Thursday, 13 June 2019

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் புறப்பாடு/வருகை பகுதிகளுக்கு பலவருடங்களாக சென்று வருகிறேன்.

சில தினங்களுக்கு முன்  அதிகாலையில் (இதெல்லாம் எங்களுக்கு சகஜமப்பா) மகிழுந்தில் 3 மணிக்கு விமான நிலையத்திற்குள் நுழைந்து விட்டோம் மகள் மற்றும் பேரன்களை வரவேற்க , விமானம் அதிகாலை 2.30 சரியான நேரத்தில் தரையிறங்கி விட்டது என்ற என் மகளின் தகவலுடன் .

வெளிச்சமாய் இருந்த  Arrival/வருகை பகுதியில் எங்களுடன் பேரன்களின் மற்றொரு தாத்தாவும் பாட்டியும்  சேர்ந்து கொள்ள....காத்திருப்பு ஆரம்பம். 

வெளியே வரும் கதவருகில் ஒரு காவலர். (சென்னை விமான நிலைய காவலர்கள் தமிழர்களாக ஏன் இருப்பதில்லை ? )

மெட்ரோ ரயில் 4.30 am - 11.00 pm வரை செயல்படும் என ஒரு விவரப்பலகை கூறுகிறது . 

"Free shuttle for transit passengers to city side"என்கிறது மற்றொரு விவரப்பலகை . 

6,7 விமானங்கள் ஒரே நேரத்தில் துபாய் தோஹா குவைத் அபுதாபி சிங்கப்பூர் என பல ஊர்களிலிருந்தும் வருகை என தகவல் பலகை காட்டியது .

கம்பித்தடுப்பின் ஒரு பக்கம் பலதரப்பட்ட மக்களும் தூக்க கலக்கத்துடன் ஒரு வித ஆர்வத்துடன் நின்றிருந்தார்கள் (நானும்).  நேரெதிரில்.... பிரபல ஹோட்டல்களில் வாகன ஓட்டிகள் கையில் ....Hotel , Mr ...., Ms ....... என பெயர்பலகைகளுடன் ..... வருகைப்பாதையின் முடிவில் டாக்ஸி ,OLA,ஆம்புலன்ஸ்,போலீஸ் வேன் ,  டாக்ஸி ஓட்டிகள்(டாக்சி வேணுமா sir /madam) நின்றிருந்தார்கள். இது தவிர அருகில் காத்திருப்பு மண்டபத்தில் இருக்கைகளில் அமர்ந்து, தூங்கி, நின்று  என ஒரு கூட்டம். குளிர்பானங்களுக்கான Automatic Vending Machine தற்போது கூடுதலாக அமைக்கப் பட்டுள்ளது.(நான் பார்த்த வரையில் ஒருவரும்  உபயோகிக்கவில்லை)

மெட்ராஸ் காப்பி சென்டரில் 3 மணிக்கே சுடச்சுட பருப்பு வடை வந்திறங்கியது . தலப்பாக்கட்டியில் யாரும் இல்லை .

(நேரமாகுது போய் காப்பி குடிச்சுட்டு வாம்மா _ யாரோ ஒரு கணவர் எனக்கு வேண்டாம் நீங்க நல்லா இல்லைன்னு சொல்லிட்டீங்களே ....அவரது மனைவி)

இடையிடையே மக்கள் தம் உறவினர்/நண்பர் வருகை கண்டு ஹாய் ஹூய் சப்தங்கள் .

2 மாதங்கள் கூட நிரம்பியிராத ஒரு குழந்தை மற்றும் 6 வயது மதிக்கத்தக்க பெண்ணுடன் ஒரு தகப்பன்....
தனியாய் 4,5 பெட்டிகளை தள்ளமுடியாமல் ட்ராலியில் தள்ளி செல்லும் முதிய பெண்மணிகள் , அந்த அதிகாலை நேரத்திலும் லிப்ஸ்டிக் அணிந்து தலைவாரி .. புத்துணர்ச்சியுடன் வரும்  யுவதிகள், ஸ்வெட்டர் அணிந்து வரும் மக்கள்,  சென்னை வெய்யிலின் தாக்கம் தாங்காமல் அழுது கொண்டே செல்லும் சிறுகுழந்தைகள் , பிறந்ததிலிருந்து  காணாத தன் குழந்தையை உள்ளிருந்தே வாங்கிக்கொண்ட இளம்தந்தை,   உடல்நலம் சரியில்லாமல் சக்கர நாற்காலியில் வந்து ஆம்புலன்ஸில் ஏறி சென்றவர் என பலரும் வந்து கொண்டே இருக்க .....  அனைவரின் கண்களிலும் தூக்கத்தின் சாயல்.

இடையிடையே பயணிகள் வெளியில் எடுத்து செல்லும் ட்ராலிகளை ஒரு சிறிய வண்டியின் உதவியுடன் பின்னாலிருந்து ஒருவர் உந்தித்தள்ள , முன்னால் ஒருவர் அவைகளை சரியாக வழிநடத்தி உள்ளே கொண்டு சென்றார்கள்.

 விமான பணிப்பெண்கள் மற்றும் விமான நிலைய பணியாளர்கள் தவிர்த்து வெகு சில பயணிகளே புதிதாக வலது பக்கமாக வெளியேறி செல்லும் பாதையை பயன்படுத்தினார்கள் . வலது கைப்பழக்கம் உள்ளவர்கள் இடது புறம் திரும்புவார்கள் என எங்கோ படித்த நினைவு (அ ) எப்போதும் வெளியேறும் இடப்பக்க பாதையையே கரடுமுரடாக இருந்தாலும் பழக்கம் காரணமாக செல்கிறார்கள். 

பெட்டிக்கு மேல் plastic சுற்றி அல்லது டிவி printer போன்றவைகளுடன் DOH, DXB போன்ற  எழுத்துக்கள் உள்ள bag tag மற்றும்  பாரம்பரிய உடைகளுடன் வந்தால் (அதிலும் பெண்களின் முகத்தை மூடி கண்கள் மட்டும் தெரியும் வகை, முகத்தை மறைக்காத வண்ணம், நீளமும் வெள்ளையும் கலந்து Haj Travels Pvt Ltd என எழுதப்பட்ட ஆடை என விதவிதமானவைகள்)  ..... ஐக்கிய அரபு நாடுகள். (மற்ற வகை உடை அணிந்தவர்களும் உண்டு .)

[DOH,DXB போன்றவை எந்த ஊரில் இருக்கும் விமான நிலையம் என்பதை குறிக்கும் குறியீடு.  LAX(Los Angeles ),MAA(Madras) என்பது போல. பலவருடங்களுக்கு முன்பு இரண்டெழுத்து குறியீடுகளும் இருந்தனவாம். உலகின் அனைத்து இடங்களுக்கு பொதுவானதாக 3 எழுத்து குறியீடு மாற்றி அமைக்க பட்டபோது  LA என்பது LAX, DB என்பது DXB ஆனது. கணிதத்தில் X குறியீடு போல]

3.15

"Here comes trouble" என்ற வாசகம் கொண்ட சட்டையை அணைந்த கு(சு)ட்டிப் பையன் குதித்து கொண்டே வெளியில் வந்தான். அவனது பெற்றோரின் பெட்டியில் SFO - MAA. ஆஹா ......சான்பிரான்சிஸ்கோ மக்கள் வர தொடங்கி விட்டார்கள் . வந்துட்டாங்கய்யா .....வந்துட்டாங்கய்யா .....

விதவிதமான வாசகங்கள் கொண்ட உடைகள் அணிந்த ஆண்கள்,  ஸ்வெட்டர் அணிந்த முதியவர்கள் , பள்ளி விடுமுறை சமயமாதலால் சிறுவர் சிறுமியர் , இடையிடையே outdated fashionல் தைக்கப்பட்ட [பலவருடங்களுக்கு முன்பு தைத்து இந்திய வருகைக்காக என reserve செய்து வைக்கப்பட்ட]  சுடிதார்கள் ரவிக்கைகளுடன்  குட்டையாய் வெட்டிவிடப்பட்ட கூந்தலை குட்டிக் கொண்டையாக்கி (அ) குதிரைவாலாக்கிய பெண்கள் ....என 24 மணி நேரங்கள் பயணம் செய்த களைப்புடன் வந்தார்கள்.

அம்மா ..என்னுடைய பெட்டிகளில் ஒன்று மட்டும் வரவில்லை,காத்திருக்கிறேன் _ மகளின் வாட்ஸாப் தகவல் 

மீண்டும் ...ஐக்கிய அரபு நாட்டு விமானங்களின் வருகை ... மீண்டும் மக்களின் வருகை 

4.00 

இன்னும் பெட்டி வரவில்லை _ மகளின் குறுஞ்செய்தி 

காத்திருப்பு மண்டபத்தில் அமர்ந்து காத்திருந்தோம் இப்போது ...இடையிடையே மகளிடமிருந்து தகவல் உண்டா என்று ...

இன்னும் வெளியில் வரலையே ... உள்நாட்டு விமான நிலையம் போய் அடுத்த விமானத்தை பிடிக்க வேண்டுமே ... நீங்கள் அடுத்த விமானத்தின் நேரத்தை பார்த்து சொல்லுங்க _ ஒரு இளைஞர் முதியவரிடம் சொல்ல முதியவர் வெள்ளெழுத்து கண்களால் தன் கைபேசியில் தேடுகிறார்.


4.15

பெட்டி வரவே இல்லை . புகார் கொடுத்து விட்டு வருகிறேன். International Roaming 2G யில் இருப்பதால் உங்களுடன் பேச இயலவில்லை  _ மகள். 

2 வயது கூட நிரம்பியிராத குட்டி பாப்பா அம்மாவின் கைபேசியை வாங்கி தனக்கு வேண்டிய appஐ கிளிக் செய்து பார்த்துக் கொண்டிருக்க ....நேரம் கடந்து கொண்டே இருந்தது. (குட்டிஸ்களுக்கு எப்படித் தான் எந்த நேரத்திலும் அவ்வளவு energy இருக்கிறதோ???)

 மேலை நாட்டவர்கள் எப்போதும் எங்கும் சட்டங்களை மதிப்பவர்கள் என்று தான் நினைத்திருந்தேன் கம்பியை தாண்டிக்  குதித்து காத்திருப்பு மண்டபத்தின் உள்ளே வந்தவரை பார்க்கும் வரை . 

5.00

சான்பிரான்சிஸ்கோவிலிருந்து கிளம்பும்போதே 1.45 மணி நேரம் தாமதமாய் புறப்பட்ட விமானம் துபாய் நகரை அதே தாமதத்துடன் வந்தடைந்து, அங்கிருந்து சென்னை கிளம்ப வேண்டிய விமானத்தை 30 நிமிடங்கள் தாமதிக்க வைத்து, சரியான நேரத்தில் சென்னையை வந்தடைந்து... வந்து சேராத ஒரு பெட்டி என் மகள் மற்றும் பேரன்களின் வருகையை 2.30 மணிநேரங்கள் தாமதப் படுத்தி .......

எங்களையும் சேர்த்து படுத்தி ......(சான்பிரான்ஸிஸ்கோவில் கிளப்பியது முதல் , துபாய் வந்து மாற்று விமானத்தில் ஏறி சென்னையில் தரை இறங்கும் வரை தூக்கம் இல்லை . விமானத்தில் WIFI வசதி இருப்பதால் சாப்பிடீர்களா தூங்கினீர்களா என குசலம் விசாரித்தல் ,அம்மா தற்சமயம் துபாயில் என்ன நேரம் இன்னும் 4.30 மணி நேரம் என்றால் எப்போது போய் சேரும் பார்த்து சொல்லு என்பது போன்ற வினா விடை நிகழ்ச்சிகள் , Track Flight Live பார்த்தல் , பார்த்ததை சம்மந்தி வீட்டிற்கு update செய்தல் , சரியான நேரத்திற்கு விமான நிலையம் கிளம்புதல் என பயணம் செய்பவர்களை விட அதிக மன அழுத்தம்) 

காத்துக் காத்து.. கண்கள் பூத்திருந்தோம் ......

பல வருடங்களுக்கு முன்பு .. வெளியில் வரும் கதவிற்கு மேலாக ஒரு திரையில் , விமான நிலையத்தின் குறிப்பிட்ட பகுதியை கடந்து வரும்போது , வருபவர்கள் தெரியும் வண்ணம் வைத்திருப்பார்கள். அங்க பாருங்க பாருங்க .... நீல நிற சட்டை போட்டிருக்கிறார், பச்சை நிற புடவை உடுத்தி இருக்கிறார் என உற்சாகமாக கூவிக் கொண்டிருப்பார்கள் உறவினர்கள். தற்போது அது இல்லை. Landed,Taxiing,Immigration என status update கள்தான்.

விடியத் தொடங்கிய அந்த நேரத்தில் ...  மகளும் பேரன்களும்  நொந்து நூலாகி  வந்து சேர்ந்தார்கள்.  

விடிவெள்ளியாய் ..... 

அச்சச்சோ... டூத் பிரஷ் களை எந்தப் பெட்டியில் வைத்தேன் என்று நினைவில்லையே அம்மா....

பின் குறிப்பு : உடன்வராத பெட்டி  வீட்டிற்கே இன்று வந்து சேர்ந்தது  .


Thursday, 6 June 2019

வண்ணக் (எண்ணக்) கோலங்கள் ...


கடந்த அமெரிக்க பயணத்தின் போது , வழக்கமாக Netflix ல் ஆங்கில தொடர்கள் மற்றும் திரைப்படங்களுடன்  வெவ்வேறு நாடுகளின் தொலைக்காட்சி தொடர்களை கண்டேன் . முக்கிய காரணங்கள் வெவ்வேறு விதமான நிலப்பரப்புகள், மக்களின் வாழ்க்கை முறைகள் கலாச்சாரம் பற்றி, மொழியை எவ்வாறு பேசுகிறார்கள் (ஆங்கிலத்தையே ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு மாதிரி பேசுகிறார்கள் ) என்பது பற்றி .... அறிந்து கொள்ளும் ஆர்வமே . (subtitles இருக்க பயமேன் ?)

ஆஸ்திரேலியா(Wanted), மலேசியா(Hati Perampuan),மெக்ஸிகோ(Unauthorized living) தென் அமெரிக்கா(Velvet), ஆப்பிரிக்கா(The lion king- movie)ரஷ்யா மற்றும் சில நாடுகளின்  தொடர்களையும் காண நேர்ந்தது. 

சற்றே மிகைப்படுத்தப் பட்ட காட்சிகள் இருந்தாலும் அடிப்படை செய்திகள் மாறாது இல்லையா? என் மனதை பாதித்த இரண்டு தொடர்களை பற்றிய சிறு தொகுப்பு இங்கே ....

துருக்கிய நாட்டு தொலைக்காட்சி தொடர் :  What happens to my family ?

ஒரு மத்தியதர குடும்பம்.  வீட்டின் முன்புறம் துருக்கிய உணவு வகைகளை உடனுக்குடன் தயாரித்து விற்கும் கடை வைத்திருக்கும் தகப்பன் மட்டும். தாய் இல்லை. 2 மகன்கள் 1 மகள் . அனைவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். விதவை அத்தையும் இவர்களுடன் வசிக்கிறார் . 

பிள்ளைகள் மூவரின் காதல் மற்றும் திருமணம் முடிய செல்லும் கதை . 

அத்தையின் கண்டிப்பான வளர்ப்பில் பிள்ளைகள். காலையில் சீக்கிரம் எழுந்து காலை உணவு சாப்பிட்ட பிறகு வெளியில் கிளம்புதல்(சாப்பிடாமல் வெறும் வயிற்றில் போகாதேப்பா)  வயதில் மூத்தோரிடம் பணிவுடன் நடந்து கொள்ளுதல் ,வீட்டை சுத்தமாக பராமரித்தல் (வெளியில் அணிந்து செல்லும் செருப்பை வீட்டிற்குள் அணிந்து நடமாடினால் அத்தை கொன்றுவிடுவார் _ பிள்ளைகள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் வசனம் )

அத்தை மூன்று நேரமும் சமைப்பார். துணிகளை துவைத்து வீட்டு தோட்டத்தில் கொடி  கட்டி காய வைப்பார். வீட்டிற்கு வெளியில் ஒரு பாத்திரத்தில் நீர் வைத்திருப்பார் . யாராவது வெளியில் சென்றால் அவர்கள் கிளம்பிய உடனே அந்த நீரை நல்ல சகுனத்திற்க்காக தெருவில் வீசி இறைப்பார். (நாங்கள் கொஞ்சம் முன்னே சென்ற பிறகு நீரை ஊற்ற கூடாதா அத்தை ?)

பிள்ளைகளுக்கு தெரிந்த இடங்களில் சொல்லி வைத்து தகுந்த வரன்களை பார்த்து மணமுடிக்கிறார்கள்.  காதலித்தால் குடும்பம் குலம் தகுதி பார்த்து சம்மதிக்கிறார்கள். மணமகனின் வீட்டார் பெண் வீட்டிற்கு பூக்கள் மற்றும் chocolates வாங்கி வந்து பெண் கேட்கிறார்கள். பெரியவர்களின் ஆசீர்வாதம் வாங்குதல் என்று இந்த நிகழ்வை குறிப்பிடுகிறார்கள். 

மருத்துவரான மூத்த மகன் ஒரு பணக்கார பெண்ணை மணக்கிறார். மத்தியதர மக்கள் வாழும் இடமென்பதால் எங்களை ஏன் திருமணத்திற்கு அழைக்கவில்லை என்று தந்தையாரின் கடையில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கிறார்கள். வம்பர்களும் உண்டு. 

அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே ஒரு சிறிய மண்டபத்தில் reception வைக்க ஏற்பாடு செய்ய , அனைவரும் திரண்டு வந்து உதவி செய்து மகிழ்ந்து, பணக்கார சம்மந்தியையும் மகிழ்விக்கிறார்கள். 

இப்படி பலப்பல ...... நம் பழக்க வழக்கங்களை அந்த நாட்டு மக்கள் கடைப்பிடிப்பது போல தோன்றியது .

அடுத்து ........

அமெரிக்க தொலைக்காட்சி தொடர் "Switched at birth

இந்த தொடர் குறிப்பாக பதின்பருவ பிள்ளைகளை (teenagers)பற்றியது. 

 தென் அமெரிக்க, வடஅமெரிக்க தம்பதிகளுக்கு  பிறக்கும் பெண் குழந்தைகள் மருத்துவமனையில் (ஏதோ காரணம் _ மறந்து போய்விட்டேன் )
மாறி விடுகின்றன . 

தென் அமெரிக்க தம்பதியின் குழந்தை வெள்ளை நிற தலைமுடி நீல கருவிழி என இருக்க ( அதன் மூன்றாவது வயதில் மூளைக்காய்ச்சலால் பாதிக்க பட்டு காது கேட்கும் திறன் போய் விடுகிறது) வட அமெரிக்க தம்பதியின் பெண் சற்றே குட்டையாக கருவிழிகளுடன் கருகருவென்ற தலைமுடியுடன் இருக்கிறார்.
 இது பின்கதை .

வட அமெரிக்க தம்பதியின்  மகள் உயிரியல் வகுப்பில்  எதேச்சையாக DNA test செய்து பார்க்க உண்மை வெளியாகிறது .

இதிலிருந்து தொடங்கி எப்படி மகள்களை கண்டுபிடித்து எல்லாரும் ஒரே வீட்டில் வசித்து, எப்படி எல்லாரும் இரு மகள்களையும் ஏற்று கொள்கிறார்கள் என்பது கதை.வட அமெரிக்க தம்பதிக்கு மூத்த மகனும் உண்டு. இந்த மூவரும் தினமும் கொண்டு வரும் பிரச்சினைகளை தீர்க்கவே பெற்றோர்களுக்கு நேரம் சரியாக இருக்கும் .

Boyfriend /girlfriend வைத்துக் கொள்வது (அங்கே இது social pressure )  குடிப்பழக்கம், போதைமருந்து, கர்ப்பத்தடை மாத்திரைகள் , வேண்டாத கர்ப்பம்  என விதம்விதமான பிரச்சினைகளை பெற்றோர்கள் சந்திக்கவேண்டி உள்ளது. தினமும் இதுபோன்ற எமோஷனல் பிரச்சினைகளுக்கிடையே எப்படி படிக்கிறார்கள்??

(அம்மா உங்க கிட்டே ஒரு விஷயம் சொல்லணும் _ மகன் 
என்ன ஆச்சு போதை மருந்து ஏதாவது வெச்சிருந்து போலீஸ் பிடிச்சுட்டாங்களா உன்னை இல்லேன்னா எந்த பெண்ணையாவது கர்ப்பமாக்கிட்டியா ? 
ஐயோ அம்மா ஸ்கூலில் excursion கூட்டி போகிறார்கள்_மகன்)

வட அமெரிக்க அம்மா தினமும் 3 வேளையும் சமைத்து பிள்ளைகளுக்கும் கணவருக்கும் பரிமாறுவார். மதிய உணவு கொடுத்தனுப்புவார்.

18 வயதானதும் பிள்ளைகள் தனியாக இருக்க வேண்டும் சம்பாதித்து தங்கள் செலவுகளை ஏற்கவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். (19 வயசாச்சு இன்னும் நாம் தான் அவனுக்கு telephone bill கட்டுகிறோம்)

ஒரு பெண்ணுக்கு காது கேளாது என்பதால் ASL (American Sign Language ) நிறைய இடம்பெறுகிறது இந்த தொடரில். (மொழி படம் நினைவுக்கு வருகிறதா ?) ஒவ்வொரு நாட்டுக்கும் இந்த sign language மாறுபடும். SL, அவர்களுக்கான பள்ளிகள் கல்லூரிகள் எப்படி போதிக்கிறார்கள் வேலை வாய்ப்புக்கள் என்னென்ன என நிறைய தகவல்கள்.  

[இந்த தொடரினை நான் பார்த்துக் கொண்டிருந்த சமயம் ஒரு நாள் என் சிறிய பேரன் (6 வயது kindergarten வகுப்பு) , சில சைகைகளை செய்து காண்பித்தார். மிகவும் ஆச்சரியமாக இருந்தது. உனக்கு எப்படி தெரியும் என்று கேட்ட போது பள்ளியில் அவனுடைய ஆசிரியை கற்றுத் தந்தார் என்று கூறினான். ஆசிரியையுடைய  சகோதரி காத்து கேளாதவர் என்பதால் ஆசிரியை சைகை மொழியை அறிந்துள்ளார். எங்களுக்கும் கற்றுத் தந்துள்ளார் என்று கூறினான். 

மற்றொரு அனுபவம். கரிபியன் தீவுகளில் நடக்கும் துப்பறியும் தொடர். ஒரு முறை கதையின் போக்கில் தொலைக்காட்சியில் weather report காட்டினார்கள் . கவனித்து பார்த்த போது 90, 93, 95 பாரன்ஹீட் என இருந்தது.

அப்போது தான் புரிந்தது ..மக்கள் ஏன் க்ரூஸ் கப்பல்களில் ஏறி கரிபியன் தீவுகளுக்கு கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள் என்று.  கடும் குளிர் நாடுகளில் சூரியனின் வெளிச்சம் இருக்கும் ஆனால்  வெப்பத்தை உணர முடியாது . (இங்கே வாங்கப்பா ..90 + எங்களுக்கு சகஜமப்பா _ mind voice) 

சமீபத்தில் என் குட்டி பேரனின் வருகையின் போது 102 டிகிரி என்று சொல்லி கொண்டு இருந்தேன் . பாட்டீ .. அப்போ ஐஸ் கிரீம் சாப்பிடலாமா என்று கேட்டான் . வேண்டாம் என்றேன். அவன் பதில் : பாட்டீ எங்கள் ஊரில் 80 டிகிரி போனாலே எங்கள் அம்மா வாங்கி தருவார் என்றான். குளிர் நாடுகளின் நடப்பு இது] ]

எல்லா நாட்டு மக்களுக்கும் பொதுவான பிரச்சினை , தம் பிள்ளைகளின் நலம், படிப்பு , பெரியவர்களிடம் மரியாதை, தகுந்த வரனை திருமணம் செய்தல் இப்படி பல.

பணக்கார வீடுகளில் வேறு விதமான வாழ்க்கை முறையை காட்டுகிறார்கள். நம் ஊர் தொடர்களை போல நள்ளிரவிலும் முழு makeup , நகைகள், கலையாத கூந்தல் அங்கும் உண்டு. 

எவ்வளவு கண்டங்களை சுற்றி வந்தாலும் ஒரு நாட்டைப் பற்றிய விவரங்களை அதன் கலாச்சாரத்தின் மூலம் தான் கண்டு கொள்ள முடியும் என்பது முற்றிலும் உண்மை. 

தொடரும் தொடர்கள் .....

பின் குறிப்பு : தொலைக்காட்சி தொடர்கள் பார்ப்பது என் முக்கிய வேலை இல்லை . 



















Sunday, 7 April 2019

அவனருளால் அவன் தாள் வணங்கி ....

கடந்த பங்குனி உத்திர திருநாளில் 3 1/2 நாட்களுக்கு  நண்பர்களின் குடும்பங்களுடன் ஆரம்பமானது எங்கள் ஆன்மீக சுற்றுலா .

சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்கு பேருந்து. அங்கிருந்து மற்ற இடங்களுக்கு கார். காலையில் 7 மணியளவில் கிளம்பி காலை உணவு முடித்து கொண்டு கோவில்களை காண ஆரம்பித்தால்  12 மணிக்கு இடைவேளை. (12-4 கோவில்களை மூடிவிடுவார்கள் என்பது நீங்கள் அறிந்ததே .) அந்த இடைவெளியில் மதிய உணவை முடித்துக் கொண்டு அடுத்த ஊருக்கு பயணம் செய்தோம் . மீண்டும் இரவு 9 - 9.30 முடிய .....

ஒவ்வொரு கோவிலைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம் ஆனால் என் அனுபவங்களை மட்டுமே இங்கே சொல்லப் போகிறேன். 

பாண்டிச்சேரியில்  நண்பரது இல்லத்திற்கு அருகில் இருந்த ஸ்ரீ பூர்ணா ஸ்ரீ புஷ்கலா சகித ஸ்ரீ அய்யனார் கோவிலில் ஆரம்பித்து வரிசையாக அன்றே 3 கோவில்கள். பங்குனி உத்திர நாளானதால் கடவுளருக்கு திருமணம் வீதி ஊர்வலம் என ஊரின் பல பகுதிகளிலும்  கலகலப்பு. (மணக்குள விநாயகர் ஆலய யானையின் கால்களில் கொலுசு அணிவித்திருந்தார்கள்).  

மறுநாள் காலை கிளம்பி பாண்டிச்சேரியின் அருகிலிருக்கும் சிங்கிரிக்குடி (நரசிம்மர் ஹிரண்யகசிபுவை வதம் செய்த இடம்), பூவரசன்குப்பம் (ஹிரண்யனுக்கு நரசிம்மர் காட்சி அளித்த இடம், தென் அஹோபிலம் என்று அழைக்கிறார்கள் இந்த ஊரை ) மற்றும் பரிக்கல் நரசிம்மன் கோவில்களுக்கு சென்று வணங்கினோம். 

மேற்கண்ட ஊர்கள் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பவை . ஒரே நாளில் மூன்று கோவில்களுக்கும் செல்வது சிறப்பு என்று கூறினார்கள். சென்றோம்.  

சிங்கிரிக்குடி கோவில் மிகப் பழமையானது. ஒரே அர்ச்சகர் தான் சிறிய ஊர் கோவில்களில் . அவர் வரும்வரை கோபுரங்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தோம். 

கோபுரத்தின் ஒரு பக்கம் சீதா கல்யாணம் ராமர் பட்டாபிஷேகம் இன்னபிற சுப நிகழ்வுகள் , மற்றொரு பக்கம் ஒவ்வொரு நிலைக்கும் (கொலுப்படியில் மேலே கடவுள், தேவர்கள் என ஆரம்பித்து கடைசியில் பூச்சி புழுக்கள் என வைப்பது போல ) கஜேந்திர மோட்சத்தில்   ஆரம்பித்து ஒவ்வொரு நிலைக்கும் மேலே மேலே போகப்போக மாக்களிலிருந்து மக்கள் கந்தர்வர்கள் தேவர்கள் என கடவுள் மோட்சம் கொடுக்கும் காட்சிகள் நிலைப்படுத்த பட்டுள்ளன. 

மிகப் பொறுமையாக நானும் என் உடன் வந்த தோழியும் ஒவ்வொரு கோவிலிலும் கோபுர பொம்மைகளின் theme என்னவென்று பொறுமையாக பார்த்து விட்டே வந்தோம் (நேரமாகுது வாங்கம்மா ....)

வழியில் நாயனார் சுந்தரர் பிறந்து வாழ்ந்த ஊரான திருநாவலூர் பக்தஜனேஸ்வரரையும் வரதராஜ பெருமாளையும் (ஒரே கோவிலில் தனித்தனி வாசல்கள் சந்நிதிகள்) வணங்கி விட்டு திருநள்ளாறு சென்றடைந்தோம்.

சைவமும் வைணவமும் தழைத்தோங்கி இருந்த காலத்தில் கட்டப்பட்டவை நாங்கள் சென்ற கோவில்கள் அனைத்துமே . சைவ கோவில் வைணவ கோவில் என்று தனித்துவமாக எதுவுமே இல்லை. வைணவ கோவிலின் வாசலிலேயே பிள்ளையார் தும்பிக்கையாழ்வார் என்ற பெயரில் அமர்ந்திருக்கிறார். சிவன் கோவிலில் மஹாலட்சுமிக்கென தனி சந்நிதி மற்றும் சிவன் சன்னதியின் நிலைப்படியிலேயே மஹாலக்ஷ்மி இருக்கும்படி அமைந்துள்ளது .  அநேக கோவில்களில் பெருமாளுக்கு தனி சந்நிதி .

திருநள்ளாறில் கால் வைத்த அந்தக்கணமே மனது அமைதி நிலைக்கு சென்று விட்டது . வேறெந்த நினைவும் மனதில் ஏற்படவில்லை. 
ஊரெங்கும் திருவிழா போல ஒரு வித தயார் நிலையில் ....சரஸ்வதி குளம் நளன் குளம் என நன்கு பராமரிக்கப்பட்ட நீர்நிலைகள். 

 சனீஸ்வரர் சன்னதி இருக்கும் இடத்தின் மேலே NASA வின் துணைக்கோள்கள் கூட செயலிழந்து போவதாக சொல்வார்கள். அந்த கோவிலில் உள்ளே மட்டுமின்றி அந்த ஊரில் இருந்த மொத்த நேரமும் சொல்லவொண்ணாத மன அமைதி. (என்னவோ சக்தி இருக்கு அங்கே) மரகத லிங்க அபிஷேகம் காணும் அரிய வாய்ப்பும் கிடைத்தது .வெள்ளியன்று இரவே தர்பாரண்யேஸ்வரரையும் சனீஸ்வரரையும் (கூட்டமில்லாத நேரம் ) பொறுமையாக வணங்கி விட்டு 5 கிலோமீட்டரில் உள்ள காரைக்காலுக்கு சென்று அங்குள்ள கோவில்களை தரிசித்தோம்.

மறுநாள் காலையில் சிக்கில் சிங்காரவேலரையும் நவநீதேஸ்வரரையும் (ஒரே கோவில்) தரிசித்து விட்டு ஆபரணதாரி என்ற ஊரில் அமைந்த கோலவண்ண வாமன பெருமாளை தரிசிக்க சென்றோம்.  108 திருப்பதிகளில் ஒன்றான திருக்கண்ணங்குடி என்னும் ஊரின் அபிமானஸ்தலம் இந்த ஊர். ஆவராணி எனும் இத்தலம் நாகப்பட்டினம் – திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் சிக்கலிலிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

ஸ்ரீரங்கம்  திருவனந்தபுரம் போல ஆதிசேஷன் மேல் படுத்திருக்கும் கோலம் . மிகப்பெரிய சிலை . சிலையை வடித்த பிறகு சுற்றி சன்னதி கட்டியிருப்பார்கள் என்று தோன்றுகிறது. 

[21 அடி நீளமாக, தென்திசை முடியை வைத்து வடதிசை பாதம் நீட்டி சயனித்திருக்கும் கோலம் காண உள்ளம் குழையும். திருமேனி முழுதும் புரளும் ஆபரணங்களை மிக நுணுக்கமாக காட்டியிருக்கும் அழகில் மனம் கரையும்.

ஏழுதலை ஆதிசேஷனும், அந்தக் கூர்மையான பார்வையும், மெல்ல தலை தாழ்த்தி எம்பெருமானைப் பணியும் விதம் பார்க்க ஆச்சரியம் பெருக்கும். ஒரு கரம் தலையைத் தாங்க, மற்றொரு திருக்கரம் முழங்கால் வரை நீண்டிருக்கும் ஒய்யாரம் உயிரை நெருடும். நீருண்ட மேகம் போன்ற மேனி. தைலக்காப்பில் மின்னுகிறார். சிரத்தின் மேல் மணிமகுடம். காதுகளில் அசைந்தாடும் குண்டலம். எப்போதும் புன்னகை உதிர்க்கும் பவளவாய். திருமார்பில் நலங்கிளர் எனும் ஹாரம், உத்தரியம், தண்டை என அணிந்து சாந்த ஸ்வரூபியாக உலகனைத்திற்கும் படியளக்கும் பெருமாளின் அந்த சயனத் திருக்கோல அழகு காணுதற் கரியது . [Courtesy :http://templeservices.in/temple/அழியா-புகழ்தரும்-ஆவராணி/  ] 

இந்த சுற்றுலாவின் "HIGHLIGHT" இவர்தான் . சிற்பத்தின் precision அற்புதம் .  படைத்த சிற்பி யாரோ தெரியவில்லை அற்புதமான கைவண்ணம் . பொதுவாக பகவான் மேலே பார்த்தவண்ணம் படுத்திருப்பார் இங்கே ஒருக்களித்து பக்தர்களைப் பார்த்தவண்ணம் .... அவரது வாய் நம்மை பார்த்து எதோ சொல்வது போல ....மிக துல்லியமாக அழகாக செதுக்கப்பட்டுள்ளது. 

நேரில் கண்டால் மட்டுமே அந்த அனுபவத்தை உணர முடியும் . 

திருக்கண்ணங்குடி 108 வைணவ திருப்பதிகளில் ஒன்று.( தாமோதர பெருமாள் கோவில்). பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் ஒன்று . கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி,திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை ஆகியவை பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அற்புதமான அழகான கோவில். (Courtesy : Wikipedia )

அடுத்து  திருவாரூர் தியாகேசர் கோவில். 11.30 மணியளவில் சென்றதால் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது . மிகப்பெரிய கோவில். கமலாம்பிகையை தரிசிக்க எண்ணி கருங்கல் பிராகாரத்தில் ஓட்டமாக ஓடி பாதங்கள் கொப்பளிக்க கண்ணில் நீர் வர.....தரிசித்தோம். இந்த கோவிலின் குளத்தின் பரப்பளவு கோவிலின் பரப்பளவிற்கு சமமாக உள்ளது என்று கூறினார்கள். பெரிய்ய்ய கோவில் பெரிய்ய்ய குளம் .

[ஈஸ்வரனை விட்டு அம்மா என் இவ்வளவு தள்ளி இருக்கிறார்? _  தோழி 1 
கோவித்துக் கொண்டு வந்து விட்டார்களோ என்னவோ? _ தோழி 2]

எங்கள் சிரமங்கள் வீணாகவில்லை. அன்னை தவக்கோலத்தில் இடதுகாலை வலப்பக்கமாக மடக்கி வைத்து அதன் மேல் வலது காலை வைத்து வித்தியாசமான தவக் கோலத்தில் காட்சி தருகிறார் . 
[ கோவித்து கொண்டு வரவில்லை தவம் செய்ய வந்திருக்கிறார் _ தோழி 2]

அம்மனை தரிசித்து விட்டு பிரகாரத்தில் நிற்கையில் ஷிலாசாஸனம் எனப்படும்  கல்வெட்டில் முத்துசாமி தீட்சிதர் கமலாம்பிகையை பற்றி இயற்றிய பாடல்களை கண்டோம் .  

முன்பொரு முறை சமஸ்க்ருத பயிற்சி வகுப்பில் ஒரு சகோதரி சொன்னது நினைவுக்கு வந்தது ..பூர்வ ஜென்ம ஞாபகம் போல ..

ஆம்... அந்த பாடல்கள் சமஸ்க்ருத மொழியில்(ன்) விபக்தி எனப்படும் வேற்றுமை உருபுகளை ஆரம்ப வார்த்தைகளாக வைத்து இயற்றப்பட்டவை . 
 கமலாம்பா , கமலாம்பாம் , கமலாம்ப்யா, கமலாம்ப்யை ..... ( 2 வருடங்களாக சமஸ்க்ருதம் படிப்பதற்கு ஒரு சின்ன பயன்பாடு.... மகிழ்ச்சி )

வெயிலோடு வெய்யிலாக மன்னார்குடி சென்று அங்கிருந்த கடைவீதியில் இரும்பு தோசைக்கல் etc வாங்கி 4.30 மணியளவில் ராஜகோபால ஸ்வாமியை தரிசித்தோம்.  

இரவில் மீண்டும் திருநள்ளாறு கோவில். சனிக்கிழமை கூட்டம் சற்றே குறைந்த இரவு 9 மணிக்கு சென்று தரிசித்தோம். சயன பூஜையை கண்டு களித்தோம். ஸ்படிக லிங்க அபிஷேகம் கண்டோம் . அமைதியான அனுபவம் .

பயணத்தின் கடைசி கட்டமாக திருவிடைக்கழி (சிவன் /முருகர்) கோவில் (எப்படி இந்த கோவிலை பற்றி  தெரியும்?_ தோழி ) திருக்கடையூர் கோவிலுக்கு ஏற்கனவே ஒரு முறை சென்றிருந்தாலும் மீண்டும் புதிதாகக் காணும் அனுபவம்   பழைய நினைவுகளுடன் கதம்பமாக .

நாகப்பட்டினம், காரைக்கால், மன்னார்குடி, சிதம்பரம் பகுதிகளில் ஆங்காங்கே நீர்நிலைகளில் நீர் தென்பட்டது. வழியெங்கும் பசுமை . ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறது.

1999 ல் சென்ற போது கோவிந்தராஜரை தரிசிக்க முடியவில்லை திரை சார்த்தி விட்டார்கள். இம்முறை அந்த குறை நீங்கியது. உச்சி கால ஸ்படிகலிங்க அபிஷேகம் கண்டு களித்து கோவிந்தராஜரை சுற்றி சுற்றி வந்து ....பிரகாரத்தில் அமர்ந்து  உண்டு .... (சிவகாமி அம்மை எங்கே இருக்கிறார் . ?
நானே இது வரை பார்த்ததில்லை பல முறை வந்தபோதும் நடராஜரையும் பெருமாளையும் வணங்கி விட்டு சென்று விடுவேன் _ பாண்டிச்சேரி தோழி ) 

அனைத்துக் கோவில்களிலும் பல பிரகாரங்கள் பல கோபுரங்கள். முழுவதும் காண பல நாட்கள் தேவைப்படும். ஆங்காங்கே கல்வெட்டுக்கள் . நுணுக்கமான சிற்பங்கள். தூண்களில் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள். காண கண் கோடி வேண்டும் . 

பல்லவர்களும் சோழர்களும் சிற்ப, கட்டிடக் காலையில் மிகத் திறமையானவர்கள்  என்பதில் மாற்று கருத்தே இருக்க முடியாது. 

எப்படி இவ்வளவு கோவில்களுக்கு உங்களால் செல்ல முடிந்தது ? _ நட்பு வட்டம் 

பெரியாழ்வாரின் வார்த்தைகளில் ......."அப்போதைக்கிப்போதே சொல்லி வைத்தேன்(தோம்)!"








Monday, 18 March 2019

இன்னும் மேலே ......


கடந்த 2018 ஆம் வருட அமெரிக்க பயணத்தில் Latitude 47.60 & longitude -122.33 coordinates ல் அமைந்த வாஷிங்டன் மாகாணத்தின் சியாட்டில் நகருக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. (Green Bay , WI ஐ விட இது வடக்கே  3 டிகிரி அதிகம் ) 

கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலப்பரப்பும், மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பரப்புமாக அமைந்திருக்கும்  சியாட்டில் நகருக்கு San Jose நகரிலிருந்து Thanks Giving Day வாரத்தில் பயணம் செய்தோம். ( ஸ்பானிஷ் மொழியில் J என்ற எழுத்துக்கு உச்சரிப்பு இல்லை . Jalapino - alappino  Javi - avi  Jose -ose ) 

ரோம் நகரைப் போல ஏழு குன்றுகளின் நகரம் இது. நகரின் நடுவே மிகப் பெரிய வாஷிங்டன் ஏரி தொடங்கி எங்கெங்கும் ஏரிகள், அடர்த்தியான மரங்கள் நிறைந்த காடுகள், காடுகளின் நடுவே செல்லும் ஒற்றை சாலைகள், ஆங்காங்கே குடியிருப்புகள், அலுவலகங்கள்  என வித்தியாசமான ஊர்.  

நாங்கள் சென்ற நாட்களில் இரவில் -2 டிகிரி குளிர் இருந்தாலும் கூடவே மழையும் அவ்வப்போது பெய்து கொண்டே இருந்தது. (மழை இல்லாமல் சியாட்டில் இல்லை என்று கூறினார்கள்) நகரைத் தாண்டி 2 மணி நேர பயணத்தில் பனிப்பொழிவு . தெருவோரம் தொடங்கி எங்கெங்கும் பனி . 

உறவினரது வீட்டின் மிக அருகிலேயே Sammamish ஏரி உள்ளது . 11 kms நீளமும் 2 kmச் அகலமும் உடையது . மழை, குளிர் காரணமாக ஏரிக்கு அருகில் நடந்து செல்ல முடியவில்லை . 

தினமும் காலை 11 மணிக்கு Bruch எனப்படும் உணவை முடித்துக் கொண்டு கையில் snacks, தண்ணீர் பாட்டில்களுடன் இரண்டு கார்களில் மூன்று குழந்தைகள் ஏழு பெரியவர்கள் ஊர் சுற்றிப் பார்க்கக் கிளம்புவோம். 

இரண்டு ஸ்வெட்டர்கள் அதன் மேல் ஒரு Heated Jacket, Thermal மற்றும் Jeans pants, குல்லாய் , gloves,  woolen socks, scarf அணிந்து குடை சகிதம் எங்கள் சியாட்டில் பயணம் snowqualme நீர்வீழ்ச்சியிலிருந்து ஆரம்பித்தது. அதே பெயரில் அமைந்த நதியிலிருந்து மழை மற்றும் பனி உருகுவதால் நீர்ப் பெருக்கு அதிகரித்திருந்த காலத்தில் அதைக் கண்டோம். உயரத்திலிருந்து கொட்டுவதால் சாரல் மேலே தெறிக்கிறது . அருமையான அனுபவம். இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறார்கள். 

மறுநாள் ஸ்டீவன்ஸ் பாஸ் (Stevens pass) என்னும் இடத்திற்கு சென்று பனியில் விளையாடி விட்டு திரும்பினோம் . அன்று பனிப்பொழிவு இல்லை. முதல் நாள் பெய்த பனியே சாலையோரம் இருந்தது. 

மறுநாள் Leavenworth என்னும் ஜெர்மனியின் Bavarian styleல் அமைந்த கிராமத்தைக் காண சென்றோம் . இந்த இடத்தை அடைய ஸ்டீவன்ஸ் பாஸ்(Stevens pass)வழியாகத் தான் செல்ல வேண்டும் (https://leavenworth.org/). சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற விதவிதமான பொழுது போக்குகள் அமைந்த இடம். வெயிற் காலத்தில் திரைப்பட விழா, பனிக்காலத்தில் ஊரெங்கும் விளக்கு அலங்காரங்கள் என வெவ்வேறு விதமான நிகழ்வுகள் அங்கே நடைபெறுகின்றன.

சியாட்டில் நகரிலிருந்து  Leavenworth செல்லும் போது பாதி வழியில் Stevens pass லிருந்து பனிப்பொழிவு தொடங்கியது. கடும் பனிப் பொழிவுக்கு நடுவில் காரில் பயணித்தது வித்தியாசமான அனுபவம் . ஊசியிலை மரங்களின் மேல் பனி விழுந்து குச்சி குச்சியாக நீட்டிக் கொண்டும், கீழே உதிர்ந்து கொண்டும் இருந்ததை கண்டோம். வித்தியாசமான அனுபவம். 

Leavenworth கிராமத்திற்குள் நுழைந்தவுடன் தெருவெங்கும் பனி. சுற்றிலும் cascade மலை தொடரின் பனி மூடிய சிகரங்கள். மாலை நான்கு மணிக்கே இருட்டு . ஊருக்குள் நடந்து சென்று விளக்கு அலங்காரங்களை கண்டோம். (0 டிகிரி குளிரில் நானும் பேரக்குழந்தைகளும்  ice cream சாப்பிட்டோம்.)

திரும்பும் வழியில் பனி கெட்டியாகி வாகனங்கள் break பிடிக்காமல் வழுக்கி வழுக்கி ... திக் திக் நிமிடங்கள். 

பனிப் பொழிவுள்ள ஊர்களில் வாகனங்களின் நான்கு சக்கரங்களும் ஒரே சமயத்தில் பிரேக் பிடித்தால் நிற்கும் வண்ணம் அமைக்கப் பட்டிருக்கும் அல்லது அதற்கென அமைந்த சங்கிலியால் சக்கரங்களைப் பிணைத்து விட்டு ஓட்ட வேண்டும்.

எங்களுக்கு பின்னால் வந்த காரில் உள்ளவர்கள் கூறியதை கேட்ட பிறகு தான் உண்மை புரிந்தது . நாங்கள் சென்ற காரின் நிலையை கண்டு "திக் திக்" அவர்களுக்கு தான் என்று. காரணம் நாங்கள் சென்ற கார் முன் இரண்டு சக்கரங்கள் மட்டுமே பிரேக்கை அழுத்தினால் நிற்கும் வாகனம் . பனிப்பொழிவை எதிர்பார்க்காத காரணத்தால் சக்கரங்களை பிணைக்கும்  சங்கிலி கொண்டு வரவில்லை.
  
ஒரு வழியாக ஊறி ஊறி மலையை விட்டு கீழிறங்கி வீடு வந்தோம்.

எங்கள் பயணத் திட்டத்தின் ஒரு பகுதியான Mount Rainier செல்ல முடியவில்லை பனிப்புயல் காரணமாக சாலைகள் மூடப்பட்டு விட்டன. (விமானத்தில் செல்லும் போது அந்த மலை மேலே தான் போகும் பார்த்துக் கொள்ளுங்கள் _ உறவினர் )

மற்றொரு நாள் ....

நகரின் மையத்தில் பறந்து விரிந்த வாஷிங்டன் ஏரி . கடலும் மிக அருகில் உள்ளது. கடல் வழியாகவோ அல்லது வான் வழியாகவோ அலாஸ்கா செல்ல மக்கள் கூடும் ஊர் இது. ஏரியைக் கடந்து சென்றால் Downtown.மழை நின்ற ஒரு நாளில் மிகப் பிரபலமான Seattle Tower மீது ஏறி நகரின் இரவு நேர அழகினைக் கண்டோம். (அதோ பாருங்கள் அந்த தீவு தான் பிரபல Microsoft நிறுவனரின் வீடு இருக்கும் தீவு. மொத்த தீவுமே அவருக்கு தான் சொந்தம். இதோ பாருங்க Amazon அலுவலகம்)

சியாட்டில் நகரம் மிகப் பிரபலமான Microsoft மற்றும் Amazon என்ற இரண்டு நிறுவனங்களின்  தலைமையிடம்  . இவை தவிர Facebook போன்ற பிரபல நிறுவனங்களின் அலுவலகங்களுக்கும் , இந்நிறுவனங்கள் சார்ந்த மக்களின் வாழ்க்கைக்கும் இந்நகரம் பிரசித்தம். (Microsoft நிறுவனத்தில் பெண்களுக்கான வேலை நேரத்தில் பல சலுகைகள் மற்றும் முன்னுரிமைகள் இருப்பதால் அங்கே வேலையில் சேர்ந்தவர்கள் நீடித்து இருப்பதாக கூறினார்கள்)

பழமையான தொழில்களான Lumbering, மீன் பிடித்தல் போன்றவைகளை இந்நிறுவனங்கள் ஓரம்   கட்டிவிட்டது போல தோன்றுகிறது. 

இந்திய உணவகங்களில் விதம் விதமான உணவு வகைகள் கிடைக்கின்றன . கோவில்கள், திருவிழாக்கள், பாட்டு, நடனம், கலை விழாக்கள் என மற்றொரு கலிபோர்னியா.

மற்றொரு நாள் , Ferry எனப்படும் வாகனங்களையும் ஏற்றி செல்லும் படகின் மூலம் அருகிலுள்ள BainBridge தீவிற்கு சென்று இருட்டிய பிறகு மீண்டும் நகருக்குள் வந்தோம்.  Ferry மூலம் திரும்பும் சமயம் கண்ட நகரின் இரவு நேரக் காட்சிகள் கண்ணுக்கும் மனதுக்கும்  அருமை. பல திரைப்படங்களில் இந்த பகுதிகள் இடம் பெற்றுள்ளன என்று கூறினார்கள்.

என் நீண்ட நாள் கனவு  சியாட்டில் சென்று tulip பூக்களின்  கண்காட்சி மற்றும் Boeing Factoryயைக் காணுதல் . துலிப் பூக்களின் கண்காட்சியை ஏப்ரல் மாதம் சென்றால்  தான் காண  முடியும்.(காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிலேயே அது போன்ற கண்காட்சியை  கடந்த ஏப்ரல்  மாதத்தில் காணும் வாய்ப்பு கிடைத்தது )

போயிங் தொழிற்சாலையை  என் கணவர், மகள் மற்றும் மகனுடன் சென்று காணும் வாய்ப்பு கிடைத்தது. (15- 17 வருடங்களுக்கு பிறகு நாங்கள் மட்டும்). 

பின்னணியில் சிகரங்களில் பனிபடர்ந்த மலைத் தொடர்கள் தென்பட Everette என்னும் இடத்தில் அமைந்த போயிங் தொழிற்சாலையைக் காண மிக்க ஆவலுடன் (நான் மட்டும் ஆவலுடன் மற்றவர்கள் மிகுந்த அசுவாரஸ்யத்துடன் சென்றோம் .பாட்டி அங்கே பார்க்க ஒன்றும் இல்லை tour சீக்கிரம் முடிஞ்சுடும் படு bore _ என் பேரன்)

விமானத்தின் பல்வேறு பகுதிகள் வேறு இடத்தில் உற்பத்தி செய்யப்பட்டு இங்கே ஒருங்கிணைக்கப்படுவதை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கிடையே  பேருந்து மூலம்  அழைத்து சென்று காட்டினார்கள். (90 நிமிடங்கள்)

மிகப்பெரிய விசாலமான பகுதி. நான்கு விமானங்கள் ஒரே நேரத்தில் ஒருங்கிணைக்கப் படுகின்றன. ஒவ்வொரு விமானத்தின் அருகிலும் உயரமான இடத்திலிருந்து (observation deck) காணும் வண்ணம் அழைத்து சென்றார்கள். நாங்கள் சென்ற போது  (1)Boeing 747-8 [cargo], (2)Boeing 767[Cargo] , (3)Boeing 777X[Commercial], (4)787-9(Commercial- Dreamliner )என நான்கு விமானங்களின் ஒருங்கிணைப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை .

ஒரு விமானத்தின் விலை $340 மில்லியன் என்று சொன்னார்கள். Boeing 777  விமானம்  ஒரே வாரத்தில் தயாராகிறது என்று வியக்க வைக்கும் தகவலையும் கூறினார்கள். 35,000 தொழிலாளர்கள் மூன்று shift களில் வேலை செய்து வருகிறார்கள் என்று வழிகாட்டி கூறினார். (2.30 am ஷிப்ட்டில்  20,000 பேர், 10 am ஷிப்ட்டில் 10,000, பேர் இரவு ஷிப்ட்டில் 5,000 பேர் )
 
தயாராகிக் கொண்டிருந்த நான்கு விமானங்களில் இரண்டு  விமானங்கள் அடுத்த சில நாட்களிலேயே வானில் பறக்க ஆரம்பித்து விட்டதாக செய்தியில் படித்தேன். . Boeing 777X[Commercial]இரண்டு நாட்களுக்கு முன்பு வானில் பறக்க தொடங்கி விட்டது .

இவைகள் தவிர உலகின் பல விமான நிறுவனங்களுக்கும் ஆர்டரின் பேரில் உற்பத்தி செய்து தருகிறார்கள். தொழிற்சாலையின் வெளிப்புறம்  தயாரான விமானங்கள் நின்று கொண்டிருந்தன. (கார் showroom போல )

பயணத்தின் இறுதிக் கட்டமாக மகள் முறையிலான உறவினருடன் Microsoft campusஐ சுற்றி வந்தோம். (Seattle வந்து விட்டு இதை பார்க்காமல் போனால் எப்படி ?)

நகரில் நான் கண்ட வித்தியாசமான ஒரு விஷயம் தெருக்களின் பெயர்கள். 123N , 342SW என திசைகளின் அடிப்படையில் வைக்கப்பட்டிருக்கும் தெரு பெயர்கள். முக்கியமான இரண்டு பகுதிகள் சேரும் தெருவுக்கு அந்த இரண்டு பகுதிகளின் பெயரையும் சேர்த்து வைத்துள்ளார்கள். 

பனிப் பொழிவு ,மழை , குளிர், வெய்யில், மலை, ஆறு, ஏரி ,பெருங்கடல்  (North Pacific Ocean), நீர்வீழ்ச்சி , அடர்த்தியான மரங்கள் சூழ்ந்த வனம் , அதற்கு நடுவே செல்லும் ஒற்றையடி பாதை போன்ற சாலை, வன விலங்குகள் நடமாடும் வனப்ப பகுதியில் அமைந்த பள்ளி , படகுகள் , மீனவர்கள், மரம் அறுத்தல் என இயற்கையும், வானளாவிய கட்டிடங்கள், அலுவலகங்கள், கடைகள், விமான கப்பல் போக்குவரத்துக்கள் என புதுமையும் நிறைந்த நகரம் Seattle.

உறவினர் தம்பதியின்  அருமையான உபசரிப்பில் பயணம் சிறப்பாக அமைந்ததில் வியப்பில்லை. கார்த்திகை பண்டிகையையும் அங்கே அப்பம், வடை, பாயசம் என சமைத்து -2 டிகிரி குளிரில் சிறப்பாகக் கொண்டாடினோம்.

அமைதியான அழகான ஊர். 












WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...