பறவைகளின் இன்னிசை , எங்கோ தூரத்தில் செல்லும் ஒற்றை வாகனத்தின் ஓசை , யார் வீட்டு தொலைக்காட்சி பெட்டியிலிருந்தோ வரும் பக்தி பாடல் ஓசை , மின்விசிறியின் ஓசை இவ்வளவுதான் lockdown தினங்களின்
அதிகாலை ஓசைகள் . (பூ பூக்கும் ஓசை அதை[யும்] கேட்கத்தான் ஆசை ....)
எழுத்தாளர் சுஜாதா அவர்கள் "வாரம் ஒரு பாசுரம் " புத்தகத்தில் 7 ஆம் நூற்றாண்டின் சப்தங்களுடன் தற்போதைய சப்தங்களை ஒப்பிட்டு சொல்லி இருப்பது நினைவிற்கு வருகிறது .
காகங்கள், ஒற்றை குயில், தாழப் பறக்கும் விமானத்ததின் ஓசை, பக்கத்துக்கு காலனியில் காய்கறி விற்பவரின் குரல் ...என இன்றைய ஓசைகள் பற்றி சொல்லிவிட்டு அந்நாளில் கதிரவன் கிழக்கே சிகரத்தை அடைந்து விட்டான் இருள் நீங்கியது பூக்கள் எல்லாம் தேன் சொரிந்தன ... அரங்கனே எழுந்தருள்வாய் என "கதிரவன் குணதிசை சிகரம் வந்தடைந்தான் " என்ற தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாடலுக்கு விளக்கம் எழுதி விட்டு கடைசியில் இன்றைய தினங்களின் நாராசத்தில் அரங்கன் தூங்கவே மாட்டான் என்று முடித்திருக்கிறார்.(அரங்கன் தற்சமயம் 21 நாட்கள் பகலில் பக்தர்களுக்கு அருள் பாலித்து விட்டு இரவில் நன்றாக உறங்குவார் என நம்பலாம்.)
பல வருடங்களாக மேலை நாடுகளில் நடப்பில் இருக்கும் work from home கலாச்சாரம் இங்கும் நுழைந்து விட்டது. அலுவலக வேலை தொடங்கி நாலாயிர திவ்விய பிரபந்த வகுப்புகள் வரை அனைவரும் zoo(m)மிக் கொண்டு இருக்கிறார்கள்.
வீடியோ கால் மற்றும் தொலைபேசி மூலம் உறவும் நட்பும் பலப்படுவதென்னவோ உண்மை . (ஏன்டா போன் பேசும்போது சிரிச்சாப்ல பேச கூடாதா _ தாயார் , அம்மா இது அலுவலக மீட்டிங் கால் அம்மா _மகன் )
சம்ஸ்கிருத வகுப்பு சமயத்தில் ஏன் வீட்டு பாடங்களை எழுதவில்லை சகோதரி என்று என் மாணவிகளை கேட்டால் எங்களுக்கு பிள்ளை/பேரன்களுக்கு மாலையில் என்ன நொறுக்கு தீனி செய்து தருவது என்று யோசிக்கவே நேரம் சரியாக இருக்கிறது என்கிறார்கள். பாடத்தை நிறுத்தி விட்டு அவற்றிற்கான குறிப்புகளைக் கொடுத்தேன் . (வாழ்க்கைக் கல்வி?!)
என்றோ எகனாமிக்ஸ் வகுப்பில் படித்த scarce means, more demand to be managed with limited resources என்பதை பயன்படுத்தி கைவசம் இருக்கும் மளிகை காய்கறிகளை வைத்து சுவையாகவும்(?!) சத்தாகவும் சமைப்பது சவாலாக உள்ளது.
இந்த lockdown மக்களை முழுநேர creators ஆக்கி விட்டதென்னவோ உண்மை . விதம் விதமான மீம்ஸ்கள் (மீமீஸ் என்று சொல்லு பாட்டி _என் குட்டி பேரன்), கட்டுரைகள் , பக்தி செய்திகள் , சமையல் குறிப்புகள் தனிமையான இந்த நாட்களின் வெறுமையை அருமையாக விரட்டுகின்றன.
மனதில் பதிந்த சில பதிவுகள்.
மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்களுக்கான பாராட்டுக் கைதட்டலில் எதற்காக வீட்டிற்குள் நாள் முழுவதும் அடைந்து இருந்தோம் என்பதையே மறந்து மக்கள் கூட்டமாய் கூடி கைதட்டியது கண்டு பொருமி ஒரு இளைஞர் f ... வார்த்தையை விதம் விதமாக உபயோகித்து தன்னுடைய ஆற்றாமையை கூறி இருந்தார் .
130 கோடி மக்களும் ஒரே 'C' வார்த்தையை நினைத்துக் கொண்டே, சொல்லிக் கொண்டே இருக்கிறோம். அதனால் negative vibration ஏற்படுகிறது. 'C' வார்த்தையை நினைப்பதை சொல்வதை தவிர்ப்போம் என்கிறார் ஒரு பதிவின் ஆசிரியர்.
Zoom மற்ற video apps ஐ விட எப்படி சிறப்பாக செயல்படுகிறது, வீட்டையே ஒரு பிகினிக் தலமாக எப்படி மாற்றுவது, பிள்ளைகளுடன் பொழுதை பயனுள்ளதாக கழிப்பது எப்படி (3D animal videoவும் இதில் உண்டு), புத்தகப் பிரியர்களுக்கான பல்வேறு links எனப் பல பதிவுகள்.
சம்ஸ்க்ருத பாரதியில் மிக அருமையான பயனுள்ள Blogspot மற்றும் விவரங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். (அம்மா நாங்கள் இங்கே அமெரிக்காவில் பயன்படுத்திக் கொள்ளலாமா என்று உன் ஆசிரியரை கேட்டு சொல் _மகள்)
emoji களின் உதவியுடன் ஊர்களின் பெயரை கண்டுபிடியுங்கள், கிரிக்கெட் வீரர்களின் பெயரை கண்டுபிடியுங்கள் என்பது போன்ற quizகள் . (எங்கள் தாயார் எந்த துறை பற்றிய quizஆக இருந்தாலும் கண்டு பிடிக்கிறார்.)
உறவு நட்புக்களை காண சென்று திரும்பி வீடு செல்ல/வர முடியாதவர்களே! பிள்ளைகள் உறவினர்கள் என மொத்தமாக வீட்டிற்குள் (சிக்கி கொண்டு ?!) இருப்பவர்களே! மறந்தே போன scrabble , monopoly , பல்லாங்குழி போன்ற விளையாட்டுக்களை முயற்சி செய்யலாம். சிறுவர்களுக்கு கதைகள் சொல்லலாம் . DD தொலைக்காட்சியில் ராமாயணம், மஹாபாரதம், சக்திமான் ஆகிய தொடர்கள் காண்பிக்கிறார்கள். எளிய உடல் பயிற்சிகளை செய்யுங்கள். மகிழ்ச்சியுடன் பயனுள்ள வகையில் பொழுதை செலவிடுங்கள். இந்த நாட்கள் மீண்டும் கிடைக்காது.
எல்லா வேலைகளையும் நானே செய்கிறேன் என்ற புலம்பல் அதிகமாக கேட்கிறது . பிள்ளைகளை சிறு உதவிகள் செய்ய பழக்குங்கள் தாய்மார்களே . அவர்கள் உங்கள் பிள்ளைகள் தானே ? பொருட்களை அதனதன் இடத்தில் வைத்தல் , சாப்பிட்ட தட்டுகளை கழுவுதல் என ஆரம்பித்தது வயதிற்கேற்ற வேலைகளை செய்ய கற்றுக் கொடுங்கள் .
"கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்" என்று சொல்லி இருக்கிறார் நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை. வீட்டு வேலைகளும் கைத்தொழில்தான் . எப்போதும் என் நினைவுக்கு வரும் ஒரு திரைப்பட பாடல் "எல்லாரும் மாவாட்ட கத்துக்கிடணும் அது எப்போதும் தப்பில்லே ஒத்துக்கிடணும் எல்லார்க்கும் எல்லாமும் தெரிஞ்சிருந்தா இல்லாத நேரத்தில் கைகொடுக்கும்" (புதுப்புது அர்த்தங்கள்) .
சிங்கார சென்னையில் பலவருடங்களுக்கு முன் அனுபவித்த கடற்காற்று , ஒற்றை பறவை பறக்கும் ஓசை , எங்கோ ஒலிக்கும் தொலைபேசியின் அழைப்பு , நடுநிசியானாலும் தூங்காமல் லூட்டி அடிக்கும் குழந்தைகளின் சிரிப்பு சத்தம் என பலவற்றையும் மீண்டும் வீட்டிலிருந்தபடியே அனுபவிக்க இது ஒரு சந்தர்ப்பம் .
"சத்தம் இல்லாத தனிமை வேண்டும்" என்று கவிஞர் வைரமுத்து எழுதினர். தற்சமயம் அவரது ஆசை நிறைவேறி விட்டது, காரணம் எதுவாக இருப்பினும்.
கடைசியாக இன்று காலை படித்த ஒரு பதிவினை பகிர விரும்புகிறேன் . இத்தாலியில் 95 வயதான பெரியவர் ஒருவர் மருத்துவமனையிலிருந்து நோய் சரியாகி வீடு செல்லும் முன் உங்களுக்கு ஒரு நாள் செயற்கையாக சுவாசம் (ventilator) கொடுத்தோம். நீங்கள் அதற்கு $5000 பணம் கட்ட வேண்டும் என்று கூறினார்களாம். அந்தப் பெரியவர் அழுதாராம் . பணம் இல்லை போலும் என்று மற்றவர்கள் நினைக்க அவர் கூறியது இது தான் " நான் 95 வயது முடிய இந்த பூமியின் காற்றை எந்த கட்டணமும் இல்லாமல் சுவாசித்தேன் ஆனால் ஒரு நாள் செயற்கை சுவாசம் பெற்றதற்கு பணம் தர வேண்டி உள்ளது. இயற்கைக்கு நான் இது நாள் வரை நன்றி செலுத்தவில்லையே என்று அழுதேன்"
சுலபமாக பெரும் பொருட்களை நாம் மதிப்பதில்லை, இனியேனும் இயற்கையை மதிப்போம் . நலம் பெறுவோம்.
வாழ்க்கை வளமுடன் வாழ்வதற்கே. கவலை வேண்டாம் .
கூடிய விரைவில் நாமும் செல்லலாம் போத்தீஸ், Forum, Phoenix மால்களுக்கு ...
Courtesy : தொண்டரடிப்பொடி ஆழ்வார் , எழுத்தாளர் சுஜாதா , கவிஞர் வைரமுத்து , நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை மற்றும் Social Bloggers