விழி ஆடி அறுவை சிகிச்சை , புரியும் தமிழில் சொன்னால் கேடராக்ட் ஆபரேஷன்
முடிந்து , ஓய்வில் இருக்கும் என் தாயாருக்கு எழுத்தாளர் திரு. சுஜாதா அவர்கள் எழுதிய “ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்” என்ற புத்தகத்தைப் படித்துக் காட்டும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

இப்புத்தகத்தில் ஒவ்வொரு ஆழ்வாருக்கும் [ஆழ்வார்: எதிலும் தீவிரமாக ஆழ்பவர்கள் , ஈடுபடுபவர்கள்] ஒரு அத்தியாயம் என 12 ஆழ்வார்களின் பாடல்களில் உள்ள சொல் பொருள் யாப்பு என ஆராய்ந்து, மதம் சாராமல் எழுதி உள்ளார்.
அருமையான
விளக்கங்கள். பாமரருக்கும் புரியும் வகையில். (இப்ப தான் ஏதோ கொஞ்சம் புரியற மா...........திரி தோணுது)பெரியாழ்வார் தம்மை யசோதையாகப் பாவித்துக் கண்ணனைத் தன் குழந்தையாக்கிப் பாடிய "பிள்ளைத் தமிழ்" பாடல்கள் மிகுந்த அன்பும் வாத்சல்யமும் கொண்டவை.
ஒரு குழந்தையின் பிறப்பு ,
தாலாட்டு (மாணிக்கங்கட்டி வைரமிடை கட்டி....),
அம்புலி (நிலா நிலா ஓடி வா...),
செங்கீரை(குழந்தை பிறந்த ஐந்தாம் மாதம் தலையை அங்கும் இங்குமாய் அசைத்துப் பார்க்குமே...),
சப்பாணி (இரு கைகளையும் தட்டுமே...சப்பாணி சப்பாணி கொட்டுமாம் அப்புச்சி குடுத்தா தின்னுமாம்..),
தளர் நடை,
கிட்டே வருதல்,
புறம் புல்கல் (குழந்தை பின்புறமிருந்து அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொள்ளுமே..),
அம்மம் (தற்காலத்தின் மம்மு, மம்மம் சாப்பிடு என் செல்லம்....),
உண்ணல், காது குத்தல், நீராட்டல், தலை வாரல், பூச்சூடல், காப்பிடல் என பல்வேறு நிலைகளுக்கும் பாடல்கள் எழுதி உள்ளார்.
கண்ணனைக் குட்டன் என அன்போடு அழைக்கிறார். தற்காலத்தில் மலையாளக் கரையோரம் சென்று விட்டது இந்த வார்த்தை. [குட்டனும் குட்டுவும் எங்கிருந்து வந்தார்கள் என்று இப்போது புரிந்தது.]
பாடல்களைப் படிக்கும் போது நாமே கண்ணனின் அன்னையான உணர்வு. பாக்களின் சொல்லும் பொருளும் யாப்பும் என்னை சிலிர்க்க வைத்தது உண்மை. ஆழ்வார்கள் சிறந்த தமிழ்ப் புலவர்கள் என்பதில் ஐயமில்லை. அவ்வப்போது வாய்விட்டுப் படிக்க இயலாத நெகிழ்வு. கண்ணின் துளிகள் தானே கலைகளின் வெகுமானம்....... உண்மை.
இறைவனின் பிறப்பு பற்றிய இரு பாடல்கள் உங்களுக்காக.......
ஆயர்பாடியில் கண்ணன் பிறந்த செய்தி கேட்டு , அக்குழந்தை இறைவனின் அம்சம் என்று உணர்ந்து மக்கள் மகிழ்ந்து கொண்டாடுவதாக அமைக்கப் பட்டுள்ளது இந்தப் பாடல்.
ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே
மகிழ்ச்சி பெருகி தாம் செய்வது என்ன என்றே புரியாமல் சிலர் ஓடினார்கள்; சிலர் எண்ணெயும் சுண்ணமும் கலந்த திருமுற்றத்துச் சேற்றில் வழுக்கி விழுந்தார்கள்; சிலர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக உரக்கக் கூவினார்கள்; ஒருவரை மற்றவர் கட்டித் தழுவினார்கள்; நம் தலைவனான கண்ணன் எங்கே இருக்கிறான் என்று கூறிக் கொண்டு அவனை தேடினார்கள் சிலர்; சிலர் இனிய குரலில் பாடினார்கள்; சிலர் பலவிதமான பறைகளை இசைத்து ஆடினார்கள். இப்படி கண்ணன் பிறந்த நேரத்தில் பெரும் திருவிழாவைப் போலிருந்தது திருவாய்ப்பாடி என்பதாகப் பெரியாழ்வார் கண்ணனின் பிறப்பைப் பற்றிய நிகழ்வினைக் கூறுகிறார்.
மேற்கண்ட பாடல் வரிகளைப் படிக்க நேர்ந்த போது ஆங்கில இலக்கியத்தில் நான் படித்த , இதனையொத்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது.
W. H. Auden என்பார் "Musee des Beaux Arts" (Museum of Fine Arts) என்னும் கவிதையை தாம் ஐரோப்பிய நகரமான பிரஸ்ஸல்ஸ் நகரின் அருங்காட்சியகத்தில் கண்ட ஓவியங்களின் அடிப்படையில் எழுதி உள்ளார்.
Brueghel என்பவர் வரைந்த "The Numbering of Bethlehem" (also known as The census at Bethlehem) என்னும் ஓவியத்தில் (The Royal Museum of Fine arts of Belgium, Brussels) ஏசுபிரானின் பிறப்பு மற்றும் அது குறித்த மக்களின் மனநிலை பற்றியும் நுணுக்கமாக வரையப் பட்டுள்ளது. அதன் பாதிப்பில் எழுதப் பட்ட கவிதை இது. இந்த கவிதை Ekphrasis என்னும் அமைப்பில் உள்ளது. ஒரு பொருளை அப்படியே வார்த்தைகளால் வர்ணிப்பது. (visual representation of a person, place or thing)
About suffering they were never wrong,
The old Masters: how well they understood
Its human position: how it takes place
While someone else is eating or opening a window or just walking dully along;
How, when the aged are reverently, passionately waiting
For the miraculous birth, there always must be
Children who did not specially want it to happen, skating
On a pond at the edge of the wood:
ஏசுபிரானின் பிறப்பிற்கான நேரம். அவரது தாயார் மிகுந்த வேதனையில் இருந்த சமயம் , மக்கள் சிலர் எந்த பாதிப்பும் இல்லாமல் நடந்து செல்கின்றனர். வயதில் மூத்த பெரியோர் மிகுந்த ஆர்வமுடன் அபூர்வமான நிகழ்வான இறைவனின் பிறப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். சிறுவர்கள் எந்த விதப் பாதிப்பும் இல்லாமல் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். யார் எப்படிப் போனால் நமக்கென்ன என்ற மன நிலையில் பலரும் இருப்பார்கள் என நம் முன்னோர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
[The old Masters (நம் முன்னோர்கள் என்பதாகக் கொள்ளலாம்) were never wrong about human suffering and its position in context with the rest of human society. While someone is suffering, others are going about their regular business. The elderly live in desperate hope for a miracle, but children are not particularly concerned. Even a martyr dies on the margins of society.]
இறைவனின் பிறப்பை ஏற்கனவே மக்கள் அறிந்திருந்தார்கள் என்பது போல இரு பாடல்களும் உள்ளன.
கண்ணே என் கண்மணியே....இன்னும் உறங்கலியோ........
ஆராரோ ஆரிரரோ.......
பின் குறிப்பு :
எனக்குப் புரிந்த வகையில் தெரிந்த வகையில் விளக்கியுள்ளேன்.
Courtesy : http://koodal1.blogspot.in/2008/05/11.html (4000 கற்போம்)
ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்(திரு. சுஜாதா)
No comments:
Post a Comment