நாடகங்கள், பழைய பாடல்கள் . 

ஆங்கிலத் திரைப்படம் மற்றும் சீரியல்கள் ஒளிபரப்பாகும் சேனல்களில் ரிப்பீட்டோ ரிப்பீட்டு. புதுத் திரைப்படம் அல்லது தொடர் ஏதாவது தென்பட்டு, அதைப் பார்க்க முடிவு செய்து ஒளிப்பரப்பு நேரத்தைப் பார்த்தால் அனேகமாக அதிகாலை 2 - 6 ஆக இருக்கும். நல்ல விஷயம் பின்னணி இசை அலறாது, சண்டைப் படங்களில் கூட டிஷ்யூம் டிஷ்யூம் சத்தம் குறைவு. சீனா(குங்பூ,கராத்தே), கொரியா (போலீஸ் திருடன்),ஹாலிவுட் (வேற்று கிரக வாசிகள், சரித்திரக் கதைகள், கார்ட்டூன்கள், பல கோணக் காதல்) ஆகியவையே திரைப்படங்களின் பொதுவான கரு.

டிஸ்கவரி சேனல்களில் பாம்பு, சிங்கம், புலி, மான் ஓடிக் கொண்டே இருக்கின்றன. (இது பாம்புகள் மா....தம்) ஜீப்பில் கேமராவுடன் பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள் ஏதேனும் மிருகத்தைத் துரத்தியபடி. இல்லையென்றால் FOOD FACTORY. விதம் விதமான உணவு தயாரிப்புகளைப் பார்க்கலாம். 

எல்லா மொழி சேனல்களிலும் அனேக நேரங்கள் "சமையல் நேரம்". பொறுமை இருக்கும் போது அதையும் பார்க்கிறேன். இயற்கைச் சூழலில் அருவிக்கரையில், புல்வெளிகளில் என்று சமைக்கும் இடம் வெளி நாட்டு சேனல்களில் தினம் தினம் மாறும். எப்படியும் நம்ம வீட்டுல தோசை தான். (மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியா அமெரிக்கா நிகழ்ச்சியில் எதுக்கு போட்டியில் கலந்துக்கறவங்களை ஏதேதோ பேசிப் பேசி, பதட்டப் படுத்தறாங்க??) 

என் மனம் கவர்ந்த Foreign சேனல்கள் : NAT GEO PEOPLE (Travel around the world and food ), Al Jazeera , DW (Germany), NHK newsline (Japan), TV 5 monde (France) , CCTV (China) , BBC (London), Australia +, CNN ,Arirang (Korea) - இளைஞர்களுக்கான சேனல் இது. நம் பொதிகை போலத் தான். உலகில் நடக்கும் எந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லாமல் இளைஞர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்.

செய்திகள் தவிர்த்து உலகின் பல்வேறு இடங்களையும் அதன் சிறப்புகளையும் எடுத்துக் கூறும் டாக்குமெண்டரிகள், உணவு வகைகள், கலாச்சாரம் தொடர்பான நிகழ்ச்சிகள், விழாக்கள் எனப் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. 

CCTV (China) யில் சீனாவைப் பற்றிய நிகழ்வுகள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு கண்டத்திற்கும் நேரம் ஒதுக்கி நிகழ்ச்சிகளை அளிக்கிறார்கள். மாலை 3-5 ஆப்பிரிக்கா, காலையில் அமெரிக்கா. 

NAT GEO PEOPLE சேனலில் ஒளிபரப்பான Boarding time - Turkish Airlines பற்றிய நிகழ்ச்சி. ஏர்போர்டில் பயணிகள் வந்து சேர்வதிலிருந்து ஆரம்பித்து, அங்கே உள்ள செக்யூரிடி, போர்டிங், பயண நேரம், உணவு, விமான ஓட்டிகளின் பணி என ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு சென்று இறங்குவது வரை சிறிய பேட்டிகளுடன் அற்புதமாக இருந்தது. [350 டன் எடை கொண்ட விமானம் டேக் ஆஃப் ஆக 170 kmh வேகத்தை அது ரன்வேயின் முடிவிற்குள் அடைய வேண்டுமாம்)

Best cruises என்ற நிகழ்ச்சி உல்லாசக் கப்பல் பயணம் பற்றியது. (மன்மதன் அம்பு படத்தில் வருமே...) ஒவ்வோர் ஊராக இறங்கி சுற்றிப் பார்த்து விட்டு மீண்டும் கப்பலில் ஏறி மற்றோர் இடத்திற்கு செல்கிறார்கள். வழியெங்கும் கண்கொள்ளாக் காட்சிகள்.

இன்றைக்கு நான் காண நேர்ந்த ஒரு நிகழ்ச்சி(Al Jazeera). Think out of the box type.  இது ரம்ஜான் மாதம் என்பது அனைவரும் அறிந்ததே. இசுலாமிய அன்பர்கள் சூரிய உதயம் தொடங்கி அஸ்தமனம் வரை உணவு உண்ணாமல் இருந்து விரதம் இருப்பார்கள். ஐஸ்லாந்து, நியூசிலாந்து போன்ற உலகின் துருவப் பகுதிக்கு அருகிலுள்ள நாடுகளில் எப்படி இந்த விரத நேரத்தைக் கணக்கிடுகிறார்கள் ? ஐஸ்லாந்தில் 21 மணி நேரங்கள் சூரியன் தரிசனம் தருவார் நியூசிலாந்தில் 9 மணி நேரங்கள் தான். இது மாதிரியான நாடுகள் தங்களது அண்டை நாட்டின் ,அதாவது moderate day and night times உள்ள நாட்டின் சூரிய உதயம் மற்றும் அஸ்தமன நேரத்தைக் கணக்கில் கொண்டு உண்ணா நோன்பு  இருக்க வேண்டும் அல்லது அவர்களின் புனிதத் தலங்களான மெக்கா (அ) மெதீனாவின் நேரக் கணக்கினைப் பின்பற்றி உண்ணா நோன்பு மேற்கொள்ள வேண்டும் என்று அறிந்தேன். [நோன்பிருத்தல் பற்றிப் பல தகவல்கள் தோழிகள் மூலம் ஏற்கனவே தெரிந்திருந்தாலும், இன்றைய தகவல் சற்றே வித்தியாசமானது.]

BREXITபுண்ணியத்தில் தினமும் லண்டன் மற்றும் அதன் சுற்றுப் புறங்களைக் கண்டு களித்தேன். இன்று காலை DW (Germany)வில் EU நாடுகள் ஒவ்வொன்றாகக் காட்டி பிரிட்டனின் முடிவுக்கெதிரான போராட்டங்களை ஒளிபரப்பினார்கள். 

இத்தனை சேனல்கள் எங்களுக்கு வராதே என்று எண்ணுகிறீங்களா ? 
முதலில் எந்தெந்த சேனல்களை நீங்கள் பார்ப்பதே இல்லை என்பதை கண்டு பிடியுங்கள். அவைகள் Paid channel ஆக இருந்தால் கேபிள் ஆப்பரேட்டரிடம் பேசி நமக்குத் தேவையான சேனலை மாற்றிக் கொள்ளலாம். [அனுபவம் தான்]

ஆங்கிலம் மற்றும் வெளி நாட்டு சேனல்களில் கீழே சப்டைட்டில் வரும்.  

நானும் உங்களை மாதிரி தானுங்கோ!!

பின் குறிப்பு :
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பற்றி இவ்வளவு கதையளக்கிறாளே , வேறு வேலையே இல்லையா என்று நினைக்காதீர்கள் மக்களே...  எனக்கு நேரம் கிடைத்து, நல்ல நிகழ்ச்சிகளும் அந்த நேரத்தில் ஒளிபரப்பானால் மட்டுமே பார்க்கிறேன். அனேக நேரங்கள் முக்கியமான நிகழ்ச்சிகள் கிளைமாக்ஸ் சமயத்தில் தான் “கொஞ்சம் காபி போட்டு கொண்டு வறியா?”






















Wednesday, 29 June 2016

நெருப்புடா!!

ஏழுமலையானின் வாசஸ்தலமான திருமலை....பாப விநாசம் செல்லும் சாலையில் கோகர்பம் அணக்கட்டின் அருகில் அமைந்த ஒரு திருமண மண்டபத்தில் கணவரின் அலுவலக நண்பரது மகனின் திருமணம்(ஜூன் 8,9). 

வெய்யிலால் காய்ந்து மழையால் நனைந்து, பசியால் வாடி... சென்னை - திருமலை சென்று சேர 9 மணி நேரங்கள் , இதில் கிட்டத் தட்ட ஒரு மணி நேரம் திருமலையில் எங்களை அழைத்து செல்ல அனுப்பி வைக்கப் பட்ட , பரஸ்பரம் எங்களது தொலைபேசி  எண் இல்லாத, வெள்ளை சட்டை அணிந்த ஒரு நபருக்கான காத்திருப்பு நேரம். ( திருமலையில் மொட்டை தலையுடன் காணப்பட்டவர்களுக்கு ஈடாக வெள்ளை சட்டை அணிந்தவர்களும் இருக்கிறார்கள் என்பது புரிந்தது :) )

வரிசையாகத் திருமண மண்டபங்கள் தங்கும் அறைகளுடன். எங்கும் வண்ண விளக்குகள் வாகனங்கள். தோரணங்கள். வண்ணக் கோலங்கள். இது இரவுக் காட்சி. 

மலைகளும் மரங்களும், பூக்களும் புத்தாடைகளுமாய் எங்கும் மகிழ்ச்சிக் கோலம். பகலில் தான் இதெல்லாம் என் கண்ணுக்கு தென்பட்டது.

50 பேர் அமரக் கூடிய மண்டபம். அரை அடி உயரம் உள்ள சிறிய மேடை. பூ அலங்காரம். தரையில் பச்சை வண்ண விரிப்பு. பக்கவாட்டில் சிவப்பு வண்ண படுதாக்கள். நாற்காலிகளின் மேல் வெள்ளை நிறத்தில் உறை.  மணமக்கள் அலங்கார நாற்காலிகளில் அமர்ந்திருக்க, முன்னால் இவை அனைத்தையும் மறைக்கும்வண்ணம் வழக்கம் போல புகைப்படக் குழுவினர்.

மணமகன் ஏற்கனவே அறிமுகமானவர் மணமகள் தற்சமயம் சான் ஹொசே நகரில் படித்து கொண்டிருப்பவர். (இது கல்யாணம் முதல் காதல் வரை...) மண்டபத்தின் உள்ளே சென்று மணமக்களின் அருகில் சென்றவுடன் என்னுடைய "HI" யை கூறி முடிக்கும் முன்பாக, மணமகன் என் வலது கையை பிடித்து கொள்ள யாரென்றே என்னை அறியாத நிலையில் என் இடது கையை பிடித்துக் கொண்டு என்னை இன்ப அதிர்ச்சிக்குள்ளாகினார் மணமகள். 

முதல் தளத்தில் இரவு உணவு முடித்து கீழிறங்கி வந்த போது மண்டபத்தின் உள்ளே ஒரு பெண்மணியை சுற்றி பலரும் நின்றிருக்க அவர் சற்றே உரத்த குரலில் திருமண அமைப்பாளரிடம் பேசிக் கொண்டிருந்ததன் சாரம் :

8 மணி நேரம் பயணம் செய்து வந்திருக்கும் அவர்களுக்கு மாலையில் உணவு எதுவும் அளிக்கப் படவில்லை.
அரை அடி உயரத்தில் மரப்பலகைகளால் அமைக்கப் பட்டிருக்கும் மேடை சீராக இல்லாததால், விளக்கு 3 முறைகள் தவறி விழுந்து விட்டது
திரைச் சீலைகள், உறைகள், தரை விரிப்புகள் அனைத்தும் சுத்தமாக இல்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக, திருமணத்தை நடத்தி வைக்க வைதீகர் ஏற்பாடு செய்யப் படவில்லை. (நாங்களே ஐயரை கூட்டி வந்திருப்போமே)

மணப்பெண்ணின் தாயார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதில் வியப்பில்லை. அந்த அமைப்பாளர் தன் தவறை ஒத்துக் கொள்ளாமல் பேசியவுடன், அப்பெண்மணி கடும் கோபத்துடன், தன் கணவரை நோக்கி வாங்க நாம் இங்கிருந்து கிளம்பலாம் ஊருக்கே போய் திருமணத்தை நடத்திக் கொள்ளலாம் என்றார். இவர் சொன்னதை செய்யக் கூடியவர் என்று நினைத்தாரோ என்னவோ, அமைப்பாளர்  சரி என்ன செய்யணும் சொல்லுங்க என்றார். மற்றவர்கள், அவரது கணவர் தவிர்த்து, அமைதியாக இருந்தார்கள். (அதுவும் நன்மைக்கே, விட்டால் எதிர் கட்சி வக்கீல் போல நமக்கே ஆப்பு வைத்து விடுவார்கள்)

விடிவதற்குள் மேடை அகற்றப்பட்டு (தரையில் என் பெண் திருமணத்தை நடத்திக்கறேன்), கார்ப்பெட், உறைகள் மாற்றப்பட்டு,பக்கவாட்டில் வெள்ளை நிறத்தில் படுதாக்கள் இருக்க வேண்டும்.
வைதீகரைப் போல தோற்றமளித்தஒரு இளைஞரிடம் நாளை 8.30 க்கு இன்னொரு ஐயரையும் கூட்டிட்டு வரீங்க (காசி யாத்திரை தொடங்கி பல சடங்குகளையும் வரிசையாக சொல்லி), இவைகளுக்கு தேவையான மந்திரங்களை படிச்சுட்டு வாங்க, தெரியலைன்னா புத்தகம் எடுத்துட்டு வந்து சொல்லுங்க. 1 மணி முடிய இங்கே இருந்து அனைத்து சடங்குகளையும் ஒழுங்காக செய்து முடிக்கணும் என்றார்.

கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தவில்லை. கோபத்தில் கீச்சிடவில்லை. அமைதியாக சற்றே உயர்த்திய கண்டிப்பான குரலில் தனக்குத் தேவையானவைகளை அவர் பட்டியலிட்டு, ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வும் சொன்னதும் அசந்து போனேன். .... அவரது TONE மற்றும் வார்த்தைகளுக்கு கொடுத்த அழுத்தம்(STRESS) பிரமாதம். மிகச் சிறந்த மேலாண்மை வல்லுனர், 

கூட்டம் கலைந்து சென்றது. மணப்பெண்ணின் தாயார் சாப்பிட அமர்ந்த நிலையிலும் (நினைவு இருக்கா, மாலையிலும் அவர் சாப்பிடலை) கடந்து சென்ற ஒவ்வொருவரையும் சாப்பிட்டீங்களா என்று உபசரித்தார்.

மறு நாள் காலை. மண்டபம் அந்த அம்மையார் கூறிய படி வெள்ளை படுதாக்கள் உறைகளுடன் சுத்தமாகக் காட்சி அளித்தது. 

மணமகளிடன் பேசிக் கொண்டிருந்த போது (Friends ஆயிட்டோமில்லே), தவறாமல் சான் ஹொஸே நகரில் வசிக்கும் என் மகளுடன் தொடர்பில் இருக்கும்படி கூறிக் கொண்டிருந்த சமயம் அவரது தாயாரும் அங்கே இருந்தார். அவர் உடனே என்னிடம், நான் என் மகளிடம் அனைவரிடமும் நட்புடன் பழகி அவர்களுக்கு உதவி தேவைப்படும் போது செய் அப்போது தான் நமக்கு ஒரு பிரச்சினை என்றால் யாராவது உதவி செய்வார்கள். எப்போதும் அடுத்த வீட்டுக்காரங்க தான் முதலில் வருவார்கள் உறவுகள் பிறகு தான் வருவார்கள் என்று சொல்லி இருக்கிறேன். கண்டிப்பாக அவள் செய்வாள் என்றார். மணமகள் எல்லாருடனும் நட்புடன் பழகுவார் என்பது தெரியுமே..மாமியார் கையை பிடித்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருப்பதை பார்த்தால் தெரியும் உங்களுக்கும். 

சொன்னபடி ஐயர் மற்றொருவருடன் வந்து சடங்குகளை நடத்த, திருமணம் இனிதே நடைபெற்றது. 

மஞ்சள் படுத்தப்பட்ட பஞ்சகச்ச வேட்டி, பூணூல் தரித்த மணமகன் மஞ்சள் மடிசார் புடவை உடுத்திய மணமகள். வந்திருந்தவர்களிடம் மடிப்பிச்சை எடுத்து காசி யாத்திரை சென்ற மணமகன் என இது வரை கண்டிராத பல விஷயங்கள் திருமணத்தில்.(பாப்பா... புடவை மஞ்சள் படுத்தியதா இல்லை மஞ்சள் நிறத்திலேயே வாங்கியதா?

முதல் நாள் நிகழ்வு பற்றிய எந்த விதமான அலட்டலும் இல்லாமல் அமைதியாகத் திருமண சடங்குகளில் கலந்து கொண்டது அந்த அம்மையாரின் மற்றொரு பரிமாணம்.

திருமணம் முடியும் தருவாயில் என் மனதில் தோன்றிய எண்ணம் : நல்ல வேளை இந்த அம்மையார் நாதஸ்வரம் வாசிப்பவரைக் கவனிக்கவில்லை. நிறைய ஸ்ருதி ஸ்வர விலகல்கள். அவர் பாட்டு இசைக்கவில்லை..பாட்டு மாதிரி இசைத்தார் என்று தான் எனக்கு தோன்றியது.



தவறு, அநீதி கண்டு தட்டிக் கேட்ட அந்தத் தாயின் உருவில்-பாரதியின் புதுமைப் பெண் கண்டேன். அக்கா.. உங்க பேர் தைரிய லட்சுமியா?

அர்ச்சனா கல்யாண வைபோகமே..............

பின் குறிப்பு:  : எங்களுக்கும் இது போன்ற அனுபவங்கள் ஏற்பட்டதுண்டு. தட்டிக் கேட்க தைரியம் இருந்ததில்லை. எதுக்கு பிரச்சினை என்று நாம் எண்ணுவது நமக்கு பாதகமாக முடிகிறது. தவறுகளை தட்டிக் கேட்கலாம் தப்பே இல்லை.





Monday, 13 June 2016

ஓடிப் போலாம் வரியா?

கடந்த மாதத்தின் ஒரு இனிய காலை நேரம்.

அதற்கு சில தினங்களாக எனக்கு சற்று உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவ மனைக்கு சென்று காத்திருந்த நேரம்.....

ஒரு வயது முதிர்ந்த பெண்மணி கையில் டஃபெல் பை, கால்களில் நடைப் பயிற்சிக்கான ஷூக்கள், ட்ராக் பேண்ட் டீ ஷர்ட் சகிதம் கம்பீரமாக நடந்து வந்து அருகில் அமர்ந்தார். ஒரு அத்லெட்டுக்கான தோற்றம்.

என்னிடம் பேச ஆரம்பித்தார் அப்பெண்மணி. உடனே என் ஆர்வ (கோளாறின்) த்தின் பேரில் எங்கள் உரையாடல் தொடர்ந்தது.

நான் : அம்மா... வாகிங்க் முடிஞ்சு வரீங்களா?

அவர்: இல்லைம்மா.. நான் ஜவஜர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் உடற்பயிற்சி, ஓட்டம் மற்றும் ஜாகிங் முடிச்சுட்டு வரேன். (8.00 - 9.30)

தொடர்ந்து அவரே கூறியவைகள் ...

நான் தபால் துறையில் வேலைக்கு சேர தேர்வு எழுதினேன் அங்கே வேலை காலி இல்லாத காரணத்தால் டெலிபோன் துறையில் வேலை தந்தார்கள். நான் அலுவலகத்தின் சார்பில் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் ட்ரிபிள் ஜம்ப் போட்டிகளில் பங்கேற்று 35 உலக நாடுகளுக்குச் சென்று , பல போட்டிகளில் பங்கேற்று , தங்கம் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளேன். 100 மீட்டர் ஓட்டம் என்னுடைய சிறப்பு என்றார்.

1989 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றேன். தற்சமயம் எனது 85 ஆவது வயதில் இருக்கிறேன். தற்சமயம் வயது முதிர்ந்தோருக்கான போட்டிகளில் (veterans) பங்கேற்று பரிசுகள் பெற்று வருகிறேன் என்றார்.

நான் : (வாயடைத்துப் போன நிலையில்) அம்மா...உங்கள் பெயர் என்ன ?

அவர் : என் பெயர் டெய்சி விக்டர். விக்டர் என் கணவர். அவரின் ஒத்துழைப்பால்தான் பல பரிசுகளைப் பெற முடிந்தது. கூகிள் செய்து பார் எனனைப் பற்றிய தகவல்கள் கிடைக்கும். டீவீ, நியூஸ் பேப்பர்களில் என் பேட்டிகள் வந்துள்ளன என்றார்.
உனக்கு எத்தனை பிள்ளைகள் அம்மா??

நான் :  ஒரு மகன் ஒரு மகள்

அவர் : எனக்கு 3 ஆண் 3 பெண் குழந்தைகள். அதில் 3 பேர் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். எனக்கு சுதந்திரமாக வெளியில் சென்று வர வேண்டும் அங்கே அது முடிவதில்லை அதனால் பிள்ளைகள் அழைத்தும் நான் அங்கே செல்ல விரும்பவில்லை.


தம்முடைய விளையாட்டு ஆர்வம் பற்றி அவர் கூறியது : ஆரம்பத்தில் அக்கம்பக்கத்தில் என்னை ஏளனமாகப் பார்த்தார்கள். காலப் போக்கில் இவள் உருப்படியாக ஏதோ செய்கிறாள் என்பதை புரிந்து கொண்டு விட்டார்கள் என்றார்.

ஒவ்வொரு போட்டியின் முன்பும், கடவுள் எனக்கு ஓடும் திறமையை அளித்துள்ளார் அதை பயன்படுத்தி வெற்றி பெறுவேன் என்று நினைத்து செயல்படுவேன். கண்டிப்பாக ஓரிரண்டு பரிசுகளாவது பெற்றுத் தான் திரும்புவேன் என்றார்.

மருத்துவர் மிக மிக நிதானமாக கணினியில் வேலை செய்தததைக் கண்ட திருமதி விக்டர் , ஏன் இவர் வேகமாக வேலை செய்யலை என்று தெரியலையே.... ஓடி ஓடியே பழகிட்டேன் இப்படி உட்கார்ந்திருப்பது பிடிக்கவே இல்லை என்றார்.

நான் பல வருடங்கள் முன்பு ஹாங்காங் சென்ற போது மடிக்கணினி வாங்கி வந்து நானும் கற்றுக் கொண்டு அக்கம் பக்கத்து பிள்ளைகளையும் கற்கச் செய்தேன். இன்றளவும் இணையம் பற்றிய தகவல்களை யார் உதவியும் இல்லாமல் நானே அறிந்து கொள்கிறேன் என்றார். ஆர்வம் தான் காரணம் என்றார்.

நான் : .....................................................

அவர் : எப்போதும் நான் மருந்துகளின் உதவியை நாடியதில்லை. வயதான காரணத்தினால் வைட்டமின் மாத்திரைகளை சாப்பிட சொல்லி இருக்கிறார்கள் அதன் காரணமாக இங்கே வந்தேன்.

நான் : ....................................................

கிளம்பும் சமயம் நான் அவரிடம் எப்படி வீட்டுக்கு போறீங்க என்றேன்....

அவரது பதில் : நடந்து தான்.... என் கூட வரியா ஓடலாம்??

பின் குறிப்பு : திருமதி விக்டருடன் பேசியதில் முதுமை என்பது சாதனை செய்யத் தடை இல்லை என்பது புரிந்தது,  இன்றளவும் ஆர்வம் சற்றும் குறையாத திறமையான விளையாட்டு வீராங்கனை. CGHS (Central Government Health Scheme)  எனப்படும் மத்திய அரசு ஊழியர்களுக்கான பொது மருத்துவ மனையில் தான் மருத்துவம் பார்த்துக் கொள்கிறார் அந்த அம்மையார். நூற்றுக்கும் மேற்பட்ட மெடல்களைப் பெற்றிருக்கும் இவர் யார் என்பதே யாருக்கும் தெரியவில்லை.  அரசின் அங்கீகாரம் எதுவும் இல்லை என்பது வருத்தத்திற்கு உரியது.

http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-downtown/agedefying-daisy-victor/article4131915.ece

Tuesday, 31 May 2016

M.A [ENGLISH LITERATURE]



புத்தகங்கள் வீடு வந்து சேர்ந்து 8 மாதங்கள் முடிந்த நிலை....

அமெரிக்காவில் 5 1/2 மாதங்கள் பேரன்களுடன் குலாவல், வந்து 1 1/2 மாதம் இருமல், மீதி சோம்பல்.. கணக்கு சரியா?

மே மாதத்தில் பரீட்சைகள் நடைபெறும்.(2015-2016) மார்ச் மாதத்தில் ஒரு நாள்  எங்கள்  மூத்த சகோதரி யோகா முதுகலை படிப்பிற்கான நேர்முக வகுப்பிற்கு சென்றுள்ளார் என்பதை கேள்விப்பட்டு நம்மை விட மூத்தவர் துணை தலைமை ஆசிரியர் பதவி வகிப்பவர், அவரே ஆர்வமாக படிக்கும் போது, நம்மால் முடியாதா? உத்வேகத்துடன் நானும் Personal Contact வகுப்பிற்கு கிளம்பி சென்றேன். இதை epiphany என்பார்கள். [a sudden manifestation of insight]

மிக அருமையான பாட நேரங்கள். English literature is European literature and Christian literature என்று ஆரம்பித்து பேராசிரியர்கள் மணிக்கணக்கில் விரிவுரையாற்றினார்கள். Wonderful and memorable moments of my life. பாடத்தின் வழியே நம்மை church, chapel, basilica, Constantinople, London, Paris என அழைத்துச் சென்றார்கள். அது தனி உலகம். 

Shelly, Byron, Milton, T.S. Elliot என மிக அருமையான பாடங்கள் .

ஏப்ரல் மாதத்தில் பாடங்களில் படித்த ஐரோப்பாவை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது... கல்விச் சுற்றுலா நம் சொந்த செலவில். [ஐரோப்பிய பயணம் பற்றி தனியாக விரிவான பதிவுகளை எழுதியுள்ளேன்]

வகுப்புகள் முடிந்த சூட்டோடு, நானாகப் படிக்க ஆரம்பித்தேன்.

அ, ஒ, ஆ, அவ், எய், இய, ஊ...

Phonetics என்னும் வார்த்தைகளை உச்சரிக்கும் பயிற்சி தான், வடிவேலு வசனம் இல்லை. மொத்தம் 12 vowels அதில் 7 Short, 5 Long, 8 Diphthongs, 24 Consonants என ஆங்கில எழுத்துக்கள் உள்ளன. பாட்டீ...If you put a hyphen after a letter it is a Long vowel என்று பேரன் 6 மாதங்கள் முன்பே சொல்லி இருந்தார்.

You Tube பார்த்து பயிற்சி,படிக்க, எழுத என நான் முயற்சிக்க (அறை கதவை மூடிக் கொண்டு தான்)  ... விதம் விதமான உச்சரிப்பு சத்தம் கேட்டு கண்ணில் கேள்விக் குறியுடன் எட்டிப் பார்த்த என் கணவரின் முகம் கண் முன்னால் நிற்கிறது இன்றும். :)

இதே ரீதியில் Accent, Stress, Intonation, Transcription எனப் பல பயிற்சிகள். 8 மார்க் கட்டாயக் கேள்வியாயிற்றே.. வேறு வழி இல்லை. உலகம் முழுவதுக்கும் பொதுவான phonetics குறியீடுகள் பற்றி படிக்க ஒரு வாய்ப்பு அமைந்திருக்கும் போது அதை விடலாமா? என் பல வருடக் கனவும் கூட. Thames என்பதை /temz/, houses என்பதை ஹவுசிஸ் எனவும் தான் உச்சரிக்க வேண்டும்.

ஷேக்ஸ்பியர் நாடகங்களை ஆரம்பத்தில் அவ்வளவாக ரசிக்க முடியவில்லை...படிக்கப் படிக்க... அவைகளின் கட்டமைப்பு, காட்சிகள், கதாபாத்திரங்கள் என அசத்தல். [பார்த்தால் பிடிக்காது படிக்க படிக்கத் தான் பிடிக்கும்,_தனுஷ் பட வசனம்]

நேற்று முன் தினம் பார்த்த ஒரு புதுப் படத்தில் இடைவேளைக்குப் பிறகு மொத்தமுமே anti climax தான். climax இல்லை. அப்போது என் நினைவுக்கு வந்த ஷேக்ஸ்பியரின் கதை Winter's tale. (Sparknotes.com இல் போய் படிக்கலாம்.) புரியும்படியான ஆங்கிலத்தில் உள்ளது. சொல்ல வந்ததை விட்டு விட்டு வேறு விஷயத்திற்கு செல்வது தான் digression .

மீண்டும் ஷேக்ஸ்பியர். எல்லா மாதிரி வினாத் தாள்களிலும் Antonio பற்றிக் குறிப்பு வரைய சொல்லி இருந்தது. யார் இவர் எனத் தேடினேன். பல கதைகளில் இந்த பெயரில் ஒரு கதாபாத்திரம் இருக்கிறார். யாரைப் பற்றி எழுதுவது என்ற குழப்பம் ...  சாய்ஸ் இருக்கவே இருக்கிறது என்று முடிவெடுத்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினேன்.

மேக்பெத் என்னும் கதையில் Madcuff என்று ஒரு கதாபாத்திரம். பெயரே ஒரு மாதிரி இருக்கவே ..சரி ஆங்கிலேயர்கள் விதம் விதமாக பெயர் வைத்துக் கொள்வது சகஜம் என்று நினைத்து, அந்தப் பெயரை மனதில் வாங்கி படித்து, தேர்வில் முதல் கேள்விக்கான விடையும் இதே பெயரை வைத்து எழுதி விட்டேன். கேள்வித் தாளின் கடைசி கேள்வியில் Macduff என்று குறிப்பிட்டிருந்தது. அடக்கடவுளே... மீண்டும் முதல் கேள்வி. [ Dyslexia விற்கு என்ன அறிகுறி , பரீட்சை முடிந்ததும் கூகிள்  செய்ய வேண்டும்]

மற்றொரு பாடத்தில் ஆசிரியர் symbols பற்றி சொல்லி இருப்பார். எல்லா செய்யுள்களும் நிறைய symbols வைத்தே இயற்றப்பட்டுள்ளன. symbols என்பது குறியீடுகள். சில குறியீடுகள், water என்பது - degenerated soul என்பது போல சொல்லாமலே புரிந்து கொள்ள முடியும் என்பார் ஆசிரியர். நமக்கு சொன்னாலே எந்தக் குறியீடும் புரியாது புரியவில்லை என்பதே உண்மை. பெருங்கடல், மீன் போன்றவை வாழ்க்கை பயணத்தினைக் குறிக்கும். பிறவிப் பெருங்கடல்....நினைவுக்கு வருகிறதா?? இதெல்லாம் கொஞ்சம் தாமதமாக (அதாவது தேர்வு முடிந்த பிறகு)  புரிந்து கொண்டது.

பாடங்களின் மொழி க(கொ)டுமையான நடை.  ஒரு பாடம் கூட...பாடம் என்ன பாடம் ஒரு வாக்கியம் கூட அகராதி இல்லாமல் படிக்க முடியவில்லை.

மீண்டும்  Annotation அக்கப்போர். 20 ஆம் நூற்றாண்டு இலக்கியங்களின் பொதுக் கரு "Death and Salvation" எல்லா பாடங்களும் செய்யுள்களும் இதே கருவின் அடிப்படையில் அமையப் பெற்றுள்ளது. எல்லாமே ஒரே போல இருக்கே .. எந்த பாடம்னே கண்டு பிடிக்க முடியலையே _ என் தோழி .

ஷேக்ஸ்பியரில் அவர் காலத்து ஆங்கில வசனங்களை இந்த காலத்து ஆங்கிலத்தில் எழுதிப் படிக்கிறோம். அவரது ஒரிஜினல் வசனங்கள் தான் இன்றைய annotation கேள்விகள். இந்த காலத்து இங்கிலீஷே புரியலைன்னு சொல்றேன் அவர் காலத்து வசனம் எங்கே புரியுது. [இதற்கிடையில் ஆங்கில இலக்கியம் படித்த என் அக்காவின் உபதேசம்.. நீ எல்லாத்தையும் ஒரு முறை நல்லா படி, எப்படியும் அங்கே போனதும் இந்த கதையா அந்தக் கதையா இல்லை இவன் சொன்னானா அவன் சொன்னானான்னு குழப்பம் வரத்தான் செய்யும், சமாளிக்கலாம் ]

அடுத்தடுத்து விதம் விதமான குழப்பங்கள் தொடர்ந்தன.

ஒரு வாக்கியம் : He stoops to slander Valentine

He = அவன்  Valentine- ஒரு ஆண் கதாபாத்திரம் மீதிக்கு என்ன அர்த்தம்??  அவன் வாலண்டைனைப் பற்றி அவதூறாகப் பேச ஆரம்பித்தான் என்பது அதன் பொருள்.

மொழிபெயர்ப்பு பற்றிய பாடத்தில் கீழே உள்ளது போல(வும்) ஒரு வாக்கியம்: 

A text in  SL is decoded, after which it is transferred to the deep structure of the TL, where it is encoded at the semantic syntactic level in order to be expressed at the surface level of the TL.

முதல் முறை படிக்கையில் இந்த SL, TL போன்றவை என்னவென்றே  தெரியவில்லை . ஒரு வழியாக நான் புரிந்து கொண்டது, ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழி மாற்றம் செய்யும் போது இரண்டாவது மொழியின் அமைப்பு மற்றும் உட்பொருளைப் புரிந்து அதன் மொழி இலக்கணத்துக்கு உட்பட்டு ,மொழி மாற்றம் செய்ய வேண்டும் என்பதே. SL(source language) TL(target language).

சில வாக்கியங்களுக்கு கடைசி வரை பொருள் புரியவே இல்லை .

கடைசித் தேர்வு Journalism. அன்றன்றைய பாடங்களை அன்றன்றே படிக்க வேண்டும் என்று பள்ளியில் படித்த போது சொல்லிக் கொடுத்ததை இன்றளவும் பின்பற்றும் சமர்த்துப் பிள்ளை நான்.

Commerce சார்ந்த பாடம் என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆரம்பிக்க, அதன் முதல் பாடத்தில் ஒரு வாக்கியம்.

There are revolutionary developments in picture transmission. There are also still cameras on the market, which can capture 50 images on a 2 inch floppy disk.

அடேங்கப்பா.... என்னா revolution .... என்னா டெவலப்மெண்ட்டு !! ஹலோ..யாருப்பா அது? எப்பப்பா கடைசியா update பண்ணீங்க?

தேர்வு நடந்த பள்ளியில் ஒரு பெண்மணி ஒரு நாள் சொல்லிக் கொண்டிருந்தார் நாம் படிப்பது மிகப் பழைய syllabus என்று. இலக்கியப் பாடங்கள் மாற்றம் இல்லாதவை என்பதால் பரவாயில்லை. பின்னே வந்த  revolutionary development தான் சற்றே டென்ஷன் ஏற்படுத்தியது.

சிரமமாக இருக்கும் என்று எண்ணிய ஷேக்ஸ்பியரோ சுலபமாகிட, சிரமம் இன்றி முடிக்கலாம் என்றெண்ணிய language and literature 80 இலக்கணக் குறிப்புக்களுடன், வெய்யிலோடு சேர்த்துப் போட்டு புரட்டி எடுத்து விட்டது.

ஆங்கில இலக்கியம் படிப்பது  இவ்வளவு கஷ்டமா என்று நினைக்காதீர்கள் மக்களே! நான் இது வரை படித்த 3 மாஸ்டர் டிகிரிகளும் காமர்ஸ் தொடர்புடையவை. ஆர்வக் கோளாறில் இலக்கியம் படிக்க வந்ததன் விளைவுதான் இது

பின் குறிப்பு: ஆங்கில இலக்கியம் படிக்கும் முயற்சிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உற்சாகமூட்டி ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகள்.

[இப்படி public ஆக நன்றியெல்லாம் சொன்னாலாவது 5 பேப்பரும் தேறும் என்ற எண்ணம் தான்]

எது எப்படி இருந்தாலும்....படிச்சா பிடிச்சர்லாம்.


பின் குறிப்பு :
[கடைசி வாக்கியம் திரைப்பட இயக்குனர் திரு பாக்கியராஜ் அவர்கள் எழுதிய ஒரு தொடரின் தலைப்பை சுட்டு எழுதியது தான். நன்றி அய்யா]