சென்னை-ஆக்ரா-மதுரா-புதுதில்லி-ரிஷிகேஷ்-தேவபிரயாக்-ஜோஷிமட்-பத்ரிநாத்-கேதார்நாத்-ஹரித்வார்-புது தில்லி
.jpg)
சென்னை-ஆக்ரா-மதுரா-புதுதில்லி-ரிஷிகேஷ்-தேவபிரயாக்-ஜோஷிமட்-பத்ரிநாத்-கேதார்நாத்-ஹரித்வார்-புது தில்லி
.jpg)
சென்னை-ஆக்ரா-மதுரா-புதுதில்லி-ரிஷிகேஷ்-தேவபிரயாக்-ஜோஷிமட்-பத்ரிநாத்-கேதார்நாத்-ஹரித்வார்-புது
தில்லி
1994ல் கல்கத்தா பயணம் வந்த என் கணவரின் அலுவலக நண்பர்கள்
குடும்பங்களுடன் மேலும் சிலரும் இணைந்து கொள்ள அடுத்த சுற்றுலாப் பயணம் முடிவு செய்யப்
பட்டது. (நான்கு வருடங்களுக்கொரு முறை செல்லலாம்)
ஸ்ரீரங்கத்திலிருந்து பக்திச் சுற்றுலாக்களை ஏற்பாடு செய்து
அழைத்துச் சென்று கொண்டிருந்த எங்கள் உறவினர் (பெரியப்பா மறைந்த திரு கோவிந்தராஜன்)
தான் சுற்றுலா ஏற்பாட்டாளர். உணவுக்கும் தங்கும் விடுதிகளுக்கும் அவரே பொறுப்பு என்பதால்
கடுகு எண்ணெய் பூரிகளும், மண் குடுவைத் தேநீரும், அநாவசியக் காத்திருத்தலும் இந்தப்
பயணத்தில் இல்லை.
1998 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒரு நாள் மாலை Grand trunk expressல் சென்னையிலிருந்து ஆக்ராவை நோக்கிக் கிளம்பினோம். நாங்கள் Three tier AC கோச்சில் பயணிக்க பெரியப்பா மற்றும் அவரது இரண்டு உதவியாளர்கள் Second class sleeper கோச்சில் பயண நேரத்தில் ஆங்காங்கே சமைக்கத் தேவையான பொருட்கள், அடுப்பு, துடுப்பு என நிறைய சாமான்களைத் தங்களுடன் எடுத்து வந்தார்கள். சமைத்த உணவுகள் கெடாமல் இருக்க AC கோச்சில் எங்களுடன் பயணித்தன.
புளி சாதம், தயிர் சாதம், snacks என ஒவ்வொரு வேளையும் விதம்
விதமான உணவுகள் வழங்கப்பட்டன. பகலில் இரண்டாம் வகுப்புப் பெட்டிக்கு பெரியப்பாவைக்
காணச் சென்ற போது வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. சில நிமிடங்களுக்கு மேல் அங்கே
நிற்கவே முடியவில்லை. (பெரியப்பா குழுவினரை மாறி மாறி எங்களுடன் வந்து பயணிக்கக் கூறியும்
அவர்கள் மறுத்து விட்டனர்) மறுநாள் முழுவதும் பயணம் செய்து அதற்கடுத்த நாள் காலை ஆறு
மணியளவில் ஆக்ரா நகரை அடைந்தோம்.
இந்தப் பயணம் முழுவதும் காலை, இரவு டிபன், மதியம் சாப்பாடு,
இரண்டு நேரம் காபி/பால், மாலை snacks என உணவு வழங்கப் பட்டது. சில நாட்களுக்குப் பிறகு
மாலை snacks தேவைப்படவில்லை. ஒவ்வொரு ஊரிலும் தங்கும் இடமும் முன் கூட்டியே ஏற்பாடு
செய்யப் பட்டிருந்தது. தீர்த்த யாத்திரை + பொதுச் சுற்றுலா என்பதால் தங்குமிடம் ஹோட்டல்,
Dormitory, கோவில்கள், மடங்கள் எனக் கலந்து இருந்தது. மூன்று வேளையும் வயிறு வாடாமல்
தேவையற்ற காத்திருத்தல் அலைச்சல் இல்லாமல் பயணம் சுகமாக இருந்ததால் ஒவ்வொரு ஊரிலும்
என்ன சாப்பிட்டோம் எங்கே தங்கினோம் போன்ற விவரங்களை அதிகமாகக் கூறவில்லை இந்தக் கட்டுரையில்.
ஆக்ரா
ஆக்ரா ரயில் நிலையத்திலிருந்து எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
பேருந்தில் நேரே ஒரு விடுதிக்கு அழைத்துச் செல்லப் பட்டோம். (அந்தப் பேருந்தில் தான்
இமாலயம் முழுவதும் பயணித்தோம்) அந்த நேரத்திலேயே வெயிலின் தாக்கம் தெரிந்தது. விடுதியிலேயே
குளித்துத் தயாராகி, காலை உணவிற்குப் பிறகு அனைவரும் உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்
மஹாலைக் காணப் புறப்பட்டோம்.
முகலாயர்களின் ஆட்சிக் காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற
நகரமாக விளங்கிய இந்த நகரம் இந்தியாவின் தலைநகரான புது தில்லியிலிருந்து 230 கிலோமீட்டர்
தொலைவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. முகலாய அரசர் ஷாஜஹான் அவர்களால்
தன் மனைவி மும்தாஜிற்காகாக் கட்டப்பட்ட நினைவுச் சின்னம் இந்த புது ஏழு உலக அதிசயங்களுள்
(New seven wonders of the world) ஒன்றான தாஜ்மஹால். தவறு, ஐஸ்வர்யா ரையுடன் சேர்த்து
உலக அதிசயங்கள் எட்டு இல்லையா?😉[மங்களூரைச் சேர்ந்த துளுவ Bunt வகுப்பைச் சேர்ந்தவர்களின்
Surname Rai. நமக்குப் பரிச்சயமான மற்றொருவர் பிரகாஷ் ரை (ராஜ்)]
யமுனை நதிக்கரையோரம் 42 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக்
கட்டிடம் மற்ற மூன்று பக்கங்களிலும் பூங்காவினால் சூழப்பட்டுள்ளது. இதைக் கட்டி முடிக்க
30 ஆண்டு காலம் ஆனது. முழுவதும் வெள்ளைப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ள இந்த நினைவுச்
சின்னம் முகலாயக் கட்டிடக் கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகிறது. உலகெங்கும்
போற்றப்படும் இது UNESCO world heritage site ஆகவும் விளங்குகிறது.
பேருந்து சற்று தொலைவிலேயே நிறுத்தப்பட நடந்து தாஜ்மஹாலை
அடைந்த போது ஏறக்குறைய பன்னிரண்டு மணி இருக்கும். வழியெங்கும் குறுகலான சாலைகள், அவற்றின்
இருபக்கமும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வண்ணம் கடைகள், மக்கள் கூட்டம் என உலகின்
மிகச் சிறந்த ஒரு நினைவுச் சின்னத்தை அடையும் சாலைகளாக இல்லாமல் ஏதோ பெயர் தெரியாத
சிற்றூருக்குள் செல்வது போல இருந்தது. வெயிற்காலம் என்பதால் நண்பகல் வெயில் மிகக் கடுமையாக
மண்டையைப் பிளந்தது. [ஆங்கிலேயர்களின் வார்த்தைகளில்: It was a sunny day] மிக அழகான
சுற்றுச் சுவருடன் கூடிய சிவப்புக் கற்களால் ஆனது இந்த complex. அங்கே நுழைந்ததும்
நாம் ஆவலுடன் எதிர்பார்த்த தாஜ்மஹால் கண்ணில் பட்டது. உள்ளே சென்று பார்க்க அனுமதிச்
சீட்டு வாங்க வேண்டும். இந்தியக் குடிமக்களுக்கு அப்போதைய கட்டணம் ₹10/- வெளிநாட்டவருக்கு
₹150/-
முகலாய மக்கள் வணங்கும் மசூதியும் இதனுள்ளே உண்டு என்பதால்
செருப்பணிந்து செல்ல அனுமதியில்லை. வெளி நாட்டவர்கள் வாடகைக்குக் கிடைத்த socksஐ வாங்கி
அணிந்து கொண்டு சென்றார்கள். நாங்கள் அனைவரும் கொதிக்கும் வெயிலில் சிறு குழந்தைகளுடன்
தாஜ்மஹாலுக்கு உள்ளே செல்ல மேலே சில படிகளில் ஏறி ஓடிச் சென்றோம். (தரை மட்டத்திலிருந்து
மிக உயரத்தில் கட்டியுள்ளார்கள்) பளிங்குக் கல் சூரியனின் வெப்பத்தை மிக அதிக அளவில்
ஈர்க்கிறது.
வெள்ளை வெளேரென்ற பளிங்குக் கல் காலத்தின் கோலத்தால் சற்றே
நிறம் மாறி அழுக்கு படிந்தது போல இருந்தது. 1998 -2023க்குள் இன்னும் நிறம் மங்கி இருக்கும்
என நினைக்கிறேன். காற்று மாசு காரணமாக வெள்ளை நிறக் கற்கள் அதன் பொலிவினை இழந்து வருவது
வருத்தத்திற்குரியது.
உள்ளே சென்றதும் சற்றே வெளிச்சக் குறைவான பகுதியில் மசூதி. அதையடுத்து பள்ளமான பகுதியில் இரண்டு சமாதிகள் உள்ளன. அவைகள் dummy. கீழ்த் தளத்தில் தான் ஷாஜஹான் மற்றும் மும்தாஜின் உடல்கள் அடக்கம் செய்யப் பட்டுள்ளன எனக் கூறினார்கள். கட்டிடத்தின் வெளிப்புறத் திண்ணையில் அமர்ந்து நிதானமாக வேடிக்கை பார்த்து ரசித்தோம். மிக அழகான கட்டமைப்பு. திருக்குரானின் வாசகங்களை சுவரில் கண் மட்டத்தில் உள்ள எழுத்துக்களை சிறிய அளவிலும் மேலே செல்லச் செல்ல படிக்க வசதியாகப் பெரிய அளவிலும் செதுக்கி உள்ளார்கள். (படிக்கத் தெரியாதே…பார்த்து ரசித்தோம்). அங்கேயே அமர்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். (தாஜ்மஹாலின் முன்னால் நின்று குடும்பம் குடும்பமாகப் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை கூட இல்லாத காலம்😊) வெளியில் உள்ள நீரூற்றுக்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பூங்காவைச் சுற்றிப் பார்த்தோம். சிறுவர்களை தாஜ்மஹாலின் நேரெதிரில் இருந்த பெஞ்சில் அமர வைத்து group photo எடுத்தோம். அப்பாடா! நாங்களும் உலகத் தலைவர்கள் போல ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறோம் என இப்போது தோன்றுகிறது.
(ஊருக்குத் திரும்பியதும் கேமராவிலிருந்து புகைப்படச் சுருளை
ஸ்டுடியோவில் கொடுத்து எடுக்காமல் தானே எடுக்கும் முயற்சியில் என் கணவர் expose செய்து
விட்டார். தாஜ் பற்றிய அருமையான நினைவுகள் காற்றோடு கரைந்து விட்டன. எங்கள் மகள் பல
நாட்கள் மிகவும் வருந்தி அழுதார். சமீபத்தில் சந்தித்தபோது நினைவு கூர்ந்தார்)
அற்புதமான கட்டிடக்கலை நுணுக்கங்களுடன் அமைந்த இந்தக்
கட்டிடத்தைப் பற்றி விவரித்துக் கொண்டே போகலாம். தாஜ்மஹாலைப் பற்றிய பல விவரங்களும் உங்கள் அனைவருக்கும் பரிச்சயம்
என்பதால் நிறைய விவரிக்கவில்லை. CBSE மாணவி ஒருவரின் Ancillary Social Studies புத்தகத்தில்
தாஜ் மஹால் எப்படி Symmetric ஆன வடிவங்களில் கட்டப்பட்டுள்ளது எனப் படித்த போது மிகவும்
வியந்தேன். Square, rectangle, parallelogram என எந்த வடிவமாக இருந்தாலும் இரு பக்கமும்
சமமாக இருக்கும் படி அமைந்த கட்டிடம் இது.
அதன் பிறகு தாஜ் அருங்காட்சியகத்திற்குச் சென்றோம். இதில் மூன்று கலைக் கூடங்கள் உள்ளன 121
தொல்பொருட்கள் முகலாயர் காலத்திய சிறு
ஓவியங்கள், கையெழுத்துப் படிகள், அரச
கட்டளைகள், சித்திர மொழிகளின் வகைபடிவங்கள், போர்க் கருவிகள், பாத்திரங்கள், தாஜ் மஹாலின்
கட்டிட வரைபடங்கள், ஓவியங்கள், பளிங்குத் தூண்கள் முதலியன இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர ஷாஜஹான் மும்தாஜ் ஆகியோரின் தந்ததாலான சிற்பங்களும்
ஷாஜஹான் கையொப்பமிட்ட அரச முத்திரை போன்றவையும் உள்ளன். (நன்றி: விக்கிபீடியா)
பிருந்தாவனம்
மதிய உணவிற்குப் பிறகு நாங்கள் ஆக்ராவிலிருந்து 54 கிலோமீட்டர்
தொலைவில் உள்ள பிருந்தாவனத்தை நோக்கிப் பயணித்தோம். இந்த ஊர் இந்துக்களின், குறிப்பாக
வைணவர்களின் முக்கியமான புண்ணியத் தலமாக விளங்குகிறது. Vrundaavan என்பதே பிருந்தாவனமாக
மருவியுள்ளது. சமஸ்க்ருத மொழியில் Vrunda என்றால் துளசி Van என்றால் வனம். துளசிச்
செடிகள் அடர்ந்த வனம் என்பது பொருள். (பிருந்தாவனமும் நந்குமாரனும் யாவருக்கும் பொது
செல்வமன்றோ) புராணக் கதைகளின்படி கிருஷ்ணர் தம் இளமைக் காலத்தில் இங்கு தான் வளர்ந்தார்
எனக் கூறப் படுகிறது. ராதா & கிருஷ்ணருக்குப் பல கோவில்கள் இந்தப் பகுதியில் உள்ளன.
இந்த ஊர் விதவைகளின் நகரம் எனவும் அழைக்கப் படுகிறது. விதவைகள்
பெருமளவில் இங்கே வந்து தங்கி கண்ணனை வணங்கித் தம் வாழ்நாளைக் கழிக்கின்றனர். இவர்களைப்
பேணிக் காப்பாற்றப் பல சங்கங்கள் உள்ளன என்கிறது விக்கிபீடியா. இந்த ஊரில் அமைந்துள்ள
ISKON அமைப்பினர் கட்டியுள்ள கோவிலில் கண்ணனை தரிசித்து விட்டு மதுரா நகரை அடைந்த போது மாலை மங்கி
விட்டது. கோவில் அளவில் சற்றே சிறியது தான்.
மதுரா
தென்னிந்தியக் கோவில்களின் அமைப்பில் உள்ள
கிருஷ்ணரின் கோவிலை அடைந்த போது மாலை 6.30
இருக்கும். இரவு 7 மணிக்கு கோவில் நடை சாத்தி விடுவார்கள் என என் பெரியப்பா
கூறவே உயரமான மதில் சுவரையும் நீண்ட பிரகாரங்களை உடைய அந்தக் கோவிலின் உள்ளே
குழந்தைகளை இழுத்துக் கொண்டு ஓ...டி 6.45க்கு கண்ணனை தரிசித்தோம். சின்னக்
கண்ணன் நின்று கொண்டு அருள் பாலிக்கும் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும். அதனையடுத்து கிருஷ்ண ஜென்ம பூமி என அழைக்கப்படும் ஊர்களில் ஒன்றான மதுரா
நகரை நோக்கிக் கிளம்பினோம். மதுரா மாவட்டத்தின் தலைநகரான இது ஆக்ராவிற்கு வடக்கில்
உள்ளது. (கோகுலம், கோவர்தனம், மதுரா ஆகிய ஊர்களைச் சுற்றியுள்ள பகுதிகள் கிருஷ்ண ஜென்ம
பூமி)
கோவிலில் இருந்து தங்குமித்திற்குச் சென்று இரவு உணவை முடித்துக்
கொண்டு ஓய்வெடுத்தோம். மறுநாள் காலை யமுனை நதிக்குச் சென்று குளித்துக் காலை உணவிற்குப்
பிறகு மதுராவைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம்.
“அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா
புரி த்வாரவதி சைவ சப்தைதே மோக்ஷதாயிகா:”
_ கருட புராணம் XVI .14
அயோத்தியா, மதுரா, மாயா(ஹரித்வார்), காசி (வாரனாசி), காஞ்சி
(காஞ்சீபுரம்), அவந்திகா (உஜ்ஜயினி), த்வாரவதி (துவாரகா) ஆகிய ஏழு நகரங்கள் மோட்சத்தைத்
தரும் என்பது மேற்கண்ட பாடலின் பொருள். அத்தனை சிறப்புடைய மதுராவில் தான் கண்ணன் பிறந்ததாக்
கூறுகிறார்கள். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற 108 வைணவத் தலங்களுள் இதுவும்
ஒன்று.
மறுநாள் காலை Krishna
janmasthaan temple complex என்னும் இடத்தில் அமைந்துள்ள கண்ணன் பிறந்த இடத்தைக் காணச் சென்றோம். நேர் பின்னால் யமுனை நதி
பாய்கிறது இந்த complex உள்ளே புராணக் கதை விவரப்படி
கண்ணனின் தாய்மாமனான கம்சன் தன் சகோதரிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தை தன்னைக் கொன்று
விடும் என அறிந்து சகோதரி தேவகியையும் அவளது கணவர் வசுதேவரையும் சிறை வைக்கிறான்
சிறையின் உள்ளே அவர்களுக்குப் பிறக்கும் முதல் ஏழு குழந்தைகளையும் கொன்று
விடுகிறான். எட்டாவதாகப் பிறந்த கண்ணன் கடவுளின் அவதாரம் என்பதால் தன் மாயையால்
அனைவரையும் உறங்கச் செய்கிறான். வசுதேவர் பலத்த மழையில் ஒரு கூடையில் கண்ணனை மூடி
எடுத்துக் கொண்டு யமுனை நதியின் குறுக்கே நடந்து யசோதையும் நந்தகோபரும் வசித்த
பிருந்தாவனத்திற்குச் செல்கிறார். யமுனை கண்ணனுக்காக வழி விட்டது புராணக் கதைகள் கூறுகின்றன. இந்தக் கோவிலுக்கு “கேசவ் தேவ் கோவில்”
எனப் பெயரிட்டுள்ளனர். [குழந்தை கண்ணனின் மேல் ஒரு சொட்டு கூட மழை நீர் விழவில்லையாம்.
காரணம் ஆதிசேஷன் என்னும் ஐந்து தலை நாகம் வசுதேவரின் கூடையில் அமர்ந்து குடை போலக்
காப்பாற்றியதாம். அதற்கும் மேலே கருடன் தன் இறக்கையை விரித்தவாறு பறந்ததால் இரண்டுடக்குப்
பாதுகாப்பு குட்டிக் கண்ணனுக்குக் கிடைத்ததாம் என ஒரு பிரவசனத்தில் கேட்டேன்]
நிற்க. இந்தப் புராணக் கதையில் வரும் சிறைச் சாலை தான் இந்த complex உள்ளே இருக்கிறது. தற்போது
சந்நிதிகளாக மாற்றப்பட்டுக் கடவுளின் திருவுருவங்கள் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த
complexஐ ஒட்டினாற்போல ஒரு பெரிய
மசூதியும் உள்ளது. அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமி போல இந்த கிருஷ்ண ஜென்ம
பூமியிலும் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் கருத்து வேறுபாடு உண்டு.
நாங்கள் சென்ற சமயம் AK47 துப்பாக்கிகளுடன் ராணுவத்தினர் சுற்றிக் கொண்டிருந்தனர். எப்போது
கலவரம் வெடிக்கும் எனப்
பயந்தபடியே பீதியுடன் மக்கள் கோவிலுக்கும் மசூதிக்கும் சென்று கொண்டிருந்தனர். கோவிலுக்குச்
செல்லும் வழியில் உள்ள தெருக்களெங்கும் சிறு கடைகள் (souvenir கடைகள்), ஆங்காங்கே சிவப்பு நிற ஜரிகை கொடிகள் எனத் தென்பட்டன.
கோவிலின் உள்ளே சென்றதும் சிறு சிறு அறைகள் தென்பட்டன. (முன்னாள் சிறை) இங்கு தான் கண்ணன்
பிறந்தார் எனப் பூஜை
செய்பவர் கண்ணனின் கதையைக் கூறக் கேட்டதும் கண்ணன் பிறந்த அந்தக் காலத்திற்கே சென்றது போல இருந்தது. யமுனை எப்படி வசுதேவருக்கு வழிவிட்டாள் என்பது போலப் பல கற்பனைகளும் மனதில் ஓடின. சுகமான
நினைவுகள்.
ஆயர்பாடியில் கண்ணன் பிறந்த செய்தி கேட்டு, அக்குழந்தை இறைவனின் அம்சம் என்று உணர்ந்து மக்கள் மகிழ்ந்து கொண்டாடுவதாக பெரியாழ்வாரால் இயற்றப்பட்ட இந்தப் பாடல்.உங்களுக்காக…
ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே
மகிழ்ச்சி பெருகி தாம் செய்வது என்ன என்றே புரியாமல் சிலர் ஓடினார்கள்; சிலர் எண்ணெயும் சுண்ணமும் கலந்த திருமுற்றத்துச் சேற்றில் வழுக்கி விழுந்தார்கள்; சிலர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக உரக்கக் கூவினார்கள்; ஒருவரை மற்றவர் கட்டித் தழுவினார்கள்; நம் தலைவனான கண்ணன் எங்கே இருக்கிறான் என்று கூறிக் கொண்டு அவனை தேடினார்கள் சிலர்; சிலர் இனிய குரலில் பாடினார்கள்; சிலர் பலவிதமான பறைகளை இசைத்து ஆடினார்கள். இப்படி கண்ணன் பிறந்த நேரத்தில் திருவாய்ப்பாடி பெரும் திருவிழாவைப் போலிருந்தது என்பதாகப் பெரியாழ்வார் கண்ணனின் பிறப்பைப் பற்றிய நிகழ்வினை ரசனையாக மனதில் நிற்கும் வண்ணம் கூறுகிறார்.
கோவர்தன்
கண்ணன் பிறப்பை
நேரில் கண்டது போன்ற அந்த அனுபவத்திலிருந்து ஒரு வழியாக மீண்டு
கண்ணன் இந்திரனின் கோபத்திலிருந்து
(கடும் மழையிலிருந்து) மலையைக் குடையாகத் தன் சுட்டு விரலால் ஏந்தி மக்களையும் மாக்களையும்
காப்பாற்றியதாகப் புராணக் கதைகளில் கூறப்படும் “கோவர்தன்” என்னும் ஊரை அடைந்தோம். கோவர்தன்
பூஜா என்பது இங்கு கொண்டாடப்படும் முக்கியத் திருநாளாகும். 21 கிலோமீட்டர் சுற்றளவுள்ள
இந்த மலையை மக்கள் தீபாவளிக்கு மறுநாள் கிரிவலம் வருகிறார்கள். மலையைக் கண்ணன் ஒரே
விரலால் தூக்கியதாகக் கதைகளில் வருகிறது.
அந்த ஊரை நாங்கள் அடைந்த நேரம்
நண்பகல். வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. சிறிய ஊர். குறுகலான சாலைகளில்
நடந்து சென்று கண்ணனைத்
தரிசித்தோம். வழியெங்கும் மாடுகள்,
அவற்றிற்கான தாழிகள் எனத்
தெருக்களில் தென்பட்டன. வழியில் தென்பட்ட லஸ்ஸி கடையில் கெட்டித் தயிரில் எங்கள்
கண்ணெதிரில் கடைந்து தரப்பட்ட குளுமையான லஸ்ஸியை வாங்கிக் குடித்தோம். கண்ணன் காலத்து ஆயர்பாடிக்கே சென்றது
போன்ற உணர்வினை அந்த லஸ்ஸி ஏற்படுத்தியது. அவ்வளவு அருமையான சுவையுடன் இருந்தது. கண்ணனை
வணங்கி விட்டுப் புது தில்லியை நோக்கிய எங்கள்
பயணத்தை ஆரம்பித்தோம்.
புது தில்லி
157 கிலோமீட்டர் இரவுப் பயணம் செய்து அதிகாலையில் தில்லியில்
தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த லோதி தெரு ராம் மந்திரை அடைந்தோம். (அருகிலேயே
ஒரு சாய்பாபா கோவிலும் உள்ளது) கோவிலின் உள்ளேயே இருந்த தங்கும் இடத்தில் அனைவரும்
படுத்து உறங்கி ஓய்வெடுத்துக் கொண்டோம். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு குளித்துத் தயாராகி
கோவில் பூஜையில் கலந்து கொண்டோம். மிக அருமையான தென்னிந்திய உணவுகள் பிரசாதமாக வழங்கப்
பட்டன. தில்லியில் வசிக்கும் தமிழ் நாட்டவர்கள் பலரும் கோவிலுக்கு வந்து சென்றார்கள்.
மதியப் பூஜையிலும் கலந்து கொண்டோம். இரவு உணவிற்குப் பிறகு பேருந்தில் ஏறி இமாலய மலையின்
அடிவாரத்தில் உள்ள உத்தர்காண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் என்னும் ஊரை நோக்கிப் பயணிக்கத்
தொடங்கினோம்.
அனுபவங்கள் தொடரும்...