Sunday, 16 August 2020

உள் நாட்டு விமானப் பயண அனுபவங்கள்...[சென்னை முதல் இமயம் முடிய]

ஜனவரி 1, 2006  

[புதுடில்லி - ஹைதராபாத்சென்னை]

குர்காவ்னில் பேஷன் டிசைனர் ஆக வேலை பார்த்துக் கொண்டிருந்த மகளைக் காண கணவர் மகனுடன் சென்ற பயணம் அது .போகும்போது ரயில் வரும் போது விமானம். (Spice jet)   முதல் விமானப் பயணம் கூட.

மாலை 6.30 மணிக்கு விமானம் கிளம்பும் நேரம் 

அங்கு கடும் பனி மூட்டம்.விமானி  50 மீட்டருக்கும் குறைவான visibility தான் இருக்கிறது, இறங்கி வீட்டுக்கு செல்லுங்கள் என்று சொல்லி விட்டார்.

இறங்கி டெர்மினல் உள்ளே செல்வதற்குள் குளிரில் விறைத்து போனோம். சென்னைக்கு தானே செல்லப்போகிறோம் என்று ஒரே ஒரு ஸ்வெட்டர் தவிர மீதியை மகளிடமே கொடுத்து விட்டோம்.

அதற்கிடையில் என் கணவர் டிக்கெட்டுகளை 3 ஆம் தேதிக்கு மாற்றி வாங்கி வந்தார். [ குளிரில் நடுங்கி கொண்டு எதிரில் யார் வருகிறார்கள் என்றே தெரியாத நிலையில் நான் டிக்கெட்டை மாற்றிக்  கொண்டு வந்தேனே அது பற்றி எழுதவே இல்லை என்று கோவித்துக் கொள்ளக் கூடாது இல்லையா என் கணவர்?]

அந்த பகுதியில் அந்த நேரத்தில் பயணித்துக் கொண்டிருந்த என் மகளின் வகுப்பு தோழர் எங்களை அழைத்துச் சென்றார்.  வெடவெடப்பு அடங்க 2 மணி நேரங்கள் ஆனது.

3 ஆம் தேதி விமானப் பயணத்தைப் பற்றி சொல்லவே இல்லையே .... ஹைராபாத் வரை சுகமான நிம்மதியான  பயணம். அங்கிருந்து கிளம்பும் சமயம் பாதுகாப்பு விதிகள் பற்றி விளக்கும் போது உங்கள் இருக்கையில் இருக்கும் cushion ஐயே floatation ஆக பயன்படுத்தலாம் என்கிறார்கள்.

வங்காள விரிகுடா கடல் மேலே பறக்கும் போது பிரச்சினை வந்தால் cushion கட்டிகொண்டு கடலில் குதியுங்கள் என்பதே அதன் பொருள் . கேட்டதும் ஒரே படபடப்பு எனக்கு. எங்கே எப்படி அந்த cushion எடுக்க வேண்டும்  என்று என் மகனைக் கேட்டால் யாருக்கு தெரியும் என்று பதில் வந்தது. பயந்து கொண்டே சென்னை வந்து சேர்ந்தோம்.

 

பிப்ரவரி, 2008

[பூனேசென்னை]

அலுவல் நிமித்தம் பூனேவிற்கு சில நாட்களுக்கு செல்ல வேண்டி இருந்தது. (தனியாக). திரும்பி வரும் நாளில் சகோதரிக்கு   பூனே அலுவலகத்தில் [நாங்களிருவரும் ஒரே அலுவலகத்தில் இருந்தோம்]  வேலை இருந்ததால் வழக்கமாக வரும் டாக்ஸி ஓட்டுநர் வந்து உன்னை அழைத்து செல்வார் என்று சொல்லி விட்டு சென்று விட்டார். மதியம் 1.30  விமானம் கிளம்பும் நேரம். 12 மணி . ஓட்டுநர்  வரவேயில்லை . வழக்கமான  ஓட்டுநர் வராமல் அவரது மகனை  (20 + வயதுகள்) அனுப்பி இருந்தார். மகன் நான் receptionல் பெட்டியுடன் காத்திருந்ததை கவனிக்காமல், reception பகுதியில் கேட்காமல் .மாடியில் நான் தங்கி இருந்த அறைக்கு சென்று தேடி விட்டு காணவில்லை என்று receptionல் சொல்ல ...அவர்கள்  என்னை அடையாளம் காட்ட ...

12.15 pm

காரில் ஏறி புறப்பட்டோம்.  அவருக்கு  ஏர்போர்ட் போக வழியே தெரியவில்லை . 10 அடிக்கு ஒரு முறை நிறுத்தி "ஏரோடோ" எப்படி செல்வது என்று மராத்தியில் கேட்டார். மேடு, பள்ளம், சாக்கடைகள்,  குடிசைகள் என அமைந்திருந்த குறுகலான பகுதிக்குள்ளெல்லாம் புகுந்து பூனே நகரை  சுற்றி காண்பித்தார். நான் ஆங்கிலத்தில் அலற அவர் மராத்தியில் பேச.... உதவிக்கு சகோதரியை தொலைபேசியில் கூப்பிட்டேன். அதுவும் வேலைக்கே ஆகவில்லை . மீண்டும் ஏரோடோ  ஏரோடோ மட்டுமே ..வாக்கியமாக கூட கேட்கவில்லை. அவரின் நடவடிக்கைகளை கண்டு எனக்கு விமானத்தை பிடிக்க முடியுமா என்ற கவலையை மீறி சிரிப்பை அடக்க முடியவில்லை. 

12.45 pm

ஒரு வழியாக ஆங்கிலத்திற்கு மாறி "airport" என்று கேட்க ஆரம்பித்தார். இந்த சமயத்தில்  அகலமான சாலைப்பகுதிக்கு வந்திருந்தார். சாலைகளில் பலகைகளில் ஆங்காங்கே ஏர்போர்ட் போகும் வழி  என்று எழுதி அம்புக் குறி  இருக்கே அதை பார்த்து ஓட்டுங்கள் என்று நான் சொல்ல... அவருக்கு புரிந்தால் தானே ? மீண்டும் airport  விசாரணை... பொறுமை மீறி go straight என்று நான் வழி காட்ட ஆரம்பித்தேன்.

1.15. pm

விமான நிலையத்திற்கு மிக அருகில் ஒரு திருப்பம் . இடது புறத்தில் மிலிட்டரி பகுதி வலது புறத்தில் விமான நிலையம் . நம்மவருக்கு   இடதா வலதா என்று பலத்த சந்தேகம். நன்கு யோசித்து இடது புறம் திரும்ப ஆரம்பிக்க நான் right right என்று அலற....

 

1.20 pm 

விமான நிலையம் .

 

 பூனே விமான நிலையம் மிக சிறியது. Terminal என்பது சிறிய hall தான். கதவை தாண்டியவுடன் 100 மீட்டர் நடந்தால் விமானம் நின்று கொண்டிருக்கும்.   

கடைசியாக, தாமதமாக, ஓட்டமாக ஓடி வேறு சென்றதால் கடுமையான security check. வெளியில் விடவே இல்லை. விட்டதும் ஓட்டமாக விமானத்தை நோக்கி ஓடி படிக்கட்டுகளில் ஏறினேன்.

Mofussil பஸ் நிலையங்களில் கண்டக்டர் பின் கதவிலிருந்து எட்டி பார்த்து பயணிகள் ஏறியதும்  ரை... ரை ....என்று கூவுவதற்காக காத்திருப்பது போல air hostess எட்டி பார்த்துக் கொண்டிருந்தார். நான் ஏறி விமானத்தின் கதவுக்கு அருகில் கடைசி இருக்கையில் (அது ஒன்று தான் காலி ) சரியாக கூட அமரவில்லை ... ரை...  ரை...  இல்லாமலே விமானம் கிளம்பி விட்டது .

 

டிசம்பர் 2015 / ஜனவரி 2016

[சென்னை - மும்பை -மஹாபலேஷ்வர்]

ஜனவரி 1 ஆம் தேதி  காலை மும்பையில் விமானம் ஏறினோம் . 1.50 மணி நேர பயணம் . மார்கழி மாதம் . சென்னையில் கடும் பனிமூட்டம் . திருப்பதி அருகே இருந்தபோது காலை 9 மணி ஆகியும் சென்னையில் விமானம் தரையிறங்க அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது.

விமானம் திருப்பதி விமான நிலையத்தின் மேலே சுற்றி சுற்றி சுற்றி (3 முறை) ஒரு மணி நேரம் பறந்து கொண்டே இருந்தது.

எப்போது தரையிறங்குவோம், விமானத்தில் எரிபொருள் தீர்ந்து விடாதா இப்படி பல யோசனைகள்.

இருக்கைக்கு முன்பாக இருந்த டிவியில்  ஒரு திரைப்படம் பார்த்து முடித்த சமயம்  சென்னையில் தரையிறங்கினோம் .

 

நவம்பர், 2017

[சிம்லா, குலு, மணாலி]

டெல்லி வரை விமானம் அங்கிருந்து innova காரில் மற்ற இடங்களுக்கு பயணம்.

திரும்பி வரும் சமயம் டில்லியில் smog. மாலை 5.30 மணி விமானத்திற்கு 1.30 க்கே விமான நிலையத்தில் கொண்டு வந்து இறக்கி விட்டு சென்று விட்டார் இன்னோவா ஓட்டுநர்.

விமானத்தில் ஏறியதும் விமானத்தின் உட்புறம் வித்தியாசமாக காட்சியளித்தது . சிகாகோ O 'Hare விமான நிலையத்திலிருந்து சென்னை வரும் விமானம் அது.புத்தம் புதிய விமானம் . ஜன்னலின் வடிவமைப்பு, இருக்கைகள், உள்ளமைப்பு எல்லாமே வித்தியாசம். இருக்கையில் அமர்ந்ததும் அங்கே இருந்த விமானம் பற்றிய குறிப்புகள் இருந்த அட்டையை பார்த்தேன். மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.  காரணம் நான் பயணம் செய்ய மிகவும் விரும்பிய Boeing 787-8 மாடல் விமானம் அது. ஜன்னலில் ஒரு பட்டனை அழுத்தினால் எவ்வளவு tint வேண்டுமோ அந்தளவுக்கு மாறும்.

[Boeing நிறுவனத்தின் விமானங்கள் Boeing 737, Boeing 747, Boeing 777.... என ஒவ்வொரு model க்கும் ஒவ்வொரு  எண்ணைக் கொண்டிருக்கும் . ஏர்பஸ்  நிறுவனத்தின் விமானங்கள் A 318, A 320 , A 321 , A 380 என்பது போல இருக்கும்.

Boeing 787 என்பது latest model விமானம். "Dreamliner" என்பது அதன் செல்லப் பெயர். ஆரம்பத்தில் இந்த model விமானத்தில் மின்சாரக் கோளாறுகள் ஏற்பட்டமையால் சில காலம் பறக்காமல் நிறுத்தி வைக்கப் பட்டு, அந்த பிரச்சினை சரி செய்யப்பட்ட  பிறகு மீண்டும் வானில் பறக்க விடப்பட்டது.

Boeing 747 மற்றும் A380 ஆகியவை double decker வகைகள் .

Boeing விமானங்களின் மூக்கு பகுதி சற்றே அகலமாகவும் Airbus கூர்மையாகவும் இருக்கும்.

Boeing 747க்கு நான்கு என்ஜின்கள், Boeing 777க்கு இரண்டு என்ஜின்கள். இந்த வகை விமானத்தில் விபத்துக்கள் மிகக் குறைவு. 

விமானங்கள் , விமான விபத்துக்கள் பற்றிய தகவல்கள் படிப்பது , பார்ப்பது என் மகனிடமிருந்து கற்றுக் கொண்ட பொழுது போக்கு. விமானப் பயணத்திற்கு சில நாட்கள் முன்பு இந்த பொழுது போக்கை தற்காலிகமாக நிறுத்தி விடுவோம்.


டிசம்பர் 25-27, 2017

[சென்னை – கோவை]

விமான பயண நேரம் 50 நிமிடங்களே.  ஆயினும்  காலை 10.30 க்கு வீட்டை விட்டு கிளம்பிஆட்டோ, , மெட்ரோ ரயில் , விமானம், வாடகைக்கார்,பேருந்து எனஎ அன்பே சிவம் படத்தில் வரும் கமலஹாசன் மாதவன் போல இரவு 7 மணிக்கு சத்தியமங்கலம் போய் சேர்ந்தோம். 

[அச்சமயத்தில் கோயம்பேடு - ஆலந்தூர் , ஆலந்தூர் - விமான நிலையம் என இரண்டு ரயில்களில் பயணிக்க வேண்டும். ஆலந்தூரில் இறங்கி இரண்டு தளங்கள் மேலேறி ...விமான நிலையம் வந்தடைந்தோம்.

விமான நிலையத்தில் escalator, travelator , lift , connecting bridge எதுவுமே இல்லை. படிக்கட்டுகளில் பெட்டியை சுமந்து கொண்டு இறங்கி உள்நாட்டு விமான நிலையம் சென்றோம்.]

அடுத்த நாளே மீண்டும் கோவை - சென்னை வந்து சேர்ந்தோம்.

 

மார்ச்/ ஏப்ரல், 2018

[சென்னை - டில்லி- ஸ்ரீநகர்]

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரான ஸ்ரீநகர் / பஹல்காம் / குல்மார்க் பயணம். Air India விமானப் பயணம் .

போகும்போது ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அவ்வளவாக சோதனைகள் இல்லை

அங்கே நாங்கள் தங்கியிருந்த 4 நாட்களில் ஒருநாள் குல்மார்க், மீதி நாட்கள் ஸ்ரீநகர் என்றே சுற்றி பார்க்க முடிந்தது. பகல்காமில் துப்பாக்கி சூடு, குல்மார்க் ஸ்ரீநகரில் ஊரடங்கு உத்தரவு 3 நாட்களுக்கு. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் கிடையாது என்பதால் ஊரை சுற்றி பார்த்தோம்.

ஊருக்குள் எங்கெங்கும் CRPF வீரர்கள், காஷ்மீர் மாநில காவலர்கள் துப்பாக்கி இந்திய வண்ணம் நின்று கொண்டு இருந்தார்கள்.(100 அடிக்கு ஒருவர் )

திரும்பும் நாளில் 3 மணி நேரங்களுக்கு முன்பாக விமான நிலையத்தில் இருக்க வேண்டும் என்பதால் 4 மணி நேரங்கள் முன்பே கிளம்பி விட்டோம். 2 கிலோமீட்டர்களுக்கு முன்பிருந்தே scanning/security check ஆரம்பம் . விமானத்தில்  ஏறும் முன்பு வரை 6 முறை நம் உடைமைகளையும் நம்மையும் சோதனை செய்தார்கள். உடைமைகளை விமானத்தில் ஏற்றுவதற்கு முன்பு அவரவரின் பெட்டி எது என்று அடையாளம் காட்டிய பின்பே விமானத்திற்குள் பெட்டிகளை அனுமதிக்கிறார்கள். [Boarding pass கூட வாங்கி சோதித்து பார்த்தார்கள்]

விமான நிலைய காத்திருப்பு பகுதியிலிருந்தே பனிமலைகள் தரிசனம் கண்கொள்ளாக் காட்சி. உள்ளே நடந்த கெடுபிடியால் எதுவும் ரசிக்கவில்லை.

விமானம் மேலேறியதும் தெரிந்த பனிமலைகள் இயற்கையின் அற்புதம். எங்கே ஆரம்பம் எங்கே முடிவு என்று தெரியாத மலைத்தொடர்கள்.]

உள்நாட்டு பயணங்கள் ஒரு வகை என்றால் வெளி நாட்டு பயணங்கள் வேறு வகை.

ஒவ்வொன்றும் ஒருவிதம்...

 

பின் குறிப்பு : மேற்கூறிய அனைத்து பயணங்கள் பற்றிய பதிவுகளும் என் facebook timeline மற்றும் manjooz .blogspot .com ல் உள்ளன .

 

 







WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...