Wednesday, 29 June 2016

நெருப்புடா!!

ஏழுமலையானின் வாசஸ்தலமான திருமலை....பாப விநாசம் செல்லும் சாலையில் கோகர்பம் அணக்கட்டின் அருகில் அமைந்த ஒரு திருமண மண்டபத்தில் கணவரின் அலுவலக நண்பரது மகனின் திருமணம்(ஜூன் 8,9). 

வெய்யிலால் காய்ந்து மழையால் நனைந்து, பசியால் வாடி... சென்னை - திருமலை சென்று சேர 9 மணி நேரங்கள் , இதில் கிட்டத் தட்ட ஒரு மணி நேரம் திருமலையில் எங்களை அழைத்து செல்ல அனுப்பி வைக்கப் பட்ட , பரஸ்பரம் எங்களது தொலைபேசி  எண் இல்லாத, வெள்ளை சட்டை அணிந்த ஒரு நபருக்கான காத்திருப்பு நேரம். ( திருமலையில் மொட்டை தலையுடன் காணப்பட்டவர்களுக்கு ஈடாக வெள்ளை சட்டை அணிந்தவர்களும் இருக்கிறார்கள் என்பது புரிந்தது :) )

வரிசையாகத் திருமண மண்டபங்கள் தங்கும் அறைகளுடன். எங்கும் வண்ண விளக்குகள் வாகனங்கள். தோரணங்கள். வண்ணக் கோலங்கள். இது இரவுக் காட்சி. 

மலைகளும் மரங்களும், பூக்களும் புத்தாடைகளுமாய் எங்கும் மகிழ்ச்சிக் கோலம். பகலில் தான் இதெல்லாம் என் கண்ணுக்கு தென்பட்டது.

50 பேர் அமரக் கூடிய மண்டபம். அரை அடி உயரம் உள்ள சிறிய மேடை. பூ அலங்காரம். தரையில் பச்சை வண்ண விரிப்பு. பக்கவாட்டில் சிவப்பு வண்ண படுதாக்கள். நாற்காலிகளின் மேல் வெள்ளை நிறத்தில் உறை.  மணமக்கள் அலங்கார நாற்காலிகளில் அமர்ந்திருக்க, முன்னால் இவை அனைத்தையும் மறைக்கும்வண்ணம் வழக்கம் போல புகைப்படக் குழுவினர்.

மணமகன் ஏற்கனவே அறிமுகமானவர் மணமகள் தற்சமயம் சான் ஹொசே நகரில் படித்து கொண்டிருப்பவர். (இது கல்யாணம் முதல் காதல் வரை...) மண்டபத்தின் உள்ளே சென்று மணமக்களின் அருகில் சென்றவுடன் என்னுடைய "HI" யை கூறி முடிக்கும் முன்பாக, மணமகன் என் வலது கையை பிடித்து கொள்ள யாரென்றே என்னை அறியாத நிலையில் என் இடது கையை பிடித்துக் கொண்டு என்னை இன்ப அதிர்ச்சிக்குள்ளாகினார் மணமகள். 

முதல் தளத்தில் இரவு உணவு முடித்து கீழிறங்கி வந்த போது மண்டபத்தின் உள்ளே ஒரு பெண்மணியை சுற்றி பலரும் நின்றிருக்க அவர் சற்றே உரத்த குரலில் திருமண அமைப்பாளரிடம் பேசிக் கொண்டிருந்ததன் சாரம் :

8 மணி நேரம் பயணம் செய்து வந்திருக்கும் அவர்களுக்கு மாலையில் உணவு எதுவும் அளிக்கப் படவில்லை.
அரை அடி உயரத்தில் மரப்பலகைகளால் அமைக்கப் பட்டிருக்கும் மேடை சீராக இல்லாததால், விளக்கு 3 முறைகள் தவறி விழுந்து விட்டது
திரைச் சீலைகள், உறைகள், தரை விரிப்புகள் அனைத்தும் சுத்தமாக இல்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக, திருமணத்தை நடத்தி வைக்க வைதீகர் ஏற்பாடு செய்யப் படவில்லை. (நாங்களே ஐயரை கூட்டி வந்திருப்போமே)

மணப்பெண்ணின் தாயார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதில் வியப்பில்லை. அந்த அமைப்பாளர் தன் தவறை ஒத்துக் கொள்ளாமல் பேசியவுடன், அப்பெண்மணி கடும் கோபத்துடன், தன் கணவரை நோக்கி வாங்க நாம் இங்கிருந்து கிளம்பலாம் ஊருக்கே போய் திருமணத்தை நடத்திக் கொள்ளலாம் என்றார். இவர் சொன்னதை செய்யக் கூடியவர் என்று நினைத்தாரோ என்னவோ, அமைப்பாளர்  சரி என்ன செய்யணும் சொல்லுங்க என்றார். மற்றவர்கள், அவரது கணவர் தவிர்த்து, அமைதியாக இருந்தார்கள். (அதுவும் நன்மைக்கே, விட்டால் எதிர் கட்சி வக்கீல் போல நமக்கே ஆப்பு வைத்து விடுவார்கள்)

விடிவதற்குள் மேடை அகற்றப்பட்டு (தரையில் என் பெண் திருமணத்தை நடத்திக்கறேன்), கார்ப்பெட், உறைகள் மாற்றப்பட்டு,பக்கவாட்டில் வெள்ளை நிறத்தில் படுதாக்கள் இருக்க வேண்டும்.
வைதீகரைப் போல தோற்றமளித்தஒரு இளைஞரிடம் நாளை 8.30 க்கு இன்னொரு ஐயரையும் கூட்டிட்டு வரீங்க (காசி யாத்திரை தொடங்கி பல சடங்குகளையும் வரிசையாக சொல்லி), இவைகளுக்கு தேவையான மந்திரங்களை படிச்சுட்டு வாங்க, தெரியலைன்னா புத்தகம் எடுத்துட்டு வந்து சொல்லுங்க. 1 மணி முடிய இங்கே இருந்து அனைத்து சடங்குகளையும் ஒழுங்காக செய்து முடிக்கணும் என்றார்.

கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தவில்லை. கோபத்தில் கீச்சிடவில்லை. அமைதியாக சற்றே உயர்த்திய கண்டிப்பான குரலில் தனக்குத் தேவையானவைகளை அவர் பட்டியலிட்டு, ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வும் சொன்னதும் அசந்து போனேன். .... அவரது TONE மற்றும் வார்த்தைகளுக்கு கொடுத்த அழுத்தம்(STRESS) பிரமாதம். மிகச் சிறந்த மேலாண்மை வல்லுனர், 

கூட்டம் கலைந்து சென்றது. மணப்பெண்ணின் தாயார் சாப்பிட அமர்ந்த நிலையிலும் (நினைவு இருக்கா, மாலையிலும் அவர் சாப்பிடலை) கடந்து சென்ற ஒவ்வொருவரையும் சாப்பிட்டீங்களா என்று உபசரித்தார்.

மறு நாள் காலை. மண்டபம் அந்த அம்மையார் கூறிய படி வெள்ளை படுதாக்கள் உறைகளுடன் சுத்தமாகக் காட்சி அளித்தது. 

மணமகளிடன் பேசிக் கொண்டிருந்த போது (Friends ஆயிட்டோமில்லே), தவறாமல் சான் ஹொஸே நகரில் வசிக்கும் என் மகளுடன் தொடர்பில் இருக்கும்படி கூறிக் கொண்டிருந்த சமயம் அவரது தாயாரும் அங்கே இருந்தார். அவர் உடனே என்னிடம், நான் என் மகளிடம் அனைவரிடமும் நட்புடன் பழகி அவர்களுக்கு உதவி தேவைப்படும் போது செய் அப்போது தான் நமக்கு ஒரு பிரச்சினை என்றால் யாராவது உதவி செய்வார்கள். எப்போதும் அடுத்த வீட்டுக்காரங்க தான் முதலில் வருவார்கள் உறவுகள் பிறகு தான் வருவார்கள் என்று சொல்லி இருக்கிறேன். கண்டிப்பாக அவள் செய்வாள் என்றார். மணமகள் எல்லாருடனும் நட்புடன் பழகுவார் என்பது தெரியுமே..மாமியார் கையை பிடித்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருப்பதை பார்த்தால் தெரியும் உங்களுக்கும். 

சொன்னபடி ஐயர் மற்றொருவருடன் வந்து சடங்குகளை நடத்த, திருமணம் இனிதே நடைபெற்றது. 

மஞ்சள் படுத்தப்பட்ட பஞ்சகச்ச வேட்டி, பூணூல் தரித்த மணமகன் மஞ்சள் மடிசார் புடவை உடுத்திய மணமகள். வந்திருந்தவர்களிடம் மடிப்பிச்சை எடுத்து காசி யாத்திரை சென்ற மணமகன் என இது வரை கண்டிராத பல விஷயங்கள் திருமணத்தில்.(பாப்பா... புடவை மஞ்சள் படுத்தியதா இல்லை மஞ்சள் நிறத்திலேயே வாங்கியதா?

முதல் நாள் நிகழ்வு பற்றிய எந்த விதமான அலட்டலும் இல்லாமல் அமைதியாகத் திருமண சடங்குகளில் கலந்து கொண்டது அந்த அம்மையாரின் மற்றொரு பரிமாணம்.

திருமணம் முடியும் தருவாயில் என் மனதில் தோன்றிய எண்ணம் : நல்ல வேளை இந்த அம்மையார் நாதஸ்வரம் வாசிப்பவரைக் கவனிக்கவில்லை. நிறைய ஸ்ருதி ஸ்வர விலகல்கள். அவர் பாட்டு இசைக்கவில்லை..பாட்டு மாதிரி இசைத்தார் என்று தான் எனக்கு தோன்றியது.



தவறு, அநீதி கண்டு தட்டிக் கேட்ட அந்தத் தாயின் உருவில்-பாரதியின் புதுமைப் பெண் கண்டேன். அக்கா.. உங்க பேர் தைரிய லட்சுமியா?

அர்ச்சனா கல்யாண வைபோகமே..............

பின் குறிப்பு:  : எங்களுக்கும் இது போன்ற அனுபவங்கள் ஏற்பட்டதுண்டு. தட்டிக் கேட்க தைரியம் இருந்ததில்லை. எதுக்கு பிரச்சினை என்று நாம் எண்ணுவது நமக்கு பாதகமாக முடிகிறது. தவறுகளை தட்டிக் கேட்கலாம் தப்பே இல்லை.





Monday, 13 June 2016

ஓடிப் போலாம் வரியா?

கடந்த மாதத்தின் ஒரு இனிய காலை நேரம்.

அதற்கு சில தினங்களாக எனக்கு சற்று உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவ மனைக்கு சென்று காத்திருந்த நேரம்.....

ஒரு வயது முதிர்ந்த பெண்மணி கையில் டஃபெல் பை, கால்களில் நடைப் பயிற்சிக்கான ஷூக்கள், ட்ராக் பேண்ட் டீ ஷர்ட் சகிதம் கம்பீரமாக நடந்து வந்து அருகில் அமர்ந்தார். ஒரு அத்லெட்டுக்கான தோற்றம்.

என்னிடம் பேச ஆரம்பித்தார் அப்பெண்மணி. உடனே என் ஆர்வ (கோளாறின்) த்தின் பேரில் எங்கள் உரையாடல் தொடர்ந்தது.

நான் : அம்மா... வாகிங்க் முடிஞ்சு வரீங்களா?

அவர்: இல்லைம்மா.. நான் ஜவஜர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் உடற்பயிற்சி, ஓட்டம் மற்றும் ஜாகிங் முடிச்சுட்டு வரேன். (8.00 - 9.30)

தொடர்ந்து அவரே கூறியவைகள் ...

நான் தபால் துறையில் வேலைக்கு சேர தேர்வு எழுதினேன் அங்கே வேலை காலி இல்லாத காரணத்தால் டெலிபோன் துறையில் வேலை தந்தார்கள். நான் அலுவலகத்தின் சார்பில் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் ட்ரிபிள் ஜம்ப் போட்டிகளில் பங்கேற்று 35 உலக நாடுகளுக்குச் சென்று , பல போட்டிகளில் பங்கேற்று , தங்கம் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளேன். 100 மீட்டர் ஓட்டம் என்னுடைய சிறப்பு என்றார்.

1989 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றேன். தற்சமயம் எனது 85 ஆவது வயதில் இருக்கிறேன். தற்சமயம் வயது முதிர்ந்தோருக்கான போட்டிகளில் (veterans) பங்கேற்று பரிசுகள் பெற்று வருகிறேன் என்றார்.

நான் : (வாயடைத்துப் போன நிலையில்) அம்மா...உங்கள் பெயர் என்ன ?

அவர் : என் பெயர் டெய்சி விக்டர். விக்டர் என் கணவர். அவரின் ஒத்துழைப்பால்தான் பல பரிசுகளைப் பெற முடிந்தது. கூகிள் செய்து பார் எனனைப் பற்றிய தகவல்கள் கிடைக்கும். டீவீ, நியூஸ் பேப்பர்களில் என் பேட்டிகள் வந்துள்ளன என்றார்.
உனக்கு எத்தனை பிள்ளைகள் அம்மா??

நான் :  ஒரு மகன் ஒரு மகள்

அவர் : எனக்கு 3 ஆண் 3 பெண் குழந்தைகள். அதில் 3 பேர் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். எனக்கு சுதந்திரமாக வெளியில் சென்று வர வேண்டும் அங்கே அது முடிவதில்லை அதனால் பிள்ளைகள் அழைத்தும் நான் அங்கே செல்ல விரும்பவில்லை.


தம்முடைய விளையாட்டு ஆர்வம் பற்றி அவர் கூறியது : ஆரம்பத்தில் அக்கம்பக்கத்தில் என்னை ஏளனமாகப் பார்த்தார்கள். காலப் போக்கில் இவள் உருப்படியாக ஏதோ செய்கிறாள் என்பதை புரிந்து கொண்டு விட்டார்கள் என்றார்.

ஒவ்வொரு போட்டியின் முன்பும், கடவுள் எனக்கு ஓடும் திறமையை அளித்துள்ளார் அதை பயன்படுத்தி வெற்றி பெறுவேன் என்று நினைத்து செயல்படுவேன். கண்டிப்பாக ஓரிரண்டு பரிசுகளாவது பெற்றுத் தான் திரும்புவேன் என்றார்.

மருத்துவர் மிக மிக நிதானமாக கணினியில் வேலை செய்தததைக் கண்ட திருமதி விக்டர் , ஏன் இவர் வேகமாக வேலை செய்யலை என்று தெரியலையே.... ஓடி ஓடியே பழகிட்டேன் இப்படி உட்கார்ந்திருப்பது பிடிக்கவே இல்லை என்றார்.

நான் பல வருடங்கள் முன்பு ஹாங்காங் சென்ற போது மடிக்கணினி வாங்கி வந்து நானும் கற்றுக் கொண்டு அக்கம் பக்கத்து பிள்ளைகளையும் கற்கச் செய்தேன். இன்றளவும் இணையம் பற்றிய தகவல்களை யார் உதவியும் இல்லாமல் நானே அறிந்து கொள்கிறேன் என்றார். ஆர்வம் தான் காரணம் என்றார்.

நான் : .....................................................

அவர் : எப்போதும் நான் மருந்துகளின் உதவியை நாடியதில்லை. வயதான காரணத்தினால் வைட்டமின் மாத்திரைகளை சாப்பிட சொல்லி இருக்கிறார்கள் அதன் காரணமாக இங்கே வந்தேன்.

நான் : ....................................................

கிளம்பும் சமயம் நான் அவரிடம் எப்படி வீட்டுக்கு போறீங்க என்றேன்....

அவரது பதில் : நடந்து தான்.... என் கூட வரியா ஓடலாம்??

பின் குறிப்பு : திருமதி விக்டருடன் பேசியதில் முதுமை என்பது சாதனை செய்யத் தடை இல்லை என்பது புரிந்தது,  இன்றளவும் ஆர்வம் சற்றும் குறையாத திறமையான விளையாட்டு வீராங்கனை. CGHS (Central Government Health Scheme)  எனப்படும் மத்திய அரசு ஊழியர்களுக்கான பொது மருத்துவ மனையில் தான் மருத்துவம் பார்த்துக் கொள்கிறார் அந்த அம்மையார். நூற்றுக்கும் மேற்பட்ட மெடல்களைப் பெற்றிருக்கும் இவர் யார் என்பதே யாருக்கும் தெரியவில்லை.  அரசின் அங்கீகாரம் எதுவும் இல்லை என்பது வருத்தத்திற்கு உரியது.

http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-downtown/agedefying-daisy-victor/article4131915.ece

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...