Thursday, 28 March 2024

LTC பயணங்கள் – பத்ரிநாத், கேதார்நாத் [பகுதி -3]

சென்னை-ஆக்ரா-மதுரா-புதுதில்லி-ரிஷிகேஷ்-தேவபிரயாக்-ஜோஷிமட்-பத்ரிநாத்-கேதார்நாத்-ஹரித்வார்-புது தில்லி

பத்ரிநாதனை ஆசை தீர தரிசித்து விட்டு ஆங்காங்கே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு காலை உணவிற்குப் பிறகு ஏறக்குறைய 220 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கேதார்நாத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தோம்.

கேதார்நாத்

இந்த ஊர் சைவப் பெரியோர்களான நாயன்மார்களால் பாடல் பெற்ற 275 சிவன் கோவில்களில் ஒன்று. (திருஞானசம்பந்தர்) இந்தப் பயணத்திலும் குறுகலான சாலைகள், பாதாளத்தில் நதி, பின்னணியில் உச்சியில் பனி படர்ந்த மலைத் தொடர்கள், பனி உருகி சிறு நீர்வீழ்ச்சிகள், அடர்ந்த காடுகளை உடைய மரங்கள், வழியில் சிற்றூர்கள், சிறு உணவகங்கள், சக பயணியர் என முன்பு கண்ட அதே காட்சிகள் தான்.

ராம்பூரைக் கடந்து பயணித்து சீதாபூர் என்னும் மிகச் சிறிய ஊரை மாலையில் சென்றடைந்தோம். சில தங்கும் விடுதிகளும் சிறு உணவகங்களும் பத்து பதினைந்து குடியிருப்புக்களும் உள்ள ஊர் அது. (ஜூன் 2013ல் பெய்த பெருமழையில் இந்தக் கிராமமே அழிந்து விட்டதாகக் கேள்விப் பட்டேன்) மழைக் காலங்களில் மண் சரிவு ஏற்படக் கூடிய சாலைகள் என்பதால் ராணுவம் எப்போதும் தயார் நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளது.

எங்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விடுதியில் பெட்டிகளை வைத்து விட்டு ஓய்வெடுத்தோம். உணவு சமைக்க எங்களுடனே இரண்டு சமையல்கார்களும் வந்திருந்ததால் உணவுக்குப் பஞ்சமில்லை. சூடான பூரியும் உருளைக் கிழங்கும் செய்து தந்தார்கள். விடுதியினைச் சுற்றிலும் மிக உயரமான மலைத் தொடர்கள். (பனி இல்லை) விடுதியின் இடப்புறத்தில் மலையிலிருந்து ஓ…வென சத்தமிட்டபடி விழும் மந்தாகினி நதி. அதில் அலையுடன் சுழித்துக் கொண்டு நீர் வரும் சமயம் விடுதியின் குழாயில் நீர் ஏறும் படி அமைத்திருந்தார்கள். மோட்டார் கிடையாது. இயற்கையே துணை. குழாயின் அடியில் வாளியை வைத்து விடுவோம். அலை வேகமாக வரும் சமயம் குழாயில் நீர் வந்து வாளி நிரம்பும். (அவசரத்திற்கு ஆகாது 😊)

மறுநாள் காலை உணவிற்குப் பிறகு அனைவரும் கேதார்நாத் செல்ல மலையேற வேண்டிய இடமான “கௌரி குண்ட்” செல்லத் தயாரானோம். குறுகிய சாலையாதலால் ஜீப்கள் மட்டுமே செல்ல முடியும். அதில் ஏறி கௌரி குண்டை அடைந்தோம். இந்த இடத்திலும் வெந்நீர் ஊற்றுக்கள் உள்ளன. (நாங்கள் யாரும் அங்கே குளிக்கவில்லை) அங்கே குளித்து விட்டு கௌரி அம்மனை தரிசித்து விட்டு 16 கிலோமீட்டர் பனி படர்ந்த மலைகளின் மேல் நடந்தோ, டோலியிலோ (தொட்டில் போல இருக்கும் நம்மை அதில் உட்கார வைத்து இருவர் சுமந்து செல்வார்கள்) அல்லது குதிரையிலோ செல்லலாம். (தற்சமயம் ஹெலிகாப்டர் சேவை உண்டு) கௌரி குண்டில் பார்வதி சிவனை அடையத் தவம் இருந்தார் எனவும் பிள்ளையாருக்கு யானை முகம் இங்கே தான் சிவனால் தரப்பட்டது எனவும் புராணக் கதைகள் கூறுகின்றன.


11 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்திருக்கும் கேதார்நாத் இந்தியாவின் உத்தர்காண்ட் மாநிலத்தில் ருத்ரப்ரயாகை மாவட்டத்தில் உள்ள  நகரப் பஞ்சாயத்து ஆகும். மந்தாகினி நதியின் பிறப்பிடமான Chorabari Glacier அருகில் அமைந்துள்ளது இந்த ஊர். மிக அருகிலுள்ள சாலை என்றால் 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கௌரிகுண்ட் தான்.

நாங்கள் அங்கே சென்ற சமயம் காலை பதினோரு மணி இருக்கும். வெயில் கடுமையாக இருந்தது. சுற்றுலா ஏற்பாட்டாளரான என் பெரியப்பா அவரவர் விருப்பப்படி மலையேறி வந்து சேருங்கள் என்று கூறி விட்டு தன்னுடைய உதவியாளர்கள் இருவருடன் எங்களுக்கு முன்னால் நடந்தே கிளம்பி விட்டார். குதிரையா டோலியா நடையா என முதலில் விவாதம், பிறகு கட்டணம் முடிவு செய்தல் என அங்கேயே ஏறக்குறைய இரண்டு மணி நேரங்களாகி விட அதற்குள் என் உடல்நிலை சரியாகாமல் இருந்தால் மிகுந்த களைப்பு ஏற்பட்டது. எட்டு வயதான என் மகனுக்கு வியர்க்கிறது, பசிக்கிறது, தாகம் எனப் பல பிரச்சினைகள். கொண்டு சென்ற தண்ணீர், பிஸ்கட், பழங்கள் அனைத்தும் காலி. இந்தப் பிரச்சினைகளை எல்லாம் தாண்டி அவரை அழைத்து செல்வது என்னால் இயலாத காரியமாகத் தோன்றியதால் மீண்டும் தங்குமித்திற்கே எங்கள் இருவரையும் அழைத்துச் செல்ல என் கணவரிடம் வேண்டினேன்.


மீண்டும் திரும்பி வருவதற்குள் அனைவரும் சென்று விடுவார்கள் என்பதால் என் கணவர் மிகவும் தயங்கினார். வற்புறுத்தி ஏறக்குறைய இரண்டு கிலோமீட்டர் நடந்து வந்து (குறுகலான சாலையில் வரிசையாக ஜீப்கள் நின்று கொண்டிருந்தன) எதிர் திசையில் செல்லும் ஜீப்பில் ஏறி சீதாபூர் சென்றோம். (உடல் நிலை சரியில்லாததால்  என் பெற்றோர் அங்கேயே தான் தங்கி இருந்தார்கள்) எங்களை விட்டு விட்டு மீண்டும் கணவரும் மகளும் கிளம்பிச் சென்றார்கள்.(மகள் பிடிவாதமாக உடன் சென்றார்) கடும் பனியில் மலையில் செல்லப் போகிறார்கள் என்ற போதும் லேசான ஸ்வெட்டர், அரைகால் அளவுள்ள ஸ்கர்ட் என இருந்த மகளுக்குப் போதுமான குளிராடைகளை அணிவித்து அனுப்ப எனக்குத் தெரியவில்லை. வழியெங்கும் இவ்வளவு பனி இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது என்பதே உண்மை. தலை முதல் கால் வரை கனத்த ஆடைகள், கைகளுக்கு gloves, கால்களுக்கு boots என அணியாவிட்டால் Frost bite ஏற்படும், பிறகு உடல் உறுப்புக்களை வெட்டி எடுப்பது தான் ஒரே வைத்தியம் என்பதெல்லாம் தெரியாது.


இருவரும் குதிரையில் ஏறி பாதித் தொலைவும் சென்று வழியில் நண்பர்களைக் கண்டுபிடித்து அவர்களுடன் சேர்ந்து குச்சியைப் பிடித்துக் கொண்டு நடந்து மீதித் தொலைவுமாகக் கேதர்நாத் சென்றடைந்து அன்றிரவும் மறுநாள் காலையும் கேதார்நாதரைத் தரிசித்து விட்டு குழுக் குழுவாக மறுநாள் மாலைக்குள் சீதாபூர் வந்து சேர்ந்தார்கள். உணவும், தங்குமிடமும் கேதர்நாத்திலேயே பெரியப்பாவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மகள் திரும்பி இறங்கி வருகையில் முழுப் பயணமும் குதிரையில் தான். ஆங்காங்கே குதிரையை நிறுத்தி ஓய்வெடுத்துக் கொண்டு அத்தனை பனிக்கிடையில் பெட்டிக்கடையில் லிம்கா குடித்து, அதை புகைபடம் எடுத்துக் கொண்டு பல அனுபவங்களைப் பெற்றுத் திரும்பினார். கடவுளின் பரிபூரண அருள் இருந்ததால் அனைவரும் நலமுடன் திரும்பினார்கள். அருமையான அந்த அனுபவத்தை இழந்து விட்டேன்.  

சீதாபூர்


சீதாபூர்வாசிகளான நாங்கள் என்ன செய்து கொண்டிருந்தோம் என்பதையும் பகிர்கிறேன். முதல் நாள் சிறு மலைக் கிராமங்களைக் கடந்து சென்ற போது நாமும் இது போன்ற ஒரு ஊரில் சில நாட்களாவது தங்க வேண்டும் என மனதில் நினைத்தேன். அது அடுத்த நாளே நிறைவேறும் என நினைக்கவில்லை. சுற்றுலா ஏற்பட்டாளர் என் பெரியப்பா என்று முன்பே குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம். அவர் காலையில் செய்த பூரிகளும் தயிரும் இருக்கிறது சமாளித்துக் கொள்ளுங்கள் என்று கூறிச் சென்றிருந்தார். மதிய உணவும் பூரி தான். குளியலறையில் மந்தாகினி நீரில் குளித்து துவைத்து ஓய்வெடுத்தோம். கடுமையான வெயில் பகல் முழுவதும். என் மகனும் தந்தையும் வியர்க்கிறது என shorts மட்டும் அணிந்தே பகல் பொழுதைக் கழித்தார்கள். விடுதியின் வாசலிலேயே கௌரி குண்ட் செல்லும் சாலை என்பதால் சாலையின் ஓரமாய் கல்லின் மேல் அமர்ந்து நாள் முழுவதும் ஜீப்கள், கார்களை வேடிக்கை பார்த்தோம். அங்கிருந்து பார்த்தால் சுற்றிலும் மலைகள், அவற்றில் பச்சைப் பசேலென்ற அடர்த்தியான மரங்கள், ஓ…வென்ற சத்தத்துடன் விழும் மந்தாகினி, கோதுமை வயல்களில் அறுவடை முடிந்து மீதம் உள்ள வைக்கோல் (வெயில் பட்டு பளபளப்புடன் இருந்தன), கம்பளிப் புழுக்கள், நாய்கள் என சகலமும் தெரிந்தன. மிக அருமையான இடம்.

விடுதிக் காப்பளாரின் மனைவியுடன் நட்பு செய்து கொண்டு மறுநாள் என் மகனுக்கு எருமைத் தயிர் கொண்டு வர ஏற்பாடு செய்தோம். என் தாயாருக்கு ஹிந்தி மொழியில் பேசத் தெரியும். முதல் நாள் சுட்டு வைத்திருந்த அப்பளம் போன்ற பூரிக்கு பயந்து அருகில் இருந்த சிறு உணவு விடுதியில் சப்பாத்தி சாப்பிட விரும்பினோம். ஒரு சப்பாத்தி என ஆர்டர் செய்த பிறகு தான் அந்த தம்பி மாவே கலக்கினார். பிறகு ஏற்கனவே வேகவைத்த உருளைக் கிழங்கை தாளித்தார். அது தான் இரவு உணவு. பகல் முழுதும் தங்கியிருந்த அறையில் பெரிய ஈக்கள் சுற்றிக் கொண்டிருந்தன. விரட்ட விரட்ட சுற்றிக் கொண்டே இருந்தன. இரவில் பாதியில் மின்சாரம் இல்லை. நாய்கள் ஊளையிடும் சத்தத்தில் தூங்கவே முடியவில்லை. மறுநாள் காலையும் குளியல், சப்பாத்தி, நடைப்பயிற்சி, சாலையில் வேடிக்கை என அமைதியாக மந்தாகினியைப் பார்த்த வண்ணம் பொழுதைக் கழித்தோம். அவர்கள் கொண்டு வந்த தயிர் மலைப் பிரதேசம் என்பதால் சரியாக தயிராகவில்லை என்பதால் மகன் சாப்பிட மறுத்து விட்டார். சிறுவனுக்கு சாதம் வேண்டும் என்று சொல்லியிருந்தால் செய்து கொடுத்திருப்பேனே என உணவு விடுதி நடத்துபவர் வருந்தினார்.

விடுதிக் காப்பாளரின் உதவியுடன் கோதுமை வயலில் இருந்து காய்ந்த வைக்கோலை (கைவேலை செய்யப் பயன்படும்) வாங்கி வந்து சென்னையில் சில straw work சித்திரங்களைச் செய்தேன். ஏறக்குறைய 15 வருடங்களுக்கும் மேலாக வைக்கோலைப் பத்திரமாக வைத்திருந்தேன். பளபளப்பு சற்றும் குறையாமல் இருந்தது. மற்றவர்கள் கேதார்நாத்திலிருந்து வந்ததும் ஆங்காங்கே நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். அன்றிரவும் அங்கேயே தங்கி விட்டு மறுநாள் காலை ஹரித்வாரை நோக்கிய எங்கள் பயணத்தை ஆரம்பித்தோம். இன்றளவும் மறக்க முடியாத மூன்று நாட்கள் அவை.

வழியில் ஸ்ரீநகர் என்னும் ஊரில் மதிய உணவினை முடித்துக் கொண்டு கிளம்பிய சில மணித் துளிகளில் மலைச் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல். எங்கள் பேருந்துக்கு சில பேருந்துகளுக்கு முன்பாக மலையிலிருந்து சாலையை முழுதாக அடைத்த வண்ணம் ஒரு பெரிய பாறாங்கல் விழுந்திருந்தது. ஒரு மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு ராணுவத்தினர் வந்து அந்தக் கல்லை JCB வைத்து 300 அடி ஆழத்தில் ஓடிக் கொண்டிருக்கும் கங்கைப் பகுதியில் தள்ளி விட்ட பிறகு பயணத்தைத் தொடர்ந்து அன்றைய தினமே ஹரித்வாரைச் சென்றடைந்தோம்.  ஹரித்வார் பகுதி சமவெளியில் அமைந்துள்ளதால் சீக்கிரம் செல்ல முடிந்தது.

ஹரித்வார்

இமயமலையில் Shivalik மலைத் தொடர்களுக்கிடையே கங்கையின் கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மற்றொரு தலம் ஹரித்வார். (Haridwar or Hardwar) ஹரி என்பது விஷ்ணுவையும் ஹரன் என்பது சிவனையும் குறிக்கும் சொற்கள் என்பதை நாம் அறிவோம். ஹரி / ஹரனை அடையும் வழி என்னும் பொருளில் உள்ளது இந்த ஊரின் பெயர். வைணவர்களின் புனிதத் தலமான பத்ரிநாத் செல்லவும் சைவர்களின் புனிதத் தலமான கேதார்நாத், அமர்நாத் போன்ற இடங்களுக்குச் செல்லவும் இந்த ஊரிலிருந்து தான் செல்ல வேண்டும் என்பதால் ஹரி/ஹரத்வார் என்னும் பெயர்க் காரணம். கருட புராணத்தில் மோட்சம் தரும் நகரங்களாகக் கூறப்பட்டுள்ள ஏழு நகரங்களில் மாயா என்கிற ஹரித்வாரும் ஒன்று.  

புராணக் கதைகளின் படி பகீரதன் என்னும் அரசன் தன் மூதாதையர்களின் சாபத்திற்கு விமோசனம் வேண்டி கடும் தவம் இருந்து கங்கையை தேவலோகத்திலிருந்து கொண்டு வந்தான். கங்கை அதிவேகமாக பூமியில் விழுந்தால் பூமி தாங்காது என்பதால் சிவன் தன் சடாமுடியில் தாங்கிக் கொண்டு பூமிக்கு அனுப்பியதாகவும், கங்கை பூமியில் விழுந்த இடம் தான் ஹரித்வார் என்றும் கூறப்படுகிறது. மேலும் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்தார்கள். அந்த அமுதத்தை ஒரு குடத்தில் எடுத்துக் கொண்டு கருடன் பறந்து சென்ற போது அதிலிருந்து ஒரு துளி Hari ki Pauri என அழைக்கப்படும் இடத்தில் விழுந்ததாகவும் அந்தப் பகுதியே ஹரித்வார் எனவும் கூறப்படுகிறது. 

இந்த நகரத்தின் முக்கியமான இடமாக இந்தப் பகுதி உள்ளது. யாத்திரிகர்கள் குளிக்கவும் நீத்தார் நினைவுக் கடன்களைச் செய்யவும் இந்தப் பகுதியில் உள்ள கங்கையைத் தான் பயன்படுத்துகிறார்கள். மலைத் தொடர்களின் மேலிருந்து பாயும் நதியானது இந்த ஊரில் சமவெளியில் பாய்கிறது என்பதால் வேகம் சற்றே குறைந்து காணப் படுகிறது. (ஏமாந்தால் இழுத்துச் சென்று விடும் வேகம் தான்) இந்த ஊரில் கங்கைக்குக் குறுக்காக அணை கட்டப்பட்டுள்ளது. BHEL போன்ற நிறுவனங்களும் இங்கே உள்ளதால் தொழில் நகரமாகவும் இந்த ஊர் விளங்குகிறது.

நிற்க.

இன்னும் பல சிறப்புக்களையும் உடைய இந்த நகரத்தை நாங்கள் சென்றடைந்து கங்கா ஆரத்தி நடைபெறும் பகுதிக்குச் அருகில் Dormitory போல் இருந்த ஒரு விடுதியில் தங்கினோம். மக்கள் தொகை சற்றே அதிகமாக உள்ள நகரம் இது. சற்று நேர ஓய்வுக்குப் பிறகு அனைவரும் சிறிது தொலைவு நெரிசலாக வீடுகள் நிறந்த சாலைகளில் நடந்து சென்று கங்கையில் துவைத்துக் குளித்து ஓய்வு எடுத்தோம். பிறகு அங்கிருந்த கோவிலில் சிவனை தரிசித்தோம். நிதானமாக கங்கையின் கரையில் வேடிக்கை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தது இன்றும் நினைவில் உள்ளது. ஆங்காங்கே சிவனின் இடுப்புயர சிலைகள் தென்பட்டன. இந்தப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலின் வெளிப்புறம் மாலை ஆறு மணியளவில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொள்ளும் கங்கா ஆரத்தி என்னும் நிகழ்வு மிகப் பிரசித்தம்.

நாங்களும் மாலை ஐந்தரை மணியளவில் குழந்தைகளை அழைத்துக் (இழுத்துக்) கொண்டு கங்கா ஆரத்தியைக் காண ஓடினோம். அங்கே மக்கள் வெள்ளம். கங்கையின் கரையில் பூசாரிகள் நாங்கள் சென்ற தினத்தின் 5.50க்கே ஆரத்தி காட்டி பூஜை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். கூடியிருந்த பக்தர்கள் ஓம் ஜெய் கங்கே மாதா..என ஒருமித்துப் பாடினார்கள். பிறகு கங்கையில் பூக்களையும் விளக்குகளையும் விட்டுப் பூஜை செய்தார்கள். இரவு நேரத்தில் நதியில் விளக்குகள் மிதக்க இரு பக்கமும் உள்ள கட்டிடங்களிலிருந்து விழும் வெளிச்சமும் நதி நீரில் தெரிய… கொள்ளை அழகு. வித்தியாசமான அனுபவம்.

[நாங்கள் இந்தப் புனிதச் சுற்றுலாவை ஆரம்பித்த தினத்தன்றே சிவன், கங்கா மற்றும் பல தெய்வங்களுக்கான ஆரத்திப் பாட்டுக்களை அச்சடித்துப் புத்தக வடிவில் எங்களுக்குத் தந்திருந்தார்கள். ராகம் ஒன்றே தான் பாடல் வரிகள் தான் வெவ்வேறு என்பதால் அனைவரும் பயண நேரத்தில் அவ்வப்போது பாடிய படியே சென்றோம். [ஓம் ஜெய் கங்கே மாதா… ஓம் ஜெய் ஜெகதீச ஹரே…]

இங்கேயும் பல புகழ்பெற்ற கோவில்களும் ஆசிரமங்களும் உள்ளன. மலை மேலிருக்கும் மானசா தேவி கோவிலுக்கு செல்ல கேபிள் கார்கள் இருப்பதால் குறிப்பாக சுற்றுலாப் பயணியரால் பெரிதும் விரும்பப் படுகிறது. எங்களில் சில குடும்பத்தினர் மற்றும் சென்று வந்தார்கள். மற்றவர்கள் ஓய்வெடுத்தோம். மறுநாள் காலை இந்தியாவின் தலை நகரான புது தில்லியை நோக்கிப் பயணித்தோம். இயற்கையின் பிடியை விட்டு செயற்கையை நோக்கிய பயணம் எனக் கூறலாம்.

மீண்டும் புது தில்லி

“தேஹலி” என்ற வார்த்தைக்கு நுழைவாயில் எனப் பொருள். இந்தியாவின் நுழைவாயிலான தேஹலி என்பது மருவி தில்லி எனத் தற்போது வழங்கப் படுகிறது. இந்த நகருக்குள் நுழையும் சமயம் பாபரும், அக்பரும், முகம்மது கஜினியும், கோரியும் நினைவில் வந்து போனார்கள். (என்னடா… தில்லிக்கு கூட்டிப் போகிறேன் என்று சொல்லி விட்டு சமாதி சமாதியாக கூட்டிச் செல்கிறாய்_என் தாத்தா பெரியப்பாவிடம் கேட்டது) இங்கே காந்தி, நேரு என ஆரம்பித்துப் பல தலைவர்களுக்கும் சமாதிகள் உள்ளன.

தில்லியில் லோதி சாலையில் உள்ள ராமர் கோவிலை ஒட்டிய இடத்தில் தங்கினோம். போகும் போது தங்கிய அதே இடம் தான். பூஜைகளில் கலந்து கொண்டு எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவினை உண்டு விட்டு ஊர் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தோம். என் கணவரின் நெருங்கிய நண்பரின் சகோதரர்தான் பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தார். அவர்களது தாயார் அன்று காலையில் சென்னையில் இறைவனை சேர்ந்து விட்டார் என்பதால் சந்திக்க இயலவில்லை. என் கணவரும் அன்று முழுவதும் மிகுந்த மன வருத்தத்துடனேயே ஊர் சுற்றினார். (அன்று மாலை மற்றொரு உறவினர் எங்களைச் சந்தித்துச் சென்றார்)

மே மாதக் கத்திரி வெயிலில் சில பல தண்ணீர் கேன்களுடன் பேருந்தில் கிளம்பினோம். கடுமையான வெயில். India gate, பாராளுமன்றக் கட்டிடம், ஜனாதிபதி மாளிகை (அதோ பாருங்கள்…அது தான் ஜனாதிபதி மாளிகை), காந்தி சமாதி, Red fort (பிரதம மந்திரி சுதந்திர தினத்தன்று கொடியேற்றுவாரே…), பிர்லா மந்திர் எனச் சுற்றிப் பார்த்து விட்டு குதுப் மினார் அருகில் சென்றோம். என் தந்தையார் பேருந்திலிருந்து நான் கீழே இறங்கவே மாட்டேன் எனக் கூறி விட்டார். உச்சி வெயில் மண்டையைப் பிளந்தது. பேருந்தை விட்டு இறங்கவே பயமாக இருந்தது. தண்ணீர் கேன்கள் தீர்ந்து கொண்டே இருந்தன. பேருந்தின் அருகில் குளிர்ச்சியான  மோர், இளநீர், லஸ்ஸி விற்றுக் கொண்டிருந்தார்கள். குதுப் மினாரைப் பார்ப்பதை விட இவற்றை வாங்கிக் குடிப்பதே முக்கியம் என்பது எங்கள் கருத்து.

நிதானமாக உள்ளே நடந்து சென்று குதுப் மினாரைக் கண்டோம். டில்லியை ஆண்ட முகலாய மன்னர் குத்புதீன் ஐபெக் என்பவரால் தொடங்கப் பட்டு அவரைத் தொடர்ந்து ஆண்ட மன்னர்களால் கட்டி முடிக்கப்பட்ட 72 மீட்டர் உயரமுடைய கோபுரம் இது. குதுப் வளாகத்தில் (complex) அமைந்துள்ள மசூதியைச் சேர்ந்த இது இந்தோ-இஸ்லாமியக் கட்டிடக் கலைக்குச் சான்றாக உள்ளது. UNESCO heritage site ஆக விளங்கும் இந்தக் கோபுரத்தின் உச்சியைச் சென்றடைய 378 படிகள் ஏற வேண்டும். சிவப்பு வண்ணக் கற்களால் கட்டப் பெற்ற இந்தக் கோபுரம் வருடங்கள் பல கடந்தும் புதுப் பொலிவுடன் திகழ்கிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம் என்பதால் விவரங்கள் கூறி என் குழந்தைகளை கட்டாயப் படுத்தி அழைத்துச் சென்று காட்டினேன். இந்த வளாகத்தின் உள்ளே அமைந்திருக்கும் காலத்தால் அழியாத இரும்புத் தூணையும் கண்டோம்.

முதலாம் சந்திரகுப்தரால் நிறுவப் பெற்ற இந்தத் தூண் பண்டைய பாரதத்தின் உலோகவியல் துறையின் சிறப்பினை வெளிப்படுத்தும் வண்ணம் உள்ளது. இந்தத் தூணை இரண்டு கைகளாலும் கட்டி அணைக்க முடிந்தவருக்கு அவர் நினைத்தது நடக்கும் என ஒரு மூட நம்பிக்கை. மனித வியர்வைக்கு இரும்பைத் துருப்பிடிக்க வைக்கும் தன்மை உண்டு என்பதால் தூணைச் சுற்றிலும் கனத்த வேலி அமைக்கப் பட்டுள்ளது.

மதிய உணவிற்குப் பிறகு மாலையில் ஆஸ்திரேலிய நகரமான சிட்னியில் அமைந்துள்ள Opera house போன்ற வடிவில் (மலர்ந்த தாமரை வடிவம்) அமைந்துள்ள Bahai கோவிலைக் காணச் சென்றோம். Bahai faith என்பது 19 ஆம் நூற்றாண்டில் ஈரானில் தோன்றியது. அனைத்து மதங்களிலிருந்தும் நற்கருத்துக்களைத் தொகுத்து ஏற்றுக் கொண்டு உலக மக்களின் ஒற்றுமையை நாடும் மதம் இது. இவர்களுக்கான வழிபாட்டுத் தலம் தான் இது. (உருவ வழிபாடு இல்லை)

27 விரிந்த தாமரை இதழ்களைப் போன்ற அமைப்புடன் ஏறக்குறைய 34 மீட்டர் உயரத்தில் 2500 பேர் அமர்ந்து பிரார்த்தனை செய்யக் கூடிய கோவில் இது. இங்கே எந்த ஒரு மதத்தைச் சேர்ந்தவரும் அவரது மத நூலில் உள்ளவற்றைப் படித்தோ பாடியோ வணங்கலாம். மிகப் பெரிய வளாகத்தில் அமைந்துள்ள இந்தத் தாமரைக் கோவிலுக்குள் செல்ல நடை பாதையில் சிறிது தொலைவு நடந்து சென்று நம் காலணிகளை ஓரிடத்தில் வைத்து விட்டு கால்களைக் கழுவிக் கொண்டு மீண்டும் படிக்கட்டுக்களில் ஏறி உள்ளே சென்றோம். காலணிகளை கோணிப் பைகளில் கட்டி பூமி மட்டத்திற்குக் கீழே வைத்திருந்து நாம் திரும்பி வந்ததும் எடுத்துத் தந்தார்கள். (வித்தியாசமான முறையாக இருந்ததால் இன்றளவும் நினைவில் உள்ளது)

கோவிலுக்குள் வரிசையாக இருக்கைகள் போடப்பட்டு மிகச் சிலர் அமைதியாக தியானம் செய்து கொண்டிருந்தார்கள். சுற்றிலும் சிறு குளங்கள் கட்டி அதில் நீரைத் தேக்கி வைத்திருந்ததால் உள்ளே குளிர்ச்சியாக இருந்தது. (மின்விசிறி/AC இல்லாமலே) சுற்றிலும் நடந்து சென்று பார்த்து சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்து விட்டுத் திரும்பினோம். தாஜ் மஹால் போல வெள்ளைப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோவில் காற்று மாசு காரணமாகச் சிறிது சிறிதாகத் தன் நிறத்தை இழந்து சற்றே நிறம் மாறிக் கொண்டிருப்பது வருத்தத்திற்குரியது.

மாலை மங்கியதும் தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பி சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு இரவு உணவிற்குப் பிறகு சென்னையை நோக்கி Grand trunk expressல் கிளம்பினோம்.

முன் சென்ற பயண அனுபவங்களால் இம்முறை மிகுந்த விழிப்புணர்வுடன் என் மகனது கையை என் துப்பட்டாவின் ஒரு முனையில் கட்டி விட்டு மறு முனையை என் கழுத்தில் சுற்றிக் கொண்டேன். இரண்டு மீட்டர் மட்டுமே அவரால் நகர முடியும் என்பதால் கவலையின்றிப் பயணத்தை முடித்தேன்.

பின் குறிப்பு:

இந்த நாட்களைப் போல தங்குமிடம் என்பது தனி அறை இல்லை. அனைவரும் ஒன்றாகத் தங்கி நதியில் நீராடி அங்கேயே துணி துவைத்து ஒன்றாக அமர்ந்து உண்டு கடவுளை வணங்கி…என இந்தப் பயணம் ஒரு கூட்டு அனுபவம் என்று சொல்லலாம். தனி அறை வேண்டும் எனக் கேட்டு முரண்டு பிடித்தவர்களும் இருந்தாலும் கூடி இருக்க விரும்பியவர்களே அதிகம். அநேகமாகத் தினமும் நதியில் நீராடும் வாய்ப்புக் கிடைத்ததாலும் கோடைக்காலம் என்பதாலும் எடுத்துச் சென்ற பெட்டிகளில் ஒன்றைக் கடைசி வரை திறக்கவே சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

வழியெங்கும் ஒரு பக்கம் அடுக்கடுக்காக இமயமலைத் தொடர்கள், மறு புறம் 300-400 அடி ஆழத்தில் கங்கை, எப்போது நிலச் சரிவு ஏற்படும் என… ஒரு விதத்தில் “திக் திக்” பயணம். எந்த மலைக்குப் பின்னால் சூரியன் உதிக்கிறது எங்கே மறைகிறது எனத் தெரியாதபடி அடுக்கடுக்காக மலைத் தொடர்கள். நாங்கள் கோடையில் சென்றதால் சூரிய வெளிச்சம் காலை நாலு முதல் இரவு எட்டு வரை இருந்தது. என் கணவர் நண்பர்களுடன் அரட்டை அடித்தபடி வர, என் பிள்ளைகள் என் தாயாருடன் இருக்க என் தந்தையாரும் நானும் அமைதியாக சுற்றுப் புறத்தை வேடிக்கை பார்த்தபடி பயணித்தோம். வரலாறு, புவியியல் பாடங்களில் படித்திருந்த இடங்களையும் புராணக் கதைகளில் கேட்டிருந்த ஊர்களையும் கண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

பெரியாழ்வாரின் “அப்போதைக்கிப்போதே சொல்லி வைத்தேன்“ என்னும் கூற்றுப் படி இப்போதே மீண்டும் ஒரு முறை திருவதரி சென்று பத்ரி நாராயணனை வணங்க ஆசைப்படுகிறேன். விக்கிபீடியாவும், கூகிளும், இன்டெர்நெட்டும், அக்கால கட்டத்தை விடச் சற்றே கூடுதலான பொருளாதார வசதியும் உள்ள இந்தக் கால கட்டத்தில் பயணம் இன்னும் இனிமையாக இருக்கும் என்பது என் கருத்து.

“அவனருளாலே அவன் தாள் வணங்கி“ என்னும் மாணிக்கவாசகரின் வாக்கின்படி அவன் அருள் பெற்று மீண்டும் அவனை வணங்குவேன் என்ற நம்பிக்கையுடன் இந்தப் புனிதப் பயணக் கட்டுரையை முழுவதுமாய் எழுதி முடிக்கும் மன உறுதியைத் தந்த அவனுக்கும், தகவல்கள் தந்து உதவிய விக்கி மாமாவிற்கும் (விக்கிபீடியா), இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்த மறைந்த திரு கோவிந்தராஜன் அவர்களுக்கும் பயணத்தை ஒருங்கிணைத்த என் கணவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

அவனருளாலே…

பயணங்கள் தொடரும்…



 

 

Wednesday, 27 March 2024

LTC பயணங்கள் – பத்ரிநாத், கேதார்நாத் [பகுதி -2]

சென்னை-ஆக்ரா-மதுரா-புதுதில்லி-ரிஷிகேஷ்-தேவபிரயாக்-ஜோஷிமட்-பத்ரிநாத்-கேதார்நாத்-ஹரித்வார்-புது தில்லி


புது தில்லியிலிருந்து இனி நாம் செல்லப் போகும் இடங்கள் அனைத்தும் இமய மலையின் மேல் உள்ளவை என்பதால் இமயமலையைப் பற்றிய சில விவரங்களைத் தெரிந்து கொண்டு மேலே பயணத்தைத் தொடர்வோம்.

புவியியலாளர்களின் கருத்துப்படி இமய மலைத் தொடர் Young fold mountains எனப்படும் மடிப்பு மலை வகையைச் சேர்ந்தவை. பூமியின் தெற்கில் லெமூரியா என்னும் கண்டம் கடலில் மூழ்கிய போது எடையை சமப்படுத்தும் வகையில் இமய மலைத் தொடர்கள் கடலுக்குள்ளிருந்து மேலெழும்பியதாகப் புவியியலாளர்கள் கூறுகிறார்கள். இந்தியத் துணைக் கண்டத்தின் (sub continent) சமவெளிகளையும் (plains) திபெத் பீடபூமியையும் பிரிக்கும் மிகப் பெரிய மலைத் தொடர் இது. அடுக்கடுக்காக அமைந்துள்ள இவை நேபாள், சீனா, பாகிஸ்தான், பூடான், இந்தியா ஆகிய நாடுகளின் குறுக்காக அமைந்துள்ளன. உலகின் மிக உயரமான சிகரங்கள் பலவும் இதில் உள்ளன. கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா போன்ற நதிகள் இங்கே உற்பத்தியாகின்றன. Young என்னும் வார்த்தைக்கு ஏற்ப இங்குள்ள பாறைகள் இன்னும் மற்ற மலைகளைப் போலக் கெட்டியாகவில்லை. அடிவாரத்தில் இருந்த கற்களில் சிலவற்றை எடுத்துப் பார்த்த போது சோன்பப்டி போல layer களுடன் உதிர்ந்தது.

ரிஷிகேஷ்

Garhwal Himalayas என்பது உத்தர்காண்ட் மாநிலப் பகுதியில் அமைந்துள்ள இமாலய மலைத் தொடர்களின் பெயராகும். [Himalaya= himam + aalayam; Himam= பனி, aalayam = இருப்பிடம்] இந்த மலைகளின் நுழைவாயிலாக ரிஷிகேஷ் அழைக்கப் படுகிறது. இங்கு பலப் பல ஆசிரமங்கள் உள்ளன. யோகா பயிற்சியின் தலைநகரமாக இது விளங்குகிறது. கங்கையின் கரையில் அமைந்துள்ள இந்த நகரம் இந்துக்களின் புண்ணியத் தலமாக விளங்குகிறது. சார் தாம் (Char dham) என அழைக்கப் படும் கங்கோத்ரி (கங்கை உற்பத்தியாகும் இடம்), யமுனோத்ரி (யமுனை உற்பத்தியாகும் இடம்), பத்ரிநாத், கேதார் நாத் போன்ற இடங்களும் Garhwal himalayas பகுதியில் தான் அமைந்துள்ளன. இந்த நகரம் உத்தர்காண்ட் மாநிலத் தலைநகரான டேராடூனிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

Hrushikesh என்பதை hrishika + isha எனப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். Hrishikam=senses, Isha = Lord. (இந்திரியங்களை வென்றவன்/தலைவன் எனப் பொருள்)

மறுநாள் அதிகாலை இந்த ஊரை வந்தடைந்து நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ஊருக்கு வெளிப்புறமாக அமைந்துள்ள ஆண்டவன் ஆசிரமத்தை அடைந்தோம். வசந்த காலம் முடிந்து கோடைக்காலம் ஆரம்பிக்கும் நேரமாக இருந்ததால் வழியெங்கும் பசுமையும் அழகும் கொஞ்சி விளையாடியது. நாங்கள் தங்கியிருந்த இடம் ஊருக்கு வெளியில் சுற்றிலும் பல வண்ண மலர்ச் செடிகளுடன் இருந்தது மனதிற்கு ரம்மியமாக இருந்தது.

வழக்கம் போல காலையில் அனைவரும் நதிக்குச் (கங்கைக்கு) சென்று நீராடி விட்டு வரப் பணிக்கப் பட்டோம். (அதற்குள் காலை/மதிய உணவு தயாராகி விடும்) 1-1.5 கிலோமீட்டர் தொலைவில் கங்கை ஓடிக் கொண்டிருக்கும் இடத்திற்குப் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு அனைவரும் நடந்து சென்றோம். கரையின் இருபுறமும் மரங்களுடன் கங்கை அந்தப் பகுதியில் அமைதியாக ஆழம் அதிகமில்லாமல் ஓடுகிறது. எங்கள் குழுவைத் தவிர வேறு யாரும் அந்தப் பகுதியில் இல்லாதால் அமைதியாக இருந்தது. என் தாயாரின் உதவியுடன் பிள்ளைகளைக் குளிப்பாட்டி நாங்களும் குளித்து துவைத்து… அற்புதமான அனுபவம். (துணி துவைத்துக் காய வைப்பதல்ல நான் குறிப்பிடும் அனுபவம் 😊)

மீண்டும் நடந்து வந்து தங்குமிடத்தில் இருந்த கோவில் பூஜையில் கலந்து கொண்டு, உணவை உண்டு விட்டு ஊரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம். பேருந்தில் ஏறி நகரின் மையப் பகுதியின் நெரிசலான பகுதிகளைக் கடந்து வடகிழக்கில் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் லக்ஷ்மண் ஜூலா என்றழைக்கப்படும் தொங்கு பாலத்தைக் (suspension bridge) காணச் சென்றோம். (2020 முதல் இந்தப் பாலம் மூடப்பட்டு விட்டதாக விக்கி மாமா கூறுகிறார்) இந்தப் பாலம் கங்கையின் மேற்குக் கரையில் உள்ள Tapovan என்னும் ஊரை கிழக்குக் கரை ஊரான Jonk உடன் இணைக்கிறது. ராமாயண காலத்தில் லட்சுமணன் சணல் கயிறால் ஆன பாலத்தில் நடந்து சென்று கங்கையைக் கடந்தாகப் புராணக் கதைகள் கூறுகின்றன. பின்னாட்களில் நல்ல பாலம் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நாங்கள் குளித்த பகுதியில் அமைதியாக ஆழம் முறைவாக சற்றே குறுகலாக ஓடிய கங்கை இந்தப் பகுதியில் ஆழமும் அகலமுமாக ஓடிக் கொண்டிருந்தது. தொங்கு பாலத்தின் மேல் அனைவரும் தள்ளாடியபடி நடந்து சென்றோம். பாலம் கீழே இறங்கி இறங்கி ஏறியது. பயந்து கொண்டே நடந்து சென்று திரும்பி வந்தோம். அருகிலேயே புதுப் பாலம் கட்டப்பட்டு தற்போது அதில் போக்குவரத்து நடைபெறுகிறது. இந்தப் பாலத்திற்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அகலமான ராம் ஜூலா என்னும் பாலமும் உள்ளது.

அடுத்ததாக கங்கையின் கரையில் அமைந்துள்ள கடைவீதியில் ஷாப்பிங் செய்தோம். அங்கு வாங்கிய மிக மெல்லிய பூரி தேய்க்கும் குழவி (ஒரு பக்கக் கைப்பிடி உடைந்த போதும்) இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது. ருத்ராக்ஷம், க்ரிஸ்டல் எனப்படும் கண்ணாடிக் கற்களால் ஆன மாலைகளைப் பல்வேறு அளவுகளில் விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். (இந்த ஊர் யோகா பயிற்சியின் தலைநகரம் மற்றும் ஆசிரமங்களுக்கும் புகழ்பெற்றது என்பதை மீண்டும் நினைவு படுத்திக் கொள்வோம்) அமைதியான இந்த ஊரில் நாமும் வாழ வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் சுற்றிலும் பசுமையுடன் கூடிய ஆசிரமங்கள் தென்பட்டன. நாங்கள் மாலை 6 மணிக்கு நடந்து கொண்டே ஊரைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த போது சின்மயா ஆசிரமத்தின் 6 மணிக்கான மணியோசையைக் கேட்க நேர்ந்த போது .தெய்வீக உணர்வு ஏற்பட்டது. முதுமைக்காலத்தில் ரிஷிகேஷில் வசிக்க வேண்டும் என நினைத்தேன்.

இரவு உணவுக்குப் பின் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படும் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் மூடிவதற்குள் செல்ல வேண்டும் என அவசரமாக ஏகாந்த சேவை எனப்படும் இறைவனை உறங்க வைக்கும் நிகழ்வுக்குச் சென்றோம். திருப்பதி போன்ற அமைப்புடைய கோவில், கடவுளின் சிலை என அழகாக இருந்தது. வீணை வாசித்து லாலி பாடியதை நிதானமாக சந்நிதியில் அமர்ந்து கேட்டு, இறைவனை தரிசித்து விட்டு பிரசாதமாகக் கைநிறையக் கிடைத்த உலர்பழங்களை உண்டு விட்டுத் தங்கியிருந்த இடத்திற்கு வந்து ஓய்வெடுத்தோம்.

தேவபிரயாகை @ கண்டமென்னும் கடிநகர்

மறுநாள் அதிகாலையில் கண்டமென்னும் கடிநகர் என ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற தேவப்பிரயாகையை நோக்கிய எங்கள் 74 கிலோமீட்டர் பயணம் ஆரம்பமாகியது. கார், பேருந்து, மோட்டார் சைக்கிள் மற்றும் shared taxi or jeep மூலம் பயணிக்கலாம்.

செல்லும் வழியெங்கும் அடர்த்தியான வனங்களும், அழகான சிறு கிராமங்களும், ஆங்காங்கே ஆசிரமங்களும், படிக்கட்டுக்கள் போல அமைக்கப்பட்ட விவசாய நிலங்களுமாக (terraced fields) அருமையான காட்சிகள் தென்பட்டன. இந்திய ராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும் குறுகலான மலைச் சாலையில் பயணம் செய்தோம். வழியில் எங்கெங்கும் பல வண்ணப் பூக்கள் தென்பட்டன. ஆங்காங்கே பேருந்தை நிறுத்திச் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டே முன்னேறினோம். சுற்றுலா செல்ல ஏற்ற சமயம் என்பதால் வழியெங்கும் நிறையப் பேருந்துகள் தென்பட்டன.

பண்டிட் நிலைக்கான வகுப்பில் (ஸம்ஸ்கிருதம்) மஹாகவி காளிதாசரால் இயற்றப்பட்ட ரகுவம்சம் என்னும் காவியத்தின் ஒரு பகுதியைப் படிக்க நேர்ந்தது. அதில் இமயமலையும் கங்கையும் மிகவும் சிறப்பித்து எழுதப் பட்டுள்ளன. திலீபன் என்னும் அரசன் பல காலம் குழந்தை வரம் இல்லாமல் தன் குலகுருவான வசிஷ்டரை சந்தித்து, காமதேனுவின் குழந்தையான நந்தினியை வழிபட்டு பிள்ளை வரம் பெறுகிறான். அவனே “பரதன்”. அவனது பெயரை ஒட்டியே நம் நாடு பாரதம் எனப் பெயர் பெற்றது.

வசிஷ்டரின் ஆசிரமம் உள்ள இடம், திலீபன் வசித்த இடம், பசுவை இமய மலையின் வனத்தில் மேய்த்தல், அங்கு பெருக்கெடுத்து மிகுந்த சத்தத்துடன் விழும் கங்கை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் வனப்பு எனக் கலாரசனையான உவமைகளுடன் மிக அருமையாக விளக்கியுள்ளார் கவி. [உவமா காளிதாச: என்பது அவருக்களிக்கப்பட்ட பட்டப் பெயர். உவமை என்றாலே காளிதாசர் தான்]

அவரது சில வர்ணனைகளை மட்டும் உங்களுடன் இங்கே பகிர விரும்புகிறேன். சாலையின் இருமருங்கிலும் உள்ள மரங்கள் அரசன் வெற்றியுடன் திரும்பி ராஜபாட்டையில் நடந்து வரும்போது பெண்கள் வறுத்த தானியங்களை வாரி இறைப்பது போலப் பூக்களை திலீபனின் தலையில் இறைத்தனவாம். (தற்காலத்தில் அரிசியை மஞ்சளுடன் சேர்த்து அட்சதை போடுவது போல வறுத்த தானியங்களை வாரி இறைத்தல் என்பது பண்டைய கால நடைமுறை).
மற்றொரு உவமை. காமதேனு சிங்க உருவில் மாயாவியாக ஒரு குகை வாயிலில் தேவலோகப் பசு காமதேனுவின் மகள் நந்தினியை (மாட்டை) தன் வாயில் கவ்விக் கொண்டு நின்று கொண்டிருக்கிறது. அந்தக் குகையானது கங்கை பெரு நீர்வீழ்ச்சியாகத் தரையில் விழும் போது தெறிக்கும் நீரால் வளர்ந்த அடர்த்தியான புற்களின் அருகில் உள்ளது என்கிறார் கவி. திலீபன் காமதேனுவை விட்டு விடு என வேண்டுகிறான். சிங்கம் இங்கே பார்வதிக்கு மிகவும் பிரியமான தேவதாரு மரத்துக்குக் காவலாக என்ன நியமித்துள்ளார். முன்பொரு சமயம் ஒரு யானை தன் தும்பிக்கையை இந்த மரத்தில் உரசிய போது அதன் தோல் பிய்ந்து போயிற்று. அதைக் கண்டதும் பார்வதி அசுர்களுக்கெதிரான போரில் விஷ அம்பு கார்த்திகேயன் மேல் பாய்ந்த போது எப்படித் துடித்தாளோ அது போலத் துடித்துப் போனாள். ஆகையால் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் கிடைத்த உணவையும் விட மாட்டேன் என்கிறது சிங்கம். கங்கையும் இமயமலையும் இன்றளவும் அப்படியே தான் உள்ளன. வழியில் காண நேர்ந்த இமயமலையும் கங்கையும் எங்கோ என்னை இழுத்துச் சென்று விட்டன.

நிற்க.

தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்ததாகக் கருதப்படும் அலகானந்தா மற்றும் பாகீரதி ஆகிய இரண்டு நதிகள் சங்கமிக்கும் இடம் தேவப்ரயாகை. இங்கே சங்கமித்த பிறகு “கங்கை” எனப் பெயர் பெறுகிறது. அதன் பயணம் தொடர்ந்து அலகாபாத்தை அடையும் போது யமுனை மற்றும் சரஸ்வதி நதிகளுடன் சங்கமிப்பதால் “திரிவேணி சங்கமம்” எனப்படுகிறது. இங்கிருந்து கங்கை எனப் பெயர் பெரும் நதி உத்தரப்பிரதேசத்தின் சமதளங்களை நோக்கிப் பாய்ந்து அந்தப் பகுதியை வளப்படுத்துகிறது.

ப்ரயாக் என்றால் இரண்டு சம அளவிலான நதிகளின் சங்கமம். உத்தர்காண்ட் மாநிலத்தில் அலகாந்தாவுடன் ஐந்து நதிகள் சங்கமிக்கின்றன.(பஞ்ச ப்ரயாக்) பத்ரிநாத் செல்லும் வழியில் நாம் காணும் முதல் ப்ரயாக் “தேவப்ரயாக்”.

அலகானந்தா + பாகீரதி -> தேவப்ரயாக்
அலகானந்தா + தௌலிகங்கா -> விஷ்ணுப்ரயாக்
அலகானந்தா + நந்தாகினி ->நந்தப்ரயாக்
அலகானந்தா + பிண்டர் -> கர்ணப்ரயாக்
அலகானந்தா + மந்தாகினி -> ருத்ரப்ரயாக்

இமய மலையில் பாயும் ஆறுகள் அனைத்தும் பனி உருகி வழிவதால் உருவானவை என்பதால் இவைகளில் ஆண்டு முழுவதும் நீர்ப் பெருக்கு இருக்கும். (Perennial rivers) உயரமான மலை மேலிருந்து கீழ் நோக்கிப் பாய்வதால் பெரும் சத்தத்துடன் இவைகள் பாய்ந்தோடி வருகின்றன.

அலகாநந்தாவும் பாகீரதியும் கூடும் இடம் பேருந்து நின்ற இடத்திலிருந்து ஏறக்குறைய 200 அடி கீழே. இரண்டு நதிகளும் மிகுந்த வேகத்துடன் சுழித்துக் கொண்டு வந்து ஒன்றாகக் கலக்கின்றன. அந்தப் பகுதியில் நிற்கவே பயமாக இருந்தது. கரணம் தப்பினால் மரணம் தான். நீருக்குள் இறங்கிக் குளிப்பதெல்லாம் நடக்காது. மிகுந்த வேகத்துடன் சுழித்துக் கொண்டு கங்கையாக மாறும் நதியின் கரையில் பிடித்துக் கொண்டு நிற்கத் தடுப்புப் கம்பிகள் கட்டப்பட்டுள்ளன. அனைவரும் கம்பியைப் பிடித்துக் கொண்டு நின்றோம். தவறி விழுந்தால் யாராலும் காப்பாற்ற முடியாது. எங்கள் குழுவுடன் சமைப்பதற்காக வந்த உதவியாளர் ஒருவர் பெரிய காது வைத்த தூக்கில் தண்ணீரை முகர்ந்து எங்கள் அனைவரின் தலையிலும் ஊற்ற…அது தான் குளியல்.

குளித்து முடித்ததும் நதியின் குறுக்காக அமைந்துள்ள பாலத்தைக் கடந்து இந்தச் சிறிய ஊரின் மேடான பகுதியில்108 படிக்கட்டுக்களுடன் அமைந்துள்ள “ரகுநாத்ஜி” கோவிலை அடைந்தோம். தேவப்ரயாகை அல்லது திருக்கண்டமென்னும் கடிநகர் 108 வைணவத் தலங்களுள் ஒன்று. பெரியாழ்வாரால் பாடல் பெற்ற இந்தக் கோவிலின் கடவுளர்கள் நீலமேகப் பெருமாள்/ புருஷோத்தமன் மற்றும் புண்டரீகவல்லி தாயார் ஆவர்.

மூன்றெழுத்ததனை மூன்றெழுத்ததனால்* மூன்றெழுத்தாக்கி* மூன்றெழுத்தை-
ஏன்றுகொண்டிருப்பார்க்கு இரக்கம் நன்குடைய* எம் புருடோத்தமன் இருக்கை*
மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி* மூன்றினில் மூன்றருவானான்*
கான்தடம் பொழில்சூழ் கங்கையின் கரைமேல்* கண்டமென்னும் கடிநகரே.
-பெரியாழ்வார்

இந்த ஆலயம் ஆதிசங்கரரால் நிறுவப் பட்டதாகக் கூறப்படுகிறது. கலிங்கச் சிற்பக் கலையின் அடைப்படையில் அமைந்துள்ளது இந்த ஆலயம். இங்குள்ள கல்வெட்டுக்கள் இதன் சரித்திரத்தை நமக்குத் தெரிவிக்கின்றன. பெரியப்பா விவரங்கள் கூற நாங்கள் கடவுளை தரிசித்தோம். [நாமே ஏற்பாடு செய்திருந்த சுற்றுலா என்பதால் எந்த அவசரமும் பரபரப்பும் இல்லாமல் நிதானமாக ஒவ்வொரு இடத்தையும் நன்றாக அனுபவித்துப் பார்க்க முடிந்தது]

மதிய உணவிற்குப் பிறகு அங்கிருந்து கிளம்பி பத்ரிநாத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தோம். (இரண்டு நாட்கள் பயணம் செய்த பிறகு தான் பத்ரிநாத் வரும்)காலையில் சமைத்து எடுத்து வரப்பட்ட உணவு மதியம் ஒரு பூங்காவில் தரப்பட்டது. சற்று நேரம் இமயமலையின் அழகைக் கண்டு விட்டுப் பயணத்தைத் தொடங்கினோம். வழியெங்கும் மரங்களில் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கின. கத்திரிப்பூ நிற வாதநாராயண மலர்களை முதன்முதலாக அங்கே கண்டேன். புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். [இம்முறை கேமரா கடந்த பயணத்தில் இருந்ததை விடbetter என்பதால் புகைப்படங்கள் நிறைய எடுத்தோம்]
சூரிய ஒளி இரவு எட்டு மணி வரை இருந்ததால் அது வரை தினமும் பயணம் செய்தோம். மலை மேலமைந்த ஆபத்தான சாலை என்பதால் மணிக்கு 15-20 கிலோமீட்டர் வேகத்தில் தான் பேருந்து செல்லும். 145 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிபில்கோடி(Pipilkoti) என்னும் அழகிய சிறு கிராமத்தை இரவு சென்றடைந்தோம். பத்ரிநாத் செல்பவர்கள் இங்கு தங்கிச் செல்கிறார்கள்.

இளைப்பாறிய நேரத்தில் எங்களுடன் பயணித்த நண்பரின் உறவினர் (ஹோமியோபதி மருத்துவம் தெரிந்தவர்) வயிற்றின் செரிமான சக்தியைப் பாதுகாக்கும் வகையில் வெள்ளை நிறக் குளிகைகளை என்னிடம் தந்து அனைவருக்கும் தருமாறு கூறினார். மீதி இருந்த குளிகைகளை நானே விழுங்கி விட்டேன். (அதிக dosage)

இரவு உணவாக சாதமும் ராஜ்மா பீன்ஸ் குழம்பும் தரப்பட்டது. மலைப் பிரதேசங்களில் குறைந்த காற்றழுத்தம் காரணமாக உணவுப் பொருட்கள் வேக அதிக நேரமாகும். சாதம், ராஜ்மா இரண்டுமே சரியாக வெந்திருக்கவில்லை. நடுவில் தொட்டி முற்றத்துடன் கூடிய விடுதி. எங்கள் குழந்தைகள் ஓடி ஆடி விளையாடினார்கள். மறுநாள் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து தயாராகி ஐந்து மணிக்குக் கிளம்ப வேண்டும் என்பதால் சீக்கிரமாக (அப்போதே மணி பத்து இருக்கும்) உறங்கச் சென்றோம்.

ஜோஷிமட்

மறுநாள் அதிகாலை திட்டமிட்டபடி கிளம்பினோம். வழியில் மற்றொரு வைணவத் தலமான “திருப்பிரிதி@ஜோஷிமட்” டை அடைந்தோம். இமய மலையில் 6150 அடி உயரத்தில் அமைந்துள்ள நகராட்சிப் பகுதி இது. பத்ரிநாத் கோவிலுக்குப் புனித யாத்திரை செல்பவர்களுக்கும் இமயமலையில் மலை ஏறுபவர்களுக்கும் Valley of flowers செல்பவர்களுக்கும் இது தான் ஆரம்ப நுழைவாயிலாக உள்ளது இந்த ஊர். ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட நான்கு மடங்களுள் ஒன்று இங்குள்ளது. ஒவ்வொரு திசைக்கும் ஒரு மடம் அதற்கொரு வேதம் எனப் பிரித்தளித்து அந்த மடத்தைச் சேர்ந்தவர்கள் தமக்களிக்கப் பட்ட வேதத்தைக் காப்பாற்றவும் வளர்க்கவும் பாடுபட வேண்டும் எனப் பணித்தார்.

[தெற்கு – சிருங்கேரி-யஜுர், வேதம்
மேற்கு – துவாரகா -சாம வேதம்
வடக்கு – ஜோஷிமடம் – அதர்வண வேதம்
கிழக்கு – புரி – ரிக் வேதம்]

ஜோஷிமட் ஆலயத்தின் முக்கிய தெய்வம் ஸ்ரீ நரசிம்மர் ஆவார். பத்ரிநாத் ஆலயத்தில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு வருடமும் பத்ரிநாத் கோவில் பனிக்காலத்தில் ஆறு மாதங்கள் மூடப்பட்டிருக்கும் போது பத்ரி நாராயணரின் சிலை இந்தக் கோவிலில் வைக்கப்பட்டுப் பூஜிக்கப் படுகிறது. 108 வைணவத் திருத் தலங்களுள் இதுவும் ஒன்று என்பது இதன் சிறப்பு. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற சிறப்புடையது இந்தக் கோவில். நரசிம்மரைத் தரிசித்து விட்டு பத்ரி நாராயணரை தரிசிப்பதற்கான அடுத்த கட்டப் பயணம் தொடர்ந்தது. இமயமலையின் அடுக்கடுக்கான தொடர்களுக்கிடையில் பயணம். குறுகலான சாலை.

இந்திய ராணுவத்தால் பராமரிக்கப்படும் இந்தச் சாலைகள் மலையைக் குடைந்து அமைக்கப் பட்டுள்ளன. ஒரு புறம் உயர்ந்த மலைத் தொடரும் மறுபுறம் அதல பாதாளத்தில் ஆர்ப்பரித்துச் செல்லும் கங்கையும் என ஆபத்தான சாலையில் பயணம். மேலே செல்லச் செல்ல உச்சியில் பனி படர்ந்த மலைகள் தென்பட்டன. வழியெங்கும் சாலையின் நடுவே பனி உருகி நீர் சிறு சிறு நீர்வீழ்ச்சிகள் போலப் பெருகிக் கொண்டிருந்ததால் பேருந்து மிக மெதுவாகச் சென்றது. வசந்த காலம் காட்சிகள் தென்பட்டன. ஆங்காங்கே அடர்ந்த வனங்களும் கூடத் தென்பட்டன. வழியெங்கும் கண்ட இயற்கைக் காட்சிகளை வர்ணிக்க வார்த்தைகளில்லை என்னிடம்.

பத்ரிநாத்

சென்று சேர்வதற்குள் பத்ரிநாத் பற்றி ஒரு சிறு அறிமுகம்.

முற்ற மூத்து கோல் துணையா* முன் அடி நோக்கி வளைந்து*
இற்ற கால் போல் தள்ளி மெள்ள* இருந்து அங்கு இளையாமுன்*
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை ஊடு உயிரை
வற்ற வாங்கி உண்ட வாயான்* வதரி வணங்குதுமே.
என திருமங்கையாழ்வாரால் பாடப் பெற்ற தலம் இது.

முதுகு முன்னோக்கி வளைந்து கையில் கோலுடன் நடக்க முடியாமல் நடந்து செல்லாமல் பெற்ற தாயைப் போல பாலூட்ட வந்த அரக்கியைக் கொன்ற அந்தக் கண்ணனை இப்போதே வதரியில் வணங்குவோம் என்பது இப்பாடலின் பொருள் (எனக்குப் புரிந்த வகையில் எழுதி உள்ளேன்)

திருவதரி/பத்ரிகாசிரமம் என ஆழ்வார்களால் பாடப் பெற்ற பத்ரிநாத் சுற்றிலும் பனி படர்ந்த நர, நாராயண மலைகளுக்கிடையில் அலகாநந்தா நதிக் கரையில் அமைந்துள்ளது. இந்தப் பகுதி (Garhwal) கர்வால் ஹிமாலயப் பகுதியில் உள்ளது. வைணவர்கள் வழிபடும் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று என்பதால் புண்ணியத் தலமாகவும் விளங்குகிறது. இங்கிருந்து ஒன்பது (9) கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள “நீல்காந்தா” மலைகளுக்குச் செல்பவர்கள் மலையேற்றத்திற்காக இங்கே வருகிறார்கள். (Mountaineering) 14 கிலோமீட்டர் தொலைவு நடந்து சென்றால் மிக அருமையான பூந்தோட்டம் (Valley of flowers) ஒன்றும் உள்ளது. எங்கள் பயணத் திட்டத்தில் இந்த இடம் இல்லை என்பதால் நாங்கள் செல்லவில்லை.

பத்ரிநாத் உத்தர்கண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 10,000 அடி உயரத்தில் அமைந்துள்ள ஒரு சிறு நகரம். (நகரப் பஞ்சாயத்து) Chardham (பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி)களில் ஒன்று இந்த இடம். பனிப் புயல்களாலும் பூகம்பங்களாலும் பலமுறை அழிந்து போன இந்தக் கோவில் எட்டாம் நூற்றாண்டில் ஆதி சங்கரரால் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது. கோவிலில் வேலை செய்பவர்கள், பூசாரிகளின் குடும்பங்கள் தங்கிய 20 குடிசைகளுடன் ஆரம்பித்த இந்த இடம் தற்சமயம் பல லட்சம் மக்கள் வந்து செல்லும் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
மாலை நான்கு மணியளவில் இந்தச் சிறு நகரை அடைந்து, தங்குமிடத்தில் பெட்டிகளை வைத்து விட்டு நேராக பத்ரி நாராயணரை தரிசிக்கக் கிளம்பினோம். மரத்தாலான அந்த விடுதியின் உட்புறம் வெயில் படாதால் குளிராக இருந்தது. கடவுளைத் தரிசிக்க வருவதற்கு ஏற்ற பருவ காலம் என்பதால் மக்கள் பேருந்துகளில் கூட்டம் கூட்டமாக வந்திறங்கிக் கொண்டே இருந்தார்கள். [எங்களுக்கு அடுத்ததாக ராஜஸ்தானிலிருந்து பக்தர்கள் வந்திறங்கியது இன்றும் நினைவிருக்கிறது. நாங்கள் தங்கியிருந்த Dormitoryல் தான் அவர்களும் தங்கினார்கள். கத்திக் கத்திப் பேசினார்கள்.] பேருந்து நிலையத்தைச் சுற்றிப் தங்கும் இடங்களும் பல விதமான கடைகளும் உணவகங்களும் மருத்துவமனையும் தென்பட்டன. அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ள ஊர். (பல வருடங்களுக்கு முன்பே)

அலகாந்தாவின் மேல் அமைந்த பாலத்தைக் கடந்தால் கோவில். கோவிலின் வாசலில் வெந்நீர் ஊற்று உள்ளது. (தப்த் குண்ட் என அழைக்கப்படும் கந்தக நீரூற்றுக்கள்) அங்கே குளித்து விட்டுக் கோவிலுக்குள் செல்ல வேண்டும். மிகுந்த வெப்பத்துடன் வெளிப்படும் நீரை நேரடியாகப் பயன்படுத்த முடியாது என்பதால் பெரிய தொட்டியில் சேமித்துப் பின் பயன்பாட்டுக்குத் தரப்படுகிறது. சிறு குளம் போலப் படிக்கட்டுகளுடன் அமைந்த தொட்டியின் படிகளில் அமர்ந்து குளிக்கலாம். ஆடவர் பெண்டிருக்கென தனித் தனிப் பகுதிகள் உள்ளன.

குளிக்கச் சென்ற சமயத்தில் அதிகப் படியாக மதியம் நான் முன் தின்ற ஹோமியோபதி மருந்தும் வேகாத சாதம் ராஜ்மாவும் சேர்ந்து தன் வேலையைக் காட்டத் தொடங்கின. கடும் வயிற்றுப் போக்கு ஆரம்பிக்கவே கோவிலுக்குச் செல்லாமல் தங்குமிடத்திற்கு எங்கள் குடும்பம் மட்டும் (என் பெற்றோர் உட்பட) திரும்பினோம். நிலைமை கட்டுக் கடங்காமல் போகவே மருத்துவரான என் தந்தை oral dehydration திரவத்தைத் தர ஆரம்பித்தார். சமதளத்தில் (plains) வசிப்பவர்கள் மலையில் Glucose ஏற்றிக் கொண்டால் உயிருக்கு ஆபத்தாக முடியும் என்பதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை என என் தந்தையார் கூறினார்.

அப்போது தொடங்கி மறுநாள் முழுவதும் என் சுய நினைவில்லாமல் படுத்திருந்தேன். (வயிற்றுப் போக்கு நின்ற பிறகும்). என் தந்தையார் என் வாயில் oral dehydration திரவத்தை அவ்வப்போது ஊற்றிக் கொண்டும் என் pulseஐ கணக்கிட்டுக் கொண்டும் அருகிலேயே அமர்ந்திருந்தது மட்டுமே என் நினைவில் உள்ளது. Dormitory போன்ற பெரிய அறையில் அனைவரும் தங்கி இருந்தோம் என்பதால் மக்கள் நடமாட்டம் பேச்சுக் குரல்கள் இருப்பது தெரிந்தது ஆனால் யார் வந்தார்கள் என்ன பேசினார்கள் எதுவும் தெரியாது. மதியம் இரண்டு மணியளவில் கூட மரத்தாலான அந்த அறையில் குளிராக இருந்தது. (எனது காய்ச்சலும் காரணமாக இருக்கலாம்) வெளியில் 22 டிகிரி வெயில். வெளியில் போய் ஒரு சிறு பாலத்தின் மேல் என் தந்தையின் மடியில் தலை வைத்து சுள்ளென்ற வெயிலில் மயக்கமாக படுத்துக் கிடந்தது மட்டும் நினைவில் உள்ளது.
என்ன நடந்தது எப்படி எங்கள் குடும்பமும் நண்பர்களும் அன்றைய தினத்தைக் கழித்தார்கள் என்பதைப் பின்னால் கேட்டுத் தெரிந்து கொண்டேன். நாங்கள் அங்கிருந்த தினம் அமாவாசை என்பதால் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்ய விரும்பிய ஆண்களை என் பெரியப்பா அலகாநந்தாவிற்கு அழைத்து சென்றார் எனவும் தண்ணீரில் கை வைக்க முடியாத அளவில் குளிர்ந்து இருந்ததாகவும் மிகுந்த சிரமப் பட்டு பூஜைகளை முடித்ததாகவும் கூறினார்கள். கோவிலுக்கும் பல முறை சென்று வரிசையில் நின்று கடவுளை வணங்கினாலும் கூட்டம் காரணமாக சில நொடிகள் மட்டுமே தரிசிக்க முடிந்தது என்றும் கூறினார்கள்.

மறுநாள் அதிகாலை நான்கு மணியளவில் உடல் சற்றே நலம் பெற்றுக் கண் விழித்தேன். எட்டு மணிக்கு கேதார்நாத் கிளம்ப வேண்டும் என்பதால் பல் விளக்கி வேறு உடை மாற்றிக் கொண்டு குளிரில் நானும் என் கணவரும் மட்டும் கோவிலை நோக்கிக் கிளம்பினோம். அந்த நேரத்திலேயே இருள் விலகி வெளிச்சமாக இருந்தது. எங்களுக்கு முன்பே என் பெற்றோர் கோவிலுக்குச் சென்றிருந்தார்கள். வழியெங்கும் சிறு கடைகளில் பெரிய்ய்ய்ய்ய்ய்ய வாணலியில் ஜிலேபிகளை சுட்டுக் கொண்டிருந்தார்கள். பக்தர்கள் அவற்றை வாங்கிப் பிச்சைக்காரர்களுக்குத் தானமாக வழங்கிக் கொண்டே நடந்து சென்றார்கள். தங்க நிறத்தில் நூல் போல மெல்லியதாக பார்க்கவே அழகான அந்த ஜிலேபிகளை சாப்பிட ஆசையாக இருந்தாலும் பிச்சைக்காரர்களுக்குத் தானமாகத் தருவதற்கானவை அவை என்பதால் என் ஆசை நிறைவேறவில்லை.








சோவென்று ஆர்ப்பரித்து ஓடும் அலகாநந்தா பாலத்தைக் கடந்து கோவிலுக்கு சென்ற சமயம் திருப்பள்ளியெழுச்சி சேவை ஆரம்பம். பின்புறம் பனி படர்ந்த சிகரங்களை உடைய மலைத் தொடர்களும் முன்புறம் பாய்ந்தோடும் அலகாநந்தாவும் உள்ள அந்தக் கோவிலின் அமைப்பு பௌத்த விஹாரங்களைப் போன்ற அமைப்பில் உள்ளது. கோவிலில் கடவுளர்கள் கல் வடிவில் உள்ளார்கள். (சாலிக்கிராமம்) குளிர்காலம் தொடங்கியதும் ஜோஷிமடத்திற்கு பத்ரிநாராயணர் சென்று விடுகிறார். வெகு சிலரே இருந்ததால் கடவுள் சந்நிதானத்திற்கு முன்பாக 20 நிமிடங்கள் நின்று வணங்கினோம். பிரசாதமாக் கை நிறையக் கிடைத்த கல்கண்டு, பாதாம், முந்திரி கலவையைப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் தங்குமிடத்திற்குத் திரும்பினோம்.

அனுபவங்கள் தொடரும்...

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...