Sunday, 16 August 2020

உள் நாட்டு விமானப் பயண அனுபவங்கள்...[சென்னை முதல் இமயம் முடிய]

ஜனவரி 1, 2006  

[புதுடில்லி - ஹைதராபாத்சென்னை]

குர்காவ்னில் பேஷன் டிசைனர் ஆக வேலை பார்த்துக் கொண்டிருந்த மகளைக் காண கணவர் மகனுடன் சென்ற பயணம் அது .போகும்போது ரயில் வரும் போது விமானம். (Spice jet)   முதல் விமானப் பயணம் கூட.

மாலை 6.30 மணிக்கு விமானம் கிளம்பும் நேரம் 

அங்கு கடும் பனி மூட்டம்.விமானி  50 மீட்டருக்கும் குறைவான visibility தான் இருக்கிறது, இறங்கி வீட்டுக்கு செல்லுங்கள் என்று சொல்லி விட்டார்.

இறங்கி டெர்மினல் உள்ளே செல்வதற்குள் குளிரில் விறைத்து போனோம். சென்னைக்கு தானே செல்லப்போகிறோம் என்று ஒரே ஒரு ஸ்வெட்டர் தவிர மீதியை மகளிடமே கொடுத்து விட்டோம்.

அதற்கிடையில் என் கணவர் டிக்கெட்டுகளை 3 ஆம் தேதிக்கு மாற்றி வாங்கி வந்தார். [ குளிரில் நடுங்கி கொண்டு எதிரில் யார் வருகிறார்கள் என்றே தெரியாத நிலையில் நான் டிக்கெட்டை மாற்றிக்  கொண்டு வந்தேனே அது பற்றி எழுதவே இல்லை என்று கோவித்துக் கொள்ளக் கூடாது இல்லையா என் கணவர்?]

அந்த பகுதியில் அந்த நேரத்தில் பயணித்துக் கொண்டிருந்த என் மகளின் வகுப்பு தோழர் எங்களை அழைத்துச் சென்றார்.  வெடவெடப்பு அடங்க 2 மணி நேரங்கள் ஆனது.

3 ஆம் தேதி விமானப் பயணத்தைப் பற்றி சொல்லவே இல்லையே .... ஹைராபாத் வரை சுகமான நிம்மதியான  பயணம். அங்கிருந்து கிளம்பும் சமயம் பாதுகாப்பு விதிகள் பற்றி விளக்கும் போது உங்கள் இருக்கையில் இருக்கும் cushion ஐயே floatation ஆக பயன்படுத்தலாம் என்கிறார்கள்.

வங்காள விரிகுடா கடல் மேலே பறக்கும் போது பிரச்சினை வந்தால் cushion கட்டிகொண்டு கடலில் குதியுங்கள் என்பதே அதன் பொருள் . கேட்டதும் ஒரே படபடப்பு எனக்கு. எங்கே எப்படி அந்த cushion எடுக்க வேண்டும்  என்று என் மகனைக் கேட்டால் யாருக்கு தெரியும் என்று பதில் வந்தது. பயந்து கொண்டே சென்னை வந்து சேர்ந்தோம்.

 

பிப்ரவரி, 2008

[பூனேசென்னை]

அலுவல் நிமித்தம் பூனேவிற்கு சில நாட்களுக்கு செல்ல வேண்டி இருந்தது. (தனியாக). திரும்பி வரும் நாளில் சகோதரிக்கு   பூனே அலுவலகத்தில் [நாங்களிருவரும் ஒரே அலுவலகத்தில் இருந்தோம்]  வேலை இருந்ததால் வழக்கமாக வரும் டாக்ஸி ஓட்டுநர் வந்து உன்னை அழைத்து செல்வார் என்று சொல்லி விட்டு சென்று விட்டார். மதியம் 1.30  விமானம் கிளம்பும் நேரம். 12 மணி . ஓட்டுநர்  வரவேயில்லை . வழக்கமான  ஓட்டுநர் வராமல் அவரது மகனை  (20 + வயதுகள்) அனுப்பி இருந்தார். மகன் நான் receptionல் பெட்டியுடன் காத்திருந்ததை கவனிக்காமல், reception பகுதியில் கேட்காமல் .மாடியில் நான் தங்கி இருந்த அறைக்கு சென்று தேடி விட்டு காணவில்லை என்று receptionல் சொல்ல ...அவர்கள்  என்னை அடையாளம் காட்ட ...

12.15 pm

காரில் ஏறி புறப்பட்டோம்.  அவருக்கு  ஏர்போர்ட் போக வழியே தெரியவில்லை . 10 அடிக்கு ஒரு முறை நிறுத்தி "ஏரோடோ" எப்படி செல்வது என்று மராத்தியில் கேட்டார். மேடு, பள்ளம், சாக்கடைகள்,  குடிசைகள் என அமைந்திருந்த குறுகலான பகுதிக்குள்ளெல்லாம் புகுந்து பூனே நகரை  சுற்றி காண்பித்தார். நான் ஆங்கிலத்தில் அலற அவர் மராத்தியில் பேச.... உதவிக்கு சகோதரியை தொலைபேசியில் கூப்பிட்டேன். அதுவும் வேலைக்கே ஆகவில்லை . மீண்டும் ஏரோடோ  ஏரோடோ மட்டுமே ..வாக்கியமாக கூட கேட்கவில்லை. அவரின் நடவடிக்கைகளை கண்டு எனக்கு விமானத்தை பிடிக்க முடியுமா என்ற கவலையை மீறி சிரிப்பை அடக்க முடியவில்லை. 

12.45 pm

ஒரு வழியாக ஆங்கிலத்திற்கு மாறி "airport" என்று கேட்க ஆரம்பித்தார். இந்த சமயத்தில்  அகலமான சாலைப்பகுதிக்கு வந்திருந்தார். சாலைகளில் பலகைகளில் ஆங்காங்கே ஏர்போர்ட் போகும் வழி  என்று எழுதி அம்புக் குறி  இருக்கே அதை பார்த்து ஓட்டுங்கள் என்று நான் சொல்ல... அவருக்கு புரிந்தால் தானே ? மீண்டும் airport  விசாரணை... பொறுமை மீறி go straight என்று நான் வழி காட்ட ஆரம்பித்தேன்.

1.15. pm

விமான நிலையத்திற்கு மிக அருகில் ஒரு திருப்பம் . இடது புறத்தில் மிலிட்டரி பகுதி வலது புறத்தில் விமான நிலையம் . நம்மவருக்கு   இடதா வலதா என்று பலத்த சந்தேகம். நன்கு யோசித்து இடது புறம் திரும்ப ஆரம்பிக்க நான் right right என்று அலற....

 

1.20 pm 

விமான நிலையம் .

 

 பூனே விமான நிலையம் மிக சிறியது. Terminal என்பது சிறிய hall தான். கதவை தாண்டியவுடன் 100 மீட்டர் நடந்தால் விமானம் நின்று கொண்டிருக்கும்.   

கடைசியாக, தாமதமாக, ஓட்டமாக ஓடி வேறு சென்றதால் கடுமையான security check. வெளியில் விடவே இல்லை. விட்டதும் ஓட்டமாக விமானத்தை நோக்கி ஓடி படிக்கட்டுகளில் ஏறினேன்.

Mofussil பஸ் நிலையங்களில் கண்டக்டர் பின் கதவிலிருந்து எட்டி பார்த்து பயணிகள் ஏறியதும்  ரை... ரை ....என்று கூவுவதற்காக காத்திருப்பது போல air hostess எட்டி பார்த்துக் கொண்டிருந்தார். நான் ஏறி விமானத்தின் கதவுக்கு அருகில் கடைசி இருக்கையில் (அது ஒன்று தான் காலி ) சரியாக கூட அமரவில்லை ... ரை...  ரை...  இல்லாமலே விமானம் கிளம்பி விட்டது .

 

டிசம்பர் 2015 / ஜனவரி 2016

[சென்னை - மும்பை -மஹாபலேஷ்வர்]

ஜனவரி 1 ஆம் தேதி  காலை மும்பையில் விமானம் ஏறினோம் . 1.50 மணி நேர பயணம் . மார்கழி மாதம் . சென்னையில் கடும் பனிமூட்டம் . திருப்பதி அருகே இருந்தபோது காலை 9 மணி ஆகியும் சென்னையில் விமானம் தரையிறங்க அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது.

விமானம் திருப்பதி விமான நிலையத்தின் மேலே சுற்றி சுற்றி சுற்றி (3 முறை) ஒரு மணி நேரம் பறந்து கொண்டே இருந்தது.

எப்போது தரையிறங்குவோம், விமானத்தில் எரிபொருள் தீர்ந்து விடாதா இப்படி பல யோசனைகள்.

இருக்கைக்கு முன்பாக இருந்த டிவியில்  ஒரு திரைப்படம் பார்த்து முடித்த சமயம்  சென்னையில் தரையிறங்கினோம் .

 

நவம்பர், 2017

[சிம்லா, குலு, மணாலி]

டெல்லி வரை விமானம் அங்கிருந்து innova காரில் மற்ற இடங்களுக்கு பயணம்.

திரும்பி வரும் சமயம் டில்லியில் smog. மாலை 5.30 மணி விமானத்திற்கு 1.30 க்கே விமான நிலையத்தில் கொண்டு வந்து இறக்கி விட்டு சென்று விட்டார் இன்னோவா ஓட்டுநர்.

விமானத்தில் ஏறியதும் விமானத்தின் உட்புறம் வித்தியாசமாக காட்சியளித்தது . சிகாகோ O 'Hare விமான நிலையத்திலிருந்து சென்னை வரும் விமானம் அது.புத்தம் புதிய விமானம் . ஜன்னலின் வடிவமைப்பு, இருக்கைகள், உள்ளமைப்பு எல்லாமே வித்தியாசம். இருக்கையில் அமர்ந்ததும் அங்கே இருந்த விமானம் பற்றிய குறிப்புகள் இருந்த அட்டையை பார்த்தேன். மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.  காரணம் நான் பயணம் செய்ய மிகவும் விரும்பிய Boeing 787-8 மாடல் விமானம் அது. ஜன்னலில் ஒரு பட்டனை அழுத்தினால் எவ்வளவு tint வேண்டுமோ அந்தளவுக்கு மாறும்.

[Boeing நிறுவனத்தின் விமானங்கள் Boeing 737, Boeing 747, Boeing 777.... என ஒவ்வொரு model க்கும் ஒவ்வொரு  எண்ணைக் கொண்டிருக்கும் . ஏர்பஸ்  நிறுவனத்தின் விமானங்கள் A 318, A 320 , A 321 , A 380 என்பது போல இருக்கும்.

Boeing 787 என்பது latest model விமானம். "Dreamliner" என்பது அதன் செல்லப் பெயர். ஆரம்பத்தில் இந்த model விமானத்தில் மின்சாரக் கோளாறுகள் ஏற்பட்டமையால் சில காலம் பறக்காமல் நிறுத்தி வைக்கப் பட்டு, அந்த பிரச்சினை சரி செய்யப்பட்ட  பிறகு மீண்டும் வானில் பறக்க விடப்பட்டது.

Boeing 747 மற்றும் A380 ஆகியவை double decker வகைகள் .

Boeing விமானங்களின் மூக்கு பகுதி சற்றே அகலமாகவும் Airbus கூர்மையாகவும் இருக்கும்.

Boeing 747க்கு நான்கு என்ஜின்கள், Boeing 777க்கு இரண்டு என்ஜின்கள். இந்த வகை விமானத்தில் விபத்துக்கள் மிகக் குறைவு. 

விமானங்கள் , விமான விபத்துக்கள் பற்றிய தகவல்கள் படிப்பது , பார்ப்பது என் மகனிடமிருந்து கற்றுக் கொண்ட பொழுது போக்கு. விமானப் பயணத்திற்கு சில நாட்கள் முன்பு இந்த பொழுது போக்கை தற்காலிகமாக நிறுத்தி விடுவோம்.


டிசம்பர் 25-27, 2017

[சென்னை – கோவை]

விமான பயண நேரம் 50 நிமிடங்களே.  ஆயினும்  காலை 10.30 க்கு வீட்டை விட்டு கிளம்பிஆட்டோ, , மெட்ரோ ரயில் , விமானம், வாடகைக்கார்,பேருந்து எனஎ அன்பே சிவம் படத்தில் வரும் கமலஹாசன் மாதவன் போல இரவு 7 மணிக்கு சத்தியமங்கலம் போய் சேர்ந்தோம். 

[அச்சமயத்தில் கோயம்பேடு - ஆலந்தூர் , ஆலந்தூர் - விமான நிலையம் என இரண்டு ரயில்களில் பயணிக்க வேண்டும். ஆலந்தூரில் இறங்கி இரண்டு தளங்கள் மேலேறி ...விமான நிலையம் வந்தடைந்தோம்.

விமான நிலையத்தில் escalator, travelator , lift , connecting bridge எதுவுமே இல்லை. படிக்கட்டுகளில் பெட்டியை சுமந்து கொண்டு இறங்கி உள்நாட்டு விமான நிலையம் சென்றோம்.]

அடுத்த நாளே மீண்டும் கோவை - சென்னை வந்து சேர்ந்தோம்.

 

மார்ச்/ ஏப்ரல், 2018

[சென்னை - டில்லி- ஸ்ரீநகர்]

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரான ஸ்ரீநகர் / பஹல்காம் / குல்மார்க் பயணம். Air India விமானப் பயணம் .

போகும்போது ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அவ்வளவாக சோதனைகள் இல்லை

அங்கே நாங்கள் தங்கியிருந்த 4 நாட்களில் ஒருநாள் குல்மார்க், மீதி நாட்கள் ஸ்ரீநகர் என்றே சுற்றி பார்க்க முடிந்தது. பகல்காமில் துப்பாக்கி சூடு, குல்மார்க் ஸ்ரீநகரில் ஊரடங்கு உத்தரவு 3 நாட்களுக்கு. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் கிடையாது என்பதால் ஊரை சுற்றி பார்த்தோம்.

ஊருக்குள் எங்கெங்கும் CRPF வீரர்கள், காஷ்மீர் மாநில காவலர்கள் துப்பாக்கி இந்திய வண்ணம் நின்று கொண்டு இருந்தார்கள்.(100 அடிக்கு ஒருவர் )

திரும்பும் நாளில் 3 மணி நேரங்களுக்கு முன்பாக விமான நிலையத்தில் இருக்க வேண்டும் என்பதால் 4 மணி நேரங்கள் முன்பே கிளம்பி விட்டோம். 2 கிலோமீட்டர்களுக்கு முன்பிருந்தே scanning/security check ஆரம்பம் . விமானத்தில்  ஏறும் முன்பு வரை 6 முறை நம் உடைமைகளையும் நம்மையும் சோதனை செய்தார்கள். உடைமைகளை விமானத்தில் ஏற்றுவதற்கு முன்பு அவரவரின் பெட்டி எது என்று அடையாளம் காட்டிய பின்பே விமானத்திற்குள் பெட்டிகளை அனுமதிக்கிறார்கள். [Boarding pass கூட வாங்கி சோதித்து பார்த்தார்கள்]

விமான நிலைய காத்திருப்பு பகுதியிலிருந்தே பனிமலைகள் தரிசனம் கண்கொள்ளாக் காட்சி. உள்ளே நடந்த கெடுபிடியால் எதுவும் ரசிக்கவில்லை.

விமானம் மேலேறியதும் தெரிந்த பனிமலைகள் இயற்கையின் அற்புதம். எங்கே ஆரம்பம் எங்கே முடிவு என்று தெரியாத மலைத்தொடர்கள்.]

உள்நாட்டு பயணங்கள் ஒரு வகை என்றால் வெளி நாட்டு பயணங்கள் வேறு வகை.

ஒவ்வொன்றும் ஒருவிதம்...

 

பின் குறிப்பு : மேற்கூறிய அனைத்து பயணங்கள் பற்றிய பதிவுகளும் என் facebook timeline மற்றும் manjooz .blogspot .com ல் உள்ளன .

 

 







Tuesday, 2 June 2020


அவளா நீ??
வலைத்தளங்களும் கூகுள் மேப்பும் அதிகம் பயன்படுத்தப்படாத 2010ல், மகள் வாழும் சான்பிரான்ஸிஸ்கோ நகரம் எங்கே இருக்கிறது என்று அட்லாஸ் பார்த்து தெரிந்து கொண்டு, என் முதல் அமெரிக்கப் பயணம் அமைந்தது.22 நாட்களே இருந்த அந்தப் பயணத்தில் சான்பிரான்ஸிஸ்கோ சென்ற மறுநாளே நயாகரா நீர்வீழ்ச்சியை காண மீண்டும் கிழக்கு கடற்கரை நோக்கி விமானத்தில் அட்லாண்டா வழியாக நியூயார்க் மாநிலத்தை சேர்ந்த Buffalo நகருக்கு சென்றோம்.
குடும்ப நண்பர் ஒருவரும் Buffaloவில் எங்களுடன் இணைந்து கொள்ள Niagara Falls City யை நோக்கி சுமார் 40 நிமிடங்கள் பேருந்தில் 27 km பயணம். Jetlagல் மப்பும் மந்தாரமுமான பயணம்.பேருந்தில் சென்ற போது பல மைல்களுக்கு அப்பாலிருந்தே மேகமூட்டம் தெரிகிறது. அந்த பகுதியில் செடி கொடிகளோ மரங்களோ தென்படவில்லை. Niagara Falls City சிறிய, எல்லா வித கடைகளும் உள்ள, Floating population அதிகம் உள்ள ஊர்.
[Horse shoe (கனடா), American மற்றும் Bridal veil (வடஅமெரிக்கா) என மூன்று பிரிவாக நீர் விழுகிறது. குதிரை லாட வடிவில் இருப்பதால் Horse shoe falls, மணப்பெண்ணின் தலையிலிருந்து நீ......ளமாக தொங்கும் சல்லாத்துணி போல இருப்பதால் Bridal veil என்ற காரணப் பெயர்கள். American falls உயரம் குறைவானது. (https://en.wikipedia.org/wiki/Niagara_Falls)]
வாருங்கள்..நீர்வீழ்ச்சியை காண செல்வோம்.
Niagara Falls State Park என்பது அரசாங்கம் நீர்வீழ்ச்சியை சுற்றி அமைத்துள்ள பாதுகாக்கப்பட்ட பகுதி. அதற்கு நேரெதிரில் நாங்கள் தங்கியதால் பயண நேரம் மிச்சம்.
ஆகஸ்ட் மாதம் அங்கே வெயிற்காலம் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம். குறிப்பாக இந்தியர்கள், மற்றும் கிழக்காசியர்களே அதிகம் தென்பட்டனர்.
[Lake Erie மற்றும் Lake Ontarioவை[Great Lakes என அழைக்கப் படும் உலகின் மிகப் பெரிய நன்னீர் ஏரிகள்] இணைக்கும் நீர்ப் பாதையே (drainage) நயாகரா நதி. Lake Erie யிலிருந்து நயாகரா நதி பிரிந்து அமைதியாக ஓடி வந்து 51 மீட்டர்(167 அடி ) உயர பள்ளத்தாக்கில் செங்குத்தாக பெரும் சப்தத்துடன் விழுகிறது. மீண்டும் அமைதியாக ஓடி Lake Ontario வில் கலக்கிறது.]
பூங்காவின் உள்ளே சிறிது தொலைவு நடந்தால் நீர்வீழ்ச்சி தென்பட தொடங்குகிறது. அருகில் நெருங்க நெருங்க அதன் பிரம்மாண்டம் மெய் சிலிர்க்க வைத்தது.
நயாகரா நீர்வீழ்ச்சி அதன் அழகுக்கு மட்டுமல்லாமல் மின்சார உற்பத்திக்கும் பெயர் பெற்றது.
பூங்காவிலிருந்து பார்க்கையில் கனடா பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள் சுழலும் ரெஸ்டாரண்டுகள் observation tower, அங்கு உலாவும் மக்கள் எனப் பலவும் தெரிகிறது. வலப்புறம் தலையை திருப்பினால் ரெயின்போ பாலம், அமெரிக்க பகுதியின் Horse Shoe Falls, observation tower, அமெரிக்க பகுதி நீர்வீழ்ச்சிகள், கீழே குனிந்தால் படகுகள் எனப் பல காட்சிகளையும் காணமுடிகிறது.
[இரண்டு ஏரிகளும், நயாகரா நதியும் பாதி வடஅமெரிக்கப் பகுதியிலும் மீதி கனடா நாட்டுப் பகுதியிலும் அமைந்துள்ளன. Ontario நகரத்திலிருந்து 121 km தொலைவில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. நதிக்கு இருபுறமும் உள்ள ஊர்களின் பெயரும் Niagara Falls City தான்.]
காலை எழுந்ததும் electric cooker ல் சாதம் வடித்து பொடி தொக்கு தயிர் வகையறாக்களுடன் சாப்பிட்டு விட்டு கிளம்புவோம். மதியம் பூங்காவில் உள்ள விடுதியில் உண்போம். அங்கு தான் நம் நாட்டு மக்களுடனான சந்திப்பு பேச்சு வார்த்தைகள் எல்லாம். இரவில் கையில் கொண்டு சென்ற சப்பாத்திகள் உதவின. [1.5 வயது கேசவ் காய் இல்லாமல் சாப்பிட மாட்டார் அந்நாளில். எல்லா காய்க்கும் கக்கக்காய், கம்மக்காய் ,கொம்மக்காய் என்று ‘க’ வரிசையில் பெயர் வைத்து கூறுவார். கக்கக்காய் இருந்தால் தான் சாப்பிடுவேன் என்பார். [சாப்பாட்டுக்கே வழியில்லை காய்க்கு எங்கே செல்வேன் கொடுப்பதை சாப்பிடு _ அவரின் தாயார்]
நீர்வீழ்ச்சி கொட்டும் இடத்திற்கு மிக அருகில் செல்ல அமெரிக்க பகுதியில் செயல்படும் Maid of the Mist Cruises என்னும் பெயரில் செயல்படும் மின்சார படகில் சென்றோம்.(கனடா பகுதியில் Hornblower Cruises) அவர்களே வழுக்காத செருப்பு மற்றும் raincoat( நீல நிறம்) ஒவ்வொருவருக்கும் தருவார்கள்.(Disposable) மிக அருகில் சென்ற போது கீழே விழும் நீர்த்துளிகள் தெறித்து மழையில் நனைவது போன்ற நிலை. ஒரு புறம் நீர்வீழ்ச்சியின் பிரம்மாண்டம் கண்டு பயம் மறுபுறம் மகிழ்ச்சி எனக் கலவையான உணர்வுகள்.
நதிக்கு மறுகரை கனடா என்று சொன்னேன் நினைவிருக்கிறதா? ஹெலிகாப்டர் நிலையத்தை தாண்டியவுடன் கனடா நாட்டுக்கு செல்ல check post. கனடா நாட்டு விசா உள்ளவர்கள் காரில் சென்று கனடா பகுதியிலிருந்து நீர்வீழ்ச்சியை கண்டு மகிழலாம். பாதசாரிகளுக்கு தனியாக Rainbow bridge என்னும் பாலம் உள்ளது. [நாமும் செல்லலாம் என்று கூறினேன். விசாவுக்கு application போட்டு விட்டு பாலத்திற்கு அருகில் உட்கார்ந்திரு ஒரு மாதத்தில் கிடைத்து விடும் போய் பார்த்து விட்டு வீடு வந்து சேர் நாங்கள் கிளம்புகிறோம் என்றார் மகள்]
மறுநாள் காலை நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு நேரெதிரில் ஹெலிகாப்டர் நிலையம்(?!). 4 தூண்கள் அதன் மேல் சதுரமான தளம் அவ்வளவே. கீழே பயணச்சீட்டு கொடுக்கும் இடம். அவரே உதவியாளர். ஹெலிகாப்டர் பைலட் வெளியில் வந்து நம்மை அழைத்து செல்வார். நான் என் கணவர் மற்றும் நண்பர் சென்றோம். என் கணவரின் seat belt clip வேலையே செய்யவில்லை அவர் அலற அலற ஹெலிகாப்டர் [குட்டி கேசவின் மழலையில் TITATO] கிளம்பியது. பெல்டை ஒரு கையிலும் உயிரை மற்ற கையிலுமாக பிடித்துக் கொண்டு பயணித்தார் என்றே சொல்லலாம். [விமானப் பயணம் என்றாலே பயப்படுபவர் என் கணவர்.] நான் வீடியோ மற்றும் புகைப்படங்கள் நிறைய எடுத்தேன். வானில் இரண்டு முறை நீர்வீழ்ச்சியை சுற்றி வட்டமடித்து கனடா பகுதியிலும் பயணித்து விட்டு வந்தோம்.வானிலிருந்து பார்க்கையில் Horse shoe நீர்வீழ்ச்சியின் மேல் வானவில் தோன்றி spectacular என்ற வார்த்தையை உண்மையாக்கியது. மறக்க முடியாத அனுபவம்.
முன்பொரு முறை Lake Superior, Lake Michigan பற்றி எழுதிய போது அவைகள் கடலளவு பெரியவை என்பதால் கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது என்று கூறினேன். அது போல வெல்லண்டு கால்வாய் (The Welland Canal) Lake Ontario மற்றும் Lake Erie ஆகியவைகளை இணைக்கிறது. அந்த இடத்தில் கப்பல்கள் நயாகரா நீர்வீழ்ச்சியை கடந்து செல்வதற்காக 8 கதவுகள் அமைக்கப்பட்டு, கப்பல் வரும் சமயத்தில் திறந்து விடப்படுகின்றன. (Courtesy: Wikipedia)
நயாகரா நீர்வீழ்ச்சியை கயிறு கட்டி கடந்து செல்லுதல் படகில் செல்லுதல் நடந்து செல்லுதல் போன்ற வீர விளையாட்டுக்கள், வீர மரணங்கள், பனிக்காலத்தில் உறைதல் எனப் பல தகவல்கள் கொண்ட டாக்குமெண்டரி ஒன்றையும் கண்டோம். Maple மரங்களை முதலில் அங்கு தான் பார்த்தேன். [காய்ந்த இலை ஒன்றை சென்னைக்கு எடுத்து வந்து பத்திரமாக வைத்திருந்தேன்.]
Bridal veil மற்றும் American நீர்வீழ்ச்சிகளை காண Goat Island என்னும் பகுதிக்கு சென்று அனுமதி சீட்டு,வழுக்காத செருப்பு raincoat (மஞ்சள் நிறம்) வாங்கி கொண்டு ஒரு குகையின் உள்ளே நடந்து பின் (The Cave of the Winds) elevator வழியாக மேலேறினால் நீர்வீழ்ச்சியின் மிக அருகில் அடிவாரத்தில் நாம் இருப்போம். அருவி நம்மை கண்டிப்பாக குளிப்பாட்டி விடும். அற்புதமான அனுபவம்.
Prospect Point Observation Tower மேலே ஏறி நின்று நயாகரா நீர்வீழ்ச்சியை(Horse shoe falls) மற்றொரு கோணத்தில் காணலாம். Prospect Point பூங்காவிலிருந்தும் பாதசாரிகள் நீர்வீழ்ச்சியை கண்டு களிக்க முடியும்.
அடுத்த நாள் காலை நயாகரா பூங்காவை அங்குள்ள குட்டி ரயிலில் ஏறி சுற்றி பார்த்தோம். நதிக்கரையில் அமர்ந்திருந்தோம். அமைதியாக ஓடி வரும் அந்த நதி சில அடிகளை கடந்ததும் பெருத்த ஓசையுடன் ஆர்ப்பரித்து கொட்டுவது இயற்கையின் விந்தை.
Horse shoe falls இரவில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும். கனடா பகுதியிலிருந்து வாணவேடிக்கை நிகழ்ச்சியும் உண்டு. பாதசாரிகள் செல்ல ஒரு பாலம் உண்டு என்று சொன்னேன் இல்லையா அதில் பாதி தூரம் விடுவார்கள். இரவில் குளிரில் நடுங்கி கொண்டே பாலத்தில் அமர்ந்து வாண வேடிக்கைகளை கண்டு களித்தோம். நதியின் நீர் புல்லின் பச்சை நிறம் போல் வித்தியாசமாக இருக்கிறது. அதில் உள்ள உப்புக்களும் உடைந்த பாறைகளின் துகள்களும் தான் அந்த வித்தியாசமான நிறத்திற்கு காரணம் என்று சொல்லப் படுகிறது .
(https://www.youtube.com/watch?v=2hGON9d3_Gk)
நிதானமாக 3 பகல்கள் 2 இரவுகள் சுற்றி சுற்றி நீர்வீழ்ச்சியை ரசித்தது இன்றளவும் மறக்க முடியாத அனுபவம். பின்னாளில் ஐரோப்பா ஆஸ்திரேலியா ஆசியா என பல கண்டங்களுக்கு பயணம் செய்ய நேர்ந்தாலும் முதல் வெளிநாட்டுப் பயணம் முக்கியம் இல்லையா? வரலாறு முக்கியம் அமைச்சரே… பின் குறிப்பு :
இந்த நீர்வீழ்ச்சியின் அழகை "ஜோடி" என்ற திரைப்படத்தில் ஒரு பாடலில் காட்டியிருக்கிறார்கள் .( கனடா பக்கத்திலிருந்து)

Wednesday, 6 May 2020

என்ன சத்தம் இந்த நேரம்....

பறவைகளின் இன்னிசை , எங்கோ தூரத்தில் செல்லும் ஒற்றை வாகனத்தின் ஓசை , யார் வீட்டு தொலைக்காட்சி பெட்டியிலிருந்தோ வரும் பக்தி பாடல் ஓசை , மின்விசிறியின் ஓசை இவ்வளவுதான் lockdown தினங்களின்
அதிகாலை ஓசைகள் . (பூ பூக்கும் ஓசை அதை[யும்] கேட்கத்தான் ஆசை ....)
எழுத்தாளர் சுஜாதா அவர்கள் "வாரம் ஒரு பாசுரம் " புத்தகத்தில் 7 ஆம் நூற்றாண்டின் சப்தங்களுடன் தற்போதைய சப்தங்களை ஒப்பிட்டு சொல்லி இருப்பது நினைவிற்கு வருகிறது .

காகங்கள், ஒற்றை குயில், தாழப் பறக்கும் விமானத்ததின் ஓசை, பக்கத்துக்கு காலனியில் காய்கறி விற்பவரின் குரல் ...என இன்றைய ஓசைகள் பற்றி சொல்லிவிட்டு அந்நாளில் கதிரவன் கிழக்கே சிகரத்தை அடைந்து விட்டான் இருள் நீங்கியது பூக்கள் எல்லாம் தேன் சொரிந்தன ... அரங்கனே எழுந்தருள்வாய் என "கதிரவன் குணதிசை சிகரம் வந்தடைந்தான் " என்ற தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாடலுக்கு விளக்கம் எழுதி விட்டு கடைசியில் இன்றைய தினங்களின் நாராசத்தில் அரங்கன் தூங்கவே மாட்டான் என்று முடித்திருக்கிறார்.(அரங்கன் தற்சமயம் 21 நாட்கள் பகலில் பக்தர்களுக்கு அருள் பாலித்து விட்டு இரவில் நன்றாக உறங்குவார் என நம்பலாம்.)

பல வருடங்களாக மேலை நாடுகளில் நடப்பில் இருக்கும் work from home கலாச்சாரம் இங்கும் நுழைந்து விட்டது. அலுவலக வேலை தொடங்கி நாலாயிர திவ்விய பிரபந்த வகுப்புகள் வரை அனைவரும் zoo(m)மிக் கொண்டு இருக்கிறார்கள்.
வீடியோ கால் மற்றும் தொலைபேசி மூலம் உறவும் நட்பும் பலப்படுவதென்னவோ உண்மை . (ஏன்டா போன் பேசும்போது சிரிச்சாப்ல பேச கூடாதா _ தாயார் , அம்மா இது அலுவலக மீட்டிங் கால் அம்மா _மகன் )
சம்ஸ்கிருத வகுப்பு சமயத்தில் ஏன் வீட்டு பாடங்களை எழுதவில்லை சகோதரி என்று என் மாணவிகளை கேட்டால் எங்களுக்கு பிள்ளை/பேரன்களுக்கு மாலையில் என்ன நொறுக்கு தீனி செய்து தருவது என்று யோசிக்கவே நேரம் சரியாக இருக்கிறது என்கிறார்கள். பாடத்தை நிறுத்தி விட்டு அவற்றிற்கான குறிப்புகளைக் கொடுத்தேன் . (வாழ்க்கைக் கல்வி?!)
என்றோ எகனாமிக்ஸ் வகுப்பில் படித்த scarce means, more demand to be managed with limited resources என்பதை பயன்படுத்தி கைவசம் இருக்கும் மளிகை காய்கறிகளை வைத்து சுவையாகவும்(?!) சத்தாகவும் சமைப்பது சவாலாக உள்ளது.

இந்த lockdown மக்களை முழுநேர creators ஆக்கி விட்டதென்னவோ உண்மை . விதம் விதமான மீம்ஸ்கள் (மீமீஸ் என்று சொல்லு பாட்டி _என் குட்டி பேரன்), கட்டுரைகள் , பக்தி செய்திகள் , சமையல் குறிப்புகள் தனிமையான இந்த நாட்களின் வெறுமையை அருமையாக விரட்டுகின்றன.

மனதில் பதிந்த சில பதிவுகள்.
மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்களுக்கான பாராட்டுக் கைதட்டலில் எதற்காக வீட்டிற்குள் நாள் முழுவதும் அடைந்து இருந்தோம் என்பதையே மறந்து மக்கள் கூட்டமாய் கூடி கைதட்டியது கண்டு பொருமி ஒரு இளைஞர் f ... வார்த்தையை விதம் விதமாக உபயோகித்து தன்னுடைய ஆற்றாமையை கூறி இருந்தார் .

130 கோடி மக்களும் ஒரே 'C' வார்த்தையை நினைத்துக் கொண்டே, சொல்லிக் கொண்டே இருக்கிறோம். அதனால் negative vibration ஏற்படுகிறது. 'C' வார்த்தையை நினைப்பதை சொல்வதை தவிர்ப்போம் என்கிறார் ஒரு பதிவின் ஆசிரியர்.

Zoom மற்ற video apps ஐ விட எப்படி சிறப்பாக செயல்படுகிறது, வீட்டையே ஒரு பிகினிக் தலமாக எப்படி மாற்றுவது, பிள்ளைகளுடன் பொழுதை பயனுள்ளதாக கழிப்பது எப்படி (3D animal videoவும் இதில் உண்டு), புத்தகப் பிரியர்களுக்கான பல்வேறு links எனப் பல பதிவுகள்.
சம்ஸ்க்ருத பாரதியில் மிக அருமையான பயனுள்ள Blogspot மற்றும் விவரங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். (அம்மா நாங்கள் இங்கே அமெரிக்காவில் பயன்படுத்திக் கொள்ளலாமா என்று உன் ஆசிரியரை கேட்டு சொல் _மகள்)

emoji களின் உதவியுடன் ஊர்களின் பெயரை கண்டுபிடியுங்கள், கிரிக்கெட் வீரர்களின் பெயரை கண்டுபிடியுங்கள் என்பது போன்ற quizகள் . (எங்கள் தாயார் எந்த துறை பற்றிய quizஆக இருந்தாலும் கண்டு பிடிக்கிறார்.)
உறவு நட்புக்களை காண சென்று திரும்பி வீடு செல்ல/வர முடியாதவர்களே! பிள்ளைகள் உறவினர்கள் என மொத்தமாக வீட்டிற்குள் (சிக்கி கொண்டு ?!) இருப்பவர்களே! மறந்தே போன scrabble , monopoly , பல்லாங்குழி போன்ற விளையாட்டுக்களை முயற்சி செய்யலாம். சிறுவர்களுக்கு கதைகள் சொல்லலாம் . DD தொலைக்காட்சியில் ராமாயணம், மஹாபாரதம், சக்திமான் ஆகிய தொடர்கள் காண்பிக்கிறார்கள். எளிய உடல் பயிற்சிகளை செய்யுங்கள். மகிழ்ச்சியுடன் பயனுள்ள வகையில் பொழுதை செலவிடுங்கள். இந்த நாட்கள் மீண்டும் கிடைக்காது.

எல்லா வேலைகளையும் நானே செய்கிறேன் என்ற புலம்பல் அதிகமாக கேட்கிறது . பிள்ளைகளை சிறு உதவிகள் செய்ய பழக்குங்கள் தாய்மார்களே . அவர்கள் உங்கள் பிள்ளைகள் தானே ? பொருட்களை அதனதன் இடத்தில் வைத்தல் , சாப்பிட்ட தட்டுகளை கழுவுதல் என ஆரம்பித்தது வயதிற்கேற்ற வேலைகளை செய்ய கற்றுக் கொடுங்கள் .
"கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்" என்று சொல்லி இருக்கிறார் நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை. வீட்டு வேலைகளும் கைத்தொழில்தான் . எப்போதும் என் நினைவுக்கு வரும் ஒரு திரைப்பட பாடல் "எல்லாரும் மாவாட்ட கத்துக்கிடணும் அது எப்போதும் தப்பில்லே ஒத்துக்கிடணும் எல்லார்க்கும் எல்லாமும் தெரிஞ்சிருந்தா இல்லாத நேரத்தில் கைகொடுக்கும்" (புதுப்புது அர்த்தங்கள்) .

சிங்கார சென்னையில் பலவருடங்களுக்கு முன் அனுபவித்த கடற்காற்று , ஒற்றை பறவை பறக்கும் ஓசை , எங்கோ ஒலிக்கும் தொலைபேசியின் அழைப்பு , நடுநிசியானாலும் தூங்காமல் லூட்டி அடிக்கும் குழந்தைகளின் சிரிப்பு சத்தம் என பலவற்றையும் மீண்டும் வீட்டிலிருந்தபடியே அனுபவிக்க இது ஒரு சந்தர்ப்பம் .

"சத்தம் இல்லாத தனிமை வேண்டும்" என்று கவிஞர் வைரமுத்து எழுதினர். தற்சமயம் அவரது ஆசை நிறைவேறி விட்டது, காரணம் எதுவாக இருப்பினும்.

கடைசியாக இன்று காலை படித்த ஒரு பதிவினை பகிர விரும்புகிறேன் . இத்தாலியில் 95 வயதான பெரியவர் ஒருவர் மருத்துவமனையிலிருந்து நோய் சரியாகி வீடு செல்லும் முன் உங்களுக்கு ஒரு நாள் செயற்கையாக சுவாசம் (ventilator) கொடுத்தோம். நீங்கள் அதற்கு $5000 பணம் கட்ட வேண்டும் என்று கூறினார்களாம். அந்தப் பெரியவர் அழுதாராம் . பணம் இல்லை போலும் என்று மற்றவர்கள் நினைக்க அவர் கூறியது இது தான் " நான் 95 வயது முடிய இந்த பூமியின் காற்றை எந்த கட்டணமும் இல்லாமல் சுவாசித்தேன் ஆனால் ஒரு நாள் செயற்கை சுவாசம் பெற்றதற்கு பணம் தர வேண்டி உள்ளது. இயற்கைக்கு நான் இது நாள் வரை நன்றி செலுத்தவில்லையே என்று அழுதேன்"

சுலபமாக பெரும் பொருட்களை நாம் மதிப்பதில்லை, இனியேனும் இயற்கையை மதிப்போம் . நலம் பெறுவோம்.

வாழ்க்கை வளமுடன் வாழ்வதற்கே. கவலை வேண்டாம் .

கூடிய விரைவில் நாமும் செல்லலாம் போத்தீஸ், Forum, Phoenix மால்களுக்கு ...
Courtesy : தொண்டரடிப்பொடி ஆழ்வார் , எழுத்தாளர் சுஜாதா , கவிஞர் வைரமுத்து , நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை மற்றும் Social Bloggers

பூங்(கா)கவனம்

பூங்காவில் நடைப்பயிற்சி செய்து கொண்டே நம்மை சுற்றி நடப்பவைகளை காண்பது ஒரு விதம். ஓரிடத்தில் அமர்ந்து கொண்டோ வீட்டில் இருந்தபடியே அருகில் அமைந்துள்ள பூங்காவை கவனிப்பது மற்றொரு விதம்.
இரண்டுமே சுவாரஸ்யமானவைகளே என் வரையில்.
வேகநடை, மிதவேக நடை,அன்னப்பட்சி நடை ,ஓட்ட நடை,உடற்பயிற்சி நடை,கைபேசியபடி நடை, அரட்டை நடை,காதலர்கள் நடை,பள்ளிப்பிள்ளைகளின் குதிநடை,குதிகால் நடை , செருப்பு , ஷூக்கள், காலணிகளே அணியாமல் நடை, பந்தயம் நடந்து கொண்டிருப்பது போன்ற நடை, இரவு உடையின் மேல் ஒரு துண்டு அணிந்து நடை என மக்கள் நடையாய் நடப்பதை சொல்லவா?

நடிகநடிகைகள், நடிகராக விரும்புபவர்கள் என பலரும் உடற்பயிற்சியும் நடைப்பயிற்சி சண்டை பயிற்சியை பற்றி சொல்லவா ?
தினமும் மாலை 4 மணிக்கு தவறாமல் நடைப்பயிற்சி செய்யும் ஒல்லி பெண் 6 மாதங்கள் நான் அமெரிக்க சென்று திரும்பிய பிறகு 10 கிலோ எடை கூடித் தெரிந்த அவரது எடைக்கு இன்றளவும் ஏறுமுகம் தான் என்பதை சொல்லவா?
தினமும் மாலையில் மல்லிகை பூ சூடி அன்னம் போலே நடந்து சென்றே சற்றே இளைத்து காணப்படுகிறாரே அவரைப் பற்றி சொல்லவா?
வெள்ளை T - shirt வெள்ளை அரைக்கால் சராய் வெள்ளை ஷூக்கள் அணிந்து ஒரே ஒரு நாள் மட்டும் நடைப்பயிற்சி செய்த , இன்றளவும் காணகிடைக்காத நண்பரைப் பற்றி சொல்லவா?

காலை 9 மணியளவில் கைபேசியில் பேசியபடி நடைப்பயிற்சி செய்து கொண்டே, அக்கம் பக்கத்து வீட்டு பெண்மணிகளை பார்த்து , பாப்பா நீ சினிமாவில் நடிக்கிறாயா மாமி உங்களுக்கு மடிசார் நன்றாக இருக்கிறது என விமர்சித்து செல்வாரே பிரபல திரைப்பட இயக்குனர் , அவரை தற்சமயம் ஏன் காணக் கிடைப்பதில்லை?

எங்கிருந்தோ நடந்தே வந்து இந்த பூங்காவில் அமர்ந்து கதை பேசும் வயதில் மூத்த பெண்டிர் பலரும் என் நட்புக்களே என்பதை சொல்லவா வேண்டும்?
மேடம் உங்களை எங்கேயோ பார்த்த நினைவு , வாய்ப்பாட்டு கற்றுக் கொண்டீர்களா? என் orchestra வில் பாடுகிறீர்களா எனக் கேட்டு விசிட்டிங் கார்டு தந்த அன்பரைப் பற்றி சொல்லவா? (பல வருடங்களுக்கு முன்பு நான் வயலின் கற்றுக் கொண்டிருந்தபோது பார்த்த நினைவு போல )
மற்றொரு முறை நான் படித்த கம்பியூட்டர் சென்டரின் மேலாளர் பூங்காவில் நண்பர்களுக்கு கைரேகை ஜோசியம் பார்த்துக் கொண்டே , மேடம் நல்லா இருக்கீங்களா என குசலம் விசாரித்ததை சொல்லவா?

25 வருடங்கள் கழித்து சந்திக்க நேர்ந்த தோழியின் தாய் உன்னுடன் சில நிமிடங்கள் பேசி செல்வது மனதுக்கு இதமாக இருக்கிறது என்றதை சொல்லவா?
தோழியுடன் இன்று எந்த பூங்காவில் நடைபயிற்சி செய்யலாம் என்று யோசித்து , வாட்ஸ்ஆப்பில் முடிவு செய்து , நடை பயின்றதை சொல்லவா?
தினம் ஒரு நிகழ்வு தினமொரு சந்திப்பு ...
இங்கே இப்படியென்றால் அமெரிக்காவில் மற்றொரு விதம். பரப்பளவு அதிகம் உள்ள பூங்காக்கள்.
காலை 6 -8 நாய்களுடன் நடைப்பயிற்சி செய்யும் மக்கள் , நாய் மலம் கழித்துவிட்டால் அதை அவர்களே சுத்தம் செய்து குப்பை தொட்டியில் போட்டு செல்வதை காண நேர்ந்ததை சொல்லவா?( அதற்கென ஒரு டப்பாவில் பிளாஸ்டிக் பைகள் இருக்கும். )
ஒரு சுற்று நடந்து முடிக்க 15 நிமிடங்கள் ஆகும் பூங்காவில் 3,4 பேர்களே நடந்து கொண்டோ ஓடிக்கொண்டோ இருப்பார்களே அதை சொல்லவா? இவர்கள் கையில் , தோள்பட்டையில் Fitbit , கைபேசி app என எதையாவது அணிந்தே செல்வதை சொல்லவா ?
பூங்காவின் உள்ளேயே சைக்கிள் ஓட்டி செல்வதை சொல்லவா?
வெயிற்காலத்தில் 12 மணி வெய்யிலில் sunny day என மிக்க மகிழ்ச்சியுடன் கால் பந்து விளையாட்டை கூட்டம் கூட்டமாக எல்லா வயதினரும் விளையாடி நம்மை ஆயாசப்படுத்துவார்களே அதை சொல்லவா?

கிழக்காசிய மக்கள் அதிகம் வசிக்கும் கலிபோர்னியா மாநிலத்தில் காலை 10 மணியளவில் வயதானவர்களின் மிக மெதுவான நடன அசைவுகளுடன் கூடிய உடற்பயிற்சி , தம்மை தாமே குறிப்பிட்ட இடங்களில் அடித்துக் கொள்ளும் பயிற்சி ,(குறிப்பிட்ட இடத்தில் அடித்துக் கொண்டால் குறிப்பிட்ட வியாதி போகும் என்பது ஒரு வித வைத்திய முறை), வாள் பயிற்சி, சிலம்பு பயிற்சி என வித்தியாசமான உடற்பயிற்சிகளை சொல்லவா?
குளிர்காலங்களில் சூரியன் எப்போது வருவார் என்று காத்திருந்து வயதானவர்கள் தெருவில் நடைப்பயிற்சிக்கு வருவார்கள்.அப்படியே பூங்காக்களும் .
இந்திய மக்கள் பூங்காக்களில் கூடி , பேசி, தங்கள் குறை நிறைகளை விவாதித்து , முடிந்தால் சிறிது நடைப்பயிற்சியும் செய்வார்களே அதை சொல்லவா? (இந்த பார்க் இருக்கோ நான் பாயை பிராண்டாமல் இருக்கேன்_ ஒரு முதிய பெண்மணி )
தென்னிந்தியர்கள் , வடஇந்தியர்கள் தனித்தனி குழுக்களாக பேசிக்கொண்டும் ,தமிழர்கள் ஹிந்தி தெரியாத காரணத்தால் தமிழர்களுடன் மட்டுமே பேசிக்கொண்டும் இருப்பார்களே அதை சொல்லவா?

வீட்டு தோட்டத்திலிருந்து எலுமிச்சை, ஆரஞ்சு இன்ன பிற பழங்கள் காய்கறிகளை பங்கிட்டு கொள்ளுதல் , யார் வீட்டில் அடுத்த வாரம் லலிதா சஹஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ரநாமம் , நவராத்திரி அழைப்புக்கள் , potluck டின்னர் , ராஜா புது வீடு வாங்கி இருக்கிறார் தெரியுமா போன்ற தகவல் (வம்பு) பரிமாற்றங்களும் நடைபெறுமே அது பற்றி சொல்லவா?
நான் சென்ற அதே மாதங்களில் வந்திருந்த என் சகோதரியுடன் தினமும் படித்த புத்தகங்கள், பார்த்த நாடகங்கள், சென்ற இடங்கள் என பேசிக்கொண்டே பூங்காவில் நடந்ததை சொல்லவா? (அக்கா sun வந்துடுச்சு , கிளம்பலாமா ?)

விஸ்கான்சின் மாநிலத்தில், பூங்காக்களில் ஆப்பிள் மரங்கள் காய்த்து ,பழுத்து கீழே விழுந்து கவனிப்பாரற்று கிடக்கும் . தெருக்களில் நடைப்பயிற்சி செய்யும் போது ஆரஞ்சு, சிவப்பு மற்றும் அடர்வண்ண வண்ண உடை அணிந்து சென்றால் நாய்கள் குறைப்பதை கண்டு பயந்து , (இங்கே நாய் கடித்தால் 1 மில்லியன் டாலருக்கு வழக்கு போடலாம் அப்பா _ எங்கள் மகன்). google map ஐ உபயோகித்து மாற்றுப் பாதையில் உருப்படியாய் வீடு வந்து சேர்ந்தோமே அதை பற்றி சொல்லவா?
மணிக்கணக்காக நடைபாதையிலோ பூங்காவிலோ ஒரு சொட்டு வியர்வை சிந்தாமல் அங்கே நடக்கலாம் என்பதை சொல்லவா?
ஐரோப்பாவின் சுவிட்சர்லாந்து போனபோதும் ஆஸ்திரேலியாவின் Melbourne போன போதும் பூங்காக்களும் நடைப்பயிற்சியும், Gold coast நகரின் கடற்கரையும் என்னை கவர்ந்திழுத்து நடக்க வைத்ததை சொல்லவா?

மீண்டும் இங்கே ......
சோகமான ஒரு நாளில் தோழி ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று வரை தொடரும் வழக்கம் இது மலையளவு சோகமும் நொடிப்பொழுதில் மறைந்து போகும் .

சமீப நாட்களில் பூங்காவில் பின்னோக்கி நடந்து, அடிபிரதட்சிண நடைப் பயிற்சி செய்து கொண்டிருக்கிறார் ஒருவர்.