Wednesday, 6 May 2020

என்ன சத்தம் இந்த நேரம்....

பறவைகளின் இன்னிசை , எங்கோ தூரத்தில் செல்லும் ஒற்றை வாகனத்தின் ஓசை , யார் வீட்டு தொலைக்காட்சி பெட்டியிலிருந்தோ வரும் பக்தி பாடல் ஓசை , மின்விசிறியின் ஓசை இவ்வளவுதான் lockdown தினங்களின்
அதிகாலை ஓசைகள் . (பூ பூக்கும் ஓசை அதை[யும்] கேட்கத்தான் ஆசை ....)
எழுத்தாளர் சுஜாதா அவர்கள் "வாரம் ஒரு பாசுரம் " புத்தகத்தில் 7 ஆம் நூற்றாண்டின் சப்தங்களுடன் தற்போதைய சப்தங்களை ஒப்பிட்டு சொல்லி இருப்பது நினைவிற்கு வருகிறது .

காகங்கள், ஒற்றை குயில், தாழப் பறக்கும் விமானத்ததின் ஓசை, பக்கத்துக்கு காலனியில் காய்கறி விற்பவரின் குரல் ...என இன்றைய ஓசைகள் பற்றி சொல்லிவிட்டு அந்நாளில் கதிரவன் கிழக்கே சிகரத்தை அடைந்து விட்டான் இருள் நீங்கியது பூக்கள் எல்லாம் தேன் சொரிந்தன ... அரங்கனே எழுந்தருள்வாய் என "கதிரவன் குணதிசை சிகரம் வந்தடைந்தான் " என்ற தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாடலுக்கு விளக்கம் எழுதி விட்டு கடைசியில் இன்றைய தினங்களின் நாராசத்தில் அரங்கன் தூங்கவே மாட்டான் என்று முடித்திருக்கிறார்.(அரங்கன் தற்சமயம் 21 நாட்கள் பகலில் பக்தர்களுக்கு அருள் பாலித்து விட்டு இரவில் நன்றாக உறங்குவார் என நம்பலாம்.)

பல வருடங்களாக மேலை நாடுகளில் நடப்பில் இருக்கும் work from home கலாச்சாரம் இங்கும் நுழைந்து விட்டது. அலுவலக வேலை தொடங்கி நாலாயிர திவ்விய பிரபந்த வகுப்புகள் வரை அனைவரும் zoo(m)மிக் கொண்டு இருக்கிறார்கள்.
வீடியோ கால் மற்றும் தொலைபேசி மூலம் உறவும் நட்பும் பலப்படுவதென்னவோ உண்மை . (ஏன்டா போன் பேசும்போது சிரிச்சாப்ல பேச கூடாதா _ தாயார் , அம்மா இது அலுவலக மீட்டிங் கால் அம்மா _மகன் )
சம்ஸ்கிருத வகுப்பு சமயத்தில் ஏன் வீட்டு பாடங்களை எழுதவில்லை சகோதரி என்று என் மாணவிகளை கேட்டால் எங்களுக்கு பிள்ளை/பேரன்களுக்கு மாலையில் என்ன நொறுக்கு தீனி செய்து தருவது என்று யோசிக்கவே நேரம் சரியாக இருக்கிறது என்கிறார்கள். பாடத்தை நிறுத்தி விட்டு அவற்றிற்கான குறிப்புகளைக் கொடுத்தேன் . (வாழ்க்கைக் கல்வி?!)
என்றோ எகனாமிக்ஸ் வகுப்பில் படித்த scarce means, more demand to be managed with limited resources என்பதை பயன்படுத்தி கைவசம் இருக்கும் மளிகை காய்கறிகளை வைத்து சுவையாகவும்(?!) சத்தாகவும் சமைப்பது சவாலாக உள்ளது.

இந்த lockdown மக்களை முழுநேர creators ஆக்கி விட்டதென்னவோ உண்மை . விதம் விதமான மீம்ஸ்கள் (மீமீஸ் என்று சொல்லு பாட்டி _என் குட்டி பேரன்), கட்டுரைகள் , பக்தி செய்திகள் , சமையல் குறிப்புகள் தனிமையான இந்த நாட்களின் வெறுமையை அருமையாக விரட்டுகின்றன.

மனதில் பதிந்த சில பதிவுகள்.
மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்களுக்கான பாராட்டுக் கைதட்டலில் எதற்காக வீட்டிற்குள் நாள் முழுவதும் அடைந்து இருந்தோம் என்பதையே மறந்து மக்கள் கூட்டமாய் கூடி கைதட்டியது கண்டு பொருமி ஒரு இளைஞர் f ... வார்த்தையை விதம் விதமாக உபயோகித்து தன்னுடைய ஆற்றாமையை கூறி இருந்தார் .

130 கோடி மக்களும் ஒரே 'C' வார்த்தையை நினைத்துக் கொண்டே, சொல்லிக் கொண்டே இருக்கிறோம். அதனால் negative vibration ஏற்படுகிறது. 'C' வார்த்தையை நினைப்பதை சொல்வதை தவிர்ப்போம் என்கிறார் ஒரு பதிவின் ஆசிரியர்.

Zoom மற்ற video apps ஐ விட எப்படி சிறப்பாக செயல்படுகிறது, வீட்டையே ஒரு பிகினிக் தலமாக எப்படி மாற்றுவது, பிள்ளைகளுடன் பொழுதை பயனுள்ளதாக கழிப்பது எப்படி (3D animal videoவும் இதில் உண்டு), புத்தகப் பிரியர்களுக்கான பல்வேறு links எனப் பல பதிவுகள்.
சம்ஸ்க்ருத பாரதியில் மிக அருமையான பயனுள்ள Blogspot மற்றும் விவரங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். (அம்மா நாங்கள் இங்கே அமெரிக்காவில் பயன்படுத்திக் கொள்ளலாமா என்று உன் ஆசிரியரை கேட்டு சொல் _மகள்)

emoji களின் உதவியுடன் ஊர்களின் பெயரை கண்டுபிடியுங்கள், கிரிக்கெட் வீரர்களின் பெயரை கண்டுபிடியுங்கள் என்பது போன்ற quizகள் . (எங்கள் தாயார் எந்த துறை பற்றிய quizஆக இருந்தாலும் கண்டு பிடிக்கிறார்.)
உறவு நட்புக்களை காண சென்று திரும்பி வீடு செல்ல/வர முடியாதவர்களே! பிள்ளைகள் உறவினர்கள் என மொத்தமாக வீட்டிற்குள் (சிக்கி கொண்டு ?!) இருப்பவர்களே! மறந்தே போன scrabble , monopoly , பல்லாங்குழி போன்ற விளையாட்டுக்களை முயற்சி செய்யலாம். சிறுவர்களுக்கு கதைகள் சொல்லலாம் . DD தொலைக்காட்சியில் ராமாயணம், மஹாபாரதம், சக்திமான் ஆகிய தொடர்கள் காண்பிக்கிறார்கள். எளிய உடல் பயிற்சிகளை செய்யுங்கள். மகிழ்ச்சியுடன் பயனுள்ள வகையில் பொழுதை செலவிடுங்கள். இந்த நாட்கள் மீண்டும் கிடைக்காது.

எல்லா வேலைகளையும் நானே செய்கிறேன் என்ற புலம்பல் அதிகமாக கேட்கிறது . பிள்ளைகளை சிறு உதவிகள் செய்ய பழக்குங்கள் தாய்மார்களே . அவர்கள் உங்கள் பிள்ளைகள் தானே ? பொருட்களை அதனதன் இடத்தில் வைத்தல் , சாப்பிட்ட தட்டுகளை கழுவுதல் என ஆரம்பித்தது வயதிற்கேற்ற வேலைகளை செய்ய கற்றுக் கொடுங்கள் .
"கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்" என்று சொல்லி இருக்கிறார் நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை. வீட்டு வேலைகளும் கைத்தொழில்தான் . எப்போதும் என் நினைவுக்கு வரும் ஒரு திரைப்பட பாடல் "எல்லாரும் மாவாட்ட கத்துக்கிடணும் அது எப்போதும் தப்பில்லே ஒத்துக்கிடணும் எல்லார்க்கும் எல்லாமும் தெரிஞ்சிருந்தா இல்லாத நேரத்தில் கைகொடுக்கும்" (புதுப்புது அர்த்தங்கள்) .

சிங்கார சென்னையில் பலவருடங்களுக்கு முன் அனுபவித்த கடற்காற்று , ஒற்றை பறவை பறக்கும் ஓசை , எங்கோ ஒலிக்கும் தொலைபேசியின் அழைப்பு , நடுநிசியானாலும் தூங்காமல் லூட்டி அடிக்கும் குழந்தைகளின் சிரிப்பு சத்தம் என பலவற்றையும் மீண்டும் வீட்டிலிருந்தபடியே அனுபவிக்க இது ஒரு சந்தர்ப்பம் .

"சத்தம் இல்லாத தனிமை வேண்டும்" என்று கவிஞர் வைரமுத்து எழுதினர். தற்சமயம் அவரது ஆசை நிறைவேறி விட்டது, காரணம் எதுவாக இருப்பினும்.

கடைசியாக இன்று காலை படித்த ஒரு பதிவினை பகிர விரும்புகிறேன் . இத்தாலியில் 95 வயதான பெரியவர் ஒருவர் மருத்துவமனையிலிருந்து நோய் சரியாகி வீடு செல்லும் முன் உங்களுக்கு ஒரு நாள் செயற்கையாக சுவாசம் (ventilator) கொடுத்தோம். நீங்கள் அதற்கு $5000 பணம் கட்ட வேண்டும் என்று கூறினார்களாம். அந்தப் பெரியவர் அழுதாராம் . பணம் இல்லை போலும் என்று மற்றவர்கள் நினைக்க அவர் கூறியது இது தான் " நான் 95 வயது முடிய இந்த பூமியின் காற்றை எந்த கட்டணமும் இல்லாமல் சுவாசித்தேன் ஆனால் ஒரு நாள் செயற்கை சுவாசம் பெற்றதற்கு பணம் தர வேண்டி உள்ளது. இயற்கைக்கு நான் இது நாள் வரை நன்றி செலுத்தவில்லையே என்று அழுதேன்"

சுலபமாக பெரும் பொருட்களை நாம் மதிப்பதில்லை, இனியேனும் இயற்கையை மதிப்போம் . நலம் பெறுவோம்.

வாழ்க்கை வளமுடன் வாழ்வதற்கே. கவலை வேண்டாம் .

கூடிய விரைவில் நாமும் செல்லலாம் போத்தீஸ், Forum, Phoenix மால்களுக்கு ...
Courtesy : தொண்டரடிப்பொடி ஆழ்வார் , எழுத்தாளர் சுஜாதா , கவிஞர் வைரமுத்து , நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை மற்றும் Social Bloggers

பூங்(கா)கவனம்

பூங்காவில் நடைப்பயிற்சி செய்து கொண்டே நம்மை சுற்றி நடப்பவைகளை காண்பது ஒரு விதம். ஓரிடத்தில் அமர்ந்து கொண்டோ வீட்டில் இருந்தபடியே அருகில் அமைந்துள்ள பூங்காவை கவனிப்பது மற்றொரு விதம்.
இரண்டுமே சுவாரஸ்யமானவைகளே என் வரையில்.
வேகநடை, மிதவேக நடை,அன்னப்பட்சி நடை ,ஓட்ட நடை,உடற்பயிற்சி நடை,கைபேசியபடி நடை, அரட்டை நடை,காதலர்கள் நடை,பள்ளிப்பிள்ளைகளின் குதிநடை,குதிகால் நடை , செருப்பு , ஷூக்கள், காலணிகளே அணியாமல் நடை, பந்தயம் நடந்து கொண்டிருப்பது போன்ற நடை, இரவு உடையின் மேல் ஒரு துண்டு அணிந்து நடை என மக்கள் நடையாய் நடப்பதை சொல்லவா?

நடிகநடிகைகள், நடிகராக விரும்புபவர்கள் என பலரும் உடற்பயிற்சியும் நடைப்பயிற்சி சண்டை பயிற்சியை பற்றி சொல்லவா ?
தினமும் மாலை 4 மணிக்கு தவறாமல் நடைப்பயிற்சி செய்யும் ஒல்லி பெண் 6 மாதங்கள் நான் அமெரிக்க சென்று திரும்பிய பிறகு 10 கிலோ எடை கூடித் தெரிந்த அவரது எடைக்கு இன்றளவும் ஏறுமுகம் தான் என்பதை சொல்லவா?
தினமும் மாலையில் மல்லிகை பூ சூடி அன்னம் போலே நடந்து சென்றே சற்றே இளைத்து காணப்படுகிறாரே அவரைப் பற்றி சொல்லவா?
வெள்ளை T - shirt வெள்ளை அரைக்கால் சராய் வெள்ளை ஷூக்கள் அணிந்து ஒரே ஒரு நாள் மட்டும் நடைப்பயிற்சி செய்த , இன்றளவும் காணகிடைக்காத நண்பரைப் பற்றி சொல்லவா?

காலை 9 மணியளவில் கைபேசியில் பேசியபடி நடைப்பயிற்சி செய்து கொண்டே, அக்கம் பக்கத்து வீட்டு பெண்மணிகளை பார்த்து , பாப்பா நீ சினிமாவில் நடிக்கிறாயா மாமி உங்களுக்கு மடிசார் நன்றாக இருக்கிறது என விமர்சித்து செல்வாரே பிரபல திரைப்பட இயக்குனர் , அவரை தற்சமயம் ஏன் காணக் கிடைப்பதில்லை?

எங்கிருந்தோ நடந்தே வந்து இந்த பூங்காவில் அமர்ந்து கதை பேசும் வயதில் மூத்த பெண்டிர் பலரும் என் நட்புக்களே என்பதை சொல்லவா வேண்டும்?
மேடம் உங்களை எங்கேயோ பார்த்த நினைவு , வாய்ப்பாட்டு கற்றுக் கொண்டீர்களா? என் orchestra வில் பாடுகிறீர்களா எனக் கேட்டு விசிட்டிங் கார்டு தந்த அன்பரைப் பற்றி சொல்லவா? (பல வருடங்களுக்கு முன்பு நான் வயலின் கற்றுக் கொண்டிருந்தபோது பார்த்த நினைவு போல )
மற்றொரு முறை நான் படித்த கம்பியூட்டர் சென்டரின் மேலாளர் பூங்காவில் நண்பர்களுக்கு கைரேகை ஜோசியம் பார்த்துக் கொண்டே , மேடம் நல்லா இருக்கீங்களா என குசலம் விசாரித்ததை சொல்லவா?

25 வருடங்கள் கழித்து சந்திக்க நேர்ந்த தோழியின் தாய் உன்னுடன் சில நிமிடங்கள் பேசி செல்வது மனதுக்கு இதமாக இருக்கிறது என்றதை சொல்லவா?
தோழியுடன் இன்று எந்த பூங்காவில் நடைபயிற்சி செய்யலாம் என்று யோசித்து , வாட்ஸ்ஆப்பில் முடிவு செய்து , நடை பயின்றதை சொல்லவா?
தினம் ஒரு நிகழ்வு தினமொரு சந்திப்பு ...
இங்கே இப்படியென்றால் அமெரிக்காவில் மற்றொரு விதம். பரப்பளவு அதிகம் உள்ள பூங்காக்கள்.
காலை 6 -8 நாய்களுடன் நடைப்பயிற்சி செய்யும் மக்கள் , நாய் மலம் கழித்துவிட்டால் அதை அவர்களே சுத்தம் செய்து குப்பை தொட்டியில் போட்டு செல்வதை காண நேர்ந்ததை சொல்லவா?( அதற்கென ஒரு டப்பாவில் பிளாஸ்டிக் பைகள் இருக்கும். )
ஒரு சுற்று நடந்து முடிக்க 15 நிமிடங்கள் ஆகும் பூங்காவில் 3,4 பேர்களே நடந்து கொண்டோ ஓடிக்கொண்டோ இருப்பார்களே அதை சொல்லவா? இவர்கள் கையில் , தோள்பட்டையில் Fitbit , கைபேசி app என எதையாவது அணிந்தே செல்வதை சொல்லவா ?
பூங்காவின் உள்ளேயே சைக்கிள் ஓட்டி செல்வதை சொல்லவா?
வெயிற்காலத்தில் 12 மணி வெய்யிலில் sunny day என மிக்க மகிழ்ச்சியுடன் கால் பந்து விளையாட்டை கூட்டம் கூட்டமாக எல்லா வயதினரும் விளையாடி நம்மை ஆயாசப்படுத்துவார்களே அதை சொல்லவா?

கிழக்காசிய மக்கள் அதிகம் வசிக்கும் கலிபோர்னியா மாநிலத்தில் காலை 10 மணியளவில் வயதானவர்களின் மிக மெதுவான நடன அசைவுகளுடன் கூடிய உடற்பயிற்சி , தம்மை தாமே குறிப்பிட்ட இடங்களில் அடித்துக் கொள்ளும் பயிற்சி ,(குறிப்பிட்ட இடத்தில் அடித்துக் கொண்டால் குறிப்பிட்ட வியாதி போகும் என்பது ஒரு வித வைத்திய முறை), வாள் பயிற்சி, சிலம்பு பயிற்சி என வித்தியாசமான உடற்பயிற்சிகளை சொல்லவா?
குளிர்காலங்களில் சூரியன் எப்போது வருவார் என்று காத்திருந்து வயதானவர்கள் தெருவில் நடைப்பயிற்சிக்கு வருவார்கள்.அப்படியே பூங்காக்களும் .
இந்திய மக்கள் பூங்காக்களில் கூடி , பேசி, தங்கள் குறை நிறைகளை விவாதித்து , முடிந்தால் சிறிது நடைப்பயிற்சியும் செய்வார்களே அதை சொல்லவா? (இந்த பார்க் இருக்கோ நான் பாயை பிராண்டாமல் இருக்கேன்_ ஒரு முதிய பெண்மணி )
தென்னிந்தியர்கள் , வடஇந்தியர்கள் தனித்தனி குழுக்களாக பேசிக்கொண்டும் ,தமிழர்கள் ஹிந்தி தெரியாத காரணத்தால் தமிழர்களுடன் மட்டுமே பேசிக்கொண்டும் இருப்பார்களே அதை சொல்லவா?

வீட்டு தோட்டத்திலிருந்து எலுமிச்சை, ஆரஞ்சு இன்ன பிற பழங்கள் காய்கறிகளை பங்கிட்டு கொள்ளுதல் , யார் வீட்டில் அடுத்த வாரம் லலிதா சஹஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ரநாமம் , நவராத்திரி அழைப்புக்கள் , potluck டின்னர் , ராஜா புது வீடு வாங்கி இருக்கிறார் தெரியுமா போன்ற தகவல் (வம்பு) பரிமாற்றங்களும் நடைபெறுமே அது பற்றி சொல்லவா?
நான் சென்ற அதே மாதங்களில் வந்திருந்த என் சகோதரியுடன் தினமும் படித்த புத்தகங்கள், பார்த்த நாடகங்கள், சென்ற இடங்கள் என பேசிக்கொண்டே பூங்காவில் நடந்ததை சொல்லவா? (அக்கா sun வந்துடுச்சு , கிளம்பலாமா ?)

விஸ்கான்சின் மாநிலத்தில், பூங்காக்களில் ஆப்பிள் மரங்கள் காய்த்து ,பழுத்து கீழே விழுந்து கவனிப்பாரற்று கிடக்கும் . தெருக்களில் நடைப்பயிற்சி செய்யும் போது ஆரஞ்சு, சிவப்பு மற்றும் அடர்வண்ண வண்ண உடை அணிந்து சென்றால் நாய்கள் குறைப்பதை கண்டு பயந்து , (இங்கே நாய் கடித்தால் 1 மில்லியன் டாலருக்கு வழக்கு போடலாம் அப்பா _ எங்கள் மகன்). google map ஐ உபயோகித்து மாற்றுப் பாதையில் உருப்படியாய் வீடு வந்து சேர்ந்தோமே அதை பற்றி சொல்லவா?
மணிக்கணக்காக நடைபாதையிலோ பூங்காவிலோ ஒரு சொட்டு வியர்வை சிந்தாமல் அங்கே நடக்கலாம் என்பதை சொல்லவா?
ஐரோப்பாவின் சுவிட்சர்லாந்து போனபோதும் ஆஸ்திரேலியாவின் Melbourne போன போதும் பூங்காக்களும் நடைப்பயிற்சியும், Gold coast நகரின் கடற்கரையும் என்னை கவர்ந்திழுத்து நடக்க வைத்ததை சொல்லவா?

மீண்டும் இங்கே ......
சோகமான ஒரு நாளில் தோழி ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று வரை தொடரும் வழக்கம் இது மலையளவு சோகமும் நொடிப்பொழுதில் மறைந்து போகும் .

சமீப நாட்களில் பூங்காவில் பின்னோக்கி நடந்து, அடிபிரதட்சிண நடைப் பயிற்சி செய்து கொண்டிருக்கிறார் ஒருவர்.

எங்கேயோ பார்த்த ஞாபகம்


உலகின் பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்ட பல தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களை Netflix/Amazon Primeல் கண்டிருந்தாலும் உலகெங்கும் மிகப் பிரசித்தமாக பலராலும் பார்க்கப்படும் K-drama எனப்படும் கொரிய தயாரிப்புகளைப் பார்ப்பதில் எனக்கு தயக்கமே . காரணம் அவர்களின் வித்தியாசப்படுத்தி அறிய முடியாத முகச் சாயல். (கவுண்டமணி மீம்ஸ் ஒன்றில் வந்தது போல ஏண்டா டேய்...ஒருத்தனே மாறுவேடம் போட்டுக்கிட்டு எல்லா கதாபாத்திரத்திலும் நடிக்கிறீங்களா ?)
மிக நீண்ட கால யோசனைக்கு பிறகு , சமீப நாட்களில் தென் கொரிய தொடர்களை காண ஆரம்பித்துள்ளேன். ஒரு தொடரை பார்க்க ஆரம்பித்ததும் பல எபிசோடுகளுக்கு பிறகு ஆள் அடையாளம் பிடிபட தொடங்கியதும் சுவாரஸ்யம் கூடியது.
10 வயதில் சந்தித்த கதாநாயகனும் கதநாயகியும் 25+ களில் சந்திக்கிறார்கள்.
கதாநாயகிக்கு (செஃப்) முதல் எபிசோடிலேயே கதாநாயகனை அடையாளம் தெரிகிறது. கதாநாயகனுக்கு (மருத்துவர்) 12 ஆவது எபிசோடில் தான் தெரிகிறது.
வெண்ணையால் செய்தது போன்ற முகத்துடன் அன்பே உருவான துறுதுறு கதாநாயகி. இறுக்கமான முகத்துடன் கதாநாயகன்.
முகத்தில் சிரிப்பு/உணர்ச்சிகள் எதுவும் இல்லாத பெற்றோரை இழந்த பணக்கார கதாநாயகன் ,
தாயால் கைவிடப்பட்டு மன நலம் பாதிக்கபட்டு பின் சரியாகி, பின்பு ஒரு விபத்தில் சுவை மணம் உணரும் ஆற்றல் இழந்தாலும் அருமையாக சமைக்கும் கதாநாயகி, தறுதலை தம்பி, தமிழ் சீரியல் மாமியார் போல ஒரு மாமியார்(என் மகனை விட நீ புத்திசாலி என்று தானே உன் அப்பாவின் கடன்களை அடைத்து உன்னை என் மருமகளாக்கினேன்), நியூரோ சர்ஜன்களான சித்தப்பா பெரியப்பா மகன்களின் (அடித்து புரண்டு) சண்டை, இறக்கும் தருவாயில் உள்ள நோயாளிகள் எனப் பல விதமாக கதாபாத்திரங்கள்.
அலுக்க சலிக்க சென்டிமென்ட் காட்சிகள். ஆண்கள் பிழிய பிழிய கதறி அழுகிறார்கள். (Close-up காட்சிகள் ) ஆளை வைத்து அம்மாவே மகனை அடிக்கிறார். சண்டையிட்ட சகோதரர் வைத்தியம் செய்கிறார். கடைசி எபிசோடில் கதாநாயகி எங்கேயோ சென்று விடுகிறார். கதாநாயகன் அன்பே சிவம் பட ரீதியில் விமானத்தில் ஆரம்பித்து கடைசியில் ஓடி அவரை கண்டு பிடித்து ஒன்று சேர்கிறார்.
ஏழைகள் எனப்படுவோர் கூட விதம் விதமான உயர்ரக ஆடை அணிந்து வருகிறார்கள். கிம்சி (ஊறுகாய் போன்ற உணவு )தயாரிப்பதை விதம் விதமாக சொல்கிறார்கள் செய்தும் காட்டுகிறார்கள். அனைவரும் விலை உயர்ந்த கைபேசியை பயன்படுத்துகிறார்கள்.
அனைருக்குமே கார் ஓட்ட தெரிகிறது. அவர்களின் மொழியை இழுத்து இழுத்து கொஞ்சி கொஞ்சி பேசுகிறார்கள்.
கதாநாயகன்/நாயகி பெற்றோரை இழந்தவர் அல்லது பெற்றோர் மணவிலக்கு பெற்றவர்கள். இருவரும் முன்பே எங்கோ சந்தித்து இருக்கிறார்கள் .(நான் பார்த்த மூன்று தொடர்களிலும் நாயகன் நாயகி முன்பே அறிமுகமானவர்களே). தனியாக வசிக்கிறார்கள். குடும்ப சண்டைகள் , குழப்பங்கள் , குடும்பத்திற்குள்ளேயே வில்லத்தனங்கள் என நாம் அறிந்த விஷயங்கள்.
Incheon International Airport , Military base, மருத்துவமனை என வித்தியாசமான கதைக்களங்கள். (Settings)
விமான நிலையத்தில் என்னென்ன பிரச்சினை கள் வரும் எப்படி சமாளிக்கிறார்கள் என விரிவாக படம் பிடித்து காட்டி இருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு அந்த விமான நிலையத்தில் சில மணி நேரங்கள் காத்திருந்து அமெரிக்கா செல்லும் விமானத்தில் சென்றோம். தொடரை பார்க்கையில் நானும் அங்கிருப்பது போல் உணர்ந்தேன்.
நம் மொழிப்படங்களை பார்ப்பது போன்ற உணர்வு தான் இந்த K -ட்ராமாக்களின் வெற்றிக்கு காரணம் என நினைக்கிறேன் . மனதிற்கு நெருக்கமாக உள்ளது .
ஒரு சின்ன சந்தேகம். தற்போது காணும் தொடரில் Mr.Eun ஆக நடிப்பவர் மற்றொரு தொடரில் Dr.Jun ஆக நடித்தவரோ ?





WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...